Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      28  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 5ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9a


நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்.

என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 69: 7-9. 20-21. 30, 32-33 (பல்லவி: 13b)
=================================================================================
 பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. 8 என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி

20 பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது; நான் மிகவும் வருந்துகின்றேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகத் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை. 21 அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். பல்லவி

30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். 32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 

அல்லேலூயா, அல்லேலூயா!  எங்கள் அரசரே போற்றப் பெறுக; எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே. அல்லது பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே போற்றப்பெறுக; அடிக்கக் கொண்டு போகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர். அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25

அக்காலத்தில் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, "இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான்.

அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களிடம், "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப்போகிறேன் எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்" என்றார்.

இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், "ஆண்டவரே, அது நானோ?" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.

அதற்கு அவர், "என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்" என்றார்.

அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் "ரபி, நானோ?" என அவரிடம் கேட்க, இயேசு, "நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நண்பனாக இருந்து துரோகியாக மாறிய யூதாஸ்

ஈசாப் கதை இது. காட்டில் விறகு வெட்டுவதற்காக விறகுவெட்டி ஒருவன் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. உடனே அவன் பயத்துடன் ஓடத்தொடங்கினான். "மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்" என்ற குரல் கேட்டது. தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் அவன். அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

விறகுவெட்டியைப் பார்த்த சிங்கம், "மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு. நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்" என்றது. "நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?" என்றான் விறகுவெட்டி. "மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்" என்று கெஞ்சியது சிங்கம். சிங்கத்தின் வார்த்தையை நம்பி கூண்டின் கதவைத் திறந்தான் விறகுவெட்டி. மறுகணம் சிங்கம் அவன்மேல் பாயத் தொடங்கியது. இதனைக் கண்ட விறகுவெட்டி, "சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேன, அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி" என்றான். "என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? என்றது சிங்கம். விறகுவெட்டியோ செய்வதறியாது விழித்தான்.

இதற்கிடையில் அவ்வழியாக ஒரு நரி வந்தது. "இதனிடம் நியாயம் கேட்போம்" என்று விறகுவெட்டி நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான். விறகுவெட்டியைத் தொடர்ந்து சிங்கம் தன் தரப்பு நியாயத்தைச் சொன்னது "எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும்கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே". அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் துரோகம் புரிந்து விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல்பட்டது. "நீங்கள் இந்த மாதிரி சொன்னது எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்" என்று நரி சிங்கத்தை வினவியது. உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது. "நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்". "எந்தக் கூண்டிற்குள்?" என்றது நரி. "அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்" என்றது சிங்கம். "எப்படி அடைந்து கிடந்தீர்கள்?" என்றது நரி. சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!" என்று கத்தியது சிங்கம். "சிங்கராஜா! பேசாமல் நீங்கள் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நீங்கள் செய்த நம்பிக்கைத் துரோகத்திற்கு உங்களுக்கு இதுதான் சரியான தண்டனை" என்றது நரி. சிங்கத்தால் எதுவும் பேச முடியவில்லை. அது தான்செய்த பாதகச் செயலுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று நினைத்து வருந்தத் தொடங்கியது.

நன்மை செய்தவர்களுக்கு துரோகம் செய்வதும் அதன்பயனாக கடைசியில் அவர்கள் அழிந்து போவதும் காலங்காலமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு மேலே சொன்ன கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

நற்செய்தி வாசகத்தில், பன்னிரு திருத்தூதர்களில் ஒருவனாகிய யூதாசு, ஆண்டவர் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக தலைமைக் குருக்களிடம் முப்பது வெள்ளிக் காசுகள் என்று பேரம் பேசுகிறான். யூதாசு இயேசு கிறிஸ்துவோடு மூன்று ஆண்டுகள் கூடவே இருந்தான். அவரிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்று அனுப்பவித்தவன். அப்படியிருந்தன் அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான் என்பது வேதனையான ஒரு விஷயம். இப்படி ஒரு குற்றமும் அறியாத இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்ததனால் என்னவோ, நிம்மதியில்லாமலே தற்கொலை செய்து இறந்து போகிறான். துரோகம் இழைப்பவர்களுக்கு யாரும் தண்டனைக் கொடுக்கத் தேவையில்லை, அவர்களுடைய துரோகமே அவர்களுக்குத் தண்டனையைத் தந்துவிடும் என்பதற்கு யூதாசின் வாழ்வு ஒரு சான்று.

ஆகவே, நாம் நம்முடைய வாழ்வில் ஆண்டவருக்கும் நமக்கு அடுத்திருப்பவருக்கும் என்றும் பிரமாணிக்கமாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!