Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் பிரிஜிட் ✠ (St. Brigid of Kildare)
 
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 1
 
 ✠ புனிதர் பிரிஜிட் ✠ (St. Brigid of Kildare)

*கன்னியர், பெண் துறவியர் மடாதிபதி, ஊக்கமளிப்பவர்: (Virgin, Abbess, Inspirer)

*பிறப்பு : கி.பி. 453
ஃபௌகார்ட், டுண்டால்க், அயர்லாந்து (Faughart, Dundalk, Ireland)

*இறப்பு : ஃபிப்ரவரி 524 (வயது சுமார் 70)
கில்டேர், அயர்லாந்து (Kildare, Ireland)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

பாதுகாவல் :
குழந்தைகள், கொல்லன், படகோட்டிகள், குடிபான உற்பத்தியாளர், கால்நடைகள், கோழி வளர்ப்போர், திருமணம் செய்யாத பெற்றோரின் குழந்தைகள், தவறான தந்தைக்கு பிறந்த குழந்தைகள், தவறான சமூகத்தில் பிறந்த குழந்தைகள், பால் பண்ணை வேலைக்காரிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், தப்பியோடியவர்கள், கைக்குழந்தைகள், அயர்லாந்து, கப்பற்படை வீரர்கள், தாதிகள், துறவிகள், கவிஞர்கள், ஏழை, கோழி விவசாயிகள், அச்சகங்களின் பணியாளர்கள், மாலுமிகள், அறிஞர்கள், பயணிகள்

கில்டேர் நகர புனிதர் பிரிஜிட், அயர்லாந்தின் பாதுகாவலர்களுள் ஒருவர் ஆவார். புனிதர் பேட்ரிக் (St. Patrick) மற்றும் புனிதர் கொலம்பியா (St. Columba) ஆகியோரும் அயர்லாந்தின் புனிதர்கள் ஆவர். புனிதர்களைப் பற்றிய சரித்திரங்களை எழுதும் ஐரிஷ் அமைப்பு, (Irish Hagiography) இவரை ஆதி கிறிஸ்தவ துறவி என்றும், பெண் துறவியர் மடாதிபதி என்றும், பல்வேறு பெண் துறவியர்க்கான மடங்களை நிறுவியவர் என்றும், பிரபலமாக மதிக்கப்படும் "அயர்லாந்தின் கில்டேர்" (Kildare in Ireland) துறவு மடம் உள்ளிட்ட பல்வேறு பெண் துறவியர் மடங்களை நிறுவியவர் என்றும் கூறுகிறது.

பிரிஜிட் நிஜமாகவே ஒரு மனிதர்தானா என்ற விவாதமும் உண்டு. பிரிஜிட் எனும் "செல்டிக்" பெண் தெய்வத்துக்கும் (Celtic Goddess Brigid) இவருக்குமுள்ள பெயர், நினைவுத் திருநாள் தினம், இயற்கை நிகழ்வுகள், புனைவுகள் மற்றும் அவரது தொடர்புடைய நாட்டுப்புறப் பண்பாடுகள் ஆகியன இருவரும் ஒருவர்தானா என்ற விவாதத்தை எப்போதுமே முன்னிறுத்துகின்றன.

இவர், வெறுமனே கிறிஸ்தவமயமாக்கலின் பெண் தெய்வம் ஆவார் என்றும் சில அறிஞர்கள் சொல்கிறார்கள். வேறு சில அறிஞர்களோ, அவர் செல்டிக் பெண் தெய்வத்தின் பண்புகளைக் கொண்ட சாதாரண பெண்தான் என்றும் கூறுகின்றனர்.

பிரிஜிட், கி. பி. 451ம் ஆண்டு, அயர்லாந்தில் (Ireland) உள்ள "டுண்டால்க்" (Dundalk) எனுமிடத்தின் வடக்கேயுள்ள "ஃபௌகார்ட்" (Faughart) எனும் இடத்தில் பிறந்தவர் ஆவார். அவரது வாழ்க்கையின் நம்பகத்தன்மையைப் பற்றின ஏற்கனவே இருந்த பழம்பெரும் தரமான மாறுபட்ட மற்றும் முரண்பாடு கொண்ட வரலாறு காரணமாக மதச் சார்பற்ற மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களிடையே எப்போதுமே விவாதங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.

இவரது மூன்று வாழ்க்கை வரலாறுகள், இவரது தாயார் பெயர் "ப்ரோக்கா" (Brocca) என்றும் ஒரு அடிமை என்றும் ஒரு கிறிஸ்தவ "பிக்ட" (Christian Pict) (ரோமானிய காலங்களில் வடக்கு ஸ்காட்லாந்தின் கைக்கொள்ளும் ஒரு பண்டைய மக்கள் ஒரு உறுப்பினரை "பிக்ட்" என்பர்) என்றும் புனித பேட்ரிக் (Saint Patrick) அவர்களால் திருமுழுக்கு பெற்றவர் என்றும் கூறுகின்றன. அதே வரலாறுகள், பிரிஜிட்டின் தந்தை பெயர் "டுப்தாச்" (Dubhthach) என்றும் அயர்லாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான "லேய்ன்ஸ்ட்டர்" (Leinster) பகுதியின் தலைவராக இருந்தவர் என்றும் கூறுகின்றன.

அடிமையான "ப்ரோக்கா" கர்ப்பமானபோது, அவரை ஒரு பாதிரியிடம் விற்று விடுமாறு, "டுப்தாச்சின்" (Dubhthach) மனைவி அவரை வற்புறுத்தியதாக சரித்திரம் கூறுகிறது. இதனால், பிரிஜிட் தாமே ஒரு அடிமைத்தளையிலேயே பிறந்தார். ஆரம்பத்திலிருந்தே பிரிஜிட் பரிசுத்தமானவராக இருந்தார். அவரை வாங்கிய பாதிரி அவருக்கு உணவு கொடுக்க முயலும்போதெல்லாம் அவர் பாதிரியின் அசுத்தம் காரணமாக வாந்தி எடுத்தார் என்பர். ஆனால், அப்போதெல்லாம் செந்நிற காதுகளைக் கொண்ட ஒரு வெண்ணிற பசு வந்து அதிசயமாக அவரை இரட்சித்தது என்பர். அவர் வளர்கையிலேயே பல அதிசயங்களை நிகழ்த்தினார். நோயுற்றோரின் நோய் நீக்கினார். ஏழைகளுக்கு உணவிட்டார். ஒருமுறை, தமது தாய் வைத்திருந்த வெண்ணெய் முழுதும் எடுத்து அவர் ஏழைகளுக்கு கொடுத்தார். ஆனால், அவரது செபத்தின் பயனாக, காலி செய்யப்பட்ட வெண்ணெய் மீண்டும் நிரப்பப்பட்டதாக கூறுகிறார்கள்.

பத்து வயதான பிரிஜிட், ஒரு வீட்டு வேலைக்கார பெண்ணாக தமது தந்தையின் வீட்டுக்கே சென்றார். அவரது தாராள தொண்டுள்ளமானது, இல்லையென்று கேட்பவர்களுக்கு தனது தந்தையின் பொருட்களை வழங்கினார்.

இரட்டை வாழ்க்கை வாழ்ந்த "டுப்தாச்" (Dubhthach) பிரிஜிட்டின் செயல்களால் கோபமுற்றார். அவரை "லெய்ன்ஸ்டர்" (King of Leinster) அரசனிடம் விற்பதற்காக ஒரு வண்டியில் அழைத்துச் சென்றார். அவர் அரசனுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில், தமது தந்தையின் பொற்பிடியிட்ட வாளை எடுத்து, ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்து அதை அவனது குடும்பத்தின் உணவுக்காக மாற்றிக்கொள்ள சொன்னார். அவரது புனிதத் தன்மையை கண்டுகொண்ட அரசன், அவரை விடுவிக்குமாறு அவரது தந்தையை அறிவுறுத்தினார்.

சுமார் 480ம் ஆண்டு, பிரிஜிட் தமது ஏழு உதவியாளர் பெண்களுடன் இணைந்து கில்டேர் நகரில் ஒரு துறவு மடத்தினை நிறுவினார். அது, அங்கே அவர்களால் ஒரு நித்திய சுடர் எரிய காரணமானது. அயர்லாந்து பெண்களுக்கு ஒரு சமூக - மத வாழ்வினை பிரதிஷ்டை செய்தார். அவர் ஆண்களுக்கான ஒரு துறவு மடமும், பெண்களுக்கான ஒரு துறவு மடமும் நிறுவினார். பிரிஜிட்டின் சிறு வாக்குவன்மை, கில்டேர் நகரை ஒரு ஆன்மிகம் மற்றும் கற்பதற்கான ஒரு மையமாக மாற்றியது. அத்துடன் ஒரு ஆலயங்களின் நகராக உருவெடுத்தது. அவர், உலோக வேலைகள் மற்றும் ஒளியமைக்கும் பணிகள் உள்ளிட்ட கலைப் பள்ளியொன்றையும் நிறுவி நடத்தினார்.

ஏழாம் நூற்றாண்டி வாழ்ந்த பண்டைய அயர்லாந்தின் "அர்ட்ப்ரக்கன்" மறைமாவட்ட (Bishop of Ardbraccan) ஆயரும், மடாதிபதியும், ஐரிஷ் புனிதருமான "உல்ட்டான்" (St. Ultan of Ardbraccan) பிரிஜிட்டின் சரிதத்தை எழுதுகையில், பிரிஜிட் மிகவும் விரும்பிய அவரது மாணவியும், அவருக்குப் பிறகு அவரது மடத்திற்கு மடாதிபதியான "டர் லுக்டச்" (Dar Lugdach) ஒரு இளைஞனுடன் காதலில் விழுந்தாராம். அவ்விளைஞனை இரவில் சந்திக்க விரும்பிய அவர், பிரிஜிட்டுடன் ஒன்றாக படுத்திருந்த படுக்கையில் இருந்து எழுந்தே வெளியே சென்றார். எனினும், தமது ஆவிக்குரிய ஆபத்தை உணர்ந்த அவர், வழிநடத்துதலுக்காக பிரார்த்தனை செய்தார். பின்னர் அவளது காலணிகளில் நீரு பூத்த நெருப்பு வைத்து, அதனை அணிந்துகொண்டார். அவள் வைத்த தீயை அவளே அணைத்தாள். வலியே அவளது வலியை அணைத்தது. பின்னர் அவள் படுக்கைக்கு திரும்பினாள். உறங்குவது போலிருந்த பிரிஜிட், "டர் லுக்டச்" (Dar Lugdach) படுக்கையை விட்டு எழுந்து சென்றதை அறிந்திருந்தார். மறுநாள், தமக்கு நேர்ந்ததை பிரிஜிட்டிடம் "டர் லுக்டச்" கூறினார். ஆசைகளால் ஏற்பட்ட உணர்ச்சித் தீயிலிருந்தும், பின்னால் ஏற்படவிருந்த நரகத் தீயிலிருந்தும் தப்பிவிட்டதாக கூறிய பிரிஜிட், தமது மாணவியின் கால்களிலிருந்த புண்களை குணப்படுத்தினார். இதனால் தமது ஆசிரியை மீது மிக உயர்ந்த அன்பு கொண்ட மாணவி, பிரிஜிட் மரண படுக்கையில் இருந்தபோது, தாமும் அவருடன் மரிக்க விரும்புவதாக கூறினார். இதனை தடுத்த பிரிஜிட், இப்போதல்ல, ஆனால் என்னுடைய மரணத்தின் ஆண்டு நிறைவின்போது அது நிறைவேறும் என்றார்.

பிரிஜிட் மரண படுக்கையில் இருந்தபோது, அவருக்கு இறுதி திருவருட்சாதனங்களை புனிதர் "நின்னித்" (St Ninnidh) அளித்தார். அதன் பின்னர், அவருக்கு அவருக்கு இறுதி திருவருட்சாதனங்களளித்த தமது வலது கரம் மாசு படலாகாது எனும் காரணத்தால் தமது வலது கரத்தை உலோக உரையால் மூடிக்கொண்டார். இதனால் அவர், "சுத்தமான கரங்களின் நிம்மித்" (Ninnidh of the Clean Hand) என்றழைக்கப்பட்டார்.

525ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், முதல் தேதியன்று பிரிஜிட் மரித்ததாக மரபுகள் கூறுகின்றன. அவருக்குப் பிறகு, அவரது மாணவியான "டர் லுக்டச்" அவரது மடத்துக்கு தலைவரானார். பிரிஜிட் 521ம் ஆண்டு மரித்ததாகவும், அவர் கணித்தது போலவே அவரது மாணவியான "டர் லுக்டச்" 522ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் முதல் நாள் மரித்ததாகவும் கத்தோலிக்க திருச்சபை கூறுகிறது.



தூய பிரிஜித் (பிப்ரவரி 01)

கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். (திப 10:38)

வாழ்க்கை வரலாறு

பிரிஜித், கி.பி.450 ஆம் ஆண்டு, வடக்கு அயர்லாந்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் அயர்லாந்தின் பாதுகாவலரான தூய பேட்ரிக்கிடமிருந்து திருமுழுக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிஜித் வளரும்போதே கடவுள் பக்தியில் சிறந்து விளங்கி வந்தார். இன்னும் சிறப்பாக இயற்கையில், உயிர்களில் அவர் இறைவனைக் கண்டு மகிழ்ந்தார். வானத்தில் இருக்கின்ற விண்மீன், ஆகாயத்தில் அலைந்து திரிகின்ற பறவைக்கூட்டம், காட்டு மலர்ச் செடிகள், கடல்வாழ் உயிரினங்கள் இவற்றிலெல்லாம் இறைவன் பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை அவர் உறுதியாக நம்பினார்.

பிரிஜித் வாழ்ந்த பகுதியில் கிறிஸ்தவரல்லாத புறவினத்தவர் அதிகமாக இருந்தார்கள். அவர்களோடும் இவர் நல்லதொரு இணக்கமாக உறவினை வைத்திருந்தார். எப்போதெல்லாம் கிறிஸ்தவர்களுக்கும் புறவினத்தவருக்கும் இடையே சிறுசிறு பிரச்சனைகள் வந்ததோ அப்போதெல்லாம் இவர் அந்தப் பிரச்னையை தீர்த்து வைப்பவராக இருந்தார். பிரிஜித் இயல்பிலே இரக்ககுணமும் அன்பும் கொண்டிருந்ததினால் எல்லாருக்கும் நன்மைகள் செய்துவந்தார். அதனால் எல்லாருடைய பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.

பிரிஜித்துக்கு வயது ஏறிக்கொண்டே போனது. அவருடைய அழகில் மயங்கி நிறைய ஆண்கள் அவரைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் அவர் யாரையும் மணந்துகொள்ளாமல், துறவற மடத்தில் சேர்ந்து, கிறிஸ்துவுக்காக தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழ்ந்தார். துறவு மடத்தில் அவருடைய எடுத்துக்காட்டான வாழ்வினைப் பார்த்துவிட்டு சபையின் மிக முக்கியப் பொறுப்பினை அவருக்குக் கொடுத்தார்கள். மட்டுமல்லாமல், ஓர் ஆயருக்கு எவ்வளவு அதிகாரங்கள் இருக்குமோ அவ்வளவு அதிகாரங்களையும் அவருக்குக் கொடுத்தார்கள். பிரிஜித் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை இறைவனுக்குப் பயந்து, இறைவனின் திருவுளத்திற்கு ஏற்றவாறு வகித்து வந்தார். இப்படிப்பட்ட புனிதை 525 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பிறகு, நிறையப் பேர் இவருடைய முன்மாதிரிகையைப் பின்பற்றி வாழத் தொடங்கினார்கள்.


கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்


தூய பிரிஜித்தின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


இயற்கையில் /உயிர்களில் இறைவன் இருப்பதை உணர்தல்

தூய பிரிஜித்தின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றபோது அவர் எந்தளவுக்கு இயற்கையில், உயிர்களில் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்ந்து வந்தார் என்பது நமக்கு நன்றாகப் புரியும். இன்று அவரை நினைவுகூருகின்ற நாம், அவரைப் போன்று இயற்கையிலும் உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்பதை உணர்ந்து இயற்கைக்கும் உயிர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தையும் மதிப்பையும் கொடுத்து வாழ்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். "வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்பார் வள்ளலார். உயிர்கள் மீது அவருக்கு இருந்த பரிவும் இரக்கமும் நமக்கு இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய நுகர்வுக் கலாச்சாரத்தில் இயற்கையும் உயிர்களும் அழித்தொழிக்கப்படுகின்ற அவல நிலைதான் இருக்கின்றது. இத்தகைய நிலை மாறவேண்டும். இறைவனின் பிரச்சன்னம் எங்கும் எல்லாரிலும் இருப்பதை உணர்ந்து வாழவேண்டும்.

முன்பொரு காலத்தில் அப்ரூசா நாட்டை ஜான் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய அரண்மனைக்கு முன்பாக ஆராய்ச்சி மணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அந்த ஆராய்ச்சி மணியின் பிரதான நோக்கம், நாட்டில் ஏதாவது ஓர் ஆபத்து நேரிடுகின்றபோது அதனை மன்னனுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் அது கட்டப்பட்டிருந்தது.. ஒருநாள் அந்த ஆராய்ச்சி மணி ஒலித்தது. என்ன பிரச்சனை, யார் அந்த மணியை ஒலிக்கின்றார்? என்று பார்ப்பதற்கான மன்னர் அரண்மனையை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கே ஒரு வயதான, வாடிப்போன குதிரையொன்று அந்த மணியின் கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தது. உண்மையில் அது நீதிகேட்டு வரவில்லை. பசியால்தான் அந்தக் கயிற்றைக் கடித்துக்கொண்டிருந்தது. அரசன் என்னவென்று விசாரித்தபோது விவசாயி ஒருவர் அந்தக் குதிரையை வளர்த்து, அது வயதான பிறகு விரட்டிவிட்டது தெரியவந்தது. உடனே அரசரும் அவரது அவையும், குதிரை நீதிகேட்டு வந்ததாகப் பாவித்து அந்த விவசாயிக்கு அபராதமும், அதனைப் பராமரிக்கவேண்டும் என்ற ஆணையும் பிறப்பித்தனர்.

வாயில்லா ஜீவனை சரியாகப் பராமரிக்காத விவசாயிக்கு அரசன் தக்க தண்டனையைக் கொடுத்ததுபோல், இயற்கையையும் உயிர்களையும் சரியாகப் பராமரிக்காதபோது இறைவன் நமக்கு தக்க தண்டனையைத் தருவார் என்பது உறுதி.

ஆகவே, தூய பிரிஜித்தின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம் அவரைப் போன்று இயற்கையில் இறைவனைக் காண்போம், அதனைப் பாரமரிக்க நம்மால் இயன்றதைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா