|  
			     
			 
			அடுத்ததாக, இயேசுவின் மூதாதையர் பட்டியலை எடுத்துக் கொள்வோம். மத்தேயு, லூக்கா இருவருமே அதைத் தருகின்றனர். அதிலும்தான் எத்துணை வேறுபாடு!
			 
			 
			மத்தேயு    தனது நற்செய்தியின் தொடக்கத்திலேயே 
			மூதாதையர் பட்டியலைத் தருகிறார் (மத் 1:1-17). அதாவது, இயேசுவின் 
			பிறப்பிற்கு முன்னதாகவே அதை 
			பதிவு   செய்து, இயேசுவின் பிறப்பு 
			நிகழ்ச்சிகளை அதன் தொடர்ச்சியாகத் தருகிறார். ஆனால் லூக்கா இயேசுவின் 
			குழந்தைப் பருவ நிகழ்வுகள் முடிந்து இயேசுவின் பொதுப்பணி வாழ்வின் 
			துவக்கமாக மூதாதையர் பட்டியலை அமைக்கிறார் (லூக் 3:23-38).
			 
			 
			மத்தேயு  ஏறு வரிசையில் கூறுகிறார். அதாவது, பழைய 
			ஏற்பாட்டில் தொடங்கி புதிய ஏற்பாட்டில் 
			நிறைவு   செய்கிறார். ஆபிரகாமில் 
			தொடங்கி இயேசுவில் முடிக்கிறார். லூக்காவோ இறங்கு வரிசையில், அதாவது 
			புதிய ஏற்பாட்டில் தொடங்கி, பழைய ஏற்பாட்டில் முடிக்கிறார். இயேசுவில் 
			தொடங்கி ஆதாமில் முடிக்கிறார். ஏன் இந்த வேறுபாடு?
			 
			 
			மேலும், மத்தேயு    "தாவீதின் மகனும் ஆபிரகாமின் 
			மகனுமான இயேசுக் கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்" என்று தொடங்குகிறார். 
			காலத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆபிரகாம் தாவீதுக்கு முந்தியவர். 
			அப்படியானால், ஆபிரகாமின் பெயரைத்தானே முதலில் குறிப்பிட்டிருக்க 
			வேண்டும்? ஏன் தாவீதை முன்னிலைப்படுத்துகிறார்? இது தற்செயலாக நடந்ததா? 
			அல்லது தவறுதலாக நடந்ததா? அல்லது வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட 
			நோக்கத்துடன் செய்யப்பட்டதா?
			 
			 
			மத்தேயு    நற்செய்தியின்படி, யோசேப்பின் தந்தை பெயர், 
			அதாவது இயேசுவின் தாத்தா பெயர் யாக்கோபு (மத் 1:16). அதுவே லூக்கா 
			நற்செய்தியில் ஏலி (லூக்கா 3:23). யாக்கோபும் ஏலியும் ஒரே 
			நபரைக் குறிக்கும் இரு பெயர்களா? அல்லது இரு பெயர்களும் இருவேறு 
			நபர்களைக் குறிக்கின்றனவா?  
			   |