Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் கத்தேரி தேக்கக்விதா ✠(St. Kateri Tekakwitha)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 17)
✠ புனிதர் கத்தேரி தேக்கக்விதா ✠(St. Kateri Tekakwitha)

 கன்னியர், பாவத்திற்காக வருந்துபவர், பொது நிலைத்துறவி :
(Virgin, Penitent, Religious Ascetic and Laywoman)

*திருமுழுக்கு பெயர் : கேதரின் தேக்கக்விதா

*பிறப்பு : கி.பி. 1656
ஒஸ்செர்நான், இரோகுயிஸ் கான்ஃபெடரசி, (1763ம் ஆண்டு வரை நியு ஃபிரான்ஸ் (தற்போதைய ஒரிஸ்வில், நியூயார்க் மாநிலம்)
(Ossernenon, Iroquois Confederacy (New France until 1763, modern Auriesville, New York)

*இறப்பு : ஏப்ரல் 17, 1680
கானாவெக், கியூபெக், கனடா
(Kahnawake, Quebec, Canada)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : ஜூன் 22, 1980
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*புனிதர் பட்டம் : அக்டோபர் 21, 2012
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

*முக்கிய திருத்தலம் :
புனிதர் ஃபிரான்சிஸ் சேவியர் தேவாலயம், கானாவெக், கியூபெக், கனடா
(Saint Francis Xavier Church, Kahnawake, Quebec, Canada)

*சித்தரிக்கப்படும் வகை :
லில்லி மலர்; கடல் ஆமை; செபமாலை

*பாதுகாவல் :
சூழலியலாளர் (Ecologists), சுற்றுச்சூழல் (Environment), அனாதைகள் (Loss of Parents),
நாடுகடத்தப்பட்டவர் (People in Exil),
அமெரிக்க முதற்குடிமக்கள் (Native Americans),
தங்களது பக்திக்காக கேலிக்கு உள்ளாகிய மக்கள் (People Ridiculed for their Piety)

புனிதர் கத்தேரி தேக்கக்விதா, ஒரு அல்கோன்குயின்-மோகாக்கிய (AlgonquinMohawk laywoman) கத்தோலிக்க கன்னியரும், பொது நிலைத்துறவியும் ஆவார். இவர் தற்போது நியூயார்க் மாநிலம் அமைந்துள்ள இடத்தில் பிறந்தவர்.

இவர் சிறுவயதில் சின்னம்மை நோயால் தாக்கப்பட்டு பிழைத்தவர் ஆவார். இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். தமது 19 வயதில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறித் திருமுழுக்கு பெற்றார். இதன்பின் இவர் தனது வாழ்நாளை இயேசு சபை மறைபணி தளமான மொண்ட்ரியாலில் உள்ள கானாவாக்கே கிராமத்தில் கழித்தார்.

இவர் தனது 24 வயதில் கற்பு நிலை உறுதிபூண்டார். தனது நல்லொழுக்கத்திற்கும் கற்பு நிலைக்கும் பேர்போன இவர் தனது கடும் தவ முயற்சிக்காக அறியப்படுகின்றார். இவர் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறியதால் தனது சொந்த குடும்பத்தாலும், இனத்தாலும் ஒதுக்கப்பட்டார்.

அமெரிக்க முதற்குடிமக்களுள் திருச்சபையின் பீட மகிமை அளிக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார். இவருக்குத் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1980ல் அருளாளர் பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 2012ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 21ம் நாளன்று, புனித பேதுரு பேராலயத்தில் இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். பல்வேறு அதிசயங்களும், இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளும் இவரது மரணத்திற்கு பின்னர் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பெற்றோரும் இளம் பருவமும் :
திருமுழுக்கின்போது கேதரின் என்று பிரஞ்சு மொழிவடிவத்தில் கொடுக்கப்பட்ட பெயரே "கத்தேரி" (Kateri) என்று வழங்கலாயிற்று. கத்தேரி தேக்கக்விதா பிறந்த ஆண்டு சுமார் 1656 ஆகும். அமெரிக்க முதற்குடி மக்களின் ஒரு பிரிவாகிய மோகாக் இனத்தவராகிய கத்தேரி பிறந்த ஊரின் பெயர் ஓசர்நினோன். அது இன்றைய நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஓரிஸ்வில் (Auriesville) நகருக்கு அருகில் உள்ளது.

கத்தேரியின் தந்தை பெயர் கென்னெரோன்குவா (Kenneronkwa) ஆகும். அவர் மோகாக் (Mohawk) இனத்தின் ஒரு தலைவராக இருந்தார். கத்தேரியின் தாய் பெயர் "டகஸ்குயிடா" (Tagaskouita). அவர் கத்தோலிக்க சபை உறுப்பினராக இருந்தார். அல்கோன்குவின் இனத்தவரான அவர் கவர்ந்துசெல்லப்பட்டு பின்னர் மோகாக் இனத் தலைவரின் மனைவி ஆனார். இளவயதில் "டகஸ்குயிடாவுக்க" மொண்ட்ரியால் மாநிலத்தில் பிரஞ்சு கத்தோலிக்க மறைபரப்பாளர்கள் திருமுழுக்குக் கொடுத்துக் கத்தோலிக்க முறைப்படி கல்வியும் கற்பித்திருந்தனர். மோகாக் போர்வீரர்கள் அவரைக் கைதியாகப் பிடித்து, தமது பிரதேசத்துக்குக் கொண்டுசென்றனர். பின்னர் அவர் மோகாக் இனத்தலைவரான் கென்னெரோன்குவாவை மணந்துகொண்டார்.

கத்தேரி பிறந்த ஊரில் முதற்குடி மக்களின் பல இனத்தவர் வாழ்ந்துவந்தனர். மோகாக் இனத்தவரில் பலர் ஐரோப்பியரால் கொணரப்பட்ட நோய்கள் காரணமாகவும் அடிக்கடி நிகழ்ந்த போர்கள் காரணமாகவும் மடிந்தனர். எனவே மோகாக் இனத்தவர் பிற இனத்தவர்மீது போர்தொடுத்து அவர்களைக் கைதிகளாகப் பிடித்துத் தமது பிரதேசத்துக்குக் கொண்டுவந்தனர். இவ்வாறு அவர்களின் எதிரிகளாக இருந்த ஹ்யூரோன் இனத்தவர் பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

தாய்வழி உறவுமுறை :
மோகாக் இனத்தவர், பிற இரோக்குவா வகையினரைப் போன்று, தாய்வழி உறவுமுறையை (matrilineal kinship system) கடைப்பிடித்தனர். அதன்படி, குழந்தைகள் பிறக்கும்போது அவர்கள் தாய் எந்த இனத்தவரோ அந்த இனத்தவர்களாகக் கருதப்பட்டனர்.

கத்தேரி சிறு குழந்தையாக இருந்தபோது அவருடைய கிராமம் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டது. மோகாக் மக்களில் பலர் 1661-1663 காலக் கட்டத்தில் பெரியம்மை நோய்க்குப் பலியானார்கள். கத்தேரியின் பெற்றோரும் சகோதரரும் அவ்வாறே இறந்தனர். நோயின் காரணமாகக் கத்தேரியின் கண்பார்வை பாதிக்கப்பட்டது, அவருடைய உடம்பிலும் தழும்புகள் பல ஏற்பட்டன. பெற்றோரையும் சகோதரரையும் இழந்த கத்தேரியை அவருடைய தாய்மாமன் எடுத்து வளர்த்தார். அவர் "ஆமைக் குழு" (Turtle Clan) என்னும் பிரிவைச் சார்ந்தவர்.

கத்தேரியின் குணநலன்கள் :
கத்தேரி மிகவும் அடக்கமான பெண் என்றும், கேளிக்கைக் கூட்டங்களில் பங்கேற்காதவர் என்றும் அவருடைய வரலாற்றை எழுதிய இயேசு சபையினர் கூறுகின்றனர். அவர் தம் உடலில் ஏற்பட்டிருந்த தழும்புகளை மறைக்கும் வண்ணம் தலையில் ஒரு போர்வையைச் சுற்றியிருந்தார். அநாதையாக இருந்தபோது பெரும்பாலும் அவருடைய விரிந்த குடும்பத்தினர் அவரைப் பராமரித்தனர். அவருடைய தாயின் குடும்பத்தினர் வாழ்ந்த பொதுவீட்டில் (longhouse) அவரும் வாழ்ந்திருப்பார்.

கத்தேரி தம் இனத்தைச் சார்ந்த பெண்கள் செய்த மரபுவழித் தொழிலில் ஈடுபட்டார். இவ்வாறு, துணி நெய்தல், விலங்குகளின் தோலிலிருந்து வார் செய்தல், கோரைப் புல்லினால் பாய் கூடை பெட்டி போன்றவை முடைதல் ஆகிய கலைத் தொழிலை அவர் செய்தார். மேலும், வேட்டையாடிக் கொண்டுவரப்பட்ட இறைச்சியைச் சமைத்தல், தானியங்கள் காய்கறிகளைச் சமைத்தல் போன்ற வீட்டுவேலைகளைச் செய்தார். பயிரிடும் காலத்தில் வயலில் வேலை செய்வது, களை பிடுங்குவது போன்றவற்றிலும் அவர் ஈடுபட்டார்.

கத்தேரிக்கு 13 வயது நிரம்புகையில் அவர் திருமணம் செய்ய வேண்டும் என்று உறவினர் கேட்டபோது அவர் தாம் திருமணம் புரியப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

சமூகப் பின்னணி :
கத்தேரி வளர்ந்த காலத்தில் அவரது சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. மோகாக் இன மக்களுக்கும் பிரஞ்சு மற்றும் டச்சு குடியேற்றத்தினருக்கும் இடையே பரிமாற்றங்களும் மோதல்களும் நிகழ்ந்தன. நியூயார்க் மாநிலத்தில் ஆல்பனி மற்றும் ஷெனக்டடி பகுதிகளில் குடியேறிய டச்சு குடியேற்றத்தினரோடு மோகாக் இனத்தார் கம்பளி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரஞ்சு குடியேற்றத்தினர் ஹ்யூரோன் இனத்தாரோடு கூட்டுவைத்துக்கொண்டு வியாபாரம் நடத்தினர். மோகாக் இனத்தவர் வாழ்ந்த இரோக்குவா பகுதியில் நுழையும் எண்ணத்தோடு பிரஞ்சு குடியேற்றத்தினர் 1666ல் மோகாக் இனத்தவரின் கிராமங்களைத் தாக்கினர். அவற்றுள் பலவற்றையும் குளிர்கால சேமிப்புத் தளங்களையும் அழித்துத் தகர்த்தனர்.

ஃபிரெஞ்ச் குடியேற்றத்தினரிடத்தில் தோல்வியுற்ற மோகாக் இனத்தவர்கள் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டியதாயிற்று. அதன்படி, இயேசு சபை மறைப்பணியாளர்கள் மோகாக் கிராமங்களில் பணிசெய்யத் தொடங்கினர். அந்த மறைப்பணியாளர்கள் மோகாக் மொழியையும் பிற தல மொழிகளையும் கற்றனர். இவ்வாறு மக்களுடைய மொழியிலேயே மறைப்பணி செய்வது எளிதாயிற்று.

கிறிஸ்தவக் கொள்கைகளைத் தழுவியமைத்தல் :
கிறிஸ்தவ மதக் கொள்கைகளை மோகாக் இனத்தவருக்கு விளக்கி உரைத்தபோது இயேசு சபை மறைப்பணியாளர்கள் மோகாக் மக்களின் கருத்து உருவகங்களைப் பயன்படுத்தினர். கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் மோகாக் நம்பிக்கைக்கும் பொதுவாக இருந்த கருத்து ஒற்றுமைகளை இனம் கண்டனர். மோகாக் மொழியில் வானுலகைக் குறிக்கப் பயன்பட்ட சொல்லாகிய "கரோன்ஹியாக்கே" (Karonhiàke,) என்பதை இயேசு கற்பித்த இறைவேண்டலில் வருகின்ற "விண்ணகம்" என்னும் சொல்லையும் கருத்தையும் குறிக்க பயன்படுத்தினர். இது வெறுமனே ஒரு சொல்லின் மொழிபெயர்ப்பு என்று அமையாமல், இரு கலாச்சாரப் பார்வைகளுக்குப் பாலம்போல அமைந்தது என்று, கத்தேரியின் வாழ்க்கை பற்றி எழுதிய டாரென் போனபார்த்தே என்பவர் கூறுகிறார்.

மோகாக் ஆற்றுக்குத் தென்பகுதியில் மோகாக் மக்கள் தம் புதிய குடியிருப்பை அமைத்து அதற்குக் கானவாகா (Caughnawaga) என்று பெயரிட்டனர். 1667ல் கத்தேரிக்கு 11 வயது நடந்தபோது மோகாக் குடியிருப்புக்கு ஜாக் ஃப்ரெமென், ஜாக் ப்ரூயாஸ், ஜான் பியெரோன் என்னும் இயேசு சபையினர் மூவர் வந்தனர். அவர்களைக் கத்தேரி சந்தித்தார். இயேசு சபையினரோடு தொடர்பு ஏற்பட்டால் கத்தேரி கிறிஸ்தவ மறையைத் தழுவிவிடுவாரோ என்று அஞ்சினார் கத்தேரியின் மாமனார். அவருடைய ஒரு மகள் ஏற்கனவே கிறிஸ்தவத்தைத் தழுவியதன் காரணமாக மோகாக் குடியிருப்பாகிய கானவாகாவை விட்டு, மொண்ட்ரியால் அருகே அமைந்திருந்த கத்தோலிக்க மறைத் தளமான கானவாக்கே என்னும் இடத்துக்குப் போய்விட்டிருந்தார்.

கத்தேரிக்கு 18 வயது ஆனபோது, 1675ம் ஆண்டின் வசந்த காலத்தில் இயேசு சபைத் துறவி "ஜாக் தெ லாம்பெர்வில்" (Jacques de Lamberville) என்பவர் கத்தேரிக்கு கிறிஸ்தவ மறை பற்றிய போதகம் வழங்கினார்.

கத்தேரி கிறிஸ்தவராகி கானவாக்கே ஊரில் குடியேறுதல்:
கத்தேரிக்கு 20 வயது நிரம்பியபோது, அவர் கிறிஸ்தவ மறை பற்றிப் போதிய அறிவு பெற்றார். எனவே தந்தை லாம்பெர்வில் 1676ம் ஆண்டு, ஏப்பிரல் 18ம் நாள், இயேசு உயிர்த்தெழுந்த திருவிழாவின் போது கத்தேரிக்குத் திருமுழுக்கு வழங்கினார். புதிதாகக் கிறிஸ்தவத்தைத் தழுவ விரும்பியோருக்கு அவர்கள் இறக்கும் தறுவாயில் அல்லது முழு ஈடுபாட்டோடு கிறிஸ்தவதைக் கடைப்பிடிப்பார்கள் என்று உறுதியான பிறகு மட்டுமே திருமுழுக்கு அளிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் கத்தேரி தம் இள வயதிலேயே போதிய மறை அறிவும் ஊக்கமும் பெற்றிருந்தார்.

திருமுழுக்குப் பெற்றபின், கத்தேரி தம் ஊராகிய கானவாகா குடியிருப்பில் மேலும் 6 மாதங்களைக் கழித்தார். அவர் கிறிஸ்தவரானதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கத்தேரிமேல் சில குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். கத்தேரி மந்திரவாதத்திலும் தவறான நடத்தையிலும் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டினர்.

அப்போது, கத்தேரிக்குத் திருமுழுக்கு வழங்கிய தந்தை லாம்பெர்வில் கூறிய அறிவுரைப்படி, கத்தேரி தம் கிராமத்தை விட்டுப் புறப்பட்டார். கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய அமெரிக்க முதற்குடி மக்கள் பலர் ஒன்றுகூடிக் குடியேற்றமாக அமைந்த கானவாக்கே மறைத்தளத்துக்கு கத்தேரி 1677ல் சென்றார். அம்மறைத்தளம் புனித லாரன்சு ஆற்றின் கரையில், மொண்ட்ரியால் நகரத்துக்குத் தென்பகுதியில் அமைந்திருந்தது.

கத்தேரி புரிந்த ஒறுத்தல் முயற்சிகள் :
கானவாக்கே மறைத்தளத்துக்கு வந்து சேர்ந்த கத்தேரி 1678ல் மரி-தெரேஸ் தேகையாகுவெந்தா (Marie-Thérèse Tegaiaguenta) என்னும் பெண்மணியை அங்கே சந்தித்தார். தமக்குள்ளே ஆழ்ந்த நட்புக் கொண்ட அந்த இருவரும் கிறிஸ்தவ மறையை உருக்கமாகக் கடைப்பிடிப்பதில் முனைந்தனர். எனவே இரகசியமாக அவர்கள் தம்மைச் சாட்டையால் அடித்துக்கொள்வதுண்டு. கத்தேரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கோலனெக் கூற்றுப்படி, கத்தேரி சில சமயங்களில் ஒரே அமர்வில் 1000-1200 தடவைத் தம்மைக் கசையால் அடித்துக்கொண்டாராம்.

நீண்ட உபவாசம் இருத்தல், கசையால் தம்மை அடித்தல், உடலைக் கீறிக்கொள்ளுதல், முட்படுக்கையில் படுத்தல், கனலால் தம்மைச் சுடுதல் என்று பலவகைகளில் கத்தேரி ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ளலானார்.

கத்தேரியின் இறப்பு :
1679ம் ஆண்டு, இயேசு துன்பங்கள் அனுபவித்து, இறந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வாரத்தின்போது கத்தேரியின் உடல் நிலை மிகவும் மோசமானதை அவருடைய நண்பர்கள் கண்டனர். இன்னும் ஒருசில மணி நேரம் மட்டுமே அவருடைய உயிர் நீடிக்கும் என்று உணர்ந்த கிராம மக்கள் அனைவரும் கத்தேரியைச் சூழ்ந்து கூடினர். அவர்களோடு இயேசு சபைத் துறவியர் ஷோஷத்தியே மற்றும் கோலனெக் ஆகிய இருவரும் வந்தனர்.

தந்தை கோலனெக் கத்தேரிக்கு இறுதிச் சடங்காகிய நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தை வழங்கினார்.

அமெரிக்க முதற்குடி கிறிஸ்தவரான கத்தேரி தெக்கக்விதா என்னும் புனிதப் பெண்மணி தம் 24ம் வயதில், 1680, ஏப்பிரல் 17ம் நாளன்று, உயிர்துறந்தார். அப்போது அவர் அருகே மரி-தெரேசும் உண்டு. கத்தேரியை நேரடியாகத் தெரிந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய தந்தை ஷோஷத்தியே கூறுவது போல, கத்தேரி தாம் இறப்பதற்கு முன் உரைத்த கடைசி சொற்கள் இவை: "இயேசுவே, நான் உம்மை அன்புசெய்கிறேன்."

கத்தேரியின் உடல் ஒளிவீசுதல் :
கத்தேரியின் உயிர் உடலை விட்டுப் பிரிந்ததும் அவ்வுடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததைச் சூழ்ந்து நின்றோர் கண்டனர். தந்தை "கோலனெக்" கூறுகிறார்: "தழும்புகளால் தடித்துப்போன கத்தேரியின் அந்த முகம், அவருடைய இறப்புக்குப் பின் ஒரு மணி நேரத்தில் எழில் பொங்கும் ஒளிவீசியதை நான் கண்டேன்.

கத்தேரியின் கல்லறை :
தந்தை ஷோஷத்தியே கத்தேரியின் கல்லறை அருகே ஒரு சிற்றாலயம் எழுப்பினார். 1684ம் ஆண்டு தொடங்கி, கத்தேரி இறந்த இடம் ஒரு திருப்பயணத் தலமாக மாறியது. மக்கள் கத்தேரியின் கல்லறைக்குச் சென்று அவருக்கு வணக்கம் செலுத்தலாயினர். கத்தேரியின் எலும்புகளை எடுத்து அவற்றைத் துகள் ஆக்கி அதைப் புதியதொரு சிற்றாலயத்தில் வணக்கத்தோடு வைத்தனர் இயேசு சபையார். கத்தேரியின் நினைவு இறவாது இருப்பதற்கு இது ஓர் அடையாளமானது. கத்தேரியின் உடலின் மீபொருள் சிலருக்கு நலம் கொணர்ந்ததாகக் கூறப்படுகிறது.

கத்தேரியின் கல்லறை வாசகம் :
கத்தேரியின் கல்லறையில் மோகாக் மொழியில் கீழ்வரும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது:
"செந்நிற மக்களிடையே பூத்த எழில்மிகு மலர் இங்கே துயில்கின்றது."
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா