Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      23  மார்ச் 2018  
                                                      தவக்காலம் 05ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

அந்நாள்களில் எரேமியா கூறியது: "சுற்றிலும் ஒரே திகில்!" என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்; "பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்" என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; "ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்!" என்கிறார்கள்.

ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.

படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 18: 1-2a,3. 4-5. 6 (பல்லவி: 6a)
=================================================================================
பல்லவி: என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்.

1 அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். 2a ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

4 சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. 5 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. பல்லவி

6 என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42

அக்காலத்தில் இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார்.

யூதர்கள் மறுமொழியாக, "நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்" என்றார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, "நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்" என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை "இறைமகன்" என்று சொல்லிக் கொண்டதற்காக "இறைவனைப் பழித்துரைக்கிறாய்" என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்" என்றார்.

இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர்.

அவர்கள், "யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று" எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திறந்த மனதோடு வாழ்வோம்!

புத்தர் காலத்தில் பார்வையற்ற ஒருவன் இருந்தான். அவன் ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்லி வந்தான். யாராவது அவனிடம் சென்று, "ஒளி இருக்கிறது, நீ பார்வையற்றவனாய் இருப்பதால்தான் அந்த ஒளியை உன்னால் காணமுடியவில்லை" என்று சொன்னால், "ஒளி என்ற ஒன்று இருந்தால் அதை சுவைத்திருக்கலாம், தொட்டு உணர்ந்திருக்கலாம், நுகர்ந்திருக்கலாம். அவ்வளவு ஏன் அது எழுப்புகின்ற ஒலியைக் காதுகொடுத்துக் கேட்டிருக்கலாம். இப்படி எந்த விதத்திலும் உணர முடியாத ஒளியை எப்படி இருக்கின்றது என்று நான் ஏற்றுக்கொள்வது? ஒளி என்பது சுத்த மூடநம்பிக்கை" என்று மறுத்துப் பேசி வந்தான்.

ஒருநாள் அந்தப் பார்வையற்றவன் இருந்த இடத்தின் வழியாக புத்தர் வந்தார். சிலர் அவரிடத்தில் சென்று, பார்வைவையற்ற அந்த மனிதனைப் பற்றி அவரிடத்தில் எடுத்துச் சொன்னார்கள். உடனே புத்தர் அவர்களிடம், "பார்வையற்ற அந்த மனிதரிடம் ஒளியைப் பற்றி எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அவர் அதை நம்ப மாட்டார், மறுத்துத்தான் பேசுவார். மாறாக அவரை எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவரிடம் அனுப்பி வைத்துப்பார்ப்போம். நிச்சயம் அவர் அந்த பார்வையற்றவருக்கு பார்வையளித்த பின், அவர் தன்னாலே ஒளி என்ற ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்வார்" என்றார். எல்லாருக்கும் அதற்குச் சரி என்று சொல்ல, அந்த பார்வையற்றவர் மருத்துவரிடம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

ஒருசில மாத சிகிச்சைக்குப் பின் பார்வையற்றவர் நல்ல பார்வைபெற்று புத்தரிடம் வந்தார். வந்தவர் புத்தரின் காலில் விழுந்து வணங்கி, "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள், இந்நாள் வரைக்கும் நான் ஒளி என்ற இல்லவே இல்லை என்று மறுத்துப் பேசி வந்தான். இப்போதுதான் நான் உங்களுடைய தயவால் பார்வைபெற்று ஒளி உண்டென்று நம்பத் தொடங்கினேன். இனிமேலும் நான் அப்படிப்பட்டத் தவற்றினை செய்யமாட்டேன்" என்றார். புத்தர் அவனுக்கு ஆசிகூறி அனுப்பி வைத்தார்.

பார்வையற்ற மனிதன் ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று மறுத்துவந்தது போன்று, இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வாழ்ந்த பரிசேயர்களும் இயேசு என்ன சொன்னாலும் (தான் இறைமகன் என்று சொன்னதை) மறுத்துப் பேசி வந்தார்கள். இப்படி மறுத்துப் பேசி வந்த பரிசேயர்களுக்கு இயேசு எத்தகைய பதில் அளித்தார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு போதித்துக் கொண்டிருக்கும்போது, யூதர்கள் அவர்மீது கற்களை எறியப் பார்க்கிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், "தந்தையின் சொற்படி பல நற்செயல்களை செய்திருக்கிறேன், இதில் எதற்காக கற்களை எறியப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்கும்போது அவர்கள், "நற்செயல்களுக்காக அல்ல, கடவுளைப் பழித்துரைத்ததற்காக, மனிதனாகிய உன்னையே நீ கடவுளாக்கிக் கொண்டதற்காக கல்லெறிகிறோம்" என்கின்றார்கள். யூதர்கள் இயேசுவின் மீது வைக்கும் இந்தக் குற்றச்சாற்று உண்மையானதா? அல்லது அறியாமையின் வெளிப்பாடா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

முதலில் இயேசு சாதாரணமானவர் கிடையாது. அவர் இறைமகன், தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அப்படியிருக்கும் பட்சத்ததில் அவர் தன்னை இறைவன் - இறைமகன் - என்று சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது என்று தெரியவில்லை. அடுத்ததாக திருப்பாடல் 82:6 சொல்கிறது, "நீங்கள் தெய்வங்கள், நீங்கள் எல்லோரும் உன்னதரின் புதல்வர்கள்" என்று. அதனை வைக்கும் பார்க்கும்போதும் இயேசு இறைவன் - இறைமகன் - என்று மறுப்பின்றி சொல்லலாம். இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் இயேசு இறைவனை பழித்துரைத்துவிட்டார் என்று யூதர்கள் சொல்வதை எந்தவித விதத்தில் ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை.

பல நேரங்களில் நாமும்கூட உண்மையை அறியாமல், அறிந்து கொள்ள விருப்பமில்லாமல், மூடிய மனநிலையோடு இருக்கின்றோம். இதனால் இழப்பு என்னமோ நமக்குத்தான். தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் கூறுவார், "இயேசுவே ஆண்டவர்" என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" என்று (உரோ 10: 9). இது உண்மையிலும் உண்மை. இயேசுவை இறைமகன், ஆண்டவர் என்று நம்புவோருக்குத் தான் மீட்பே ஒழிய, அவர்மீது அவநம்பிக்கை கொள்பவருக்கு அல்ல. பரிசேயர்கள் இயேசுவை ஆண்டவர் என நம்பத் தயங்கினார்கள். அதனால் வாழ்வினை இழந்தார்கள். நாம் அவர்களைப் போன்று அல்லாமல், இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!