Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஜெரோம் எமிலியானி ✠ (St. Jerome Emiliani)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 8
 
 ✠ புனிதர் ஜெரோம் எமிலியானி ✠ (St. Jerome Emiliani)

*மனிதாபிமானி மற்றும் "சோமாஸ்ச்சி" தந்தையர் சபை நிறுவனர்:
(Humanitarian and Founder of the Somaschi Fathers)

*பிறப்பு : கி.பி. 1486
வெனிஸ், இத்தாலி (Venice)

*இறப்பு : ஃபெப்ரவரி 8, 1537
சோமாஸ்கா, இத்தாலி (Somasca, Italy)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*அருளாளர் பட்டம் : 1747
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் (Pope Benedict XIV)

*புனிதர்பட்டம் : 1767
திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமென்ட் (Pope Clement XIII)

*பாதுகாவல் : கைவிடப்பட்ட குழந்தைகள், அனாதைகள்

புனிதர் ஜெரோம் எமிலியானி, ஒரு இரக்க குணமுள்ள மனிதாபிமானியும், "சோமாஸ்ச்சி தந்தையர்" சபை (Somaschi Fathers) நிறுவனரும், புனிதரும் ஆவார்.

வெனிஸ் நகரில் "ஆஞ்செலோ எமிலியானி" (Angelo Emiliani) என்ற தந்தைக்கும் "எலியோநோர் மௌரோசெனி" (Eleonore Mauroceni) என்ற தாயாருக்கும் பிறந்தவர். இவரது தந்தையார் இவரது சிறு வயதிலேயே மரித்துப்போனார்.

இவர் தமது 15 வயதில் இராணுவத்தில் சேர்வதற்காக வீட்டை விட்டு ஓடிப்போனார். ஓரிரு போர்களில் ஈடுபட்ட ஜெரோம், நாளடைவில் "ட்ரேவிசோ" (Treviso) மலையின் கோட்டைக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அக்கோட்டையின் பாதுகாப்புக்கான சண்டையில் இவர் போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். அதிலிருந்து அவர் தப்பிப்பதற்கு இறைவனின் அன்னை மரியாளிடம் அவர் மனமுருக செபித்ததே காரணம் என்பர்.

"ட்ரேவிசோ" (Treviso) மலையிலுள்ள அன்னை மரியாளின் திருத்தலத்திற்கு யாத்திரை சென்றார். அன்னைக்கு காணிக்கையாக தாம் அணிந்திருந்த சங்கிலிகளை உண்டியலில் இட்டார். தமது ஓய்வு நேரத்தையெல்லாம் பக்தியிலும், தொண்டுப் பணிகளிலும், இறையியல் கற்பதிலும் செலவிட்டார்.

ஜெரோம் 1518ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப் பட்டார்.

1528ம் ஆண்டு, பஞ்சமும் பிளேக் நோயும் தலைவிரித்தாடியபோது, இவரை அனைத்து இடங்களிலும் காண முடிந்தது. நோயாளிகளுக்கும், அனாதைகளுக்கும், கைவிடப்பட்ட மக்களுக்கும், சேவை செய்யும் இவரது ஆர்வத்தையும் காண முடிந்தது. தமது சொந்த செலவிலேயே நோயாளிகளைக் கவனித்தார். மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு உணவிட்டார். "புனித ரோஸ்" (St. Rose) தேவாலயத்தினருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நோயாளிகளையும் அனாதைகளையும் தங்கவைத்து கவனித்துக்கொண்டார்.

1531ம் ஆண்டு, "வெரோனா" (Verona) சென்ற இவர், அங்குள்ள குடிமக்களிடம் ஒரு மருத்துவமனை கட்டும்படி ஊக்குவித்தார். "ப்ரெஸ்ஸியா" (Brescia), "பெர்கமோ" (Bergamo), "மிலன்" (Milan) மற்றும் இத்தாலியின் வடக்குப் பிராந்தியத்தின் (Northern Italy) அநேக இடங்களில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்குமான அநாதை இல்லங்களை நிறுவினார். "பெர்கமோ" (Bergamo) நகரில் மனந்திருந்திய பாலியல் தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி நிறுவினார்.

"அலெஸ்ஸான்றோ" (Alessandro Besuzio) மற்றும் "அகோஸ்டினோ" (Agostino Bariso) ஆகிய இரண்டு அருட்பணியாளர்கள் இவருக்குத் துணையாக இவருடன் இணைந்தனர். 1532ம் ஆண்டு, ஜெரோம் மத குருக்களுக்கான ஒரு மத அமைப்பினை நிறுவினார். அனாதைகள், நோயாளிகள் மற்றும் ஏழைகளின் பராமரிப்பு ஆகியவை, இந்த அமைப்பின் முக்கிய பணிகளாக இருந்தன.

ஜெரோம் இவ்வமைப்பினை பாதுகாவல் சம்மனசுகளுக்கு அர்ப்பணித்தார். இவ்வமைப்பினை இறைவனின் அன்னை அதிதூய கன்னி மரியாளிடமும், தூய ஆவியானவரிடமும் அர்ப்பணித்த இவர், பாதுகாவலுக்காக இறை தூதர் அர்சிஷ்ட ரபேலிடம் ஒப்படைத்தார். 1540ம் ஆண்டு, திருத்தந்தை "மூன்றாம் பவுல்" (Pope Paul III) இச்சபைக்கு அங்கீகாரம் அளித்தார்.

ஒருமுறை, வேகமாக பரவின தொற்றுநோயின்போது சேவை செய்துகொண்டிருந்த ஜெரோம், பிளேக் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். 1537ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், எட்டாம் நாளன்று, "சோமாஸ்கா" (Somasca) நகரில் மரித்தார்.


 புனித ஜெரோம் ஏமிலியானி

கைவிடப்பட்டோரின் பாதுகாவலர்
இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில் தான் இருக்கிறது (1 கோரி. 4:20)
புகழ்பெற்ற வெனிஸ் நகரில் ஏஞ்சலோ எமிலியாணி மற்றும் எலோ நோரே மரோசெனி தம்பதியரின் அருந்தவப் புதல்வராக 1481 இல் பிறந்தவர் இவர். துடிப்புமிக்க இளைஞராகத் தமது 15ஆம் வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். வெனிஸ் நகரின் கட்டளைத் தளபதியாக உயர்ந்தார் .தமது சக்தித் திறமை மட்டுமே போதும்; கடவுள் தனக்கு அப்பாற்பட்டவர்தான் என்று வாழ்ந்து வந்தார்.
யாரும் எதிர்பாராத சூழலில் வெனிஸ் முற்றுகையிடப் பட்டது. மக்களைப்போலவே இராணுவ வீரர்களும் எதிர்த்து நிற்க முடியாமல் ஓட்டம் பிடித்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் ஜெரோமும் ஒருவர். தளபதியாக பலரைக் கைது செய்தவர் இன்று கையில் விலங்குகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த காலங்களில் தமது கடந்தகால வாழ்வு, தமது மனநிலை அனைத்தையும் அலசி ஆராய்ந்தார். தாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்த்தார். இறைவனை விட்டு தாம் தொலைதூரம் வந்துவிட்டதை உணர்ந்தார். மனம் தெளிந்தவராக சிறையிலேயே ஒறுத்தல் முயற்சிகளுடன் இறைவனின் அருள் வேண்டி செபிக்க ஆரம்பித்தார்.
ஒருநாள் செபித்துக் கொண்டிருந்தபோது, அன்னை மரியா நேரில் வந்து கதவுகளைத் திறந்து விட அற்புதமாக புதுமையாக சிறையிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் நேரே அருகில் இருந்த அன்னை மரியா ஆலயத்திற்குச் சென்றார் .தன்னைப் பிணைத்திருந்த சங்கிலிகளை ஆலயத்தில் வைத்துவிட்டு,சிறையில் இருந்தபோது நேர்ந்துகொண்ட நேர்ச்சையைச் செலுத்தி நன்றி கூறினார் . தமது அக்கா வீட்டிற்கு வந்து அவரது பிள்ளைகளுக்குக் கல்வி சொல்லிக் கொடுத்த ஜெரோம் நேரம் கிடைத்த போதெல்லாம் இறையியல் புத்தகங்களை விரும்பி வாசிக்க ஆரம்பித்தார். இரக்கச் செயல்கள் வழியாக இறைவனின் அன்பை எல்லோருக்கும் வெளிப்படுத்தினார். குருத்துவப் பயிற்சி பெற்று 1518 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மருத்துவமனைகளும் ஏழைகளின் குடிசைகளுமே தமது வசிப்பிடமாக்கிக் கொண்டு அவர்களுக்காகப் பணியாற்றினார்.
இந்நிலையில், 1528 இல் எங்கும் பிளேக் என்னும் தொற்று நோய் பரவி எண்ணற்றோர் இறக்க ஆரம்பித்தார்கள் . நோயுற்றவர்களுடன் ஜெரோம் தன்னை இணைத்துக்கொண்டார். இவரின் கால்கள் படாத இடமே இல்லை எனும் அளவுக்கு எங்கும் சென்று அவர்களுக்காகப் பணியாற்றினார் .அதிலும் குறிப்பாக ஆதரவற்றவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தினார் .மருந்து கொடுப்பது, ஆறுதலாகப் பேசுவது ,நோயில் பூசுதல் கொடுப்பது ,ஒப்புரவு அளிப்பது ,இறந்தவர்களை அடக்கம் செய்வது என்று மனிதநேயப் பணியாளராக வாழ்ந்தார்.
ஆதரவற்றவர்களின் எண்ணிக்கை பெருகியதால் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்க வைத்தார். தன்னலமில்லா ஈடுபாடுடைய பொதுநிலையினர் சிலரின் உதவியுடன் அவர்களது தேவைகளை நிறைவேற்றினார். குணமாக்கிட முடியாத நோயுள்ளோருக்கான மருத்துவமனைக்குச் சென்று சேவை செய்தார். வெரோனா மக்களிடம் பேசி மருத்துவமனை கட்ட ஊக்கப்படுத்தினார். பிரசியா என்னும் இடத்தில் அநாதை இல்லம் எழுப்பிய ஜெரோம் பெர்காமா என்ற இடத்தில் மாணவர் மாணவிகளுக்காகத் தனித்தனி அநாதை இல்லங்களை நிறுவினார். வாழ்க்கையில் தவறிய பெண்கள் மனம்மார ஒருத்தல் செய்து புதுவாழ்வு வாழ தனி இல்லம் அமைத்தார்.
ஜெரோமின் பணியினால் ஈர்க்கப்பட்டு அருள்தந்தையர்கள் அலெக்சாந்ரோ பெசுசியா மற்றும் அகஸ்டினோ பரிசோ இவருக்கு தங்களை அவருடன் இணைந்துக் கொண்டவர்கள். பணிக்கான தேவை அதிகரித்ததை உணர்ந்து, 1532 இல் புதிய துறவற சபையை நிறுவினார் ஜெரோம். சபைக்கான ஒழுங்கு விதிகளில், அநாதைகள், ஏழைகள்,நோயுற்றோருக்குச் சிறப்பான கவனத்துடன் பணியாற்ற வேண்டும் . நாம் நமது உடை, உணவு, உறையுள் அனைத்தின் வழியாகவும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் "என்று குறிப்பிட்டார்.

ஏழைகளின் அன்பு உள்ளமாக வாழ்ந்த ஜெரோம் 1537,பிப்ரவரி எட்டு அன்று நமது சபையின் தலைமையகத்தில் சொமாஸ்கோ என்னும் இடத்தில் இறையடி சேர்ந்தார் . திருத்தந்தை 14-ஆம் ஆசிர்வாதப்பர் 1747,செப்டம்பர் 29 அன்று அருளாளராக அறிவித்தார் . திருத்தந்தை 13 ஆம் கிளமண்ட் 1767, ஜூலை 16 இல் புனித நிலைக்கு உயர்ந்தார்.
அன்புக்காய் ஏங்கும் குழந்தைகளை அரவணைக்கத் தொடங்கினால் ஆண்டவரின் அருளொளி நம்மை நிரப்பும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா