Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠(St. Louis IX)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 25)
✠ புனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠(St. Louis IX)

 ஃபிரான்ஸ் அரசர் :
(King of France)

பிறப்பு : ஏப்ரல் 25, 1214
பொய்ஸ்ஸி, ஃபிரான்ஸ்
(Poissy, France)

இறப்பு : ஆகஸ்ட் 25, 1270 (வயது 56)
டுனிஸ், வட ஆபிரிக்கா
(Tunis, North Africa)

புனிதர் பட்டம் : 1297
திருத்தந்தை எட்டாம் போனிபாஸ்

புனிதர் லூயிஸ் என பொதுவாக அறியப்படும் ஒன்பதாம் லூயிஸ், ஒரு பிரெஞ்ச் நாட்டு மன்னரும், கிறிஸ்தவ புனிதரும் ஆவார். தமது தந்தையான "எட்டாம் லூயிஸின்"(Louis VIII the Lion) மரணம் காரணமாக பன்னிரண்டு வயதிலேயே முடிசூடிக்கொண்டார். இருப்பினும், இவருக்கு வயது வரும்வரை, இவரது தாயாரான "ப்லான்ச்"(Blanche of Castile) நாட்டை ஆண்டார். "ப்லான்ச்"கலகக்கார குடிமக்களின் எதிர்ப்பை கையாண்டார்.

ஒன்பதாம் லூயிஸின் தாயார் இளவரசி "ப்லான்ச்", தமது மகனை தலைமைக் குணங்களுடைய ஒரு நல்ல கிறிஸ்தவராக வளர்த்தார். அவர் தமது மகனிடம், "மகனே, நான் உன்னை மிகவும் அன்பு செய்கிறேன். ஒரு தாய் தமது மகனை எவ்வளவு அன்பு செய்ய இயலுமோ, அவ்வளவு அன்பு செய்கிறேன். ஆனால், ஒரு சாவான பாவமதைச் செய்வதைக்காட்டிலும், நீ என் காலடிகளிலேயே செத்துவிடுவது நல்லது"(I love you, my dear son, as much as a mother can love her child; but I would rather see you dead at my feet than that you should ever commit a mortal sin) என்று அடிக்கடி கூறுவார்.

லூயிஸ், "ப்ரோவென்ஸ்"(Provence) பிரபுவின் மகளான "மார்கரெட்டை"(Margaret of Provence) 1234ம் ஆண்டு, மே மாதம், 27ம் தேதி திருமணம் செய்தார். இருவரும் இனிமையாக வாழ்க்கை நடத்தினர்.

லூயிசுக்கு 15 வயது நடக்கையில், இருபது வருடங்களாக நடைபெற்று வந்த "அல்பிஜென்சியன் சிலுவைப்போரை"(Albigensian crusade), "பிரபு ஏழாம் ரேமண்ட்"(Count Raymond VII) என்பவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவரது தாயார் முடிவுக்கு கொண்டு வந்தார்.

லூயிஸ், இரண்டு சிலுவைப்போர்களில் பங்கேற்றார். 1248ம் ஆண்டு, 30 வயதில், "ஏழாவது சிலுவைப்போருக்கு"(Seventh Crusade) சென்றார். மீண்டும், 1270ம் ஆண்டு, 50 வயது நடக்கையில் "எட்டாம் சிலுவைப்போருக்கு"(Eighth Crusade) சென்றார்.

ஆட்சிப்பொறுப்பேற்ற ஒன்பதாம் லூயிஸ், "ஹக்"(Hugh X of Lusignan) மற்றும் "பீட்டர்"(Peter of Dreux) போன்ற மிகச் சக்தி வாய்ந்த அரசர்கள் மற்றும் பிரபுக்கள் சிலருடன் தொடர்ச்சியான மோதல்களை எதிர்கொண்டார். அதே நேரத்தில், இங்கிலாந்து மன்னனான மூன்றாம் ஹென்றியும் (Henry III of England) தமது கண்டம் சார்ந்த சொத்துக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக முயற்சித்தான். ஆனால், (Battle of Taillebourg) போரில் தோல்வி கண்டான். ஒன்பதாம் லூயிஸின் ஆட்சி, "நார்மண்டி"(Normandy), "மைன்"(Maine), மற்றும் "புரோவென்ஸ்"(Provence) போன்ற பல மாகாணங்களை இணைத்துக்கொண்டது.

ஒன்பதாம் லூயிஸ், ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாவார்; மற்றும் பிரெஞ்சு அரசியலமைப்பையும் நீதித்துறையையும் அபிவிருத்தி செய்தார். இதில், அரசனே உச்ச நீதியரசராவார். நாட்டின் எந்தவொரு பிரஜையும் எந்த தீர்ப்பையும் மாற்றியமைக்க விண்ணப்பிக்கும் உரிமையையும் கொடுத்தார். புராதன நடைமுறையான கடும் சோதனைகள் மூலம் வழக்கு விசாரணைகல் செய்வதை தடை செய்தார். குடும்பங்கள், வாரிசுகள், இனங்கள், சமூக குழுக்கள் ஆகியவற்றினிடையே காலம் காலமாக இருந்துவந்த சண்டைகளை தடை செய்ய முயற்சிகள் செய்தார். இந்த புதிய சட்ட முறையின் சரியான பயன்பாட்டை செயல்படுத்துவதற்கு, ஒன்பதாம் லூயிஸ் ஸ்தாபகர்களையும், உயர்நீதிமன்றங்களையும் உருவாக்கினார்.

ஒரு கடுமையான நோய்க்கு பிறகு எடுத்துக்கொண்ட உறுதிமொழியின்படி, அற்புதமாக குணமானார். சிகிச்சையின் பின்னர் உறுதிபடுத்தப்பட்ட ஒன்பதாம் லூயிஸ், ஏழாவது மற்றும் எட்டாவது சிலுவைப்போர்களில் பங்கு பெற்றார், இதில் அவர் வயிற்ருக்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கினால் மரித்தார். அவருக்குப்பின்னர், அவரது மகனான "மூன்றாம் பிலிப்"(Philip III) ஆட்சிப் பொறுப்பேற்றார்.

ஒன்பதாம் லூயிஸின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் கிறிஸ்தவ மதிப்பு மற்றும் கத்தோலிக்க பக்தியால் ஊக்கமளிக்கப்பட்டன. தெய்வ நிந்தனை, சூதாட்டம், வட்டி ஈட்டும் கடன்கள் மற்றும் விபச்சாரம் ஆகியவற்றை தடை செய்ததுடன், அவற்றில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும் செய்தார். அவர் விசாரணைகளின் நோக்கங்களை விரிவுபடுத்தினார்.
===========================================================================

தூய ஒன்பதாம் லூயிஸ் (ஆகஸ்ட் 25)

"உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்துவிடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது" (மத் 5: 29 -30)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய ஒன்பதாம் லூயிஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மன்னர் எட்டாம் லூயிஸின் மகன். இவர் 1214 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 25 ஆம் நாள் பிறந்தார்.

இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய தந்தை மன்னர் எட்டாம் லூயிஸ் இறந்து போனார். அதனால் இவர் சிறிய வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றபோது இவருக்கு வயது வெறும் பனிரெண்டுதான். இருந்தாலும் தாயின் வாழிகாட்டுதலில் இவர் மக்களை நல்லமுறை வளர்த்து வந்தார். லூயிஸின் தாய் அவரிடத்தில் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், "பாவம் செய்வதை விடவும் சாவதே மேல்" என்பதுதான். தாயின் இந்தக் கட்டளையை லூயிஸ் கடைசிவரை கடைபிடித்து வந்தார்.

மன்னர் லூயிஸ் அன்றாடம் நடைபெறும் திருப்பலியில் தவறாது கலந்துகொண்டு வந்தார். இது மட்டுமல்லாமல், ஜெப வழிபாடுகளில் கலந்துகொண்டு மக்களுக்கு முன் ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். இவருடைய காலத்தில் பண்ணை முறை இருந்தது. இதனால் நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்தது. இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க நினைத்த மக்கள் இவர், நேரடியாக அரசரைச் சந்திக்கலாம், தங்களுடைய குறைகளை அரசரிடத்தில் எடுத்துச் சொல்லலாம் என்று ஆணை பிறப்பித்தார். இதனால் இவர்கள்தான் அரசரைச் சந்திக்க முடியும், இவர்கள் சந்திக்கக்கூடாது என்ற நிலை மாறியது.

பல்வேறு விதமான நோயினால் அவதிப்பட்ட மக்கள் நல்லமுறையில் சிகிச்சை பெறுவதற்கு பல மருத்துவமனைக் கட்டி எழுப்பினார். அதன்மூலம் எளியவருக்கும் நல்ல மருத்துவ உதவிகள் கிடைத்திட உறுதுணையாக இருந்தார்.

இவருடைய கனவெல்லாம் புனித நாடுகளை துருக்கியர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக இவர் சிலுவைப் போரை மேற்கொண்டார். ஆனால், துரதிஸ்டவசமாக அந்தப் போரில் தோற்றுப்போனார். இதற்குப் பிறகு 1270 ஆம் ஆண்டு மீண்டுமாக துருக்கியர்களுக்கு எதிரான சிலுவைப் போரை மேற்கொண்டார். அந்தப் போரிலும் இவர் கடுமையாகத் தோல்வியுற்று கைதியாக்கப்பட்டார்.

இவ்வாறு தன் வாழ்நாள் முழுக்க தூய மாசற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்த, மன்னர் ஒன்பதாம் லூசிஸ் திருச்சபைக்காக எதையும் செய்யத் துணிந்தார். இப்படிப்பட்டவர் 1270 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25 ஆம் நாள், இறையடி சேர்ந்தார். இவர் இறக்கும்போது, "தந்தையே உம்முடைய கைகளில் என்னுடைய ஆன்மாவை ஒப்படைக்கின்றேன்" என்ற வார்த்தையைச் சொல்லி உயிர் துறந்தார். இவருக்கு 1297 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஒன்பதாம் லூயிஸின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தூய மாசற்ற வாழ்க்கை வாழ்தல்!

தூய ஒன்பதாம் லூயிஸ், சிறு வயதில் தன்னுடைய தாயார் தனக்குக் கற்றுக்கொடுத்த, தூய மாசற்ற வழியில் நடந்து வந்தார். அவர் பாவம் செய்வதற்கு அஞ்சியவராய், மாசற்ற வழியில் நடந்து வந்தார். அதனாலேயே இன்றைக்கு அவர் புனிதர்கள் கூட்டத்தில் இடம் பிடித்திருக்கின்றார். தூய ஒன்பதாம் லூயிஸைப் போன்று நாம் தூய வாழ்க்கை வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த டிஜிட்டல் உலகமானது, நாம் எல்லவிதத்திலும் கெட்டுப் போவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்துகொண்டிருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் நாம் நம்முடைய உள்ளத்தை ஆன்மாவை பாவக் கறை படியாமல் காத்துக்கொள்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

லேவியர் புத்தகம் 19:2 சொல்கின்றது, கடவுளைப் போன்று தூயவர்களாக இருக்க வேண்டும் என்று. ஆகவே, தூய ஒன்பதாம் லூயிஸின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தூய, மாசற்ற வாழ்க்கை நடத்த முற்படுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா