Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     02 மே 2018  
                                                   பாஸ்காக் காலம் 5ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-6

அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், "நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது" என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர்.

அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பிவைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள்.

இது சகோதரர், சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.

ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, "அவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்" என்று கூறினர். இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)
=================================================================================
 பல்லவி: அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம். அல்லது: அல்லேலூயா.

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 4-5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்.

நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.

நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

எருசலேம் அன்றைக்கு தலைமையிடமாக இருந்தது.

திருத்தூதர்கள் அங்கு இருந்து செயலாற்றினார்கள்.

இன்றைக்கு அது நீர்வாக வசதிக்காக உரோமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சபைகளில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் எருசலேமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு திருதூதர்கள் அதனை ஆய்வு செய்து, தருகின்ற தீர்வினை ஏற்று பயணப்பட்டார்கள்.

இன்றைக்கு சபைகள் பிரிந்து செல்வதற்கான காரணம் நாங்கள் ஏன் திருஅவையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி பிரிந்த செல்லுகின்ற கூட்டம் அதிகமே.

தலைமையையேற்று ஓரு கொடியின் கிளைகளாக வாழ்வதுவே இறைமகனுக்கு செய்யும் சிறப்பாகும்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள்"

அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் அதிபராக இருந்த சமயம், உள்நாட்டுப் போர் பயங்கரமாக நடந்தது. இப்படிப்பட்ட பிரச்சனையால் ஆபிரகாம் லிங்கன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார், எனவே அவரைச் சந்தித்து, அவரிடத்தில் ஆறுதலாக ஏதாவது பேசிவிட்டு வரலாம் என நினைத்துக்கொண்டு அவருடைய நெருங்கிய நண்பர் அவரைச் சந்திக்க வந்தார்.

வந்தவர் ஆபிரகாம் லிங்கனிடம், "லிங்கன்! எதைப் பற்றியும் கவலை கொள்ளவேண்டும். ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்" என்றார். அதற்கு ஆபிரகாம் லிங்கன் மிகவும் பொறுமையாக அவரிடம், "நண்பா! ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியும், ஆனால், நாம் ஆண்டவரோடு இருக்கின்றோமா? என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது" என்றார். லின்கன் இவ்வாறு பேசியதற்கு அவருடைய நண்பரால் எதுவும் பேச முடியவில்லை.

அமெரிக்க அதிபர் லிங்கனுக்கும் அவருடைய நண்பருக்கும் இடையே நடந்த உரையாடலிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய உண்மை யாதெனில், "ஆண்டவராகிய கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார், ஆனால் நாம் அவரோடு இருக்கின்றோமா?" என்பதுதான் சிந்தித்துப் பார்க்கவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல, நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளில் உள்ள உண்மை என்ன என்பதை இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம். ஆண்டவராகிய இயேசு நம்மோடு எப்போதும் இணைந்திருக்கின்றார். இறைவார்த்தையின் வழியாகவும், நற்கருணை வழியாகவும், இன்னும் பல்வேறு காரியங்களின் வழியாகவும் இயேசு தன்னுடைய அருள் பிரசன்னத்தை எப்போதும் நமக்கு வெளிபடுத்தி, நம்மோடு இணைந்திருக்கின்றார். ஆனால் நாம் அவரோடு இணைந்திருக்கின்றோமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இஸ்ரேயல் மக்களோடு ஆண்டவராகிய கடவுள் எப்போதும் உடனிருந்தது போன்று, இயேசுவும் நம்மோடு இணைந்திருக்கின்றார். ஆனால், நாம்தான் இஸ்ரயேல் மக்களைப் போன்று இயேசுவின் அன்பைப் புறக்கணித்துவிட்டு, அவருக்கும் நமக்கும் உள்ள உறவைத் துண்டித்துவிட்டு திக்கற்றவர்களாய் அலைந்துகொண்டிருக்கின்றோம்.

நம்மோடு இணைந்திருக்கின்ற இயேசுவோடு நாம் எப்போதும் இணைந்திருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இயேசுவோடு இணைந்திருப்பதால் எத்தகைய ஆசிரை நாம் பெற்றுக்கொள்கின்றோம்/ பெற்றுக்கொள்வோம் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசுவோடு இணைந்திருப்பதால் நாம் பெறக்கூடிய முதன்மையான ஆசிர்வாதம், நாம் மிகுந்த கனிதருபவர்கள் ஆவோம் என்பதாகும். நற்செய்தியில் இயேசு கூறுகின்றார், "ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனிதருவார்" என்று. இது உண்மை. எப்போது நாம் இயேசுவோடு இணைந்திருக்கின்றோமா? அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ந்திருக்கின்றோமா? அப்போது நாம் மிகுந்த கனி தருவோம் என்பது உண்மை. அதே நேரத்தில் இயேசுவோடு நமக்குள்ள உறவை நாம் துண்டித்துவிட்டு தனியாக இருக்கின்றபோது நம்மால் கனி எதுவும் தரமுடியாது, நிம்மதியாகவும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

இந்த இடத்தில் 'Haunt Of Heaven' என்ற ஆங்கிலக் கவிதையை எழுதிய பிரான்சிஸ் தோம்ப்சன் (Francis Thompson) என்ற கவிஞரைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது. அவர் ஒரு காலத்தில் குடிகாரராக, தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் ஆண்டவர் இயேசுவின் அன்பினால் தொடப்பட்டு, அவரோடு இணைந்து வாழத் தொடங்கினார். அப்போது அவர் எழுதிய கவிதைதான் மேலே சொல்லப்பட்ட கவிதை. இக்கவிதையை எழுதிய பிறகு அவர் உலக பிரபலம் ஆனார். ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருப்பதால் எத்தகைய ஆசிர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்கின்றோம் என்பதற்கு ஆங்கிலக் கவிஞர் பிரான்சிஸ் தோம்ப்சன் அவர்களுடைய வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

அடுத்ததாக இயேசுவோடு இணைந்திருப்பதால் நாம் பெறக்கூடிய இரண்டாவது ஆசிர்வாதம் அல்லது நன்மை நாம் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என்பதாகும். இது ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருப்பதால் நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய ஆசிர்வாதம் என்றே சொல்லலாம். ஏனெனில், இயேசு கிறிஸ்து தந்தைக் கடவுளின் வலப்பக்கம் அமர்ந்துகொண்டு நமக்காக எப்போதும் பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்டவரோடு நாம் இணைந்திருக்கின்றபோது நாம் விரும்பியது அனைத்தும் நிறைவேறும் என்பதுதான் உண்மை.

ஆகவே, நம்முடைய வாழ்வை கனிதரக் கூடியதாகும், விரும்பிக் கேட்பதை நிறைவேற்றித் தரும் இயேசுவோடு இணைந்திருப்போம். எப்படி கிளைகள் கொடியோடு இணைந்திருக்கின்றதோ? அது போன்று நாமும் இயேசுவோடு இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இயேசுவே உண்மையான திராச்சை செடி

1970 ஆம் அண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் ரஷ்யாவைச் சார்ந்த புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்ஸ்சாண்டர் சொல்சனிட்சன் (Alexander Solzhenitsyn 1918 - 2008) என்பவர். இவர் ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் அவரது அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். 1974 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய இருபது ஆண்டுகள் சிறை வாசத்தை அனுபவித்தார். அத்தகைய காலகட்டத்தில் அவர் எழுதிய நூற்கள் ரஷ்ய முழுவதும் வாசிக்கத் தடைசெய்யப்பட்டன.

அப்படிப்பட்ட அலெக்ஸ்சாண்டர் சொல்சனிட்சன் தன்னுடைய இளமைப் பருவத்தில் நடந்ததாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு, அதன்பின்னர் நடைபெறுவதைச் சொல்வார்.

ஒரு சமயம் அவரும் அவருடைய தாயாரும் ஆலயத்திற்குச் சென்று, திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதை அவருடைய வகுப்புத் தோழர்களில் ஒருவன் எப்படியோ பார்த்துவிட, மறுநாள் அலெக்ஸ்சாண்டர் சொல்சனிட்சன் வகுப்புக்கு வந்ததும், அவர் ஆலயம் சென்றுவருவதைப் பார்த்த அவருடைய வகுப்புத் தோழன், "நீ எதற்கு ஆலயத்திற்கு எல்லாம் போனாய்?, ஆலயத்திற்குப் போகக்கூடாது என்று உனக்குத் தெரியாதா?" என்று சொல்லி அவருடைய சட்டையைக் கிழித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த சிலுவையையும் தூக்கி எறிந்து, "இனிமேலும் ஆலயத்திற்கு போனால் அப்புறம் நடப்பது வேறு" என்று எச்சரித்து அனுப்பிவைத்தான். அலெக்ஸ்சாண்டர் சொல்சனிட்சனும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு யாருக்கும் தெரியாமலே ஆலயத்திற்கு சென்று வந்தார். ஏனென்றால் இறை வழிபாடு என்பது இரஷ்ய நாட்டில் அப்போது தடைசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு விட்டு அலெக்ஸ்சாண்டர் சொல்சனிட்சன் பின்வருமாறு கூறுவார், "ரஷ்ய இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம் அவர்கள் கடவுளை மறந்து வாழ்ந்ததே (Men have forgotten God, that is why all this has happened) ஆகும்"

ஆம், என்றைக்கு நாம் கடவுளை மறந்து, அவரைவிட்டுப் பிரிந்து தனித்து வாழ்கின்றோமோ, அன்றைக்கு நாம் அழிவைச் சந்திப்போம் என்பதனை இந்த நிகழ்வின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நானே உண்மையான திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து சொல்வார், "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது" என்று. ஆம், ரஷ்யா கடவுளை புறக்கணித்து வாழ்ந்ததனால் எத்தகைய அழிவினைச் சந்தித்தது என்பதை இங்கே நாம் நினைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

நற்செய்தியில் ஆண்டவராகிய இயேசு தனக்கும் மக்களுக்கும் உள்ள உறவை திராட்சைச் செடிக்கும் திராட்சைக் கொடிக்கும் இடையே உள்ள உறவோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றார். விவிலியத்தில் திராட்சைச் செடியானது இஸ்ரயேல் சமூகத்தோடு ஒப்பிடப்படுகின்றது (எசா 5:7). அவர்கள் கடவுளுக்கு உகந்த உண்மையான திராட்சைச் செடியாக இருந்தார்களா என்பது வேறு விஷயம். ஆனால், ஆண்டவர் இயேசுவோ உண்மையான திராட்சைச் செடியாக விளங்குகின்றார்.

இயேசு திராட்சைச் செடியாக இருந்து, நாம் திராட்சைக் கொடிகளாக இருக்கும்போது, நாம் அவரோடு இணைத்திருக்கவேண்டும். அப்படி இணைந்திருக்கும்போதுதான் நம்மால் மிகுந்த கனி தரமுடியும். என்றைக்கு நாம் கடவுளைவிட்டுப் பிரிந்து நிற்கின்றோமோ அன்றைக்கு நம்மால் கனிதர முடியாது என்பதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு இணைந்திருந்தபோது அவர்கள் மிகுந்த ஆசிர்வாதத்தைப் பெற்றார்கள். என்றைக்கு அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து, பிற தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்களோ அன்றைக்கே அவர்கள் அழிவைச் சந்தித்தார்கள்; நாடு கடத்தப்பட்டு அந்நிய தேசத்தில் அகதிகளாய் வாழத் தொடங்கினார்கள். நாமும் கடவுளை விட்டுப் பிரிந்து வாழும்போது அழிவின் பாதையில் இருக்கின்றோம் என்பது உறுதி.

அடுத்ததாக, இந்த மண்ணுலகத்தில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் மிகுந்த பலன்/பயன் தரக்கூடிய வாழ்க்கையை வாழவேண்டும். கனிகொடாத நிலையோ கடவுளுக்கு உகந்தல்ல, இயேசு சொல்லக்கூடிய தாலந்து உவமையில் வருகின்ற ஒரு தாலந்து பெற்ற பணியாளனோ அதனைப் பயன்படுத்தாமல் மண்ணுக்குள் புதைத்து வைக்கின்றான். அதனாலே தலைவனின் சினத்திற்கு உள்ளாகின்றான். கனிகொடாத கொடிகளையும் கடவுள் தரித்துவிடுவார் என்று இயேசு சொல்கிறார். எனவே, கனி கொடுத்து வாழும் வாழ்க்கையே கடவுளுக்கு உகந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகையால், இயேசுவின் சீடர்களாகிய நாம் கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ்வோம், அது கடவுளோடு இணைந்து வாழ்வதால் மட்டுமே முடியும் என்பதை உணர்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!