Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               15 மே 2018  
                                                          பாஸ்காக் காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 17-27

அந்நாள்களில் பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது: "நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்துகொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன். நன்மை பயக்கும் ஒன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை; பொது இடங்களிலும் வீடு வீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்.

நம் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன். இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடும் என்பது தெரியாது. சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம். இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்றினேன்.

ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன். உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று இன்று நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 68: 9-10. 19-20 (பல்லவி: 32a)
=================================================================================
பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது: அல்லேலூயா.

9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். 10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். பல்லவி

19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக்கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. 20 நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா..
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தையே, நீர் உம் மகனை மாட்சிப்படுத்தும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-11a

அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: "தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.

நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன்.

உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன். இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

நீர் என்னிடம் ஓப்படைத்தவர்களுக்காகவே மன்றாடுகின்றேன்.

ஓப்படைக்கப்பட்டவர்களுக்காவும் மன்றாட கற்றுக் கொடுக்கின்றார்.

அவர்கள் தந்தைக்கு உரியவர்கள் என்பதால், ஓப்படைக்கப்பட்டவர்களை நினைத்து, அவர்களின் நலன்களுக்காய் மன்றாட நமக்கு கடமையுண்டு என்பதனை உணர்த்துகின்றார்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசுவின் ஜெபம்!

அது ஒரு கிராமப்புறப் பங்கு. அன்று ஞாயிறு மறைக்கல்வி பயின்றுவந்து மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற்றது. மறைக்கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் புதுநன்மை கொடுக்கப்படும் என்று அங்கிருந்த பங்குத்தந்தை சொன்னதால் மறைக்கல்வி மாணவர்கள் அனைவரும் மிக மும்முரமாக கேள்விக்கான விடையை எழுதிக்கொண்டிருந்தார்கள்.

தேர்வுக்குப் படிக்காமல் மிகவும் தெனாவட்டாகப் போன மோசேஸ், கேள்வித்தாளில் கேட்கப்பட்ட, "பன்னிரெண்டு வயதில் இயேசு காணாமல் போனபோது, எருசலேம் தேவாலயத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்?" என்ற கேள்விக்கு என்ன பதிலளிப்பது என மிகத் தீவிரமாக யோசித்தான். பிறகு அவன் ஏதோ யோசித்தவனாய், "நமக்குத் தெரியாதா பதிலா என்ன" என தனக்குள் சொல்லிக்கொண்டு, "பன்னிரெண்டு வயதில் இயேசு எருசலேம் தேவாலயத்தில் காணாமல் போனபோது, அங்கிருந்த நற்கருணை ஆண்டவர் முன்பாக முழந்தாள் படியிட்டு மிகவும் பய பக்தியோடு ஜெபித்துக் கொண்டிருந்தார்" எழுதி வைத்தான்.

இதனை வாசித்துப் பார்த்த மறைக்கல்வி ஆசிரியர் மோசசை என்ன செய்திருப்பார் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். பன்னிரெண்டு வயதில் இயேசு எருசலேம் திருக்கோவிலில் காணாமல் போனபோது ஜெபித்தாரோ, இல்லையோ ஆனால் அவர் தந்தைக் கடவுளிடம் வாழ்நாள் முழுவதும் ஜெபித்தார் என்பதுதான் உண்மை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளை நோக்கி ஜெபிக்கின்றார். இயேசு தந்தைக் கடவுளை நோக்கி ஜெபித்த ஜெபம் யாராருக்கானது, அதனுடைய சிறப்பம்சம் என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும். இயேசு தந்தைக் கடவுளை நோக்கி முதலில் தனக்காக ஜெபிக்கின்றார். எப்படி ஜெபிக்கின்றார் என்னும்போது, "தந்தையே, நேரம் வந்துவிட்டது. உன் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்" என்று ஜெபிக்கின்றார்..

இயேசு கருக்கலில் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஜெபித்தார், சீடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகச் செய்தார், இன்னும் பல்வேறு இடங்களில், பல கருத்துகளுக்காக ஜெபித்தார் என்று நாம் நற்செய்தியில் வாசிக்கின்றோம். இங்கே இயேசு தனக்காக ஜெபிக்கின்றார்; தான் இறைவனை மாட்சிப்படுத்தியதுபோல இறைவன் தன்னை மாட்சிப்படுத்துமாறு ஜெபிக்கின்றார். இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில், தன்னுடைய போதனையானாலும் வாழ்வாலும் எல்லாம் வல்ல தந்தையை மாட்சிப்படுத்தினார். அதுபோன்று தந்தைக் கடவுளும் தன்னை மாட்சிப்படுத்துமாறு அவர் இறைவனிடத்தில் ஜெபிக்கின்றார். இயேசு ஜெபித்தது போல, தந்தைக் கடவுள் இயேசுவை மாட்சிப்படுத்தினார் என்பது வரலாறு.

அடுத்ததாக, இயேசு தன்னுடைய ஜெபத்தில் தனக்காக மட்டுமல்ல, தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காகவும் ஜெபிக்கின்றார். இதனை நற்செய்தியில் இடம்பெறுகின்ற, "அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்" என்ற வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். இந்த உலகில் உள்ள மக்கள் யாவரும் மீட்படையவேண்டும், வாழ்வடைய வேண்டும் (யோவா 10:10) என்பதுதான் தந்தைக் கடவுளின் விருப்பமும் இயேசுவின் விருப்பமும். அதற்காக அவர் தந்தையிடம் வேண்டுகின்றார். இயேசு வேண்டியது போன்றே நாம் அனைவரும் மீட்கப்பட்டோம்.

பெரிய குருவின் ஜெபம் என்று அழைக்கப்படுகின்ற இப்பகுதி நமக்கு இரண்டு உண்மைகளை மிக ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது. ஒன்று இயேசு இறைமகனாக இருந்தும் தந்தைக் கடவுளிடத்தில் ஜெபித்தார் என்பதாகும். இயேசு தன்னை எல்லாம் வல்லவர் என நினைத்துக்கொள்ளாமல் தந்தைக் கடவுளிடம் எப்போதும் ஜெபித்துவந்தார். அவரே ஜெபிக்கின்றபோது, நாம் ஜெபிக்கின்றோமா? ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் தருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இப்பகுதி நமக்கு உணர்த்துகின்ற இரண்டாவது உண்மை, "நாம் நமக்காக மட்டுமல்ல, அடுத்தவர்களுக்காக ஜெபிக்கவேண்டும் என்பதாகும். பல நேரங்களில் நாம் ஜெபிக்கின்றபோது, "நான் நன்றாக இருக்கவேண்டும், நன்றாகப் படிக்கவேண்டும், வசதி வாய்ப்போடு இருக்கவேண்டும்" என்று நமக்காக மட்டுமே ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், ஆண்டவர் இயேசு அப்படிச் ஜெபிக்கவில்லை, அவர் எல்லாரும் அழிந்து போய்விடாமல் வாழ்வடைய வேண்டும், மீட்பினைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றே ஜெபிக்கின்றார். எனவே நம்முடைய ஜெபத்தில் அடுத்தவர்களுக்கு சிறப்பான ஓர் இடத்தை ஒதுக்கிச் ஜெபிக்கவேண்டும். இப்படிச் செய்தால்ம் நாம் இறைவனின் உண்மையான சீடர்கள் ஆவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, இயேசுவை போன்று இறைவனிடத்தில் தொடர்ந்து ஜெபிப்போம். மட்டுமல்லாமல் பிறருக்காக ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!