Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      16  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 4ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 * இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.*

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a,12-22

இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: "நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.

கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்iளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது.

அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.

அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.

அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்." இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள்.

அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 34: 16-17. 18-19. 20,22 (பல்லவி: 18a)
=================================================================================
 பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி

20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மத் 4: 4)

அல்லேலூயா, அல்லேலூயா! "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்."  அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1,2, 10, 25-30

அக்காலத்தில் இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.

எருசலேம் நகரத்தவர் சிலர், "இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே" என்று பேசிக்கொண்டனர்.

ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், `"நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே" என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறாரே!"

தென் அமெரிக்காவில் எழுபது ஆண்டுகளுக்கும் மேல் மறைபோதகப் பணியை அஞ்சா நெஞ்சத்தோடு செய்தவர் பீட்டர் கார்ட்ரைட் (Peter Cartwright) என்பவர்.

ஒரு சமயம் அவர் அங்கிருந்த மெதோடிஸ்ட் ஆலயத்தில் போதிப்பதற்கு சிறப்பு அழைப்புப் பெற்றிருந்தார். அவரும் அந்த அழைப்பிற்கு மறுப்பேதும் சொல்லாமல் அங்கு போதிக்கச் சென்றார். அவர் போதிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக வேகவேக அங்கு வந்த அந்த ஆலயத்தில் பணியாற்றி வந்த போதகர், "இன்றைக்குப் பார்த்து ஆண்ட்ரு ஜாக்சன் (சிற்றரசன்) இங்கே வந்திருக்கின்றார். அதனால் தயவுசெய்து நீங்கள் அவரை தாக்கிப் பேசிவிடாதீர்கள்" என்று கெஞ்சிக் கேட்டுவிட்டுப் போய்விட்டார். அவர் போனபிறகு பீட்டர் கார்ட்ரைட் போதிக்கத் தொடங்கினார்.

தொடக்கத்தில் இறையன்பு, இரக்கம், மன்னிப்பு போன்ற பொதுவான காரியங்களைப் பேசிக்கொண்டிருந்த பீட்டர் கார்ட்ரைட், ஆண்ட்ரு ஜாக்சன் என்ற அந்த சிற்றரசனைப் பார்த்ததும் ஏதோ ஒரு வல்லமையை உணர்ந்தவராய் அவர் செய்துவந்த தவறுகளை அப்படியே வெளிப்படையாய் சுட்டிக்காட்டிப் பேசத் தொடங்கினார். "ஆண்ட்ரு ஜாக்சன்! நீங்கள் போய்க்கொண்டிருக்கின்ற பாதை சரியான பாதை அல்ல. எனவே உங்களுடைய தவறுகளை உணர்ந்து, திருந்தி நடங்கள். இல்லையென்றால் கடவுளின் தண்டனைத் தீர்ப்பிலிருந்து தப்ப மாட்டீர்கள்" என்று மிகவும் துணிச்சலாகப் பேசினார். அவர் இவ்வாறு போதிப்பதைப் பார்த்துவிட்டு, ஆலயத்தில் இருந்த போதகர் உட்பட இறைமக்கள் அனைவரும் இன்றைக்கு இன்ன நடக்கப்போகிறதோ என்று பயப்படத் தொடங்கினார்கள்.

வழிபாடு முடிந்து எல்லாரும் கலைந்து சென்றார்கள். அப்போது ஆண்ட்ரு ஜாக்சன், பீட்டர் கார்ட்ரைட்டிடம் நேராக வந்து, "தந்தையே! இதுவரைக்கும் யாரும் என்னுடைய தவற்றை இவ்வளவு வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியதில்லை. இன்றைக்குத்தான் நீங்கள் என்னுடைய தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். உங்களுடைய துணிச்சலை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் இனிமேலும் நான் தவறான வாழ்க்கை வாழமாட்டேன், திருந்தி நடப்பேன் என்று உறுதிகூறுகின்றேன்" என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். அன்றிலிருந்தே ஆண்ட்ரு ஜாக்சனும் பீட்டர் கார்ட்ரைட்டும் நல்ல நண்பர்களாக விளங்கினார்கள்.

அரசனுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டினால் என்ன ஆகுமோ என்றெல்லாம் பயப்படாமல், அஞ்சா நெஞ்சத்தோடு போதித்த பீட்டர் கார்ட்ரைட் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், அதிகார வர்க்கத்தில் இருந்த யூதர்கள் இயேசுவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி அவரைக் கொல்ல முயன்றபோது, இயேசு கிறிஸ்து அவர்களுக்கெல்லாம் பயப்படாது மிகவும் துணிச்சலாக அஞ்சா நெஞ்சத்தோடு மக்கள் கூடிவரும் இடத்தில் போதிக்கத் தொடங்குகின்றார். இதைப் பார்த்த மக்கள்கூட்டமோ, "இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ இங்கே இவர் வெளிப்படையாய் பேசிக்கொண்டிருக்கிறாரே" என்று வியந்து பேசுகிறார்கள். இயேசு கிறிஸ்து யாருக்கும் பயப்படாது, அஞ்சா நெஞ்சத்தோடு வாழ்ந்து வந்தார் என்பதையே இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. நற்செய்தியின் இன்னொரு இடத்தில், ஒருசில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, "ஏரோது உம்மைக் கொல்ல வழிதேடுகின்றான்?" என்று சொன்னபோது, இயேசு அவர்களிடம், "இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாள் என்னுடைய பணி நிறைவுபெறும் இதைப் போய் நீங்கள் அந்த நரியிடம் கூறுங்கள்" என்று துணிச்சலாய் சொல்வார். (லூக் 13:32). இயேசு எதற்கும் யாருக்கும் பயப்படாது வாழ்ந்து வந்தார் என்பதைத் தான் இந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம் அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் உயிருக்குப் பயந்து, அதிகாரத்திற்குப் பயந்து கோழைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நிலை நம்மிடமிருந்து அகற்றப்படவேண்டும். தூய பவுல் திமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் மடலில் கூறுவார், "கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்" (1:7) என்று. ஆம், கடவுள் நமக்கு வல்லமையுள்ள உள்ளத்தினைக் கொடுத்திருக்கும்போது நாம் இயேசு அஞ்சி நடுங்கவேண்டும்; அதிகாரத்தைக் கண்டு பயப்படவேண்டும். ஆண்டவர் இயேசுவைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு வாழ்வதுதான் சாலச் சிறந்த ஒரு வாழ்க்கை ஆகும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!