Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               28 மே 2018  
                                                           பொதுக்காலம் 8ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16


அன்புக்குரியவர்களே, உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர்.

தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடையவேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர்.

அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்துகொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள்.

ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராய் இருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள்.

முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள்.

உங்களை அழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவர்களாய் இருங்கள். `நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்' என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 2a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உ உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

அக்காலத்தில் பேதுரு இயேசுவிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார்.

அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இறையடியார்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு"

அமைச்சர் ஒருவர் துறவு மேற்கொண்டு தனிமையில் வாழ விரும்பினார். எனவே அவர் அடர்ந்த மலைக் காட்டிற்குள் சென்று ஒரு சிறிய குடிசை அமைத்துக் கொண்டு வசிக்கத் தொடங்கினார். அங்கேயும் அவரைத் தேடிக்கொண்டு அந்த நாட்டு அரசன் வந்தான். ஏனென்றால், அமைச்சர் மீது அரசனுக்கு மரியாதையும் பிரியமும் அதிகம்.

"அமைச்சரே, நீங்கள் இப்படித் தன்னந்தனியே காட்டுக்குள் வந்து இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது" என்றான் அந்த அரசன். இப்படிச் சொன்ன அரசன் தொடர்ந்து அவரிடம், 'நான் உங்களுக்கென்று ஒரு உல்லாச மாளிகை கட்டித் தருகிறேன். உங்களைச் சகல வசதிகளோடும் வாழவைக்கிறேன். நீங்கள் மீண்டும் ஊருக்குள்ளேயே வந்துவிடவேண்டும்" என்றான். அதற்கு அமைச்சர் அவரிடம்,
"அரசே, உன்னுடைய அன்புக்கு நன்றி. எனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் துறவியாக வாழ விரும்புகிறேன் அதற்கு இந்த இடம்தான் சரி! தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம்" என்று மறுத்துவிட்டார்.

அரை மனத்தோடு அரசன் சம்மதித்தான். பின்னர் அமைச்சரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். பத்தடி நடந்தவுடன் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. "அமைச்சரே, இங்கே நீங்கள் வழிபடுவதற்குக் கோவில் ஏதாவது இருக்கிறதா?" என்றான். "கோவிலா? அது எதற்கு? என்று கேட்ட அமைச்சரிடம் அரசன், "வேறு எதற்கு? சாமி கும்பிடுவதற்குத்தான்!" என்றார். "அதெல்லாம் அவசியமில்லை" என்றார் அமைச்சர். அப்போது அரசன் முகத்தில் திடீர் வெளிச்சம். "அமைச்சரே, உங்களுக்கு நான் எதுவும் செய்யக்கூடாது என்று தடுத்துவிட்டீர்கள். அதற்குப் பதிலாக இங்கே நீங்கள் வழிபடுவதற்கு ஒரு நல்ல கோவில் கட்டித்தருகிற பாக்கியத்தையாவது எனக்குக் கொடுங்கள். தங்கமும் வெள்ளியும் வைடூரியமுமாக இழைத்து கட்டித் தருகிறேன். அங்கே நீங்கள் நிம்மதியாக இறைவனை வழிபடலாம். தியானம் செய்யலாம்" என்றார்.

அமைச்சர் ஒரு விநாடி தயங்கினார். "நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாளைக்குக் காலையில் பதில் சொல்லட்டுமா?" என்றார். அரசன் ஒப்புக்கொண்டான். பின்னர் அவனும் தன்னுடைய படை பரிவாரங்களோடு அந்தக் காட்டிலேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட்டான்.

அடுத்தநாள் காலை அவர்கள் விழித்து எழுந்தபோது அமைச்சரைக் காணவில்லை. அவரோ குடிசைகூட இல்லாத இன்னொரு காட்டைத் தேடி காணாமல் போயிருந்தார்.

துறவு என்பது ஏதாவது ஒன்றைத் துறப்பது அல்ல, எல்லாவற்றையும் துறப்பது. அந்த விதத்தில் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் அமைச்சர் தன்னுடைய பதவி, அந்தஸ்து, அதிகாரம் மட்டுமல்லாமல் கடைசியாகத் தான் கட்டியிருந்த சிறு குடிசையும்கூட துறந்துவிட்டு எங்கோ ஆளில்லா காட்டுக்குள் போனது துறவு வாழ்வுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் பேதுரு இயேசுவிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே, (எங்களுக்கு எண்ணக் கிடைக்கும்?)" என்கின்றார். பேதுரு இயேசுவிடத்தில் இவ்வாறு சொல்வதற்கு முன்னதாக நடந்த நிகழ்வையும் நாம் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதற்கு முன்னதாக ஒருவர் இயேசுவிடம் வந்து, "நிழைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கும்போது இயேசு அவரிடம், "நீர் போய் உமக்கு உள்ளவற்றை விட்டு ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்" என்பார். இதைக் கேட்கும் பேதுரு, "எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றி வந்திருக்கின்றோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்பது போல் யேசுவிடம் கேட்கின்றார்.

"கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்பதுபோல் சீடத்துவ வாழ்வில் என்ன கைம்மாறு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது கூட தவறுதான். இருந்தாலும் தன்னிடத்தில் இப்படிக் கேட்ட பேதுருவிடம் இயேசு, "என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதர, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக அவற்றையும் .... நிலைவாழ்வையும் பெறாமல் போகார்" என்கின்றார். ஆமாம், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அவர் தருகின்ற பரிசு அளப்பெரியது. அதே நேரத்தில் நாம் கைமாறை எதிர்பார்த்து இயேசுவின் சீடராக மாறுவதும் பொருள்ளில்லாத ஒன்று.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், கைம்மாறு கருதாமல் இயேசுவுக்குப் பணிசெய்வோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய நிலைவாழ்வையும் இன்ன பிற கொடைகளையும் நிறைவாய் பெற்றுக்கொள்வோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இறைவன் அளிக்கும் கைம்மாறு

அருட்தந்தை ராபர்ட் மொபர்ட் (Robert Moffat.), பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு சிறிய பங்கில் பங்குத் தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் அவரிடத்தில் அவரது பங்கைச் சார்ந்த ஒருசிலர் வந்து, "அருட்தந்தை அவர்களே! உங்களுக்கு வயது ஆகிக்கொண்டிருக்கிறது. அதைவிட உங்களால் இந்த பங்கில் ஒரு மனமாற்றமும் நிகழவில்லை. அதனால் தயவுசெய்து உங்கள் பணியிலிருந்து நீங்கள் ஓய்வுபெற்றுக்கொள்ளுங்கள்" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "என்னால் இந்த பங்கில் ஒரு மனமாற்றமும் நிகழவில்லை. என்றெல்லாம் தவறாகச் சொல்லாதீர்கள். ஒரு மனமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞன் ஒருவன் என்னிடத்தில் வந்து, "குருவே! உங்களுடைய போதனையால் நான் வெகுவாகக் கவரப்பட்டிருக்கிறேன், ஆண்டவர் இயேசுவைப் பற்றி உங்கள்மூலம் அதிகமாக அறிந்திருக்கிறேன். ஆதலால், நான் ஆப்ரிக்கா கண்டத்திற்குச் சென்று, மறைப்பணி ஆற்றவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன், என்னை ஆசிர்வதியுங்கள்" என்றான். நானும் அவனை ஆசிர்வதித்து அனுப்பினேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். அதாவது ஆப்ரிக்கா கண்டத்திற்குச் சென்று, மறைப்பணி ஆற்றிய அந்த இளைஞன் ஒரு மறைசாட்சியாக இறந்துவிட்டான்" என்று. அந்த இளைஞன் வேறு யாரும் கிடையாது ஆப்ரிக்கா மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த டேவிட் லிவிங்க்ஸ்டன் (David Livingston) என்பவரே" என்றார்.

இதைக் கேட்ட மக்கள் "டேவிட் லிவிங்க்ஸ்டன் உங்களால்தான் மனமாற்றம் பெற்றாரா?. அவர் ஆப்ரிக்க மக்களின் விடிவெள்ளியாயிற்றே. இந்த உண்மை தெரியாமல் உங்களை ஏதேதோ பேசிவிட்டோம். எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, அவர்கள் குருவானவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்கள்.

தங்களுடைய குடும்பம், உடன்பிறப்புகள், உற்றார், உறவினர்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, இறைப்பணிக்காக தங்களையே அற்பணிக்கும் குருக்கள், துறவியர்கள் ஆற்றக்கூடிய பணிகள் ஏராளம். நாம் அவர்களை பாராட்டாவிட்டாலும், அவமரியாதை செய்யாமல் இருப்பதே மிகப்பெரிய காரியம்.

இன்றைய நற்செய்தியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு இயேசுவை பின்தொடர்ந்து வரும் இறையடியார்களுக்கு இறைவன் தரும் கைமாறு என்ன என்பது பற்றி வாசிக்கின்றோம்.

பேதுரு ஆண்டவர் இயேசுவிடத்தில், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்கிறார். அதற்கு இயேசு, என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும், வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயையும், நிலபுலன்களையும் இவற்றோடு இன்னல்களையும், மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்" என்கிறார். ஆம், இயேசுவின் பணியை, இறைப்பணியைச் செய்யும் அனைவரும் இறைவன் கைம்மாறு அளிப்பார் என்பதை ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

இவ்வேளையில் நாம், நம் மத்தியில் இறைப்பணியை ஆற்றும் குருக்கள், துறவிகள் யாவருக்கும் தாயாக, தந்தையாக சகோதரனாக, சகோதரியாக இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அவர்கள் எல்லாவற்றையும் துறந்து, இறைப்பணியாற்ற வந்தவர்கள். அவர்களுக்கு இறைமக்கள் யாவரும் எல்லாமாக இருப்பது கடமையாகும்.

அடுத்ததாக இறையடியார்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் இறைவன் நமக்கு கைம்மாறு அளிப்பார் என்ற எதிர்பார்ப்போடு இறைப்பணியை செய்யாமல், எந்தவொரு பிரதிபலன் பாராமல் செய்யவேண்டும். அப்போது இறைவன் இறையடியார்களுக்கு எல்லா ஆசிரையும், அருளையும் தருவார்.

ஆகவே, இறையடியார்களும், ஏன் ஒவ்வொருவருமே இறைவன் நமக்குக் கொடுத்த நற்செய்திப் பணியை சிறப்பாகச் செய்வோம். இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!


ஒன்று குறைவுபடுகிறது - நற்செய்தி (மாற் 10:17-27)


அவர்: 'உமக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும் ... பின்பு வந்து என்னைப் பின்பற்றும்.'

அவர் சொன்னதைக் கேட்டு இவர் முகவாட்டத்தோடு சென்றார்.

நிற்க.

மாற்கு நற்செய்தியில் வரும் இந்த இளவல் என்னில் ஒருசேர வியப்பு, பொறாமை, ஏக்கம் ஆகிய உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்.

இன்றைய இளவல்களுக்கு நிறைய ஆசைகள் இருக்கின்றன. நல்ல ஃபோன், பைக், கார், வீடு, சம்பளம், ஃப்ரன்ஸ் இருக்கணும் என்று ஆசைகள் இருக்க, நாம் காணும் இந்த இளவலுக்கு விநோதமான ஆசை இருக்கிறது: 'நிலைவாழ்வு பெற வேண்டும்.' இதில் இவர்மேல் வியப்பு.

இரண்டாவதாக, 'போதகரே, நான் சிறுவயதுமுதல் இவையெல்லாம் கடைப்பிடித்துவந்துள்ளேன்.' - இது என்னில் பொறாமை உணர்வைத் தூண்டுகிறது. அதாவது, இந்த இளவல் தன்னை அறிந்தவராக இருக்கிறது. தன்னறிவு என்பது பெரிய கொடை. சிறுவயதிலேயே இவருக்கு இது வந்துவிட்டது என்பது எனக்கு பொறாமையாக இருக்கிறது.

மூன்றாவதாக, பாதிவழி வந்தவர் மீதி வழி வர முடியவில்லை. 'என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டவர், 'இதைச் செய்' என்று சொன்னவுடன் முகவாட்டத்தோடு செல்கின்றார். 'அவருக்கு நிறைய சொத்து இருந்தது' என மாற்கு இடைச்செருகல் செய்கின்றார்.

'ஒன்று குறைவுபடுகிறது' என்ற சொன்ன இயேசு இரண்டு குறைகளைச் சொல்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகிறது: 'அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடு,' 'என்னைப் பின்தொடர்.'

ஒருவேளை அனைத்தையும் நாம் இழந்துவிட்டோம் அந்த இடத்தில் கடவுள் மட்டுமே கண்ணுக்குத் தெரிவார். அவரைப் பின்தொடர நாம் தொடங்கிவிடுவோம். ஆகையால்தான் பற்றுக்களை இழக்கச் சொல்கின்றார் இயேசு.

மேலும், 'கடவுளின் துணையில் தான் இந்தச் செயல் சாத்தியமாகும்' என்கிறார்.

இன்று நிலைவாழ்வு பெற என்னில் குறைவுபடுவது என்ன?

இந்த இளவல் போல நான் இயேசுவிடம் இக்குறை பற்றி பேசுகின்றேனா? அல்லது என்னிலே நிறைவு கண்டு அமைதி கொள்கிறேனா?

- Fr. Yesu Karunanidhi, Archdiocese of Madurai

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?

அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் பணக்காரப் பெண்ணொருத்தி கவுன்சிலிங் செய்யும் ஒருவரைக் காணச்சென்றாள். அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு, எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல், இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது, என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே. என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்".

அந்தப் பெண்மணி சொன்னதைக் கேட்டுவிட்டு கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார். பின்னர் அவர் அந்த பணக்கார பெண்ணிடம், "நான் இப்பொழுது பணிப்பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன், நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள்" என்றார். பணக்காரப் பெண்மணி அதற்குச் சரியென்று சொல்ல, பணி பெண் துடைப்பத்தை கீழே போட்டுவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்.

"அன்பான கணவர், அழகான மகன் என்று என்னுடைய வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடிரென்று ஒருநாள் என் கணவர் மலேரியாவில் இறந்து போனார். அவர் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை, எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல, யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும்பொழுது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. அப்போது சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது, எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வரச் செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது. கடந்துபோன மூன்று மாதத்தில் நான் முதல் முதலாக
புன்னகைத்தேன்!

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷயம் என்னை மகிழ்ச்சிக்குள்ளாகுகிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மனநிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன். அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு உணவு கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன். இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்".

இதை கேட்ட அந்த பணக்கார பெண்மணி ஓலமிட்டு கத்தி அழுதாள்.
அதே நேரத்தில் மகிழ்ச்சிக்கான வழி என்ன என்பதை அறிந்தவளாய் மனநிறைவோடு வீடு திரும்பினாள்.

உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றோம் என்பதில் அல்ல, வைத்திருக்கும் பணத்தில் நாம் எவ்வளவு பிறருக்குக் கொடுக்கின்றோம் என்பதிலே அடங்கியிருக்கின்றது என்ற ஆழமான உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், "கட்டளைகளைக் கடைபிடி" என்று சொல்ல அவர், "இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்கிறார். அப்போது இயேசு அவரிடம், "உமக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்கின்றார். அவரோ முகவாட்டத்தோடு செல்கின்றார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

நற்செய்தியில் வரும் மனிதர், நிலைவாழ்வை பெற சிறுசிறு கட்டளைகளைக் கடைபிடித்தால் போதுமென நினைத்தார். ஆனால், அவர் தன்னுடைய உடைமைகளை, தன்னிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுக்க மறந்துபோனார். அதனாலேயே அவர் நிலைவாழ்வைப் பெறாமலே போனார்.

நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குத் தர முன்வருகின்றோமோ? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இருப்பதை பிறருக்குத் தருபவருக்கே நிலைவாழ்வு என்ற பரிசும் இருக்கும்..

ஆகவே, நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்க முன்வருவோம். இயேசுவின் உண்மையான சீடர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!