Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

   ✠ டமாஸ்கஸ் நகர புனிதர் யோவான் ✠ (St.John of Damascus)
   
நினைவுத் திருநாள் : டிசம்பர் 04
✠ டமாஸ்கஸ் நகர புனிதர் யோவான் ✠(St. John of Damascus)

*
மறைவல்லுநர் : (Doctor of the Church)

* பிறப்பு : கி.பி. சுமார் 676
  டமாஸ்கஸ், பிலாட் அல்-ஷாம், உமய்யாட் கலிஃபாட்
  (Damascus, Bilad al-Sham, Umayyad Caliphate)

* இறப்பு : டிசம்பர் 4, 749
   மார் சாபா, எருசலேம், பிலாட் அல்-ஷாம்,
   உமய்யாட் கலிஃபாட்
  (Mar Saba, Jerusalem, Bilad al-Sham, Umayyad Caliphate)

* ஏற்கும் சபை/ சமயம் :
 ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
 கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
 லூதரனியம் (Lutheranism)
 ஆங்கிலிக்க ஒன்றியம் (Anglican Communion)

* பாதுகாவல் :
  மருந்தாளுநர்கள் (Pharmacists)
  திருஉருவ ஓவியர்கள் (Icon Painters)
  இறையியல் மாணவர்கள் (Theology Students)

டமாஸ்கஸ் நகர புனிதர் யோவான் ஒரு சிரியன் கிறிஸ்தவ துறவியும், குருவும் (Syrian monk and priest) ஆவார். "டமாஸ்கஸ்" (Damascus) நகரில் பிறந்த இவர், "எருசலேம்" (Jerusalem) நகருக்கு அருகில் உள்ள "மார் சாபா" (Mar Saba) என்னும் இடத்திலுள்ள அவரது துறவற மடத்தில் மரித்தார்.

பல்துறை வல்லுநர் :
பல்துறை வல்லுநராகிய இவர், சட்டம், இறையியல், தத்துவம், இசை முதலியவற்றில் பெரும் ஆர்வமும் புகழும் பெற்றிருந்ததுடன், அவற்றில் வல்லுனராகவும் திகழ்ந்தார். கத்தோலிக்க குருவாக குருத்துவ அருட்பொழிவு பெறுவதற்கு முன்னர், இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்த "முகம்மது" (Muhammad) அவர்களுக்குப் பின்னர் அரசாண்ட சிவில் மற்றும் ஆன்மீக முஸ்லிம் ஆட்சியாளரான "காலிஃபா" (Caliph) என்பவரது தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் என்றும் கூறப்படுவதுண்டு. பின்னர் அவ்வேலையை விடுத்து துறவியானார். இவர் கிறிஸ்தவ இறையியல் குறித்த பல நூல்களை இயற்றி உள்ளார். திருஓவியங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்கள் பலவும் இன்றளவும் கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இவர், கிழக்கு மரபுவழி திருச்சபையின் தந்தையருள் ஒருவர் ஆவார்.

இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர் ஆவார். இவர் மரியாளின் விண்ணேற்பை குறித்து விரிவாக எழுதியதால் இவர் விண்ணேற்பின் மறைவல்லுநர் (Doctor of the Assumption) என்றும் கௌரவிக்கப்படுகிறார். இவருடைய நினைவுத் திருவிழா நாள் டிசம்பர் மாதம், 4ம் நாள் ஆகும்.

இவர் கிரேக்கம் தவிர அரபு மொழியிலும் புலமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. மேலும், இஸ்லாமிய ஆளுநர் "காலிஃபா" (Caliph) அவர்களின் அவையில் இவரது தந்தை பணி புரிந்ததால் இவரும் சிறிதுகாலம் அங்கு பணியாற்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

கடைசி திருச்சபைத் தந்தை :
ரோமன் கத்தோலிக்க அறிஞர்களின் கருத்துப்படி, புனிதர் டமாஸ்கஸ் யோவான் திருச்சபைத் தந்தையர் வரிசையில் காலத்தால் இறுதியில் வந்தவர் ஆவார். 1890ம் ஆண்டு, இவர் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் கத்தோலிக்க திருச்சபையின் மறை வல்லுனராக பிரகடணப்படுத்தப்பட்டார்.

திருஓவியங்களுக்கு வணக்கம் பற்றி :
திருஓவியங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையல்ல என்று "பைசண்டைன்" (Byzantine) மன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, டமாஸ்கஸ் யோவான் அந்த அரசு கட்டளைக்குக் கடினமான எதிர்ப்புத் தெரிவித்து நூல்கள் எழுதினார். அவர் எழுதிய நூல்கள் பின்னர், கி.பி. 787ம் ஆண்டு நிகழ்ந்த "இரண்டாம் நீசேயா பொதுச்சங்கத்தின் போது," (Second Council of Nicaea) திருஓவிய வணக்கம் பற்றிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டன.

================================================================================
தூய ஜான் டமாசின் (டிசம்பர் 04)

நிகழ்வு

ஜான், தமஸ்கு நகரில் இருந்த கலிபாவிடம் (இஸ்லாமிய அரசர்) ஆலோசகராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவர் தமஸ்கு நகரை அழிக்கத் திட்டம் தீட்டுவதாக அவரைப் பற்றிய தப்பான செய்தி கலிபாவின் காதுகளை எட்டியது. இதனால் சினம் கொண்ட கலிபா, ஜானை பொது இடத்திற்கு இழுத்து வந்து, அவருடைய வலக்கையை வெட்டினான். தான் நிரபராதியாக இருந்தும் தனக்கு இப்படிப்பட்ட தண்டனை வழங்கபட்டுவிட்டதே என்று அவர் மரியன்னையை நோக்கி கண்ணீர் விட்டு அழுதார். அப்போதெல்லாம் ஜான் மரியன்னையிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இவ்வாறு வேண்டிய மறுகணம் அவருடைய அப்படியே ஒட்டிக்கொண்டது. சுற்றி நின்ற மக்கள் கூட்டமும் கலிபாவும் ஜான் உண்மையிலே நிரபராதி, இறைமகன் என்று நம்பத் தொடங்கினார்கள்.

வாழ்க்கை வரலாறு

ஜான், சிரியாவில் உள்ள தமாசின் என்னும் நகரில் கி.பி 675 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை அரசாங்கத்தில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவர் மிகவும் நேர்மையாகவும் கடவுளுக்கு அஞ்சியும் வாழ்ந்து வந்ததால், மக்களுக்கு மத்தியில் இவருக்கு மிகுந்த செல்வாழ்வு இருந்தது. இவர் செய்து வந்த மிக முக்கியமான செயல் கிறிஸ்தவ அடிமைகளை மீட்டெடுத்து, அவர்களுக்கு புது வாழ்வு தந்ததுதான். அப்படி இவரால் மீட்கப் பட்டவர்தான் கோஸ்மாஸ். இவர் அறிவில் சிறந்தவராய் இருந்தார். இவரிடத்தில்தான் தன்னுடைய மகன் ஜானை கல்வி கற்க வைத்தார். கோஸ்மாசிடமிருந்து கற்றுக்கொண்ட கல்வியினால் ஜான் சிறந்ததொரு அறிவாளியாய் விளங்கினார். இவரிடமிருந்த திறமையைப் பார்த்துவிட்டு அரசாங்கம் இவரை ஆலோசராக வைத்துக்கொண்டது.

726 ஆம் ஆண்டு மூன்றாம் சிங்கராயர் என்னும் மன்னர், சிரூப வழிபாடு செய்யக்கூடாது என்னும் சட்டத்தை இயற்றினார். இச்சட்டம் கிறிஸ்தவர்கள் நம்பிக்கைக்கு எதிராக இருந்தது. இதை அறிந்த ஜான், சிரூபங்கள் இயேசுவை, அன்னை மரியாவை, புனிதரை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது, இதனை வணங்குவதில் என்ன தவறு இருக்கின்றது என்று தன்னுடைய கருத்தை மிக ஆணித்தரமாகப் பதிவு செய்தார். ஜான் இப்படி எப்போதும் யாருக்கும் பயப்படமால் உண்மையை எடுத்துச் சொன்னதால், அரசாங்கத்திடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. அதனால் புரிந்துகொள்ளாத தன்மை ஏற்பட்டது. எனவே, ஜான் தான் வகித்து வந்த பதவியை ராஜினாவை செய்தார், அது மட்டுமல்லாமல் தனக்கு இருந்த சொத்துகள் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சபாஸ் என்னும் இடத்தில் இருந்த துறவற மடத்தில் சேர்ந்து துறவினார்.

ஜானை இறைவன் பல்வேறு திறமைகளால் ஆசிர்வதித்திருந்தார். இந்த திறமைகளைக் கொண்டு, அவர் கடவுளுடைய பணியை மிகச் சிறந்த விதத்தில் செய்து வந்தார். இவர் எழுதிய "The Foundation of Wisdom" என்னும் புத்தகம் மிகச் சிறப்பு வாய்ந்தது. இப்புத்தகம் தாமஸ் அக்வினாஸ் எழுதிய 'Summa Theologica' என்னும் புத்தகத்திற்கு இணையாக வைத்துப் பேசப்பட்டது. இப்படியெல்லாம் இறைப்பணியைச் செய்து வந்த ஜான் 749 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு திருந்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் 1890 ஆம் ஆண்டு மறை வல்லுநர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜான் டமாசினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கடவுள் கொடுத்த திறமைகளை கடவுளின் மகிமைக்காகப் பயன்படுத்துதல்

இறைவன் ஜானை பல்வேறு விதங்களில் ஆசிர்வதித்திருந்தார், பல்வேறு திறமைகளால் அவரை நிறைவுசெய்திருந்தார். இந்த திறைமைகளை எல்லாம் அவர் தனக்காகப் பயன்படுத்தாமல், கடவுளின் மகிமை விளங்கவே பயன்படுத்தினார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அறிந்துகொள்கின்றோம்.

789 ஆம் ஆண்டு சிரூப வழிபாடு தொடர்பான விவாதம் எழுந்தபொழுது, பேரரசி ஐரேனே செய்வதறியாது திகைத்தார். அப்போது அவருக்கு ஜான் எழுதிய The foundation of wisdom என்ற புத்தகம் கையில் கிடைத்தது. அந்த புத்தகத்தின் துணைகொண்டு அவர் சிரூப வழிபாடு தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இறைவன் தனக்குக் கொடுத்த திறமையைக் கொண்டு, தூய ஜான் எழுதிய புத்தகம் காலம் கடந்து பயனுள்ளதாய் இருப்பதாய் நினைக்கும்போது, நாம் இறைவன் நமக்குக் கொடுத்த திறமைகளை எந்த வகையில் பயன்படுத்துகின்றோம்? என்பது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. பலநேரங்களில் நாம் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற வாய்ப்பு வசதிகளை, திறமைகளை நமக்கு மட்டுமே பயன்படுத்தி வாழுகின்ற சுயநலவாதிகளாக இருக்கின்றோம் என்பது வேதனை விஷயம். நாம் அப்படியில்லாமல், தூய ஜானைப் போன்று இருக்கவேண்டும் என்பதுதான் இறைவன் இன்றைய நாளில் நமக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கின்றது.

ஆகவே, தூய ஜான் டாமாஸ்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று கடவுள் கொடுத்திருக்கும் திறமைகளை அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்துவோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா