Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ அருளாளர்: போலேஸ்லாவா மரியா லமென்ட் ✠
(Blessed Bolestawa Maria Lament)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 29
 
✠ அருளாளர்: போலேஸ்லாவா மரியா லமென்ட் ✠(Blessed Bolestawa Maria Lament)

*மறைப்பணியாளர்/ நிறுவனர் : (Religious and Founder)

*பிறப்பு : ஜூலை 3, 1862
(லோவிக்ஸ், லோட்ஸ்கி, போலந்து சமாஜம் (Łowicz, Łódzkie, Congress Poland)

*இறப்பு : ஜனவரி 29, 1946 (வயது 83)
பையாலிஸ்டாக், போலிஷ் மக்கள் குடியரசு (Białystok, Polish People's Republic)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : ஜூன் 5, 1991
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)

*பாதுகாவல் :
தூய திருக்குடும்ப மறைப்பணி அருட்சகோதரிகள் (Missionary Sisters of the Holy Family)
மறைபரப்பாளர்கள் (Missionaries)
தையல் பணிபுரியும் பெண்கள் (Seamstresses)

அருளாளர் போலேஸ்லாவா மரியா லமென்ட், போலிஷ் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட மறை பணியாளரும், "தூய திருக்குடும்ப மறைப்பணி அருட்சகோதரிகள்" (Missionary Sisters of the Holy Family) எனும் சபையின் நிறுவனரும் ஆவார்.

தையல் பணி புரியும் பெண்ணான லமென்ட், சமய அனுபவங்களைப் பெறுவதற்காக ஒரு மத சபையில் இணைந்தார். பின்னர் தமது தொழிலுக்கே திரும்பி தமது இரண்டு சகோதரியருடன் இணைந்து தமது சகோதரர்கள் மற்றும் விதவைத் தாயாருக்காகவும் பணி புரிந்தார். அவரது மறைபரப்பு சகோதரர் ஒருவரின் தூண்டுதலால் இவர் ஒரு துறவற சபையைத் தோற்றுவித்தார். அது வேகமாக பரவியதால் லமென்ட், ரஷிய நாட்டுக்கு பயணமானார். முதலாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரமது. அதே நேரம், ரஷிய புரட்சியும் நடந்துகொண்டிருந்தது. எதற்கும் கவலை கொள்ளாமல் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

போலேஸ்லாவா மரியா லமென்ட், 1862ம் ஆண்டு, போலந்து நாட்டில் தமது பெற்றோரான "மார்ட்டின்" (Martin Lament) மற்றும் "லூசியா" (Lucia Cyganowska) ஆகியோருக்குப் பிறந்த அவர்களது எட்டு குழந்தைகளில் முதல் குழந்தையாக பிறந்தார். அவரது சகோதரர் "மார்ட்டின்" (Martin) மற்றும் இரண்டு சகோதரிகளான "எலெனா" (Elena) மற்றும் "லியோகாடியா" (Leocadia) ஆகிய மூவரும் தமது குழந்தைப் பருவத்திலேயே மரித்துப்போயினர். மூன்று சகோதரர்களின் குழந்தைப் பருவ மரணம், இவரது இருதயத்தில் மாறாத வடுக்களை விட்டுச் சென்றது. அதன்காரணமாக, அவர் தீராத வருத்தத்தில் ஆழ்ந்துபோனார்.

அருகாமையிலுள்ள நகரத்தில் கல்வியைத் தொடங்கிய இவர், தையல் தொழிலையும் கற்று, பட்டப்படிப்பையும் முடித்துக்கொண்டு ஊர் திரும்பினார். ஊரில் ஒரு தையல் கடையை திறந்தார். 1884ம் ஆண்டு, இவர் சமய வாழ்விற்கு போக தீர்மானித்து "அன்னை மரியாளின் குடும்ப சபை" (Congregation of the Family of Mary) என்ற சபையில் இணைந்தார். தையல் பணியாளராகவும் மறை ஆசிரியையாகவும் போலந்து முழுதும் தமது பணியைத் தொடர்ந்தார். தமது சமயம் சார்ந்த பணிகள் வெறுமனே துறவற சகோதரியாக மட்டுமேயல்லாது இன்னும் பல இருக்கின்றன என்று தீர்மானித்த இவர், சபையை விட்டு வெளியேறி வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய லமென்ட், அங்கே இருப்பிடமற்ற ஏழைகளுக்கு சேவை செய்வதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். இச்சமயம், இவர் தமது ஆன்மீக குருவான "அருளாளர் ஹோனோரட்" (Blessed Honorat Kozminski) என்பவரை சந்தித்தார். தனக்கான இறை அழைப்பினை மறுபரிசீலனை செய்து அதனை வாழ்க்கையில் கைகொள்ள வலியுறுத்தினார். வீடற்றோரின் தங்குமிடத்தின் இயக்குனரான இவர் அவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் உதவிகள் பல செய்தார். பின்னர் தமது துறவற வாழ்விற்கு திரும்பினார்.

பின்னர் அவர் "புனிதர் ஃபிரான்சிஸ் மூன்றாம் நிலை துறவற சபையில்" (Third Order of Saint Francis) இணைந்தார். 1905ம் ஆண்டு, அக்டோபர் மாதம், லமென்ட் வேறு சில பெண்களுடன் அணிதிரண்டு, "ஃபெலிஸ்" (Felice Wiercinski) எனும் "இயேசு சபை" (Jesuit) குருவுடன் இணைந்து ஒரு சமய சபையை நிறுவினார். அது போலந்து முழுதும் மின்னல் வேகத்தில் பரவியது.

1907ம் ஆண்டு, லமென்ட் பிற பெண்கள் சிலருடன் இணைந்து, தமது சபையை விரிவுபடுத்துவதற்காக அந்நாளைய ரஷியாவுக்கு (Russia at Saint Petersburg) சென்றார். ஆனால், ரஷியப் புரட்சி (Russian Revolution) வெடித்ததன் காரணத்தால், ரஷியாவை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்ட லமென்ட், 1921ம் ஆண்டு வெளியேறினார்.

1925ம் ஆண்டு முதல் 1935ம் ஆண்டுவரை "ரடோவோ" (Convent at Ratowo) எனும் இடத்திலிருந்த பள்ளியில் தங்கியிருந்த லமென்ட், தமது உடல்நிலையை கருத்தில்கொண்டு தமது சபை தலைவர் பொறுப்பை 1935ம் ஆண்டு ராஜினாமா செய்தார். 1941ம் ஆண்டு, முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர், மீதமிருந்த வாழ்வின் பெரும்பகுதியை படுக்கையிலேயே கழித்தார்.

1946ம் ஆண்டு மரணமடைந்த போலேஸ்லாவா மரியா லமென்ட்டின் உடல் "ரடோவோ" (Ratowo) என்ற இடத்திலுள்ள பள்ளி வளாகத்திலுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

1924ம் ஆண்டு, ஜூன் மாதம், 24ம் நாளன்று, அவருக்கு சபைக்கு மறைமாவட்ட அங்கீகாரம் கிட்டியது. 1967ம் ஆண்டு, ஜூலை மாதம், 7ம் நாளன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) தமது அங்கீகாரத்தை வழங்கினார். 2005ம் ஆண்டில், "சாம்பியா" (Zambia) மற்றும் "லித்துவானியா" (Lithuania) ஆகிய நாடுகளிலுள்ள அவரது சபையில் 338 மறைப்பணியாளர்கள் உறுப்பினர்களாயிருந்தனர். தற்போதைய ரஷிய நாட்டில் அவரது சபை இன்றும் உள்ளது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா