Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் மர்செல்லீனஸ் ✠(St. Marcellinus)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 26)
✠ புனிதர் மர்செல்லீனஸ் ✠(St. Marcellinus)

* 29ம் திருத்தந்தை : (29th Pope)

*பிறப்பு : தெரியவில்லை
ரோம், மேற்கு ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

*இறப்பு : கி.பி. 304
ரோம், மேற்கு ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)


திருத்தந்தை மர்செல்லீனஸ், ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் 296ம் ஆண்டு, ஜூன் மாதம், 30ம் நாள் முதல், கி.பி. 304ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 25ம் நாள்வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் "காயுஸ்"(Pope Caius) என்பவர் ஆவார். திருத்தந்தை புனித மர்செல்லீனஸ் கத்தோலிக்க திருச்சபையின் 29ம் திருத்தந்தை ஆவார். மர்செல்லீனஸ் என்பது பண்டைய உரோமைக் குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும்.

ரோமப் பேரரசன் (Roman Emperor) "டையோக்ளேசியன்"(Diocletian) ஆண்ட காலத்தில் மர்செல்லீனஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அப்போது கிறிஸ்தவர்கள் தம் மதத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடித்தனர். அவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

ஆனால் கி.பி. 302ம் ஆண்டு, மன்னனன் டையோக்ளேசியன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். கிறிஸ்தவப் போர்வீரர்கள் படையிலிருந்து விலக்கப்பட்டனர். பின்னர் கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்களுடைய நூல்களும் அழிக்கப்பட்டன. மன்னனின் அரண்மனை இரு முறை தீப்பற்றி எரிந்ததும், மன்னனின் செயல்பாடு இன்னும் அதிகக் கொடூரமானது. கிறிஸ்தவத்தைக் கைவிடாவிட்டால் சாவுதான் முடிவு என்றாயிற்று.

இந்த நெருக்கடியின்போது, மர்செல்லீனஸ் விவிலியம் மற்றும் கிறிஸ்தவ சமய நூல்களை மன்னனின் ஆணைக்கு ஏற்ப கையளித்தார் என்றும், கிறிஸ்தவ நம்பிக்கையை விட்டு விலகினார் என்றும், பின்னர் மனம் வருந்தி கிறிஸ்தவத்துக்குத் திரும்பினார் என்றும், அதன் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்றும் திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) கூறுகிறது. அச்செய்தி தற்போது கைவசம் கிடைக்காத "புனித மர்செல்லீனசின் சாவு வரலாறு" (Acts of St. Marcellinus) என்னும் பண்டைய ஏட்டிலிருந்து பெறப்பட்டது.

திருத்தந்தை மர்செல்லீனுஸ் கி.பி. 304ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 26ம் நாள், அவர் இறந்து 25 நாள்களுக்குப் பின், ரோம் சலாரியா சாலையில் உள்ள பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இச்செய்தி திருத்தந்தையர் நூலில் உள்ளது.

கி.பி. 13ம் நூற்றாண்டில் மர்செல்லீனஸ் நினைவாக விழாக் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 26ம் நாள் அவருடைய விழா புனிதர் கிலேட்டஸ் (Saint Cletus) விழாவோடு இணைத்துக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த இரு திருத்தந்தையரின் மறைச்சாட்சிச் சாவு பற்றியும் வரலாற்றுத் தெளிவு இல்லாமையால் 1969ம் ஆண்டு வெளியான புனிதர் நாள்காட்டியில் அவ்விழா குறிக்கப்படவில்லை.

வழிவந்த திருத்தந்தை :
மர்செல்லீனசின் மரணத்தின் பிறகு, கிறிஸ்தவ சபை துன்புறுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயர் முதலாம் மர்செல்லஸ் (Pope Marcellus) ஆகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா