![]() |
ஒப்புரவு
அருட்சாதனம் (ஒப்புரவு அருட்சாதனத்தை நல்ல முறையில் கொண்டாட உங்களைத் தயாரிக்கும் விதமாகவும், இந்த முக்கியமான திருவருட்சாதனத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்ளவும் தயவுசெய்து சிறிது நேரம் ஒதுக்கி சிந்தியுங்கள்.) கடவுளின் மன்னிப்பையும் பரிவையும் அனுபவிக்க நீங்கள் வந்துள்ளீர்கள். கடவுளோடு உங்களுக்குள்ள உறவில் மிகவும் தனிப்பட்ட (அந்தரங்கமான) நேரமிது. கிறிஸ்துவோடு நீங்கள் மேற்கொள்ளும் ஆத்மார்த்தமான சந்திப்பில் அதிக பலன்களை நீங்கள் பெற வேண்டுமானால், சிறந்த தாயரிப்பு மிகவும் அவசியம். உங்களது பாவங்களை நினைத்துப் பார்த்து, அவைகளுக்காக நீங்கள் உண்மையிலேயே மனம் வருந்த வேண்டும். ஏனெனில், நம் பாவங்கள் நம்மை எந்நாளும் அன்பு செய்யும் கடவுளை மனம் நோகச் செய்துள்ளன. நம் உதவிக்காகக் காத்திருக்கும் நம் சகோதர சகோதரிகளை மனம் நோகச் செய்துள்ளன. அதற்காக எல்லா பாவங்களையும் நீங்கள் துருவித் துருவிப் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில், சாவான பாவங்கள் நம் நினைவிற்கு உடனே வந்து விடும். தேவையற்ற வருத்தங்களிலும் நீங்கள் நேரத்தைச் செலவிட வேண்டியதில்லை. ஒப்புரவு அருட்சாதனம் என்பது அனைத்திற்கும் மேலாக கடவுளின் அன்பின் செயல் என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். கடவுளோடு அன்பிலும், உறவிலும் வாழ வேண்டிய தனிப்பட்ட தருணம் இது. வாடிக்கையாக செய்ய வேண்டிய ஒரு செயல் அல்ல ஒப்புரவு அருட்சாதனம். மாறாக, லூர்து மாநகருக்கு வரும் ஒவ்வொரு தனி மனிதனிலும் ஏற்படும் உள்ளார்ந்த புதுப்பித்தலின் ஒரு பகுதியே இந்த ஒப்புரவு அருட்சாதனம். உங்களது வாழ்வில் பாவத்தின் தன்மையையும்... அவைகளுக்காக உண்மையில் வருந்தவும்... எதிர்காலத்தில் அவைகளை விட்டு விலகுவேன் என்ற உறுதியான தீர்மானம் எடுக்கவும்... நீங்கள் கடவுளின் அன்பின் ஒளியில் அழைக்கப்படுகிறீர்கள். இத்தகைய தன்மைகள் உண்மையான அர்த்தமுள்ள திருவருட்சாதன கொண்டாட்டத்திற்கு மிகவும் அடிப்படையானவையாகும். பாவம் என்பது வெறுமனே தொடர்ச்சியான தோல்விகள் என்பதல்ல. மாறாக: அவநம்பிக்கை, கண்டுகொள்ளாமை (பாராமுகமாயிருத்தல்), சுயநலம், வன்முறை, பலவீனமானவர்களைக் குறித்த ஏளனம், பாலியல் சிற்றின்பம் இனவெறி, ஏழைகளை புறக்கணித்தல், பணத்தாசை, விரயம் செய்தல் (வீணடித்தல்) கர்வம், உயர்வு மனப்பான்மை - போன்ற தீமைகளில் பங்கெடுப்பதும் பாவமே. ஒவ்வொரு பாவமும் ஏதோ ஒரு வகையில் சமூகப் பண்பை கொண்டுள்ளது. கிறிஸ்துவின் உடலாகிய நம்மைக் கூறு போடுகிறது. ஒவ்வொரு பாவமும் தாழ்ச்சியுடன் கூடிய மனவருத்தத்தை நம்முள் ஏற்படுத்த வேண்டும். நம்பிக்கையோடு மன்னிப்புக் கேட்கும் மனநிலையை நம்முள் உருவாக்க வேண்டும். ஒப்புரவாகுவதற்கான அழைப்பு என்பது லூர்து நகர் செய்தியின் ஒரு பகுதியாகும். இங்கு வரும் பெரும்பாலான திருப்பயணிகள் ஓர் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை பெறுகின்றனர். வேறு சிலர் தங்களது விசுவாச அர்ப்பணத்தைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக இதனை மாற்றுகின்றனர். இன்று என் தந்தை எனக்காகக் காத்திருக்கிறார். நான் அவரிடம் திரும்பிச் செல்ல வேண்டும்... அப்பொழுது ஊதாரி மைந்தன் அறிவு தௌpந்தவராய், 'நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், "அப்பா கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன் என்று சொல்வேன்" என்று சொல்லிக் கொண்டார். அவர் தொலைவில் வந்து கொண்டிருந்த போதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப் போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மேலும் தந்தை கூறியதாவது: 'முதல் தரமான ஆடையைக் கொண்டு வாருங்கள்... என் மகன் இவன் இறந்து போயிருந்தான், மீண்டும் உயிர் பெற்றுள்ளான்..." (லூக்கா 15). இவ்வாறே நமது வானகத் தந்தை நமக்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறார். ஊதாரி மைந்தனின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நற்செய்தியின் ஒளியில் ஆன்ம சோதனை செய்யுங்கள். சிந்தனையில், சொல்லில், செயலில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிராக நீங்கள் செயல்பட்ட தருணங்களைக் கண்டறியுங்கள். 'உங்கள் முழு இதயத்தோடு ஆண்டவராகிய கடவுளை அன்பு செய்யுங்கள்..." என்றார் இயேசு. - எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை உண்மையாகவே அன்பு செய்யும் வண்ணம், எனது இதயம் கடவுளைப் பற்றியிருக்கிறதா? (கடவுளையே நோக்கியிருக்கிறதா?) - அவரின் பிரசன்னத்தை உணருகிறேனா? - நற்செய்தியின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கிறேனா? திருச்சபையின் போதனைகளின்படி வாழ்கிறேனா? - என் வாழ்க்கையில் செபத்திற்கு எப்படிப்பட்ட இடத்தைக் கொடுத்துள்ளேன்? - என் கிறிஸ்தவ வாழ்வின் மையமாக நற்கருணை இருக்கிறதா? - ஞாயிறு மற்றும் திருவிழா திருப்பலிகளில் தவறாது பங்கு கொள்கிறேனா? - நான் ஆண்டவரை ஆண்டவராக செயல்பட அனுமதிக்கிறேனா? அல்லது நான் என்னையே ஆண்டவராக்க முயற்சி செய்கிறேனா? (நானே ஆண்டவரைப் போல செயல்பட முயற்சி செய்துள்ளேனா?) - எனது திட்டம், எனது விருப்பம், எனது வழிகளையே பற்றிக்கொள்கிறேனா? (அல்லது பிடித்துக்கொள்கிறேனா?) - ஆண்டவரின் திருப்பெயரை அன்பு செய்து அதற்கு மதிப்பளிக்கிறேனா? - எனது அன்றாட வாழ்வில் கடவுள் மீதுள்ள என் நம்பிக்கைக்குச் சான்று பகர தயங்கியுள்ளேனா? (அல்லது வெட்கப்பட்டுள்ளனோ?) - கடவுள் எனக்குத் தரும் சிலுவையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேனா? - எனது தேவைகளில் மட்டும் கடவுளிடம் செல்கிறேனா? (எனது தேவைகளில் மட்டுமே கடவுளின் பக்கம் திரும்புகிறேனா?) 'உங்களை அன்பு செய்வது போல் உங்களை அடுத்திருப்பவரையும் அன்பு செய்யுங்கள்..." என்றார் இயேசு. - எனக்கு அடுத்திருப்பவர்களை உண்மையாகவே அன்பு செய்கிறேனா? - எனக்கு எதிராகச் செய்யப்படும் தீங்குகளை மன்னிக்கும் மனப்பக்குவம் என்னிடம் உள்ளதா? - சிந்தனையிலும் வார்த்தையிலும் இரக்கமின்றி தீர்ப்பிடுகிறேனா? - பிறரின் குறைகளைப் பற்றி பேசுகிறேனா? பிறர் பெயரைக் கெடுக்கிறேனா? களவு செய்கிறேனா? - சகிப்பற்றத்தன்மை, பொறாமை, கோபம் என்னிடம் உள்ளதா? - ஏழைகள், நோயாளிகள்; பாதுகாப்பற்றவர்கள் மீது அக்கறை காட்டுகிறேனா? - பிறரோடு கொண்டுள்ள உறவில் நேர்மையோடும் உண்மையோடும் இருக்கிறேனா? - பிறர் பாவம் செய்ய நான் காரணமாக இருந்துள்ளேனா? - என்னுடைய குடும்ப வாழ்வில், என்னுடைய பொறுமை மற்றும் உண்மையான அன்பின் மூலம் ஏனைய குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்விற்கும் மகிழ்ச்சிக்கும் உதவியிருக்கிறேனா? - திருச்சபையின் போதனைக்கு ஏற்ப பொறுப்புள்ள பெற்றௌராய் செயல்பட்டுள்ளேனா? - நான் வாழும் சுற்றுப் புறச் சுழலை மதித்து அதனைப் பேணி பாதுகாக்கிறேனா? - பிறரின் நல்வாழ்வை நான் விரும்புகிறேனா? - வறுமையில் வாடுவோரைப் பற்றி போதுமான அளவு சிந்திக்கிறேனா? - பிறரது பிரச்சனைகளின் போது நான் பார்வையாளனாக இருந்துள்ளேனா? அல்லது அவர்களுக்கு உதவி புரிந்துள்ளேனா? - மற்ற மதத்தினருடைய நம்பிக்கையையும், வேறு இனத்தவரையும், கருத்துக்களையும் வெறுக்கிறேனா? - பிறருடைய உடமைகளை மதிக்கிறேனா? - பிறரின் உடமைகளை நான் தவறாகப் பயன்படுத்தியுள்ளேனா? அவைகளைத் திருடியிருக்கிறேனா? மற்றவர்களுடையப் பொருட்களை அபகரித்திருக்கிறேனா? - எனக்கு எதிராகப் பாவம் செய்பவர்களை மன்னிக்கிறேனா? - ஒரு குடிமகனாக எனது கடமைகளை சரிவரச் செய்கிறேனா? - முறையான அதிகாரம் கொண்டவர்களை மதிக்கிறேனா? "உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவர்களாய் இருப்பது போல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" என்றார் இயேசு. - கிறிஸ்தவனாக உண்மையிலே வாழ்கிறேனா? பிறருக்கு நல்ல முன்மாதிரிகையாக இருக்கிறேனா? - பயத்தினாலும் வெளிவேடத்தனத்தாலும் எனது மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்பட்டுள்ளேனா? - கிறிஸ்தவ மற்றும்; மனித மாண்பினை சீர்குலைக்கும் காரியங்களில் பங்கெடுத்துள்ளேனா? - என்னைப் பற்றியும் எனது உடல் நலம் மற்றும் வெற்றிகள் பற்றியும் அதீத அக்கறைக் காட்டுகிறேனா? - உண்பது, குடிப்பது போன்ற காரியங்களில் மிதமிஞ்சி நடந்து கொள்கிறேனா? - என் புலன்களையும், என் முழு உடலையும் தூய்மையோடும் கற்போடும் பாதுகாத்து தூய ஆவியாரின் ஆலயமாக பராமரித்துள்ளேனா? - பகைமை உணர்வு என்னிடம் உள்ளதா? பழி வாங்கத் துடிக்கிறேனா? - என்னிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்கிறேனா? - மிக எளிதில் உணர்ச்சி வசப்பட்டு, பொறுமையிழந்து செயல்படுகிறேனா? - நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துகிறேனா? - என்னால் என்னை மன்னிக்க முடிகிறதா? - எளிமையாக வாழவும் அமைதியை ஏற்படுத்தவும் விரும்புகிறேனா? (அதன்பின் மனத்துயர் மன்றாட்டு பயன்படுத்தலாம்) மனத்துயர் மன்றாட்டு - 1 என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே. என் பாவங்களால் உம்மை மனம் நோகச் செய்து விட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவூம், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவூம், மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனந் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சுழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும், உறுதி கொண்டிருக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசுக்கிறீஸ்துவின், பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென். உத்தம மனஸ்தாப மந்திரம் 2 என் ஆண்டவரே! அளவில்லாத நேசத்திற்கு பாத்திரமாயிருக்கிற தேவரீரைச் சட்டை பண்ணாமல் அடியேன் தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தபடியினால், முழுமனதுடனே விசனப்படுகிறேன். இனிமேல் சுவாமி; தேவரீருடைய உதவியினாலே நானொருபோதும் பாவஞ் செய்யேனென்றும், பாவங்களுக்கடுத்த உதவி முகாந்திரங்களையெல்லாம் விட்டு விடுவேன் என்றும் கெட்டி மனதுடனே பிரதிக்கினை பண்ணுகின்றேன். எங்கள் நாயகன் இயேசுக்கிறீஸ்து பாடுபட்டு அடைந்த மட்டில்லாத புண்ணிய பலன்களைப் பார்த்து, எங்கள் பாவங்களைப் பொறும் சுவாமி எங்கள் பாவங்களைப் பொறும் சுவாமி எங்கள் பாவங்களை யெல்லாம் பொறுத்தருளும் சுவாமி ஆமென். (அல்லது பின்வரும் செபத்தை பயன்படுத்தலாம்) 1. தந்தையே, உமக்கு எதிராக நான் பாவம் செய்துள்ளேன். இனிமேல் உமது மகன் என்று அழைக்கப்பட நான் தகுதியற்றவன். பாவியாகிய என் மேல் இரக்கம் வையும் (லூக்கா 15:18-18:13). 2. ஆண்டவராகிய இயேசுவே; நீர் பார்வையற்றவர்களின் கண்களைத் திறந்தீர், நோயாளிகளைக் குணமாக்கினீர், பாவியானப் பெண்ணை மன்னித்தீர், பேதுருவின் மறுதலிப்புக்குப் பின்பும் அவரை உமது அன்பில் உறுதிப்படுத்தினீர். எனது செபத்திற்குச் செவிசாய்த்தருளும்: என்னுடைய பாவங்களை மன்னித்தருளும்;, எனது இதயத்தில் உமது அன்பை புதுப்பித்தருளும், என்னோடு வாழும் ஏனைய கிறிஸ்தவர்களோடு நிறை அன்பில் வாழ எனக்கு உதவியருளும். இதனால் மீட்பளிக்கும் உமது வல்லமையையும் அன்பையும் உலகம் முழுவதற்கும் நான் அறிவிப்பேனாக. 3. ஆண்டவராகிய இயேசுவே. பாவிகளின் நண்பன் என்று அழைக்கப்பட நீர் திருவுளமானீர். மீட்பளிக்கும் உமது மரணத்தினாலும் உயிர்ப்பினாலும் எனது பாவங்களிலிருந்து என்னை விடுவித்தருளும். உமது சாமாதானம் (அமைதி) என் இதயத்துள் வேரூன்றி: அன்பு, புனிதம், உண்மை போன்றவற்றை அறுவடை செய்வதாக. 4. ஓ என் ஆண்டவரே, நீர் மிகவும் அன்பு நிறைந்தவராய் இருப்பதால், உமக்கு எதிராக நான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துகிறேன். உமது அருளின் உதவியால் நான் இனிமேல் பாவம் செய்ய மாட்டேன் (என உறுதி கூறுகிறேன்.) |