|
21 மார்ச் 2018 |
|
தவக்காலம்
5ம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை
மீட்டார்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம்
3: 14-20, 24-25, 28
அந்நாள்களில் நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, "சாத்ராக்கு!
மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை
என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும்
உண்மைதானா?
இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை,
பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன்,
நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத்
தயாராய் இருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற
தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து
தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ?" என்றான்.
சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை
நோக்கிப் பதில்மொழியாக, "இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி
கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற
எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர்.
அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு
மனமில்லாமல் போனாலும், அரசரே!
நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய
பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத்
தெரிந்திருக்கட்டும்" என்றார்கள்.
இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ
ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட
ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.
பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும்
தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர்
சிலருக்குக் கட்டளையிட்டான்.
அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன்
அமைச்சரை நோக்கி, "மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!"
என்றான்.
"ஆம் அரசரே" என்று அவர்கள் விடையளித்தனர். அதற்கு அவன், "கட்டவிழ்க்கப்பட்டவர்களாய்
நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்!
அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள்
தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" என்றான்.
அப்பொழுது நெபுகத்னேசர், "சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின்
கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும்
பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல்,
அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய
ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்" என்றான்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தானி (இ) 1: 29. 30-31. 32-33 (பல்லவி: 34)
=================================================================================
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்.
29 எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப்
பெறுவீராக; என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும்
தகுதியுள்ளவர். மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர்
வாழ்த்துக்குரியது. பல்லவி
30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்
பெறுவீராக; உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர்.
31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர்
வாழ்த்தப் பெறுவீராக; நீர் என்றென்றும் புகழப்படவும் ஏத்திப்
போற்றப்படவும் தகுதியுள்ளவர். பல்லவி
32 உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும்
நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக, ஏத்திப் போற்றப் பெறுவீராக. 33
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர்
பாடல் பெறவும், மாட்சி அடையவும் தகுதியுள்ளவர். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா!
சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மனஉறுதியுடன்
பலன் தருபவர் பேறுபெற்றோர். அல்லேலூயா!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால், நீங்கள் உண்மையிலேயே விடுதலை
பெற்றவர்கள்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 31-42
அக்காலத்தில் இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, "என்
வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில்
என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள்.
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்றார்.
யூதர்கள் அவரைப்
பார்த்து, "உங்களுக்கு விடுதலை கிடைக்கும்'
என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய்
இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!" என்றார்கள்.
அதற்கு இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான
இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு
விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.
நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள்
என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். நான் என் தந்தையிடம் கண்டதைச்
சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச்
செய்கிறீர்கள்" என்றார்.
அவர்கள் அவரைப் பார்த்து, "ஆபிரகாமே எங்கள் தந்தை" என்றார்கள்.
இயேசு அவர்களிடம், "நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப்
போலச் செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை
உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள்.
ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள் உங்கள் தந்தையைப்போலச்
செயல்படுகிறீர்கள்" என்றார்.
அவர்கள், "நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு
ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்" என்றார்கள்.
இயேசு அவர்களிடம் கூறியது: "கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள்
என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன்.
நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்"
முன்பொரு காலத்தில் முகைதீன் என்ற பதினெட்டு வயது இளைஞர் வேதம்
படிப்பதற்காக ஜீச்லான் நகரிலிருந்து பாக்தாத் நகர் நோக்கி புறப்பட்டுச்
சென்றார். பாக்தாத் நோக்கிய பயணம் சற்று ஆபத்தானது என்பதால்
அவர் தனியாகச் செல்லாமல், ஒருசில வாணிபர்களோடு சென்றார்.
ஜீச்லானிலிருந்து பாக்தாத்திற்கு நீண்டதூரம் என்பதால்
முகைதீனும் அவரோடு சென்ற வாணிபர்களும் ஆங்காங்கே தங்கித் தங்கிச்
சென்றார்கள். ஒருநாள் இரவு அவர்கள் காட்டுப்பாதை வழியாக நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது
திடிரென்று அங்கு வந்த கொள்ளக் குப்பல் அவர்களை வழிமறித்து,
அவர்களிடம் இருப்பதை கொடுத்துவிட்டுப் போகுமாறு கத்தி முனையில்
வைத்து மிரட்டியது. வாணிபர்கள் தங்களது உயிருக்கு பயந்து, தங்களிடம்
இருந்த பணம் பொன் நகைகள் அத்தனையையும் அந்தக் கொள்ளைக் கும்பலிடம்
கொடுத்துவிட்டு மிகப் பரிதாபமாக நின்றார்கள்.
இவற்றையெல்லாம் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தார் முகைதீன். அவரைக் கவனித்த கொள்ளைக்
கூட்டத்து தலைவன் அவரிடத்தில் வந்து, "ஏய்! நீ யார்? இங்கே என்ன
செய்துகொண்டிருக்கிறாய்? உன்னிடத்தில் ஏதாவது இருந்தால் அதைக்
கொடுத்துவிட்டு இல்லையென்றால் உன்னைக் கொன்றுபோட்டுவிடுவேன்"
என்று மிரட்டினான். வயதில் சிறியவன்தானே இவனிடத்தில் என்ன இருக்கப்போகிறது
என்ற நினைப்பிலே அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் முகைதீனை
அவ்வாறு மிரட்டினான். ஆனால், முகைதீனோ, "என்னிடத்தில் நாற்பது
தினார் இருக்கின்றது. இந்த நாற்பது தினாரையும் எடுத்துக்கொள்ளுங்கள்"
என்றார். இதைக் கேட்ட கொள்ளக்கூட்டத் தலைவனோ, "தம்பி உன்னிடத்தில்
பணம் இருக்காது என்று எனக்குத் தெரியும். எதற்காக உன்னிடத்தில்
பணம் என்று சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்?" என்றான்.
"ஐயா! நான் சொல்வது உண்மை. என்னிடத்தில் நாற்பது தினார் இருக்கின்றது.
அதை என்னுடைய இந்த தோல்பையில்தான் முடிந்து
வைத்திருக்கின்றேன்" என்றார் முகைதீன். அவர் சொன்ன எதையும்
காதில் போட்டுக்கொள்ளாமல், "சிறுவன் நம்மிடத்திலே வேடிக்கை
காட்டுகிறான்" என்ற நினைத்த வண்ணம், தன்னுடைய வாளை உருவி,
முகைதீன் வைத்திருந்த தோல்பையை இரண்டாகக் கிழித்தான். மறுகணம்
முகைதீனுடைய தோல்பையிலிருந்து நாற்பது தினார்களும் விழுந்தன.
கொள்ளைக் கூட்டத் தலைவனால் நம்பமுடியவில்லை. உடனே அவன்
முகைதீனிடம், "தம்பி! உன்னிடத்தில் நான் சும்மாதான் பணம் இருக்கிறதா?
என்று கேட்டேன். நான் கேட்டதற்கு நீ இல்லையென்று
சொல்லியிருந்தால்கூட "சிறுவனிடத்தில் என்ன இருக்கப்போகிறது" என்று
நானும் அப்படியே போயிருப்பேன். எதற்காக நீ என்னிடத்தில் பொய்
சொல்லாமல், நாற்பது தினார் இருக்கின்றது என்று சொன்னாய்?" என்று
கேட்டான்.
அதற்கு முகைதீன் அவனிடம், "ஐயா! நானோ சிறுவயதிலே தந்தையை இழந்தவன்.
என்னுடைய தாய்தான் என்னை வளர்த்தெடுத்தாள், அப்படி என்னை வளர்ந்தெடுக்கும்போது,
"எத்தகைய இக்கட்டான சூழலில் பொய்சொல்லக்கூடாது என்று சொல்லக்கூடாது,
மீறி பொய்சொன்னால் நீ எனக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்"
என்று சொல்லி வளர்த்து வந்தாள். அதனால்தான் உங்களிடத்தில் பொய்
பேசாமல், உண்மை பேசினேன்" என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த
கொள்ளைக் கூட்டத் தலைவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வரத்தொடங்கியது.
ஓர் உண்மை பேசும் மைந்தனிடமிருந்தா நான் கொள்ளையடிக்கப்
பார்த்தேன்... ஐயோ நான் மிகப்பெரிய தவறுசெய்துவிட்டேனே... இப்போது
நான் என்ன செய்வேன்" என்றான். பின்னர் அவன் தான் கவர்ந்த பணம்,
பொருள் அத்தனையும் அவரவரிடம் திருப்பிக் கொடுத்தான், அவனோடு இருந்த
மற்ற கொள்ளையர்களும் அவ்வாறே செய்தார்கள். அதன்பிறகு
கொள்ளைக்கூட்டத் தலைவனும் அவனோடு இருந்த மற்ற கொள்ளையர்களும்
மனந்திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்.
முகைதீன் என்ற அந்த பதினெட்டு வயது இளைஞன் உண்மை பேசியதால் ஒரு
மிகப்பெரிய கொள்ளக்கூட்டத் தலைவனே மனம்மாறினான் என்பதை
நினைத்துப் பார்க்கும்போது "உண்மை உங்களை விடுவிக்கும்" என்ற
இயேசுவின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை நம்மால் கற்பனை செய்து
பார்க்க முடிகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "என் வார்த்தைகளை நீங்கள்
கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;
உண்மையை அறிந்தவர்களாகவும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு
விடுதலை அளிக்கும்" என்கின்றார். இயேசுவின் சீடர்களாக இருப்பதற்கான
முதன்மையான தகுதியே அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ்வதுதான்.
அவ்வார்த்த்தைகளை நாம் கடைப்பிடித்து வாழ்கின்றபோது, நிறைய சவால்கள்
வந்தாலும், இறுதியில் அவருடைய வார்த்தையே
- உண்மையே - நமக்கு
விடுதலை அளிக்கும் என்பதுதான் நிதர்சனம்.
ஆகவே, இயேசுவவின் வழியில் நடக்கும் நாம், தொடர்ந்து உண்மையின்
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|