Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      19  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 5ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a,12-14a,16

அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: "நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாய் இருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!"

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 36)
=================================================================================
பல்லவி: அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்.

1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

3 நீர் உரைத்தது: "நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்". பல்லவி

26 "நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை" என்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி

=================================================================================
இரண்டாம் வாசகம்
=================================================================================
எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18, 22

சகோதரர் சகோதரிகளே, உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது.

ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று.

ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் "எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். "உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்" என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாதது போல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். "அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்."

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 84: 4

அல்லேலூயா, அல்லேலூயா!  ஆண்டவரே, உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே யோசேப்பு நடந்துகொண்டார்.

தூயமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 16, 18-21, 24a

யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழுமுன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


அல்லது

உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே.

தூயலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51a

அக்காலத்தில் ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.

விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒரு நாள் பயணம் முடிந்த பின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.

அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.

அவர் அவர்களிடம், "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர்:

ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்!
துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்!
கஷ்டங்களுக்கு ம...த்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்!

இவ்வாறு வாழ்ந்தவர் யார் தெரியமா?

அவரே நமது புனித சூசையப்பர். இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது. ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம்தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள். இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்ந்திடும் நன்னாள் இன்று. இந்த விழா எவ்வாறு தோன்றியது.

உழைப்பை பரிசுத்தபடுத்தவும், உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை கொடுக்கவும் நம் அனைவருக்கும் ஒரு பாதுகாவலரை கொடுக்கும்படியும் 12ஆம் பத்திநாதர் 1955ல் இவ்விழாவை ஏற்படுத்தினார். மேலும் புனித சூசையப்பர் திருமறையில் 'சான்றோர் என கௌரவப்படுத்தப்படுவதுடன், தொழிலாளர்களின் பாதுகாவலராகவும், கல்விக்கும் கற்புக்கும் பாதுகாவலராகவும் விளங்குகிறார். அத்துடன் 23ம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை புனித சூசையப்பரின் பாதுகாப்பில் வைத்திருப்பதாக உலகிற்கு அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சூசையப்பர்?

01. மரியாளின் கணவர் சூசையப்பர். அவர் ஒரு நேர்மையாளர், நீதிமான், அயராது
.    (மத். 1:19)
02. தாவீதின் வழிமரபினர்தான் புனித சூசையப்பர். (லூக் 2:4)
03. இயேசு யோசேப்பின் மகன். இவர் யேசுவின் வளர்ப்புத் தந்தையாக இருந்தார். (அருளப்பர் 1:45, 6:42)

கன்னி மரியாளின் கணவரும் இயேசுவின் வளர்ப்பு தந்தையுமான புனித சூசையப்பரைப் பற்றி விவிலியம் மிகச் சுருக்கமாகவே எடுத்தியம்புகிறது. நீதிமான் என்ற வார்த்தை அவர் கடவுளுக்கு மிகவும் பணிந்து நடப்பவர் எனக் காட்டுகிறது. தச்சுத் தொழில் செய்து, தந்தைக்குரிய பொறுப்பேற்று, கணவருக்குரிய கடமைகளை நிறைவேற்றி குடும்பத்தை நன் முறையில் நடத்தினார். கன்னிமரியின் பேறுகாலத்திற்கு சத்திரம் தேடி அலைந்த போதும, குழந்தையை கொடுங்கோலன் ஏரோதுவின் பிடியிலிருந்து விடுவிக்க எகிப்துக்கு ஓடிச் சென்ற போதும் பல இன்னல்களை தாங்கிக் கொண்டார். இதன் வழியாக யேசுவின் மீட்புப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் முதல் ஆறு நாட்களில் உலகைப் படைத்து விட்டு ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். மேலும் கடவுள் மனிதனை தமது சாயலாக படைத்தார். ஆணும் பெண்ணுமாக படைததார். ஆணும் பெண்ணும் இறைவனது படைப்பு பணியிலே சமமாக பங்கேற்கிறார்கள். இன்றைய சூழலில் ஆண்கள் அலுவலகத்தில் 8 மணிநேரம் வேலை செய்தாலும் பெண்கள் வீடுகளில் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். உழைத்து, உழைத்து சோர்ந்து போகிறார்கள். இன்றைய சூழலில் நாம், அப்பா ஆசிரியராக இருந்தால் வாத்தியார் மகன் என்றும் அரசியல் வாதியாக இருந்தால் ஆடுயு மகன் என்றும் மருத்துவராக இருந்தால் டாக்டர் மகன் என்றும் அவர்கள் செய்யும் தொழிலை கொண்டு பிறரை நாம் இனம் கண்டு கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் கூட இயேசுவை, அவரது வளர்ப்பு தந்தையாகிய சூசையின் தச்சுத் தொழிலை கொண்டே இனம் கண்ட மக்களைப் பற்றி மத்தேயு எழுதிய நற்செய்தி குறிப்பிடுகிறது. சூசையப்பரின் தொழில் இன்றைய கம்பியுட்டர் உலகிலே மிகச் சாதரணமாகப் பார்க்கப்படும் தச்சுத்தொழில். அவர் ஒரு கூலித் தொழிலாளி. ஆனால் அன்று அது மேன்மையாக கருதப்பட்டது. உடல் உழைப்புக்கு மாண்பும், மதிப்பும் இருந்தன. ஆனால் இன்றோ சேற்றில் இறங்கி உழைப்பவனும், உலைகளத்தில் நெருப்பில் வெந்து சம்மட்டி அடிப்பவனும், சாக்கடையை சுத்தம் செய்பவனும், வேகாத வெயிலிலே பாரவண்டி இழுப்பவனும்,
A/c அறையில் வேலை செய்பவர்களுக்கு இழுக்கானவர்கள், மட்டமானவர்கள் என கருதுகின்றனர்.

மாறாக செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நம் செல்வம், என்ற மனநிலை வேண்டும். தொழிலை இழிவாக கருதாமல் தொழில் செய்வோரின் நேர்மை, அதை செய்யும் நேர்த்தி மேலும் அவர்கள் அளிக்கும் உழைப்பையும் போற்றிட வேண்டும். மட்டமான தொழில்கள் எனப்படும் வேலைகளும் செய்யப்பட்டால்தான் படித்த, புத்தி கூர்மையுள்ள தொழில் செய்வோர்களால் முழுமையாக செயல்பட முடியும். உழவன் சேற்றிலே கால் வைத்தால்தான் நாம் சோற்றிலே கை வைக்கமுடியும். எனவே எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் அது சமுதாயத்திற்கும், உலகிற்கும் பயன் அளிப்பதாக இருந்தால் அதைப்பற்றி மேன்மை படுத்துவோம். எனவே கூலித் தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம்.

இன்று நாம் விழா கொண்டாடும் புனிதராம் சூசையப்பரிடம் நாம் கற்றக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா பணிகளும் மதிக்கப்படவேண்டும். எல்லாப்பணியாளர்களும் இறைவனது படைப்பு பணியிலே ஒத்துழைப்பவர்களாவார்கள். எவ்வாறு புனித சூசையப்பர், அன்னையாம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் உறுதுணையாக இருந்தாரோ அதே போல் நம் உழைப்பால் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம். சில பணிகள் நல்லவை என்றும், சில நல்லவையல்ல என்றும் பிரித்து பார்க்கும் மனநிலை மாற வேண்டும். உண்மையான உழைப்பிற்கும், அன்பினால் உழைத்து குடும்ப வளர்ச்சிக்கு தியாகம் செய்யும் கணவனுக்கும் மனைவிக்கும் சூசையப்பர் ஒரு சிறந்த முன் மாதிரியாவார்.
எனவே மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதுவதும், மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதுவதும், முற்றிலும்; தவறானதாகும்.  நாம் செய்கின்ற தொழிலை மதிப்போம். அதனை அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். நாம் செய்கின்ற தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும் வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் மன்றாடுவோம். ஆமென்

Sr. Selvi - India

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா

கணவர் ஒருவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய மனைவி, தான் வந்ததுகூடத் தெரியாமல் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதிலே மூழ்கியிருந்தார். இதனால் கடும் கோபம்கொண்ட கணவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், "ஒரு பொம்பள எப்ப பாரு டிவி, சீரியல்னு பாத்துக்கிட்டே இருந்தா அந்தக் குடும்பம் எப்படி உருப்படும். நீயெல்லாம் வேலைக்குப் போயி, நாலு காசு சம்பாதிச்சாதான், உனக்கெல்லாம் பணத்தோட அருமை புரியும்" என்று தன்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்தார்.

எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த மனைவி தன்னுடைய பங்குக்கு போட்டு விலாசினாள். "ஆபிஸ் வேலதான் பெருசுனு நெனைக்காதிங்க. ஒருநாளு வீட்ல இருந்து, வீட்ல இருக்குற வேலையைப் பாருங்க. அப்பத்தான் உங்களுக்கு இதுல இருக்குற கஷ்டம் புரியும்" என்று பொரிந்து தள்ளினாள். இறுதியல் அடுத்த நாள் கணவன் வீட்டு வேலை பார்ப்பதாகவும், மனைவி ஆபிசுக்கு செல்வதாகும் உறுதியானது.

அலுவலகத்திற்குச் சென்ற மனைவி மிகவும் மகிழ்ச்சியோடு கணவன் செய்த வேலையைச் செய்தாள். அவ்வப்போது அவளுக்கு வீட்டில் தன் கணவன் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ? என்ற எண்ணம் வந்து வந்து போனது. ஆனால் வீட்டில் கணவனின் பாடு பெரிய திண்டாட்டமாய் போனது. அவன் அடுப்படியில் கிடந்து வேர்த்து விறுவிறுத்துப் போனான். குறிப்பாக தன்னுடைய பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் வெறுத்துப் போய், ஓர் அறையில் வைத்துப் பூட்டிவைத்தான்.

மாலை நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மனைவி, வீட்டில் என்ன நடந்ததோ என மிகவும் பதற்றத்தோடு வந்தாள். அவள் நினைத்தது போன்று நடந்திருந்தது. வீட்டுக்கு வெளியே கணவன் கையில் கம்போடு நின்றிருந்தான். "எங்கங்க ஆச்சு, இப்படி கையில் கம்போடு அலங்கோலமாக இருக்கீங்க"? என்று கேட்டாள். அதற்கு அவன், "அத ஏன் கேட்குற, அது பெரிய கதை" என்றான். "சரி வீட்ல இருந்த பிள்ளைங்களாம் எங்க?" என்றாள் அவள். அவன் சற்றுக் கோபத்தோடு, "பிள்ளைகளா அது, பிசாசுக் குட்டிங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததனால, அவங்கள ரூம்ல போட்டுப் பூட்டி வைச்சுருக்கேன்" என்றான்.

"ஐயோ பாவி மனுஷன், ஒருநாள்ல வீட்ட அலங்கோலமாக்கிடாரே" என்று புலம்பியவாறே அறையைத் திறந்தாள். உள்ளே குழந்தைகள் எல்லாம் கட்டிலோடு சேர்த்துவைத்துக் கட்டப்பட்டிருந்தார்கள். அவளுடைய அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்கும் விதமாக அவர்களுடைய குழந்தையோடு இன்னொரு பெண்குழந்தையும் கட்டப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த வெலவெலப்போன மனைவி கணவரிடம், "என்னங்க, நம்முடைய குழந்தைகளோடு பக்கத்து வீட்டுக் குழந்தையையும் கட்டிப்போட்டுருக்கீங்க" என்றாள். அதைக் கேட்ட கணவன், "அப்படியா! அதனால்தான் நான் குழந்தைகளை அடித்து வீட்டுக்குள் அடைத்துவைத்தபோது, இந்தக் குழந்தை மட்டும் திரும்பத் திரும்ப வெளியே ஓடிவந்தது. எனக்கு சின்னதாகச் சந்தேகம் வந்தது. இருந்தாலும் இது நம்முடைய குழந்தையாகத்தான் இருக்கும் என்றுசொல்லி வீட்டுக்குள் போட்டு, பூட்டிவிட்டேன்" என்றான்.

பிள்ளைகளை முழுமையாக அறிந்துகொள்ளாமலும், தன்னுடைய மனைவியை முழுமையாக அறிந்து, அன்புசெய்யாத கணவன்மார்கள்தான் இன்றைக்கு நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை வேடிக்கையாக இக்கதை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் தூய சூசையப்பரோ தன்னுடைய மனைவியாகிய மரியாவை முழுமையாக அறிந்தவர், அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்புசெய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் விழாவைத்தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபையானது மரியாளின் கணவர் தூய சூசையப்பரின்/ யோசேப்பின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.


கணவர் ஒருவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய மனைவி, தான் வந்ததுகூடத் தெரியாமல் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதிலே மூழ்கியிருந்தார். இதனால் கடும் கோபம்கொண்ட கணவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், "ஒரு பொம்பள எப்ப பாரு டிவி, சீரியல்னு பாத்துக்கிட்டே இருந்தா அந்தக் குடும்பம் எப்படி உருப்படும். நீயெல்லாம் வேலைக்குப் போயி, நாலு காசு சம்பாதிச்சாதான், உனக்கெல்லாம் பணத்தோட அருமை புரியும்" என்று தன்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்தார்.

எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த மனைவி தன்னுடைய பங்குக்கு போட்டு விலாசினாள். "ஆபிஸ் வேலதான் பெருசுனு நெனைக்காதிங்க. ஒருநாளு வீட்ல இருந்து, வீட்ல இருக்குற வேலையைப் பாருங்க. அப்பத்தான் உங்களுக்கு இதுல இருக்குற கஷ்டம் புரியும்" என்று பொரிந்து தள்ளினாள். இறுதியல் அடுத்த நாள் கணவன் வீட்டு வேலை பார்ப்பதாகவும், மனைவி ஆபிசுக்கு செல்வதாகும் உறுதியானது.

அலுவலகத்திற்குச் சென்ற மனைவி மிகவும் மகிழ்ச்சியோடு கணவன் செய்த வேலையைச் செய்தாள். அவ்வப்போது அவளுக்கு வீட்டில் தன் கணவன் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ? என்ற எண்ணம் வந்து வந்து போனது. ஆனால் வீட்டில் கணவனின் பாடு பெரிய திண்டாட்டமாய் போனது. அவன் அடுப்படியில் கிடந்து வேர்த்து விறுவிறுத்துப் போனான். குறிப்பாக தன்னுடைய பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் வெறுத்துப் போய், ஓர் அறையில் வைத்துப் பூட்டிவைத்தான்.

மாலை நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மனைவி, வீட்டில் என்ன நடந்ததோ என மிகவும் பதற்றத்தோடு வந்தாள். அவள் நினைத்தது போன்று நடந்திருந்தது. வீட்டுக்கு வெளியே கணவன் கையில் கம்போடு நின்றிருந்தான். "எங்கங்க ஆச்சு, இப்படி கையில் கம்போடு அலங்கோலமாக இருக்கீங்க"? என்று கேட்டாள். அதற்கு அவன், "அத ஏன் கேட்குற, அது பெரிய கதை" என்றான். "சரி வீட்ல இருந்த பிள்ளைங்களாம் எங்க?" என்றாள் அவள். அவன் சற்றுக் கோபத்தோடு, "பிள்ளைகளா அது, பிசாசுக் குட்டிங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததனால, அவங்கள ரூம்ல போட்டுப் பூட்டி வைச்சுருக்கேன்" என்றான்.

"ஐயோ பாவி மனுஷன், ஒருநாள்ல வீட்ட அலங்கோலமாக்கிடாரே" என்று புலம்பியவாறே அறையைத் திறந்தாள். உள்ளே குழந்தைகள் எல்லாம் கட்டிலோடு சேர்த்துவைத்துக் கட்டப்பட்டிருந்தார்கள். அவளுடைய அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்கும் விதமாக அவர்களுடைய குழந்தையோடு இன்னொரு பெண்குழந்தையும் கட்டப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த வெலவெலப்போன மனைவி கணவரிடம், "என்னங்க, நம்முடைய குழந்தைகளோடு பக்கத்து வீட்டுக் குழந்தையையும் கட்டிப்போட்டுருக்கீங்க" என்றாள். அதைக் கேட்ட கணவன், "அப்படியா! அதனால்தான் நான் குழந்தைகளை அடித்து வீட்டுக்குள் அடைத்துவைத்தபோது, இந்தக் குழந்தை மட்டும் திரும்பத் திரும்ப வெளியே ஓடிவந்தது. எனக்கு சின்னதாகச் சந்தேகம் வந்தது. இருந்தாலும் இது நம்முடைய குழந்தையாகத்தான் இருக்கும் என்றுசொல்லி வீட்டுக்குள் போட்டு, பூட்டிவிட்டேன்" என்றான்.

பிள்ளைகளை முழுமையாக அறிந்துகொள்ளாமலும், தன்னுடைய மனைவியை முழுமையாக அறிந்து, அன்புசெய்யாத கணவன்மார்கள்தான் இன்றைக்கு நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை வேடிக்கையாக இக்கதை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் தூய சூசையப்பரோ தன்னுடைய மனைவியாகிய மரியாவை முழுமையாக அறிந்தவர், அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்புசெய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் விழாவைத்தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபையானது மரியாளின் கணவர் தூய சூசையப்பரின்/ யோசேப்பின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இன்றைக்கு ஒரு சாதாரண குற்றத்திற்காக தங்களுடைய மனைவியை விவாகரித்து செய்யும் கணவன்மார்களுக்கு மத்தியில், யோசேப்பு தனக்கு திருமண ஒப்பந்தம் செய்திருந்த மரியா திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருந்தது தெரியவந்ததும் அவளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. மாறாக மறைவாக விலக்கிவிடத் தீர்மானிக்கிறார். (மரியாள் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டாள் என நினைத்து அவளைக் கல்லால் எறிந்துகொன்றிருக்கலாம். ஆனால் யோசேப்பு அப்படிச் செய்யவில்லை). மேலும் வானதூதர் கபிரியேல் யோசேப்பிற்குக் கனவில் தோன்றி நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்கிறபோது அவர் திறந்த மனநிலையோடு அதனை ஏற்றுக்கொள்கிறார்.

யோசேப்பிடம் இருந்த அந்த திறந்த மனநிலை ஒவ்வொரு கணவன்மார்களிடமும் இருந்தால் குடும்பத்தில் பாதிப் பிரச்சனை குறைந்துவிடும். இன்றைக்கு கணவன்மார்களிடம் தன்னுடைய மனைவியைக் குறித்த திறந்த மனநிலை உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலை - இல்லாததனால்தான் எல்லாப் பிரச்சனைகளும், குழப்பங்களும்.

யோசேப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அடுத்த பாடம் அவர் தாழ்ச்சியுள்ள/அகந்தையற்ற கணவராக விளங்கினார் என்பதுதான். இன்றைய நாள் விழாவே 'மரியாளின் கணவர்" யோசேப்பு என்றுதான் இருக்கிறது. அதாவது 'இன்னாருடைய மனைவிதான் இவள்" என்று அழைக்கப்படும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் யோசேப்பு மரியாளின் கணவர் என்று அறியப்படுகின்றார். இது அவர் ஒரு தாழ்ச்சியுள்ள கணவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

யோசேப்பு ஒரு சிறந்த பொறுமைசாலியாகவும், பிடிவாதகுணமற்றவராகவும் இருந்திருக்கலாம். ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மரியாள் கருவுற்றபோதும் சரி, ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்ல நினைத்தபோதும் சரி, எகிப்துக்குத் தப்பியோடிய போதும் சரி, எருசலேம் ஆலயத்தில் காணாமல் இயேசு போனபோதும் சரி மிகவும் பொறுமையாக இருக்கின்றார். தான் கொண்ட கருத்தான் சரி என்ற பிடிவாதக்குணத்தோடு இல்லாமல், உண்மையத் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். எனவே கணவன்மார்கள்/ நாம் ஒவ்வொருவரும் யோசேப்பிடம் விளங்கிய பொறுமையைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

குடும்ப வாழ்வில் கணவனும், மனைவியும் பிடிவாதக் குணமில்லாமல், அனுசரித்துச் செல்லவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் ஓர் ஒப்புமை.

வழக்கமாக சமையலுக்காக அம்மிக் கல்லில் தேங்காயை வைத்து அரைக்கும்போது அது வழுக்கிக்கொண்டுபோகும். மாறாக தக்காளியோ அப்படியே இசைந்துபோகும். ஆனால் இறுதியில் (பிடிவாதத்தோடு) வழுக்கிக்கொண்டு போன தேங்காய் சட்டினியோ நீண்ட நேரத்துக்கு நீடிக்காது, அனுசரித்துப் போன தக்காளிச் சட்டினியோ நீண்ட நேரத்துக்கு நீடிக்கும். ஆதலால் தக்காளியைப் போன்று கணவனும், மனைவியும் ஒருவருக்குக்கொருவர் அனுசரித்துப் போகும்போது குடும்ப உறவு இன்னும் வலுப்பெறும்.

யோசேப்பு கடவுளின் மீட்புத்திட்டத்திற்கும், தன்னுடைய மனைவி மரியாளும் அனுசரித்துப் போனார் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இறுதியாக, நிறைவாக யோசேப்பு ஒரு சிறந்த கணவனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இயேசுவுக்கு ஒரு சிறந்த (வளர்ப்புத்) தந்தையாகவும் விளங்கினார். கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்று "தந்தை தோளின் மீது ஏறிநின்று தானே, பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே" என்று. ஆம், தந்தை தான் இந்த உலகத்தை நமக்குக் காட்டியவர், அவர்தான் அறிவையும், ஞானத்தையும் நமக்குப் புகட்டியவர். இது இயேசுவுக்கும் பொருந்தும். இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் என்றால், அதில் யோசேப்பின் பங்கு மிக முக்கியமானது. ஏனென்றால் தமிழ் இலக்கித்தில் வரும் புறநானூற்றில் படிக்கின்றோம், "ஈன்று புறந்தருதல் என்தலை (தாய்க்குக்) கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்று. அப்படியானால் இயேசு பெற்றிருந்த ஞானத்திற்கும், அறிவுத் தெளிவுக்கும் அடிப்படைக் காரணம் அவருடைய (வளர்ப்புத்) தந்தை யோசேப்பே ஆகும்.

ஆதலால் யோசேப்பு ஒரு சிறந்த கணவராகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சிறந்த தந்தையாகும் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகது. எனவே நாம் யோசேப்பைப் போன்று திறந்த மனத்தினராக, தாழ்ச்சி உள்ள கணவராக, பொறுமையுள்ளவராக, சிறந்த தந்தையாக வாழ அழைக்கப்படும் அதே தருணத்தில், நாமும் நம்மோடு வாழும் தந்தையைப் பேணிப் பராமரிக்க, அவருக்குப் பெருமை சேர்க்க, அவர் உள்ளம் குளிரும்படியான வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றோம்.

ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். மகனும் பெற்றோருடைய கஷ்டத்தை உணர்ந்து, சிறப்பாகப் படித்து, நல்ல ஒரு வேலையில் சேர்ந்தான்.

அவன் தன்னுடைய முதல் மாதச் சம்பளத்தை வாங்கிவந்து தாயிடம் கொடுத்தான். அதற்கு அவனுடைய தாய், "இத்தனை நாளும் உன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி, எல்லாச் செலவையும் செய்த உன் தந்தையிடம் போய் சம்பளத்தைக் கொடு" என்றாள். அதற்கு அவனோ முடியாது என்று மறுத்துவிட்டான். தாயானவள் மீண்டுமாக அவனிடம் பணத்தை தந்தையிடம் கொடு என்று சொல்லியும் அவன் கேட்காததால், அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அடி விட்டாள்.

"பணத்தை அப்பாவிடம் போய்க்கொடு, கொடு என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஏன் இப்படி அடம் பிடிக்கிறாய்" என்றாள் தாய். அதற்கு அவன், "அம்மா! ஒவ்வொரு முறையும் தந்தையிடம் நான் பணம் வாங்கும்போதும் அவருடைய கை மேலே இருக்கும், என்னுடைய கை கீழே இருக்கும். ஆனால் இப்போது நான் அவரிடம் சம்பளப் பணத்தைக் கொடுக்கும்போது அவருடைய கை கீழேயும், என்னுடைய கை மேலேயும் அல்லவா இருக்கும். அதனால்தான் இப்படி நடந்துகொண்டேன்" என்றான்.

இதை உள்ளறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அவனது தந்தை ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டார்.

மகன் தந்தைக்குச் செய்யும் உதவி அவன் உள்ளம் குளிர நடந்துகொள்வதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.

ஆதலால் மரியாளின் கணவர் யோசேப்பின் (தந்தையின்) விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் நாம் நமது குடும்பங்களில் வாழும் தந்தையின் உள்ளம் குளிர நடந்துகொள்வோம். யோசேப்பிடம் விளங்கிய பண்புகளை நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.


Fr. Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பு!

லா கார்டியா (La Guardia) அமெரிக்கவின் மேயராக இருந்த சமயத்தில் அவரிடம் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்துப் பார்த்தபோது பசியின் கொடுமையால் முதியவர் ஒருவர் ரோட்டோரக் கடையிலிருந்து ரொட்டியைத் திருடிவிட்டார் என்ற உண்மை தெரியவந்தது. உடனே லா கார்டியா அந்த முதியவரிடத்தில், "பெரியவரே! இந்த வழக்கை விசாரித்துப் பார்க்கும்போது நீங்கள் ரொட்டியைத் திருடியிருப்பது நிருபணமாகியிருக்கிறது. ஆகவே, இந்த திருட்டுக் குற்றத்திற்காக உங்களுக்கு பத்து டாலர் அபராதமாக விதிக்கிறேன்" என்றார். "பத்து டாலரா... பத்து டாலருக்கு நான் எங்கே போவது, பத்து டாலர் என்னிடத்தில் இருந்தால் நான் எதற்குத் திருடப் போகிறேன்" என்று அதிர்ச்சி மேலிடப் பேசினார் அந்த முதியவர்.

"உங்களால் பத்து டாலர் அபராதமாகச் செலுத்த முடியாதா? சரி, உங்களுக்காக நான் அந்த அபராதத் தொகையைச் செலுத்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு லா கார்டியா தன்னுடைய மேல் சட்டைப் பையிலிருந்து பத்து டாலரை எடுத்து, அதனை அங்கிருந்த கணக்காளரிடம் கொடுத்தார். பின்னர் அவர் அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து, "இவ்வளவு பெரிய நகரத்தில் ஒரு முதியவர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் ரொட்டியைத் திருடியிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் நீங்கள்தான். ஆகவே, உங்கள் ஒவ்வொருவர் மீதும் நான் ஐந்து சென்ட் அபராதமாக விதிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய தொப்பியைக் கழற்றி, மக்களிடம் கொடுத்து "இப்போது நான் இந்தத் தொப்பியை உங்களுக்கு மத்தியிலே கடத்துகிறேன். இதில் உங்களுடைய அபராதத் தொகையைப் போட்டு அனுப்பி வையுங்கள்" என்றார். மக்களும் மனம் கோணாமல், தங்கள்மீது விதிக்கப்பட்ட ஐந்து சென்ட் அபராதத் தொகையை போட்டு தொப்பியை அவரிடத்தில் அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகை 50 டாலர். அந்த 50 டாலரையும் லா கார்டியா அந்த முதியவரிடத்தில் கொடுத்து, "இதனை உங்களுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக வைத்துக்கொள்ளுங்கள், தேவைப்பட்டால் என்னிடத்தில் கேளுங்கள். ஆனால், தயவுசெய்து திருடாதீர்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

தவறுசெய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதல்ல, அவர் திருந்தி நடக்கவேண்டும். அதற்கு வழி செய்வதுதான் ஒரு தீர்ப்பின் முதன்மையான நோக்கம். இதனை உணர்ந்துகொண்டு தீர்ப்பளித்த லா கார்டியா நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசு கிறிஸ்துவிடம் இழுத்துவந்து, "இவள் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள், இப்பெண்ணிற்கு என்ன தீர்ப்பளிக்கலாம்?" என்று கேட்கிறார்கள். முதலில் யுதர்கள் அப்பெண்ணை இயேசுவிடம் இழுத்து வந்தது, அவளைத் தண்டிக்கவேண்டும், 'தர்மத்தை' நிலைநாட்டவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும் அதற்காக அவர்கள் அப்பெண்ணை இயேசுவிடம் இழுத்து வந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு அவர்களுடைய சூழ்ச்சியை உணர்ந்து, "உங்களில் பாவமில்லாதவர் முதலில் இப்பெண்மீது கல்லெறியட்டும்" என்று சொல்லிவிட்டு தரையில் எழுத் தொடங்கி விடுகின்றார். இயேசு சொன்னதைக் கேட்டு பெரியவர் தொடங்கி சிறியவர் வரை ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து களைந்து சென்றுவிடுகிறார்கள். இயேசு மட்டும் அங்கே இருக்கிறார். அப்பெண்ணும் அங்கே நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது இயேசு அவரிடம், "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்க அவர், "இல்லை ஐயா" என்று பதில் சொல்கிறார். உடனே இயேசு, நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்கிறார். இயேசு குற்றமற்றவர், அவர் நினைத்திருந்தால் அப்பெண்ணிற்குத் தீர்ப்பளித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், அவரை மன்னித்து அவர் திருந்தி நடக்க வழிவகை செய்கின்றார். இயேசுவின் பிரதான நோக்கம் அப்பெண் மனந்திருந்தி நடக்கவேண்டும் என்பதே ஒழிய, அவள் தண்டிக்கப்படவேண்டும் என்பதல்ல, அதனால்தான் அவர் அப்பெண்ணைத் தண்டிக்காமல், அப்பெண்ணின் குற்றத்தை மன்னித்து, அவர் திருந்தி நடக்க வழிவகை செய்கின்றார். அந்த விதத்தில் பாவிகள், வறியவர்கள், கைவிடப்பட்டோர் இவர்கள்மீதான இயேசுவின் தனிப்பட்ட அன்பு வெளிப்படுகின்றது. பாவிகள் மீது இயேசுவுக்கு இருந்த அதே அன்பும் கரிசனையும் நமக்கு இருக்கும்போது அவர்கள் திருந்தி நடக்க நாம் ஒரு காரணமாக இருப்போம்.

ஆகவே, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற குறுக்குப் புத்தியோடு செயல்படாமல், இயேசுவைப் போன்று பாவிகளிடத்தில் உள்ளார்ந்த அன்போடு செயல்படுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

வளன் வாழ்வின் ஏழு மகிழ்ச்சிகள்


(மார்ச் 19ல் இவரை "அன்னை மரியாளின் துணைவர்" எனக் கொண்டாடும் நாம், மே 1ல் "தொழிலாளர்களின் பாதுகாவலர்" எனவும் கொண்டாடுகிறோம்)

சித்தரிக்கப்படும் எல்லாப் படங்களிலும், சுரூபங்களிலும் மரியாளைவிட வயது அதிகமானவராகவும், கைகளில் மரஉளி அல்லது குழந்தை இயேசுவை சுமந்தவராகவே இருக்கிறார். இவரின் வாழ்விலும் இன்ப, துன்பங்கள் இருந்திருக்கும்தானே. அந்தத் தேடலின் பின்னணியில் நான் கற்றவைகளைக் கொஞ்சம் மசாலா சேர்த்து பதிவாக்குகிறேன் இன்று.

வளன் வாழ்வின் ஏழு மகிழ்ச்சிகள் இவை:

1. மனுவுருவாதல் என்னும் மறைபொருள்

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். (மத்தேயு 1:20-21)

"ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்!" என்றுதான் ஒவ்வொரு யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். தாவீதின் அரியணை என்றென்றும் நிலைபெறும் என்று அனைவரும் எதிர்நோக்கியிருந்த காலம் இது. மெசியாவின் வருகை மிக அண்மையில் உள்ளது என அன்றாடம் தெருவில் யாராவது சொல்லிக் கொண்டு திரிவதும், "நான்தான் மெசியா" என்று சிலர் தங்களுக்குப் பின் சீடர்களைக் கூட்டிக் கொண்டு அலைவதும் அன்றாட வாடிக்கையாக இருந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் தான் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் மரியாளின் வழியாக மெசியா வரப்போகிறார் என்ற செய்தி யோசேப்புக்குத் தரப்படுகின்றது. தான் கூடிவாழுமுன்னே தன் துணைவி கருவுற்றிருப்பது தனக்கு நெருடலாக இருந்தாலும், தன் மனைவியைக் காட்டிக் கொடுக்காத நீதிமானாக நிற்கின்றார் யோசேப்பு. நெருடல், பயம், கலக்கம், வருத்தம் என்று குழம்பியிருந்த யோசேப்புக்கு மகிழ்வின் செய்தி தரப்படுகிறது. தன் வழிமரபில் பிறக்கும் இயேசுதான் இந்த உலகை மீட்க வந்த மெசியா என்பது அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.


2. தேடி வந்த இடையர்கள்


வானதூதர்கள் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். (லூக்கா 2:16)

யோசேப்பு சிறுவயது முதல் எருசலேம் ஆலயத்தில் வளர்ந்தவர் என்பதும், அவர் வைத்திருந்த கைத்தடி ஒன்றுதான் லீலி மலர்களால் பூத்துக் குலுங்கியது என்பதும் மரபுவழிச் செய்தி. தான், தன் உலகம், தன் வாழ்க்கை என்று ஓய்ந்திருந்த யோசேப்பைத் தேடி இடையர்கள் வருகின்றனர். இயேசு பிறப்பின் செய்தி மாட, மாளிகைகளில் சொல்லப்படவில்லையா, இவர் அரசன் இல்லையா? ஏன் இந்த இடையர்களுக்கு, ஏன் இந்த ஏழையருக்கு இறைவனின் மீட்புச் செய்தி முதலில் அறிவிக்கப்படவேண்டும் என்ற குழப்பம் எதுவும் இல்லாமல், இறைவனின் எளிய பிறப்பையும், அவரைத் தேடி வந்த எளியவரையும் ஏற்றுக்கொள்கின்றார் யோசேப்பு. இன்று நாம் பெரிய நபர், பெரிய வீடு, பெரிய ஊர், பெரிய பொருள் என்று பெரியவற்றைத் தேடிச் செல்லவே விழைகின்றோம். ஆனால், நம்மிடமிருக்கும் பெரியதொன்றை விட மற்றொன்று பெரியதொன்றாகிவிட்டால் நம் மகிழ்ச்சி கலைந்து விடுகிறது. நம் இறைவன் சின்னஞ்சிறியவைகளின் இறைவன். சின்னஞ்சிறியவர்களையும், சின்னஞ்சிறியவைகளையும் நாம் தேடும்போது நம்மை மகிழ்ச்சி அரவணைத்துக் கொள்கிறது.

3. "இயேசு" என்னும் பெயர்


குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்கள். (லூக்கா 2:21)

இயேசுவின் பெயர் எபிரேய அல்லது அரமேய மொழியில் "யோசுவா". "யோசுவா" என்றால் "மீட்பர்" என்பது பொருள். இந்தப் பெயர் ஒவ்வொரு யூதரின் சிந்தனையிலும் பழைய ஏற்பாட்டு யோசுவாவைத்தான் படம்பிடித்துக் காட்டியிருக்கும். மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த இறைவன், யோசுவாவின் தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் அவர்களை நடத்திச் செல்கின்றார். பழைய ஏற்பாட்டு யோசுவா புதிய நாட்டிற்குள் மக்களை அழைத்துச் சென்றது போல, புதிய ஏற்பாட்டு யோசுவாவும் மக்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்று எண்ணி மகிழ்கின்றார் யோசேப்பு. இன்று நமக்கும் பெயர்கள் இருக்கின்றன. ஒருபக்கம், நாம் பிறந்தபோது அல்லது திருமுழுக்கு பெற்றபோது நம் பெற்றோர் இட்ட பெயர்கள். மற்றொரு பக்கம், நம் நண்பர்கள் நம்மை அடையாளப்படுத்தி அழைக்கும் பெயர்கள். இன்னும் நாம் செய்யும் பணிகளை வைத்து நமக்குத் தரப்படும் பெயர்கள். இந்தப் பெயர்கள் நமக்கு வெறும் அடையாளங்கள் மட்டுமல்ல. அவை நமக்கு நாம் சார்ந்திருக்கவேண்டிய அறநெறியையும் கற்பிக்கின்றன என்பதை உணர்ந்து நம் பெயருக்கேற்ற வாழ்வை வாழ நம்மை அழைக்கிறது யோசேப்பின் மூன்றாம் மகிழ்ச்சி.


4. என் கண்கள் கண்டுகொண்டன


ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. (லூக்கா 2:30-32)

இயேசுவைத் தன் குழந்தைககளில் ஏந்தும் சிமியோன் தான் எதிர்பார்த்த மீட்பு வந்துவிட்டதாக உளம் மகிழ்கின்றார். சிமியோனின் வார்த்தைகளில் ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மகிழ்வையும் கண்டுகொள்கின்றார் யோசேப்பு. மீட்பு என்றால் என்ன? கடவுளுக்கும், மனிதருக்கும், யூதருக்கும், புறவினத்தாருக்கும், பகலுக்கும், இருளுக்கும் என இருக்கின்ற அனைத்து வேறுபாடுகளும் களையப்படுவதே மீட்பு. கடவுள் மனுவுரு ஏற்ற நிகழ்வின் வழியாக கடவுள் தன்மை மனுக்குலத்தைப் பற்றிக்கொண்டது. இயேசுவில் நமக்கு மீட்பு வந்து விட்டது என மகிழும் யோசேப்பு நம் மீட்புக்கேற்ற செயல்களை நாம் செய்ய நம்மை அழைக்கின்றார்.


5. தீமையின் அழிவு


ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார். (மத்தேயு 2:19-20)

கடவுளின் வல்லமையை மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கும் வளன், கடவுளின் வலுவின்மையை முதன்முதலாக அனுபவிக்கின்றார். ஒரு குழந்தையின் வடிவில் தன் கைகளில் தழுவும் கடவுள் தன்மை, எதிர்த்து நிற்கும் ஒரு மனித அரசனைக் கூட எதிர்க்க முடியாமல் வலுவிழந்து கிடக்கிறது. இது வளனுக்கு ஒரு பெரிய மறைபொருள். அந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்? "என்ன கடவுளப்பா நீ?" என்று கேள்வி கேட்டிருப்போம். இன்று நாம் எல்லாமே உடனடியாகப் பெற விரும்புகின்றோம். உடனடி ரசம், உடனடி சாம்பார், உடனடி சாம்பிராணி, உடனடி நூடுல்ஸ் என வளர்ந்து, உடனடி ஃபோன், உடனடி மெசஜ், உடனடி காதல், உடனடி திருமணம், உடனடி அர்ப்பணம் என எல்லாவற்றையும் உடனடியாகவே விரும்புகின்றோம். ஆனால், வாழ்வின் மகிழ்ச்சி பெரும்பாலான நேரங்களில் இந்த உடனடிகளில் இருப்பதில்லை. பொறுமையும், சகிப்புத்தன்மையுமே மகிழ்ச்சி எனக் கற்பிக்கிறார் வளன்.


6. நல்லதொரு குடும்பம்


யோசேப்பு நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, "நசரேயன்" என அழைக்கப்படுவார்" என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. (மத்தேயு 2:23)

மரியாளுக்குத் துணைவர், இயேசுவுக்குத் தந்தை என்று இரண்டு பொறுப்புகள் இப்போது வளனுக்கு. நம் குடும்பங்களுக்கு மாதிரியாக இருக்கிறது வளன் தலைமையேற்ற நாசரேத்தூர் திருக்குடும்பம். "நான், எனது, எனக்கு" என மனித மனங்கள் குறுகி வருகின்ற இந்த நாட்களில் வளன் நமக்கு ஒரு நல்ல பாடம். குடும்பமும், கூட்டு வாழ்வும் எப்போதும் மலர்ப்படுக்கையாகவே இருப்பதில்லை. அடுத்தவரின் பிரசன்னம் சில நேரங்களில் முட்களாகக் குத்தவே செய்யும். ஆனால், அடுத்தவரின் உடனிருப்பே நமக்கு உற்சாகமும், உத்வேகமும் தருகின்றது. நாம் தனிப்பட்ட மரங்களாக நிற்கப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். ஒருவர் மற்றவரின் செயலுக்கு எதிர்வினையாக மட்டுமே நம் செயல்கள் இருப்பதற்குப் பதிலாக, அடுத்தவரின் நலம் பேணும் செயலாக அமைந்தால் வளன் சுவைத்த மகிழ்வை நாமும் சுவைக்கலாம்.


7. காணாமற்போயிருந்தார்! கிடைத்துவிட்டார்!

மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். (லூக்கா 2:46)

இயேசு தன்னுடன் இல்லாத மூன்று நாட்கள் வளன் எப்படி இருந்திருப்பார்? தன் கையில் கிடைத்த புதையல் தவறிவிட்டதாகவும், தன் முத்து தொலைந்து விட்டதாகவும் நினைத்து அங்கலாய்த்திருப்பார். இந்தத் தவிப்பில் இயேசுவைக் கண்டதும், மறைநூல் அறிஞர்கள் நடுவில் வெளிப்பட்ட அவரின் ஞானத்தைக் கண்டதும், "தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்" (குறள் 67) என்று மனமெல்லாம் மத்தாய்ப்பு வெடித்திருக்கும். இறைவனின் பிரசன்னம் நம்மிடம் இல்லாதபோது நாம் எப்படி உணர்கிறோம்? அந்த இடத்தில் மற்றவர்களையோ, மற்றவைகளையோ வைத்து நிறைவு காண விழைகின்றோமோ? எனக் கேட்கிறது வளனின் ஏழாம் மகிழ்ச்சி.


வளனின் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சியாகட்டும்!


- Fr. Yesu Karunanidhi, Archdiocese of Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!