Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஃபெலிக்ஸ் ✠(St. Felix of Nola)
   
நினைவுத் திருநாள் : (ஜனவரி/ Jan- 14)
✠ புனிதர் ஃபெலிக்ஸ் ✠(St. Felix of Nola)

குரு :
(Priest)

பிறப்பு : கி.பி. 3ம் நூற்றாண்டின் ஆரம்பம்
நோலா, கம்பானியா, இத்தாலி
(Nola, Campania, Italy)

இறப்பு : கி.பி. 250
நோலா, கம்பானியா, இத்தாலி
(Nola, Campania, Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
மரபுவழி திருச்சபை

நினைவுத் திருநாள் : ஜனவரி 14

பாதுகாவல் : நோலா, இத்தாலி

புனிதர் ஃபெலிக்ஸ், இத்தாலி (Italy) நாட்டின் பண்டைய "நேப்பிள்ஸ் மற்றும் சிசிலி" (Naples and Sicily) இராச்சியங்களின் தலைநகரான "நேப்பிள்ஸ்" (Naples) நகரில் வசித்திருந்த கிறிஸ்தவ குரு ஆவார். அவர், ஏழைகளுக்குக் கொடுக்கும் பொருட்டு தமது உடைமைகளை விற்றார். ஆனால், ரோமப் பேரரசன் "டேசியஸ்" (Roman emperor Decius) என்பவனது ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டு, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக துன்புறுத்தப்பட்டார். அவர், ரோமப் பேரரசன் "டேசியஸ்" அல்லது "வலேரியன்" ஆகியோரது துன்புறுத்தலின்போது ஒரு மறைசாட்சியாக மரித்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. ஆனால், வாழும் காலத்தில் சித்திரவதைகளை அனுபவித்த இவர், கத்தோலிக்கர்களின் பொது நாள்காட்டியில் (General Roman Calendar), விசுவாசத்தின் ஒப்புரவாளராக (Confessor of the Faith) பட்டியலிடப்பட்டுள்ளார்.

ஃபெலிக்ஸ், சிரியா நாட்டில், ரோம இராணுவத்தில் (Syrian Centurion) பணியாற்றி, இத்தாலியிலுள்ள நோலா நகரில் ஓய்வு பெற்ற "ஹெர்மியாஸ்" (Hermias) என்பவரது மகன் ஆவார். தமது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ஃபெலிக்ஸ் தமக்குள்ள சொத்துக்கள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் விற்று, அதன் வருமானத்தை ஏழைகளுக்கு அளித்தார். தாம் ஆன்மீக வாழ்க்கை முறையை பின்பற்றினார். ஆயர் (Bishop) தூய "மேக்சிமஸ்" (Saint Maximus of Nola) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு அளிக்கப்பட ஃபெலிக்ஸ், அவருடனேயே பணியாற்றினார்.

ரோம பேரரசர் "டேசியஸின்" (Decius) கிறிஸ்தவ துன்புறுத்துதல்களுக்குப் பயந்து, ஆயர் மேக்சிமஸ் மலைகள் மீது ஒடி ஒளிந்தபோது, அரச படைகளால் ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டார். மற்றும் அதற்கு பதிலாக அவருடைய விசுவாசத்திற்கு அடித்து துன்புறுத்தப்பட்டார். புராணங்களின்படி, ஒரு தேவதூதரால் விடுவிக்கப்பட்ட அவர், சிறைச்சாலையில் இருந்து தப்பியோடினார். அதனால் ஆயர் மேக்சிமஸுக்கு உதவ அவரால் முடிந்தது. ஆயர் மேக்சிமஸை, தனியாகவும், நோயுற்றவராகவும், உதவியற்றவராகவும் கண்ட ஃபெலிக்ஸ், ஒரு காலியாக இருந்த ஒரு கட்டிடத்தில் அரச வீரர்களிடமிருந்து அவரை மறைத்து வைத்தார்.

இருவரும் பாதுகாப்பாக உள்ளே இருந்தபோது, ஒரு சிலந்தி சடுதியில் செயல்பட்டு, அவர்களிருந்த அறையின் கதவை மறைத்தவாறு ஒரு வலையைப் பின்னியது. முட்டாளாக்கப்பட்ட அரச படையினர், சிந்தித்தவாறே, இது கைவிடப்பட்ட மிகவும் பழைய கட்டிடம் என்றவாறு, ஒளிந்திருந்த கிறிஸ்தவர்களை கண்டுபிடிக்க இயலாமல் திரும்பிச் சென்றனர். ஃபெலிக்ஸ்ஸை கைது செய்வதற்கான ஒரு தொடர்ச்சியான முயற்சி தொடர்ந்து மீண்டும் நடந்தது. ஆனால், முன்பு போலவே அந்த சிலந்தி செயல்பட்டு அவரை மறைத்தது. கி.பி. 251ம் ஆண்டு, பேரரசன் டேசியஸ் இறந்து, கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் முடிவடையும் வரையில் இருவரும் மறைந்திருந்தனர்.

ஆயர் மேக்சிமஸின் மரணத்திற்குப்பின், ஃபெலிக்ஸ் அடுத்த நோலாவின் ஆயர் ஆக மக்கள் விரும்பினர். ஆனால், அவர் தம்மை விட ஏழு நாட்கள் அனுபவம் கொண்ட ஒரு மூத்த குரு "குயிண்டஸ்" (Quintus) என்பவர் இருப்பதால் ஆயர் பதவியை மறுத்தார். ஃபெலிக்ஸ் ஒரு குருவாகவே தொடர்ந்தார். அவர் தனது மீதமுள்ள நிலத்தை உழுது விவசாயம் செய்து, அதில் விளைந்தவற்றை தம்மைவிட ஏழை மக்களுக்கு வழங்கினார்.

புராணங்களின் கூற்றின்படி, ஃபெலிக்ஸ் கி.பி. 255ம் ஆண்டு, பேரரசன் "வலேரியன்" (Emperor Valerian) என்பவனால், அல்லது, பேரரசன் டேசியன் (Emperor Decius) என்பவனால் கி.பி. 250ம் ஆண்டு மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார்.

சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னர் வாழ்ந்திருந்த மற்றுமொரு புனிதர் ஃபெலிக்ஸ் (Saint Felix of Nola) என்பவருடன் இவரை எண்ணி குழப்பிக்கொள்ள கூடாது. அவரது நினைவுத் திருநாள் நவம்பர் மாதம், 15ம் நாளாகும். இவரது நினைவுத் திருநாள் ஜனவரி மாதம், 14ம் நாள் ஆகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா