Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பெனடிக்ட் ✠(St. Benedict the Moor)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 03)
✠ புனிதர் பெனடிக்ட் ✠(St. Benedict the Moor)

 *குருத்துவம் பெறாத மறை பணியாளர் :
(Religious Lay Brother)

 *பிறப்பு : கி.பி. 1526
சேன் ஃப்ரடெல்லோ, மெஸ்ஸினா, சிசிலி, அரகன்
(San Fratello, Messina, Sicily, Crown of Aragon)

 *இறப்பு : ஏப்ரல் 4, 1589
பலெர்மோ, சிசிலி, அரகன்
(Palermo, Sicily, Crown of Aragon)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

 *முக்திபேறு பட்டம் : கி.பி. 1734
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

 *புனிதர் பட்டம் : கி.பி. 1807
திருத்தந்தை ஏழாம் பயஸ்
(Pope Pius VII)

 *முக்கிய திருத்தலம் :
புனித மரியா டி கேசு ஆலயம், பலெர்மோ, இத்தாலி
(Church of Santa Maria di Ges, Palermo, Italy)

 *நினைவுத் திருநாள் : ஏப்ரல் 3

 *பாதுகாவல் :
ஆபிரிக்க பணிகள் (African missions),
ஆபிரிக்க அமெரிக்கர்கள் (African Americans),
கறுப்பின மக்களுக்கான பணிகள் (Black missions),
கறுப்பின மக்கள் (Black people),
பலெர்மோ (Palermo),
சேன் ஃப்ரடெல்லோ (San Fratello), சிசிலி (Sicily)

புனிதர் பெனடிக்ட், இத்தாலியின் சிசிலியைச் சேர்ந்த ஒரு ஃபிரான்சிஸ்கன் துறவி (Franciscan Friar) ஆவார். கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் புனிதராக ஏற்றுக்கொண்டுள்ள இவர், ஆபிரிக்க அடிமைகளுக்குப் பிறந்தவர் ஆவார். தமது இளமையில் ஃபிரான்சிஸ்கனுடன் இணைந்த துறவியர் குழுவில் சேர்ந்த இவர், பின்னாளில் அதன் தலைவராக உயர்ந்தார். 1564ம் ஆண்டு, பலேர்மோ (Palermo) நகரிலுள்ள ஃபிரான்சிஸ்கன் துறவு மடத்துக்கு அனுப்பப்பட்ட இவர், அங்கே தமது பணிகளைத் தொடர்ந்தார்.

16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் "சேன் ஃப்ரடெல்லோ" (San Fratello) நகருக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட "கிறிஸ்டோஃபோரோ" (Cristoforo) மற்றும் "டயானா மனஸ்செரி" (Diana Manasseri) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர்.

பெனடிக்ட் பிறப்பதற்கு முன்னமேயே அவர்களது பெற்றோர் தமது விசுவாசமான சேவைகளுக்காக அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். பிற அநேக விவசாய குடும்பத்தினர் போலவே பெனடிக்டும் பள்ளிக்கு செல்லவில்லை. அவர் படிப்பறிவு இல்லாதவராகவே வளர்ந்தார். இளமையில் கால்நடைகளை மேய்க்கும் பணி செய்து வந்த பெனடிக்ட், தமக்கு ஊதியமாக கிடைத்ததை ஏழைகளுக்கு கொடுத்துவிடும் குணம் கொண்டவராக இருந்தார்.

ஒருமுறை, இவருக்கு 21 வயதாகையில், இவரை பொது இடத்தில் வைத்து சிலர் இவரது கருப்பு நிறத்தைக் காரணம் கொண்டு கேலி செய்து அவமானப்படுத்தினர். அதனை கவனித்த அவரது பெற்றோர் மனம் வருந்தினர். அதே நேரம், புனிதர் ஃபிரான்சிஸ் (St. Francis of Assisi) அவர்களின் விதிகளைப் பின்பற்றும் அங்குள்ள சுதந்திர துறவியர் குழுவொன்றின் தலைவர் ஒருவரும் இதனைக் கவனித்தார். பெனடிக்ட் விரைவில் அந்த துறவியர் சமூகத்திற்கு வரவேற்கப்பட்டார். அங்கே அவருக்கு சமையல் பணி வழங்கப்பட்டது. ஏழு வருடங்களின் பின்னர், அதே குழுவிற்கு அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

1564ம் ஆண்டு, சுதந்திர துறவியர் குழுவனைத்தையும் திருத்தந்தை நான்காம் பயஸ் (Pope Pius IV) கலைத்தார். அவர்களை நிறுவப்பட்ட சபைகளுடன் இணையுமாறு உத்தரவிட்டார். பெனடிக்ட் 1564ம் ஆண்டு, பலேர்மோ'விலுள்ள "இயேசுவின் அன்னை மரியாளின் ஃபிரான்சிஸ்கன் துறவு மடத்துக்கு" (Franciscan Friary of St. Mary of Jesus) அனுப்பப்பட்டார். அங்கும் சமையல் பணியைத் தொடர்ந்த பெனடிக்ட், தமது ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்தினை காண்பித்தார். விரைவிலேயே புதுமுக துறவியரின் (Novices) தலைமைப் பொறுப்பு கிட்டியது. பின்னர் அச்சமூகத்தின் பாதுகாவலரானார். இருந்தும் அவர் கல்வியறிவற்ற குருத்துவ அருட்பொழிவு பெறாத சாதாரண அருட்சகோதரர்தான்.

தமது பதவிக் காலம் முடிவடைந்ததும் மகிழ்ச்சியுடன் தமது சமையல் பணிக்கே திரும்பினார். அவரது பதவி காலத்தில் புதுமுக துறவியரைத் திருத்துவார். பின்னர் அவர்கள் முன்னே முழந்தாலிட்டு அவர்களுடன் மன்னிப்பும் கேட்பார். இது அவரது தாழ்ச்சியின் உச்சமாகும்.

இவரது மரணத்தின் பின்னர், ஸ்பெயின் மன்னர் மூன்றாம் பிலிப் (King Philip III of Spain) இத்தூய துறவிக்கு ஒரு விசேட கல்லறை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா