Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     07 மே 2018  
                                                   பாஸ்காக் காலம் 6ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 11-15

பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறு நாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சில நாள்கள் தங்கியிருந்தோம்.

ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம்.

அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், "நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்" என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்கவைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையில் உள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப்படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 26b. 27a

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26 - 16:4

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்.

உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது.

தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்

ஒரு சமயம் மிகச் சிறந்த மறைபோதகரான டி.எல்.மூடி (D.L.Moody) மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து, அதை மக்களுக்குக் காட்டி, "இந்த கண்ணாடி டம்ளரில் உள்ள காற்றை எப்படி அகற்றுவீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ஒருவர், "ஒரு பம்பை (Pumb) வைத்துக்கொண்டு, கண்ணாடி டம்ளரில் உள்ள காற்றை முழுவதும் உறிஞ்சி எடுத்து அகற்றிவிடலாம்" என்றார். வேறொருவரோ இன்னொரு பதிலைச் சொன்னார்.

யாருடைய பதிலிலும் திருப்தி அடையாத மூடி, கடைசியில் அவராகவே பதில் சொல்லத் தொடங்கினார். "இந்த கண்ணாடி டம்ளரில் இருக்கின்ற காற்றை அகற்றுவதற்கு எளிய வழி, இந்த கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்புவதுதான். இப்படி அவர் சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னார், "எப்படி கண்ணாடி டம்ளரில் உள்ள காற்றை அகற்றுவதற்கு, அதில் நீரை நிரப்பவேண்டுமோ, அதுபோன்று இந்த உலகத்தில் இருக்கின்ற பாவம், தீமை அனைத்தையும் அகற்றுவதற்கு மிகச் சிறந்த வழி இந்த உலகத்தினை தூய ஆவியால் நிரப்புவதுதான்".

ஆமாம், இந்த உலகத்தினை தூய ஆவியால், அவருடைய அருள்கொடைகளால் நிரப்புகின்றபோது இந்த உலகத்தில் உள்ள தீவினைகள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கிவிடும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்" என்கின்றார். ஆம், தூய ஆவியாராம் துணையாளர் வரும்போது இந்த உலகில் தீவினைகளும் பொய்களும் நீங்கி உண்மை ஒளி பெறும் என்பது உண்மை.

இயேசு இந்த உலகத்தினை விட்டுப் போகப்போகிறார் என்பதை அறிந்ததும் சீடர்கள் கலக்கமுறுறகிறார்கள், திகிலடைகிறார்கள். இதை உணர்ந்த இயேசு, அப்படியெல்லாம் கலக்கமுறவேண்டாம், திகிலடையவேண்டும். உங்களுக்கு திடமளிக்கவும், உங்களை வழிநடத்தவும் தூய ஆவியம் துணையாளர் வரப்போகிறார் என்று சொல்லி அவர்களைத் தேற்றுக்கின்றார்.

தூய ஆவியின் வருகையினால் சீடர்கள்/ நாம் என்னென்ன நன்மைகளைப் பெறப்போகிறோம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தூய ஆவியாரின் வருகையினால் நாம் அடையக்கூடிய முதன்மையான நன்மை, நம்மால் எது உண்மை, எது பொய் என்பதைக் கண்டுகொள்ள முடியும். இந்த உலகத்தில் எது நிஜம், எது பொய் என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் தூய ஆவியாரின் அருட்பொழிவை நாம் பெற்றுக்கொள்கின்றபோது நம்மால் எளிதாக எது உம்மை, எது பொய் என்பதை எளிதாகக் கண்டுகொள்ள முடியும்.

தூய ஆவியாரின் வருகையினால் நாம் அடையக்கூடிய இரண்டாவது நன்மை, நம்மால் துணிவுடன் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க முடியும் என்பதாகும். யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றபோது சீடர்கள் அனைவரும் தங்களை அறைக்குள் அடைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டபிறகு யாருக்கும் அஞ்சாமல், இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்தார்கள். இங்கே தூய ஆவியாரின் அருள்பொழிவுவினால் கோழைகளாக இருந்த சீடர்கள் எவ்வளவு உறுதியாகவும் அதே நேரத்தில் மிகத் மிகத் துணிச்சலாகவும் அறிவித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தூய ஆவியாரின் வருகையினால் நாம் அடையக்கூடிய மூன்றாவது நன்மை, தூய ஆவியாரின் சான்று பகர்தல் ஆகும். நாம் அனைவரும் இயேசுவைப் பற்றி சான்று பகர்வதற்கு தூய ஆவியார் ஆற்றலைத் தருவார் என்று மேலே பார்த்தோம். இதை விடவும் சிறப்பான ஒரு காரியம் தூய ஆவியார் தாமே ஆண்டவர் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்வார் என்பதாகும். தூய ஆவியார் ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகரும்போது நமது பணி இலகுவாகும் என்பதே உண்மை. ஆதலால், ஆகவே, உண்மையை வெளிப்படுத்துகின்ற, ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகர்கின்ற, நம்மையும் சான்று பகரச் செய்கின்ற தூய ஆவியாரின் அருட்பொழிவை நம்முடைய வாழ்வில் உணர்ந்து செயல்படுவது மிகவும் சிறப்பான ஒரு காரியம்.

ஒருமுறை சார்லஸ் ஸ்பெர்ஜியோன் என்ற அறிஞர் குறிப்பிட்டார், "தூய ஆவியார் இல்லையென்றால், நாமெல்லாம் ஒன்றுமில்லை" என்று. இது உண்மை. தூய ஆவியார் இல்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.

ஆகவே, துணையாளராம் தூய ஆவியாரின் பிரசன்னத்தை நம்முடைய வாழ்வில் உணர்ந்து, அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!