Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் ✠
(Seven Founders of the Servite Order)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 17
   ✠ மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் ✠
(Seven Founders of the Servite Order)


வகை :
அர்ப்பண வாழ்க்கை நிறுவனம் (Mendicant Order (Institute of Consecrated Life)
மரியான் பக்தி சமுதாயம் (Marian Devotional Society)

உருவாக்கம் : ஆகஸ்ட் 15, 1233

உலகின் வசதி வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு நகரிலுள்ள ஏழு முக்கிய பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து, தங்கள் வீடுகளையும், உத்தியோகங்களையும் விட்டுவிட்டு, நேரடியாக கடவுளுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக தனிமையில் வாழப் போகிறார்கள் என்று நினைக்க இயலுகிறதா? ஆனால், 13ம் நூற்றாண்டின் மத்தியில், இத்தாலி நாட்டின் மேற்கு-மத்திய பிராந்தியமான "டுஸ்கனியின்" (Tuscany) வளர்ந்த, வளமான, பணக்கார தலைநகரான "ஃபுளோரன்ஸ்" (Florence) நகரில் இதுதான் நடந்தது. அரசியல் சச்சரவுகளாலும், "கத்தாரியின்" (Catharism) மதங்களுக்கு எதிரான கொள்கைகளாலும் சின்னாபின்னமாகியிருந்த அக்காலத்தில் அறநெறிகள் குறைவாகவும், சமயங்களும் ஆன்மீக உணர்வுகளும் அர்த்தமற்றதாகவும் தோன்றியது.

1240ம் ஆண்டு, ஃபுளோரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த எழுவர், பிரார்த்தனைகள் மூலம் கடவுளுக்கு நேரடி சேவை செய்யும் நோக்கில், நகரையும் தமது குடும்பங்களையும் விட்டு விலகி, தனிமை வாழ்வு வாழ பரஸ்பரம் முடிவு செய்தனர். அவர்களது ஆரம்ப பிரச்சினையே, தம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளே. காரணம், அவர்களில் இருவர் ஏற்கனவே திருமணமானவர்கள். இருவர் திருமணமாகி, மனைவியை இழந்தவர்கள். அவர்களின் நோக்கமே, தவம் மற்றும் பிரார்த்தனைகளுடனான ஒரு வாழ்க்கை வாழ்வதேயாம். ஆனால், விரைவிலேயே அவர்கள் ஃபுளோரன்ஸ் நகரிலிருந்து தம்மை அடிக்கடி காண வந்த பார்வையாளர்களால் தொந்தரவை உணர்ந்தனர். பின்னர் அவர்கள், "வக்லியா" (Vaglia) எனுமிடத்திலுள்ள "மான்டே செனரியோ" (Monte Senario) துறவு மடத்தின் வனாந்தரமான சரிவுகளுக்கு திரும்பினர்.

1244ம் ஆண்டு, தூய பீட்டரின் (Saint Peter of Verona) வழிகாட்டுதலின்படி, இச்சிறிய குழு, டொமினிக்கன் சபையினரின் துறவற சீருடையைப் போன்ற சீருடையை ஏற்றுக்கொண்டனர். தூய அகுஸ்தினாரின் (St. Augustine) சட்ட விதிகளின்படி வாழ முடிவு செய்தனர். "மரியாளின் ஊழியர்கள்" (Servants of Mary) எனும் பெயரை ஏற்றுக்கொண்டார். அதன் குறிக்கோள்கள், அதன் உறுப்பினர்களின் புனிதத்துவமும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதும், கடவுளின் அதிதூய தாயாரான கன்னி மரியாளின் வியாகுலங்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவரது பக்தியை பரப்புவதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே இச்சபையின் உறுப்பினர்கள், வியாகுல அன்னை மரியாளுக்கு தம்மை அர்ப்பணித்திருந்தனர். இயேசுவின் அன்னைக்கு தமது பக்தியை அர்ப்பணித்த இவர்கள், அன்னை மரியாளின் விருந்தோம்பல் மற்றும் இரக்கத்தினை தமது முத்திரையாக ஏற்றுக்கொண்டனர்.

"மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள்" (Seven Holy Founders) :
1. புனிதர் போன்ஃபிளியஸ் (St. Buonfiglio dei Monaldi (Bonfilius)
2. புனிதர் பொனஜுன்க்டா (St. Giovanni di Buonagiunta (Bonajuncta)
3. புனிதர் பார்டொலொமியஸ் (St. Amadeus of the Amidei (Bartolomeus)
4. புனிதர் ஹூக் (St. Ricovero dei Lippi-Ugguccioni (Hugh)
5. புனிதர் மனேட்டஸ் (Benedetto dell' Antella (Manettus)
6. புனிதர் சோஸ்டென் (Gherardino di Sostegno (Sostene)
7. புனிதர் அலெக்ஸியஸ் (St. Alessio de' Falconieri (Alexius)

1888ம் ஆண்டு, ஜனவரி மாதம், பதினைந்தாம் நாளன்று, திருத்தந்தை "பதின்மூன்றாம் லியோ" (Pope Leo XIII) அவர்கள், இவர்களனைவரையும் புனிதர்களாக அருட்பொழிவு செய்வித்தார்.



மரியின் ஊழியர் சபையை நிறுவிய எழுவர் (பிப்ரவரி 17)

இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். (மத் 9:9)


வாழ்க்கை வரலாறு

 
பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் உள்ள பிளாரென்ஸ் நகரில் மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன போக்கில், உலகு சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் கடவுள்மீது நம்பிக்கை கொண்ட எழுவர் இருந்தனர். அவர்கள் எழுவரும் மரியன்னையின் மீது மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். 1233 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள், அதாவது மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா அன்று, மரியா இவர்களுக்குக் காட்சி கொடுத்து இறைப்பணி செய்ய அழைத்தார். இந்த ஏழுபேரும் இறைப்பணி செய்வதற்கு ஆர்வமாய் இருந்தார்கள். ஆனால், இவர்களில் நான்கு பேர் திருமணம் முடித்திருந்தார்கள். மற்ற மூன்று பேர் மணமுடிக்காமல் இருந்தார்கள். எனவே, இந்த நான்கு பேரும் குடும்பத்தை ஓரளவு கரையேற்றி வைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

 

துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு இவர்கள் எழுவரும் பிளாரென்ஸ் நகருக்கு வெளியே இருந்த லா கார்மார்சியா என்னும் இடத்தில் வந்து தங்கி, அங்கே ஜெபத்திலும் தவத்திலும் நிலைத்திருந்தார்கள். இதற்கிடையில் இவர்கள் இருக்கின்ற இடத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் இவர்களை வந்து சந்திப்பதும் போவதுமாய் இருந்தார்கள். இது இவர்களுடைய ஜெப வாழ்விற்கு பெரிய இடையூறாக இருக்க, இவர்கள் மொந்தே செனாரியோ என்னும் பாலைவனப் பகுதிக்குச் சென்று, அங்கே ஓர் ஆலயம் எழுப்பி, அங்கே ஜெபித்து வந்தார்கள். ஆனால், செய்தி அறிந்து மக்கள் அங்கேயும் சென்று, அவர்களுக்கு இடையூறாக இருந்தார்கள். இதனால் அவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்கள். வந்தவர்களில் ஒருசிலர் தாங்களும் அவர்களோடு இணைந்து துறவு வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றோம் என்று சொன்னபோது, அவர்கள் அதுவெல்லாம் வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள். இதற்கிடையில் ஆயர்களான அற்றிங்கோ, கஸ்டிக்லியோன் எழுவரையும் சந்தித்து ஊக்கப்படுத்தினார்கள்.

 

இது நடந்து ஒருசில நாட்கள் கழித்து, மரியன்னை மீண்டுமாக அவர்களுக்கு காட்சி தந்தார். அவருடைய கையில் கருப்பு நிற ஆடை இருந்தது. அவரோடு ஒரு வானதூதரும் காட்சி தந்தார். அவருடைய கையில் சுருளேடு ஒன்று இருந்தது அதில் ஏழு பேருடைய பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அப்போது மரியன்னை அவர்களிடம், "நான் உங்களை என்னுடைய ஊழியர்களாகத் தேர்ந்துகொண்டேன். இந்த கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய உடையாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தூய அகுஸ்தினாரின் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழுங்கள்" என்று சொல்லி மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர்கள் எழுவரும் மரியின் ஊழியர் என்றே அழைக்கப்பட்டனர்.

 

நாட்கள் செல்லச் செல்லச் அவர்கள் ஏழுபேரும் ஜெபத்திலும் தவத்திலும் மேலும் மேலும் உறுதியானார்கள். அதே நேரத்தில் அவர்களுடைய சபை மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தது. அந்த ஏழுபேரும் ஒருவர் பின் ஒருவராக சபைத் தலைவராகிய, சபையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் சென்றார்கள். அந்த எழுவரின் பெயர்கள் முறையே, போன்பிலியுஸ், அலெக்சிஸ், அமதேயுஸ், ஹக், சொஸ்தேனஸ், மநேதுஸ் மற்றும் போனகுந்தா. இவ்வாறு சபை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்ந்துவர, 1304 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த 11 ஆம் ஆசிர்வாதப்பர் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்தார்.

 

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

 

மரியின் ஊழியர் சபையை நிறுவிய இந்த எழுவரின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று, அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

 

இறைவனுக்கு ஊழியம் செய்தல்

மக்களெல்லாம் உலகப் போக்கிலான வாழ்க்கையை வாழ்ந்து வந்தபோது, இந்த எழுவரும் இறைவனுக்கு ஊழியம் செய்யத் தயாரானார்கள். இவர்களைப் போன்று நாம் இறைவனுக்கு ஊழியம் செய்யத் தயாராக இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


ஒரு சமயம் ஜென் குரு ஒருவர் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே ஒரு நாய் வந்து அமர்ந்தது. அப்போது அங்கு வந்த இளைஞன் அவரிடம், "உங்கள் இருவரில் யார் உயர்ந்தவர்?" என்று சற்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு ஜென் குரு அவரிடம், "கடவுள் தொண்டனாக நற்செயல்களைச் செய்தால் நான் உயர்ந்தவன். உலகியல் சுகங்களில் ஈடுபட்டு உன்னைப்போன்று நான் வாழ்ந்தால் என்னைவிட இந்த நாய் உயர்ந்தது" என்றார். ஆம், யாரெல்லாம் இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து, அவருடைய பணியை செய்கின்றார்களோ அவர்கள் உயர்ந்தவர்களே.

ஆகவே, இந்த எழுவரின் விழாவைக் கொண்டாடும் நாமும், நம்மை இறைவனுக்கு முழுமையாய் அர்ப்பணித்து  அவருடைய பணியைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

====================================================================
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா