Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் சிமியோன் ✠ (St. Simeon of Jerusalem)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 18
   ✠ புனிதர் சிமியோன் ✠ (St. Simeon of Jerusalem)

*ஆயர் மற்றும் மறைசாட்சி : (Bishop and Martyr)

*பிறப்பு : தெரியவில்லை
கலிலேயா, யூதேயா பிராந்தியம்
(Galilee, Judaea Province)

*இறப்பு : கி.பி. 107 அல்லது கி.பி. 117
ஜெருசலேம், யூதேயா பிராந்தியம்
(Jerusalem, Judaea Province)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

புனிதர் சிமியோன், ஒரு யூத கிறிஸ்தவ தலைவரும் (Jewish Christian Leader), பெரும்பாலான கிறிஸ்தவ பாரம்பரியங்களின்படி, ஜெருசலேம் நகரின் இரண்டாவது ஆயரும் ஆவார்.

புனிதர் யூசேபியஸ் (St. Eusebius of Caesarea) இங்கே ஆயர்களின் அட்டவணையைத் தருகின்றார். அகில உலக பாரம்பரியங்களின்படி, "ஆண்டவரின் சகோதரர் எனப்படும் புனிதர் ஜேம்ஸ்" (Saint James the Just, the "brother of the Lord) ஜெருசலேம் நகரின் முதலாவது ஆயராவார். புனிதர் ஜேம்சை ஜெருசலேமின் முதலாவது ஆயராக நியமனம் செய்தது, அப்போஸ்தலர்கள் புனிதர் பேதுருவும் புனிதர் யோவானும் (Apostles St. Peter and St. John) ஆவர் என்று புனிதர் யூசேபியஸ் கூறுகிறார்.

புனிதர் ஜேம்ஸ் மறைசாட்சியாக மரித்ததன் பிறகு, ஜெருசலேமின் வெற்றிக்குப் பிறகு, புனிதர் ஜேம்ஸின் பின்வருபவராக புனிதர் சிமியோன் ஜெருசலேமின் ஆயராக தேர்வு செய்யப்பட்டார்.

புனிதர் ஜேம்ஸ் மறைசாட்சியாக மரித்து, ஜெருசலேம் வெற்றிபெற்றதும் பல்வேறு திசைகளிலிருந்தும் அப்போது உயிருடனிருந்த ஆண்டவரின் சீடர்களும் அப்போஸ்தலர்களும் ஜேம்சுக்குப் பிறகு ஜெருசலேமின் ஆயராக பொறுப்பேற்கப் போவது யார் என்று ஆலோசனை செய்வதற்காக ஜெருசலேம் நகரில் ஒன்றுகூடினர். அவர்களது ஆலோசனையின் முடிவில், சிமியோனை ஒருமனதாக தேர்வு செய்தனர்.

சுமார் 107 அல்லது 117ம் ஆண்டு, ரோமப் பேரரசன் "ட்ராஜன்" (Roman emperor Trajan) என்பவரது கட்டளைப்படி, பண்டைய ரோம் நாட்டில் ஏகாதிபத்திய அதிகாரம் கொண்ட ஆளுநராக இருந்த "டிபேரியஸ்" (Tiberius Claudius Atticus Herodes) என்பவன் சிமியோனை சிலுவையில் அறைந்து கொன்றான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய சிமியோன் (பிப்ரவரி 18)

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவா 12: 24)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் சிமியோன், இயேசு பிறப்பதற்கு முன்பாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கி.மு. 8 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பின் சகோதரரான கிளயோப்பாவிற்கும், இயேசுவின் தாயான மரியாவின் சகோதரிக்கும் மகனாகப் பிறந்தார். அப்படிப் பார்க்கும்போது இவரை இயேசுவின் சகோதரர் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் எம்மாவு நோக்கிச் சென்ற இருவரில் ஒருவர் எனவும், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு நிகந்த பெந்தகோஸ்தே நிகழ்வில் இவரும் இருந்தார் என்று நம்பப்படுகின்றது.

எருசலேமின் முதல் ஆயரான சின்ன யாக்கோபு கொல்லப்பட்டபோது, இவர் யூதர்களை மிகக் கடுமையாக விமர்சித்தார். சின்ன யாக்கோபின் மறைவிற்குப் பிறகு எருசலேமின் ஆயர் பொறுப்பானது காலியாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் எருசலேமின் ஆயராக யாரை நியமிக்கலாம் என்று திருத்தூதர்கள் கலந்தாலோசித்தபோது சிமியோனின் பெயரையே பரிந்துரைத்தார்கள். திருதூதர்கள் ஒருமனதாக சிமியோனைத் தேர்ந்தெடுத்து ஆயர் பதவியில் அமர்த்தியபோது, அவர் சிறப்பாகப் பணிகளைச் செய்து வந்தார். இதற்கிடையில் உரோமை அரசாங்கம் எருசலேமின்மீது படையெடுத்து வந்து, அதனை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டியது. இச்செய்தி ஆயர் சிமியோனுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது. எனவே அவர் இறைமக்களை அழைத்துக்கொண்டு யோர்தான் ஆற்றுக்கு அப்பால் இருக்கின்ற பெல்லா என்று பகுதியில் போய் தங்கினார். பிரச்சனைகளெல்லாம் ஓய்ந்தபிறகு, மீண்டுமாக அவர் இறைமக்களை அழைத்துகொண்டு வந்து எருசலேமில் குடிபெயர்ந்தார். 

சிலகாலம் எல்லாமும் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறதது. டிரேஜனின் ஆட்சிக்காலத்தில் பிரச்சனைகள் மீண்டுமாகத் தலைதூக்கத் தொடங்கியது. அவன் தாவீதின் வழிவந்தவர்களை கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினான். அப்போது ஆயர் சிமியோன், "நான் தாவீதின் வழிவந்தவர் மட்டும் கிடையாது, கிறிஸ்தவரும்கூட" என்று மிகத் துணிச்சலாகச் சொன்னார். இதனால் சினம்கொண்ட அரசன் அவரைப் பிடித்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அப்போதும் அவர் தன்னுடைய விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். இதனால் வெகுண்டெழுந்த அரசன் அவரை சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டான். அப்போது அவருக்கு வயது 120. தன்னுடைய முதிர்ந்த வயதிலும் தளராத வசுவாசத்தோடு சிமியோன் இருப்பதைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் 

தூய சிமியோனின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


1. துன்பங்களை துணிவோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்

தூய சிமியோனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எந்தளவுக்கு தன்னுடைய முதிர்ந்த வயதிலும் ஆண்டவர் இயேசுவுக்காக துன்பங்களைத் தாங்கிக்கொண்டார் என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நம்முடைய விசுவாச வாழ்வில் வரும் இடர்பாடுகளையும் துன்பங்களையும் எத்தகைய மனநிலையோடு அணுகுகிறோம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம்முடைய விசுவாசம் ஆழமானதாக இல்லாமல், மேலோட்டமானதாக, அடித்தளம் இல்லாததாக இருப்பதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இத்தகைய சூழலில் நாம் இன்று விழாக் கொண்டாடும் தூய சிமியோனை நம் கண்முன்னே வைத்து, அவரைப் போன்று விசுவாசத்தில் வேரூன்றி இருப்பதுதான் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

இராணுவத்தில் பணியாற்றி வந்த இளைஞன் ஒருவன், விடுமுறைக்கு தன்னுடைய வீட்டுக்கு வந்தபோது, முன்பு இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தனது தாத்தாவிடம், பணித்தளத்தில் தான் பட்ட கஷ்டங்களையும் வேதனைகளையும் சொல்லி கதறி அழுதான். அப்போது அவர் அவரிடம், "சீ... சுற்றிலும் உப்புத் தண்ணீ!! என்று கடல் வாழ் உயிரினங்கள் கடலை வெறுத்து வெளியேறாமல் உள்ளேயே நிறைவாய் வாழ்ந்து காட்டுவது போல, சுற்றிலும் உள்ள துன்பங்களை ஏற்று வாழ்ந்து காட்டுவதே உத்தமம்" என்று புத்திமதி சொன்னார். ஆம், நமது (விசுவாச) வாழ்வில் வரும் துன்பங்களை வெறுத்து ஒதுக்காமல், அவை நம்மை புடமிடக்கூடியவை என்று நாம் உணர்ந்து வாழ்ந்தோம் என்றால், வாழ்வில் கவலைக்குக் வழியே இல்லை.

ஆகவே, தூய சிமியோனின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொண்டு, ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா