Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மரியா பெர்டில்லா பொஸ்கார்டின் ✠(St. Maria Bertilla Boscardin)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 26
   ✠ புனிதர் மரியா பெர்டில்லா பொஸ்கார்டின் ✠(St. Maria Bertilla Boscardin)

*அருட்சகோதரி மற்றும் செவிலியர் : (Nun and Nurse)

*பிறப்பு : அக்டோபர் 6, 1888
ப்ரேண்டோலா, வெனேட்டோ, இத்தாலி (Brendola, Veneto, Italy)

*இறப்பு : அக்டோபர் 20, 1922 (வயது 34)
ட்ரெவிசியோ, இத்தாலி (Treviso, Italy)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : ஜூன் 8, 1952
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)

*புனிதர் பட்டம் : மே 11, 1961
திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான் (Pope John XXIII)

*முக்கிய திருத்தலங்கள் :
விசென்ஸா, வெனேட்டோ, இத்தாலி (Vicenza, Veneto, Italy)

"அன்னா ஃபிரான்செஸ்கா பொஸ்கார்டின்" (Anna Francesca Boscardin) என்ற இயற்பெயர் கொண்ட புனிதர் மரியா பெர்டில்லா பொஸ்கார்டின், ஒரு இத்தாலிய அருட்சகோதரியும், நோயுற்ற சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கும், முதலாம் உலகப் போரில் விமானத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செய்யும் சேவையில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக கடமையை பக்தியுடன் செய்து காட்டிய செவிலியருமாவார்.

இத்தாலியின் "ப்ரேண்டோலா" (Brendola) என்னுமிடத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இவரது தந்தையின் பெயர், "ஆன்ஜெலோ பொஸ்கார்டின்" (Angelo Boscardin) ஆகும். அன்னா ஃபிரான்செஸ்கா'வின் தந்தை ஒரு குணம்கெட்ட மனிதராக இருந்தார். அடிக்கடி மது அருந்துவது, பிறரில் பொறாமை கொள்வது மற்றும் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது போன்ற குணங்கள் கொண்டவராக இருந்தார்.

வீட்டிலும் விவசாய பூமியிலும் உதவிகள் செய்ய வேண்டியிருந்ததால் அன்னா ஃபிரான்செஸ்கா'வால் ஒழுங்காக தொடர்ந்து பள்ளிக்கு செல்ல இயலவில்லை. பள்ளிக்கு போகையில், அருகாமையிலுள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலைகள் செய்வார். தனிப்பட்ட திறமைகள் எதையும் அவரால் காண்பிக்க இயலவில்லை. மந்தமாக இருக்கும் அவரை புத்திசாலி என்றும் அயலார்கள் கருதவில்லை. ஆகையால் அடிக்கடி கிண்டலும் கேலியும் செய்து அவரை வேதனைப்படுத்தினார்கள்.

மரியா தமது எட்டரை வயதிலேயே "புதிய நற்கருணை" வாங்கினார். அக்காலத்தில் புதிய நற்கருணை வாங்குவதற்கான வயது பதினொன்றாக இருந்தது. மரியா தமது பன்னிரண்டு வயதிலேயே அவர்களது பங்கின் "மரியாளின் குழந்தைகள்" சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவரது பங்குத்தந்தை அவருக்கு ஒரு சிறிய மத இலக்கணப் (Catechism) புத்தகத்தை பரிசாகத் தந்தார். தமது முப்பத்துநான்கு வயதில் மரியா மரித்தபோது, அவரது சீருடைப் பையில் அந்த மத இலக்கணப் புத்தகம் இருந்தது.

அவரது மந்த நிலை காரணமாக அவரை ஏற்றுக்கொள்ள ஒரு சபை நிராகரித்தது. அதன் பின்னர் அவரை 1904ல் "விகென்ஸா" (Vicenza) என்னுமிடத்திலுள்ள "திருஇருதயத்தின் மகள்கள்" (Daughters of the Sacred Heart) அமைப்பின் "புனித டாரதி ஆசிரியை" (Teachers of Saint Dorothy) உறுப்பினராக சேர்த்துக்கொண்டனர். அவர் தமது பெயரை "மரியா பெர்டில்லா" ("Maria Bertilla") என மாற்றிக்கொண்டார். அங்கே அவர் மூன்று ஆண்டு காலம் சமையலறைப் பணிப்பெண்ணாகவும், ஆடைகள் துவைக்கும் பணிப்பெண்ணாகவும் பணியாற்றினார்.

அதன் பின்னர் அவர், "ட்ரெவிசியோ" (Trevisio) என்னுமிடத்திலுள்ள, அவர்களது சபையின் கீழுள்ள நகராட்சி மருத்துவமனையில் செவிலியர் படிப்புக்காக அனுப்பப்பட்டார். அவரது பயிற்சிக் காலத்தில், ஒருமுறை அவர் அங்குள்ள சமையலறையில் பணிபுரிய அனுப்பப்பட்டார். பின்னர் மருத்துவமனையின் "டிப்தீரியா" (Diphtheria) எனப்படும் தொண்டை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் உள்ள அறையில் பணிபுரிய நியமிக்கப்பட்டார்.

"கபரேட்டோ" (Battle of Caporetto) போரின்போது, வான்படைத் தாக்குதலால் "ட்ரெவிசியோ" (Trevisio) நகரம் பேரழிவைக் கண்டது. மரியா பெர்டில்லா பணியாற்றிய மருத்துவமனை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அவர் நோயாளிகளை இடைவிடாது பாதுகாக்கும் தன்மையும், பரிவும், இராணுவ தலைமையால் கவனிக்கப்பட்டது. கடமையின் மீது அவர்கொண்ட பக்தி, உள்ளூரிலுள்ள இராணுவ மருத்துவமனை தலைமையால் கண்காணிக்கப்பட்டது. அவருடைய சேவை பாராட்டப்பெற்றது. ஆனாலும் அவரது துறவு இல்லத்தின் தலைமை சகோதரியர் அவரது தனலமற்ற சேவையை பாராட்ட மறுத்தனர். அவரை, மீண்டும் ஆடைகள் துவைக்கும் பணிக்கு மாற்றினர்.

ஆடைகள் துவைக்கும் பணியிலேயே நான்கு மாதங்கள் வரை இருந்த மரியா பெர்டில்லா, அவர் சார்ந்திருந்த சபையின் தலைமையால் மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகள் (Children-s Isolation Ward) பிரிவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே பலவீனமான உடல்நிலை கொண்டிருந்த அவரது உடல்நிலை விரைவிலேயே மேலும் மோசமானது. வெகு காலமாக அவரது உடலிலிருந்த கட்டி ஒன்றினால் அவர் மிகவும் வேதனையடைந்தார். அதனை நீக்குவதற்காக அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், அறுவை சிகிச்சையின்போது அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

கொண்ட கடமையின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையும், நோயாளிகளின்பால் அவர் கொண்டிருந்த பரிவும், அவரது தாழ்ச்சியும், பணிவும், அவரை அறிந்திருந்த மக்களின் மனதில் நீங்காத ஆழ்ந்த வடுவை விட்டுச் சென்றது.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா