Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     03 மே 2018  
                                                   பாஸ்காக் காலம் 5ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழ


யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.

பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது. அல்லது: அல்லேலூயா.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில்படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 14: 6b,9c

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. பிலிப்பே, என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா?

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14

அக்காலத்தில் இயேசு, தோமாவை நோக்கி: "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்" என்றார்.

அப்போது பிலிப்பு அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார். இயேசு அவரிடம் கூறியது: "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்.

அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்.

நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார்.

ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழா

"என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிலைத்திருக்கவுமே இவற்றை நான் உங்களிடம் சொன்னேன்"

Frozen thought என்ற ஆங்கில மாத இதழிலே வந்த ஒரு நிகழ்வு. தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் வடநாட்டுக்கு இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். இடையில் ஒரு நிறுத்தத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் வேகவேக ஏறி, தங்களுடைய இருக்கைகளில் அமர்ந்தார்கள். அவர்கள் ஏறிய பின்பு இரயில் வேகமாக நகரத் தொடங்கியது.

ஓரிடத்தில் இரயில் நின்றபோது சாப்பாட்டுப் பொட்டலங்களை ஏந்திக்கொண்டு வந்தவர்கள் 'சாப்பாடு, சாப்பாடு' என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள். தமிழகத்திலிருந்து சென்றவர் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து, சாப்பாடு கொண்டுவந்தவரிடம் கொடுத்து, சாப்பாட்டை வாங்கிக்கொண்டார். இதற்கிடையில் அதே பெட்டியில் பயணம் செய்துகொண்டுவந்த இராணுவ வீரர்களின் தலைவன் சாப்பாடு வாங்குவதற்கு முற்பட்டார். ஆனால், அவரிடத்தில் எல்லாருக்கும் சாப்பாடு வாங்குவதற்கான போதிய பணமில்லாததால் மேலும் கீழும் முழித்தார்.

இதைக் கவனித்த தமிழர் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவர் பக்கம் நீட்டினார். அவர் இராணுவ வீரருக்கு உணவு வாங்கப் பணம் தருவதைப் பார்த்துவிட்டு, அவர் பக்கத்தில் இருந்த ஒருசிலர், தங்கள் பங்குக்கு 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து அவரிடம் கொடுத்து, "இதையும் சேர்த்து அவரிடத்தில் கொடுங்கள்" என்றார். இவ்வாறு எல்லாரும் கொடுத்த பணம் இரண்டாயிரம் ரூபாய்க்கும் மேலாக வந்தது. எல்லாவற்றையும் அவர் அந்த இராணுவ வீரர்களின் தலைவரிடத்தில் கொடுக்க, அவர் அதனை நன்றியுணர்வுடன் பெற்றுக்கொண்டு சாப்பாடு வாங்கி, ஏனைய இராணுவ வீரர்களோடு உண்ணத் தொடங்கினார். அப்போது அந்தத் தமிழர் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது.

"பெறுவதில் அல்ல, கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது" என்ற விவிலிய வார்த்தைகளுக்கு வலுசேர்ப்பதாய் இருக்கின்றது இந்த நிகழ்வு. ஆமாம், நாம் நம்மிடத்தில் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதிலும் இயேசுவின் வார்த்தைகளின்படி நடப்பதிலுமே உண்மையான மகிழ்ச்சி உள்ளது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, "என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிலைத்திருக்கவுமே இவற்றை நான் உங்களிடம் சொன்னேன்" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

முதலில் இறைவன் நம்மை ஏன் படைத்தார் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் அனைவரும் இறைவனோடு இணைந்த நிலையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நம்மை படைத்தார். அது மட்டுமல்லாமல் நம்முடைய மகிழ்ச்சி இரட்டிப்பாக வேண்டும் என்பதற்காக நமக்கு கட்டளைகளைக் கொடுத்தார். அந்த விதத்தில் பார்க்கும்போது நம்முடைய மகிழ்ச்சி என்றுமே நிலைத்திருக்க இயேசு நமக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். அதனை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக அறிந்துகொள்கின்றோம் (யோவா 15:11). ஆகையால் இயேசுவின் மகிழ்ச்சி நம்மோடு இருக்கவும், அது எந்நாளும் நிலைத்திருக்கவும் இயேசு நமக்கு எல்லாவற்றையும் கற்பித்தார் என உறுதியாகச் சொல்லலாம். அந்த மகிழ்ச்சியை நாம் உண்மையிலே நம்மிடத்தில் கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்களில் "இவை இவையெல்லாம" நமக்கு மகிழ்ச்சி தரும் என்று நினைத்துகொண்டு, அவற்றைச் செய்துகொண்டிருக்கினோம். ஆனால், அவை எல்லாம் நமக்கு இன்பத்தை அல்ல, துன்பத்தையே தந்துகொண்டிருக்கின்றன என்பதை உணராமல் இருக்கின்றோம். இத்தகைய சூழலில் உண்மையான மகிழ்ச்சியை நாம் எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உண்மையான மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்வதற்கு இயேசு சொல்லக்கூடிய முதன்மையான வழி, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு நடப்பதுதான். இயேசு நம்மை ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், இருப்பதை தேவையில் உள்ளவரிடத்த்தில் கொடுத்து வாழவும் சொல்கின்றார். இவற்றை நாம் கடைப்பிடித்து வாழ்கின்றப்போது, நமக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அடுத்ததாக உண்மையான மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்வதற்கு செய்யவேண்டியது இறைவனோடு இணைந்திருப்பதாகும். தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் கூறுவார், "ஆண்டவரோடு இணைந்த நிலையில் மகிழ்ந்திருங்கள்" என்று (4:4). ஆம், நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கின்றபோது எப்போதும் மகிழ்ச்சிதான்.

ஆகவே, நாம் எப்போதும் மகிழ்ந்திருக்க இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு நடப்போம், அவரோடு என்றும் இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
திருத்தூதர்களான தூய பிலிப்பு, யாக்கோபு விழா

இன்று திருச்சபையானது திருத்தூதர்களான தூய பிலிப்பு, யாக்கோபு ஆகியோரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவர்களது விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இவர்கள் வழியாக இறைவன் நமக்குத்தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

பிலிப்புவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது, இவர் பெத்சாய்தாவைச் சார்ந்தவர், திருமணமானவர். ஆண்டவர் இயேசு பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்த பிறகு, இவரையும் அழைக்கின்றார். இயேசு இவரை அழைத்த உடனே, இவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். (யோவான் 1:45). அதோடு மட்டுமல்லாமல், தான் அடைந்த மகிழ்ச்சியை, சந்தோசத்தை நத்தனியேலிடம் எடுத்துச் சொல்கிறார். இந்த நத்தனியேல்தான் இயேசுவை "நீரே இறைமகன், நீரே இஸ்ரேயல் மக்களின் அரசர்" அழைக்கிறார். இயேசுவைப் பற்றி பிலிப்பு நத்தனியேலிடம் எப்படிச் சொல்லியிருந்தால், அவர் இயேசுவை இறைமகன் என்று அழைத்திருக்கமுடியும் என்று நாம் சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒருமுறை கிரேக்க மொழி பேசுபவர் சிலர் இயேசுவைப் பார்க்க முயன்றபோது பிலிப்புதான் அவர்களை இயேசுவிடம் அழைத்து வருகிறார்; அவர்களுக்கு இயேசுவை அறிமுகம் செய்துவைக்கிறார் (யோவான் 12: 20-22). இவ்வாறு மக்களை இயேசுவிடம் அழைத்துவரும் ஒரு சிறப்பான பணியை பிலிப்பு செய்தவராக இருக்கின்றார்.

ஆண்டவர் இயேசு கலிலேயாக் கடலோரம் அப்பங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு முன்பாக பிலிப்பிடம் தான், "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர், "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறுதுண்டும் கிடைக்காதே" என்கிறார் (யோவான் 6:6-7). மேலும் இயேசு சீடர்களிடம், "நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள்" என்று சொல்கிறபோது பிலிப்புதான் இயேசுவிடம், "ஆண்டவரே! தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்" என்கிறார். அதற்கு இயேசு, "பிலிப்பே! இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?, என்னைக் காண்பது தந்தையை காண்பது ஆகும்..." என்கிறார் (யோவான் 14:8-9).

அடுத்து திருத்தூதர்பணிகள் நூலில் பிலிப்பு எத்தியோப்பிய நிதியமைச்சர் ஒருவருக்கு மறைநூலைப் பற்றி தெளிவான விளக்கம் தருகிறார். பிலிப்பு கொடுத்த விளக்கத்தின் பயனாக அவர் மகிழ்வுடன் தன்வழி சென்றதாக விவிலியம் நமக்கு சான்று பகர்கின்றது (திப 8:26-40). திருத்தூதரான தூய பிலிப்பு ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு சைத்திரியா, எரோப்போலி போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவித்து வந்தார்.

ஒருமுறை எரோப்போலி என்ற இடத்தில் மக்கள் பாம்பைக் கடவுளை வணங்குவதைப் பார்த்துவிட்டு, அந்த பாம்புப் புற்றுக்கு முன்பாகச் சென்று, பாம்பு சாகட்டும் என்று கட்டளையிடுகிறார். உடனே பாம்பு வெளியே வந்து, தன்னுடைய விஷத்தை மனிதர்கள்மீது கக்கிவிட்டு செத்துப்போகிறது. பாம்பின் விஷம்பட்டவர்களை எல்லாம் பிலிப்பு குணப்படுத்துகிறார். அதைப் பார்த்த அங்கே இருந்த ஒருசில மதபோதகர்கள் இவரைக் கல்லால் அடித்துக் கொன்று போட்டனர். இவருடைய உடல் திருத்தூதர்களின் ஆலயத்தில் இன்றும் இருக்கிறது.

திருத்தூதரனான தூய பிலிப்பு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி தான் சந்தித்த மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களை கிறிஸ்துவிடம் கூட்டி வந்ததுதான், நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடமாக இருக்கிறது.

அடுத்ததாக நாம் திருதூதரான தூய யாக்கோபை குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இவர் சிறிய யாக்கோபு என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அல்பேயு, மரியா ஆகியோரின் மகன். இந்த மரியாதான் சிலுவையின் அடியில் நின்றவர்; இயேசுவின் இறந்த உடலுக்கு நல்லடக்கம் செய்தவர் (மாற்கு 15:40). இவர் ஏன் சின்ன யாக்கோபு என்று அழைக்கப்படுகிறார் என்பது குறித்து ஒருசில அறிஞர் பெருமக்கள் சொல்லும் காரணம், இவர் மற்ற திருத்தூதர்களைவிட உயரம் குறைவாக இருந்திருக்கலாம் அல்லது இவர் செபதேயுவின் மகன் யாக்கோபுவிற்கு பிறகு அழைக்கப்பட்டதால் இப்படி அழைக்கப்படுகிறார் என்றும் கூறுவார்.

இவர் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். யாக்கோபு திருமுகத்தை இவர்தான் எழுதியிருக்கவேண்டும் என்பது ஒருசில அறிஞர்களின் கருத்து. அதோடு மட்டுமல்லாமல் எருசலேம் திருச்சபையில் மிகப்பெரிய தூணாக இருந்து, நற்செய்திப் பணியாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது. இப்படியெல்லாம் பணிசெய்த யாக்கோப்பு கி.பி. 62 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார் என்றும் திருச்சபை மரபானது நமக்கு எடுத்துக்கூறுகிறது. இவ்வாறு தூய யாக்கோபு தன்னுடைய வாழ்வால், போதனையால் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்ந்தார்.

திருத்தூதர்களான தூய பிலிப்பு, யாக்கோபு ஆகியோரைப் பற்றி அறிந்த நாம், இவர்கள் இருவரும் நமக்குத் தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இவர்கள் இருவரும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உலக மக்களுக்கு அறிவித்தனர். அதற்காகத் தங்களுடைய உயிரையும் பலியாகத் தந்தனர். ஆதலால் இவர்களுடைய விழாவைக் கொண்டாடும் நாம், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை உலக மக்களுக்கு அறிவிக்க முன்வருவோம். ஆண்டவர் இயேசு உலகைவிட்டுச் செல்லும்போது தன்னுடைய சீடர்களுக்கு சொல்லும் அறிவுரை, "நீங்கள் உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் அறிவியுங்கள்" என்பதுதான் (மாற்கு 16:15). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ முன்வருவோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு வயதான பெண்மணி கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியால் தொடப்பட்டார். அதனால் அந்த வயதான பெண்மணி, தான் எப்படி இயேசுவைப் பற்றிய நற்செய்தியால் தொடப்பட்டாரோ அதுபோன்று மற்ற மக்களும் நற்செய்தியால் தொடப்படவேண்டும் என்று, தனக்கு நற்செய்தியைப் போதித்த மறைபோதகரிடம் தன்னுடைய விவிலியத்தில் யோவான் நற்செய்தி 3 ஆம் அதிகாரம், 16 ஆம் வசனத்தை சிகப்பு மையினால் குறித்து வாங்கிக்கொண்டார். ஏனென்றால் அவருக்கு மூப்பின் காரணமாக சரியாகக் கண் தெரியாது.

அவர் ஒவ்வொருநாளும் தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலுக்கு முன்பாக அமர்ந்துகொண்டு, "விவிலியம் வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் என்னிடத்தில் வரவும்" என்று அறிவித்தாள். அவளுடைய அறிவிப்பைக் கேட்டு, ஒருசில மாணவர்கள் அவளிடத்தில் வந்தார்கள். அவளும் யோவான் 3:16 பகுதியை வாசிக்கச் சொல்லி, அதற்கு விளக்கமும் கொடுத்துவந்தாள். அவளுடைய இந்த நற்செய்தி அறிவிப்புப்பணி பல வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றது. கடைசியாக அவள் இறக்கும்போது, அவளால் நற்செய்தி அறிவிக்கப்பட்டு, 24 மாணவர்கள் குருக்களாக மாறி இருந்தார்கள்.

அந்த வயதான பெண்மணி செய்தது சிறிய நற்செய்தி அறிவிப்புப் பணியாக இருக்கலாம். ஆனால் அவரால் 24 மாணவர்கள் குருக்களாக மாறினார்கள் என்றால், அது மிகப்பெரிய ஆச்சரியம்.

ஆகவே தூய பிலிப்பு, யாக்கோபு ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவர்களைக் போன்று கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையாட்சி இந்த மண்ணில் மரலச் செய்வோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!