Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ தூய கன்னி மரியாளின் விண்ணேற்பு ✠(The Assumption of Mary)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 15)
 ✠ தூய கன்னி மரியாளின் விண்ணேற்பு ✠(The Assumption of Mary)
 
அன்னை மரியாள் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணக மகிமைக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டதை சற்று ஆராய்வோம்.

பூலோகத்தில் பெற்ற தாயைப் போற்றாத ஜீவன் இல்லை. தாயை மதிப்பதாலேயே தாய் நாடு என்றும் தாய் வீடு என்றும் சொல்கிறோம். தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை என்றும், அன்னை ஓர் ஆலயம் என்றும் பெருமை பாராட்டித் தாயைத் மதிக்கிறோம். இந்த தாய்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவர் அன்னை மரியாள். மண்ணகத் தாய் இம்மண்ணகத்தில் மட்டும்தான் தாய். ஆனால், தாய் மரியாளோ மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் தாய். அவர் என்றும் வாழும் தாய்! அன்னை மரியாள் இறைவன் தேர்ந்து கொண்ட ஆலயம். இறை இயேசு உறைந்த ஆலயம். மாசு மருவற்ற பரிசுத்த ஆலயம்.

தம் இறை மகனாம் இயேசுவின் வாழ்க்கையை ஜெபமாலையாக்கி தியானிக்கச் செய்த ஜெபமாலை மாதா. பாவச் சேற்றில் விழும் மாந்தர் பரமனிடம் சென்று யாசிக்கப் பயப்படும்போது வலிமையுள்ள மிகச் சிறந்த பரிந்துரையாளர்தான் நம் தாய் மரியாள்.

வரலாற்றில், விவிலியப் பக்கங்களில், மரியாள் பற்றிய ஆதார தகவல்கள் மிக சொற்பமே. மரியன்னை தம் தாழ்ச்சியினால் உலகிற்கு மறைக்கப்பட்டு இருந்தார்கள். ஏன் நற்செய்தியாளர்கள் லூக்கா உட்பட அன்னையை முழுமையாக அறிந்திருக்கவில்லை. நாமும் அன்னையைப் பற்றி முழுமையாய் அறியவில்லை. எனவே தான் திருச்சபையும் புனிதர்களும் அவரை "மறைந்த இரகசிய அன்னை" என அழைக்கின்றனர்.

எனினும், மீட்பு வரலாற்றில் அவரின்ன் இடம் நிகரற்றதே. இறைவன் தமது திருச்சபையின் ஊடக அன்னையை பெருமைப்படுத்த திருவுளம் கொண்டார். திருச்சபைக்கு தாம் கொடுத்த அதிகாரத்திற்கு அமைய மண்ணுலகில் அன்னையின் "வணக்கம்" அனுமதிக்கப்பட்டது. எனவே விண்ணுலகிலும் அனுமதிக்கப்பட்டது. எனவே அன்னை மரியாள் திருச்சபைக்கு தாயாகவும், உலகிற்கு தாயாகவும், குடும்பத்திற்கு தாயாகவும் உயர்த்தப்பட்டார்.

ஏனோக், எலியா போன்ற சிலர் மண்ணுலக வாழ்விலிருந்து விண்ணுலக வாழ்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக விவிலியம் கூறுகிறது. மரியாளின் விண்ணேற்பு பற்றி விவிலியம் தெளிவுறக் கூறாவிடினும் அது மனிதரின் முடிவில்லா வாழ்வு பற்றிய படிப்பினைக்கு உரியதே. (யோவா 6 : 54, 11 : 27) என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் எல்லாம் உலகில் இறுதி நாளில் நிகழவிருக்கின்ற மனிதரின் உயிர்ப்பைப் பற்றித்தான் சொல்லப்படுகிறது. எனவேதான் யோவான் நற்செய்தியாளர் கூறுகையில், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எழுதினால் இந்நூலை இவ்வுலகமே கொள்ளாது என்றார். (யோவான் 21 : 25)

இதனால்தான் ஏறக்குறைய கி. பி. 3ம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த நம்பிக்கை கி. பி. 20ம் நூற்றாண்டில்தான் (1950) திருச்சபையால் விசுவாச உண்மையாக அறிவிக்கப்பட்டது. விசுவாசக் கண்கொண்டு நோக்கினால் மரியாளின் விண்ணேற்பிற்குப் பல காரணங்கள் புலப்படும்.

பாவ மாசு எதுவுமின்றி அன்னை மரியாள் பிறந்ததால், சாவிலும் அது அவரை தன் பிடிக்குள் வைத்திருக்க இயலவில்லை. பாவத்தின் விளைவான சாவும் அழிவும் அவரை அண்ட முடியவில்லை.

கருவறை தொடங்கி கல்லறைவரை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினார் அன்னை மரியாள். இயேசு தம் சிலுவைச் சாவால் பெற்றுத் தந்த மீட்பின் பலனை அனுபவிக்கும் முதற் கனியாக அன்னை மரியாள் விளங்குகிறார்.

வான தூதர் கபிரியேலின் வாழ்த்துச் செய்தியைக் கேட்ட மரியாள் "ஆகட்டும்" என்று கூறி இறை மகனை தன்னில் ஏற்றுக்கொண்டார். வார்த்தையானவரின் மண்ணக வாழ்வு தொடங்கியது இவ்வாறே. மரியின் மண்ணக வாழ்வு நிறைவுற்றபோது, இறைமகனும் "ஆகட்டும்" என்று கூறி தம் அன்னையை விண்ணில் ஏற்றுக்கொண்டார்.

மரியாளின் விண்ணக வாழ்வு தொடங்கியது. ஆக இயேசுவின் இந்த 'ஆகட்டும்' என்பது மரியாளின் 'ஆகட்டும்' என்பதன் எதிரொலி.

இவ்வாறு இறைவிருப்பத்திற்குத் தன்னை ஒப்படைத்த மரியாள் வார்த்தையானவர். மனுவுடலேற்பதற்குத் தேவையான உடலைக் கொடுத்தார். வார்தையையே தம் கருவில் சுமந்தார். 'ஆகட்டும்' என்ற நாளிலிருந்து கிறிஸ்துவின் பிறந்தநாள் வரை மரியாளின் உடலும் மாபரன் கிறிஸ்துவின் உடலும் ஈருயிர் ஓருடலாய் இருந்தன.

இவ்வாறு மரியாளிடமிருந்து உதித்த இயேசுவின் உடல் உயிர்ப்பின் மகிமையடைந்து விண்ணக மாட்சியில் வீற்றிருக்கும்போது இங்கு மரியாளின் உடல் மட்டும் கல்லறையில் கறையான்களால் அரிக்கப்படுமா என்ன?

இறைமகன் இயேசுவிற்கு தம் வாழ்வை அர்ப்பணித்து புனித வாழ்கை வாழ்ந்த புனிதர்களின் உடலையே அழியாது காத்து பெருமைப்படுத்திய இறைவன், இறைமகன் இயேசுவையே தம் கருவில் சுமந்த மரியாளின் உடல் மட்டும் கல்லறையில் கறையான்களால் அரிக்கப்படுமா என்ன?

பழைய ஏவாளால் உலகில் நுழைந்தது சாவு. புதிய ஏவாள் மரியாளால் உலகில் நுழைந்தது வாழ்வு. வாழ்வின் ஊற்றாய் அமைந்தவரை சாவிற்கே சாவு மணியடித்தவரை ஈன்ற தாயின் உடல் சாவின் பிடியில் சிக்கிச் சீரழிவது சாத்தியமா என்ன?

விண்ணேற்பு விழாவை நாம் பின்நோக்கிப் பார்க்கும் போது இறைவனின் தாய் என்ற சிறப்புடன் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் மையத்திலிருந்து எபேசு நகரிலும் ரோமிலும் நம் அன்னைக்கு ஆலயங்கள் உள்ளன என்பது வரலாற்று உண்மை. கி. பி 370 லேயே அந்தியோக் நகரில் என்றும் கன்னியான தேவனின் தாய்க்குரிய சிறப்புத் திருவழிபாடுகள் நடைமுறையில் இருந்து வந்துள்ளன. அப்பொழுதெல்லாம் 'மரியாளின் வானகப்பிறப்பு' என்ற தலைப்பில் மட்டுமே நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. மெல்ல மெல்ல இவ்விழாவிற்குப் 'பிறந்தநாள்' எனவும் 'துயில் கொள்ளல்' எனவும் 'சென்றுவிட்டார்' எனவும் 'விண்ணேற்பு' எனவும் பெயர்கள் சூட்டப்பட்டன. எனவே மரியன்னை ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று விசுவாச சத்தியமாக அறிவிக்கப்பட்டது.

✠ "அன்னை மரியாளை அதிகம் அன்பு செய்வது பற்றி ஒருபோதும் பயப்பட வேண்டாம். இயேசுவைவிட அதிகமாக நீங்கள் அவரை ஒருபோதும் அன்பு செய்ய முடியாது." ✠

 கிறிஸ்தவ வாசல் (Christian Gate)
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா