|
29
ஜூன் 2018 |
|
பொதுக்காலம்
12ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று
நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11
அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப்
பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை
வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு
அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப
விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக்
காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம்
அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக
அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு
சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக்
கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு
முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால்
கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு
முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது.
அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, "உடனே எழுந்திடும்" என்று
கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர்
அவரிடம், "இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப்
போட்டுக்கொள்ளும்" என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர்
அவரிடம், "உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்"
என்றார்.
பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம்
உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர்
நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம்
காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே
வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே
வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை
விட்டு அகன்றார்.
பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, "ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி
ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த
எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்"
என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)
=================================================================================
பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை
விடுவித்தார்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப்
பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க
மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார். பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள்
முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும்
அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி
7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று
காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்
பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி
இரண்டாம் வாசகம்
இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி
வாகையே.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 4: 6-8, 17-18
அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன்.
நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு
போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்.
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி
வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான
அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக்
காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.
நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக்
கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்;
சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும்
அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார்.
அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல்
என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல்
வெற்றிகொள்ளா. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார்.
அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள்
சொல்கிறார்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர்
எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள்
ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள்.
"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர்
கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்"
என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில்
எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள
என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக்
கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என்
திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல்
வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில்
நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
திருதூதர் பேதுருவின் தலைமைப்பீடம்
உன் பெயர் பேதுரு. விண்ணகத்தின் திறவு கோல்களை நான் உன்னிடம்
தருவேன்." என்று இயேசு அனைத்து அதிகாரங்களையும் பேதுருவுக்கு
வழங்குகிறார். அவருடைய நம்பிக்கை அறிக்கையே அதற்கான அடிப்படையாக
இருக்கிறது. மற்ற மக்களும் சீடர்களும் முழுமையாக இயேசுவை அறியாத
வேளையில் இயேசுவை அறிந்து வெளிப்படுத்துகிறார் பேதுரு.
"ஆண்டவர் இயேசுவே மெசியா. வாழும் கடவுளின் மகன்".
விண்ணிலும் மண்ணிலும் அனைத்து அதிகாரங்களையும், பாவங்களை மன்னிக்கும்
அதிகாரத்தையும் இயேசு ஒருவரே பெற்றிருந்தார். அவருடைய இடத்தில்
அவருக்குப் பதிலாக அனைத்து அதிகாரங்களையும் பெற்று வழிநடத்தும்
தலைவராக தூய பேதுரு கடவுளால் நியமிக்கப்படுகிறார். இன்றும் அவர்
வரிசையில் திருத்தந்தையர்களை கடவுள் நியமிக்கிறார். அவர்களும்
தங்கள் அர்ப்பணத்தினால் கடவுளின் பணிகளுக்குத் தலைமையேற்று கத்தோலிக்கத்
திருச்சபையை உலகில் வழிநடத்தி வருகிறார்கள். கடவுளே அவர்கள் வழியாகப்
பேசுகிறார். வழிநடத்துகிறார். நாம் அத்தகைய தலைமைக்குப் பணிந்து
நடப்பது கடவுளுக்குப் பணிந்து நடப்பதாகும்
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
Fr. Maria Antonyraj, Palayamkottai.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
முயற்சி திருவினையாக்கும்!
தற்போதுள்ள ஆங்கில அகராதியைத் தொகுத்து அளித்தவர் பேராசியர் தாமஸ்கூப்பர்
என்பவர். அவர் ஏற்கனவே இருந்த அகராதியில் இருந்த பல தவறுகளை
நீக்கி, முப்பத்து மூன்றாயிரம் புதிய சொற்களைப்
புகுத்தியிருந்தார். இத்தகையதொரு பெரும்பணியை நிறைவுசெய்வதற்கு
அவருக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலானது. இதற்கிடையில் தாமஸ்கூப்பரின்
மனைவி அவர் எப்போது பார்த்தாலும் படிப்பு, ஆராய்ச்சி என்று இருப்பதைப்
பார்த்துவிட்டு, அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடுமோ எனப் பயந்து
அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் அனைத்தையும் தீயிலிட்டுக்
கொழுத்தி விட்டார்.
இதைக் கண்டு தாமஸ்கூப்பர் மிகவும் வருந்தினார். தன்னுடைய எட்டாண்டு
உழைப்பு இப்படி வீணாய் போய்விட்டதே என்று கலங்கினார். இருந்தாலும்
மனந்தளராமல் விடாமுயற்சியோடு மேலும் எட்டாண்டுகள் கடினமாக உழைத்து,
முன்பை மிகச் சிறப்பானதொரு ஆங்கில அகராதியை உருவாக்கித் தந்தார்.
இது எல்லாருடைய கவனத்தையும் பெற்றது. அதே நேரத்தில் "எல்லாமே
முடிந்துபோய் விட்டது" என்று எல்லாரும் நினைக்கையில் விடாமுயற்சியோடு
தொடர்ந்து உழைத்து ஆகச் சிறந்த ஆங்கில அகராதியை தொகுத்து அளித்தது
அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
முயற்சி அல்லது விடாமுயற்சிக்கு எப்போதும் வெகுமதி உண்டு என்பதை
இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, மலைமீது இருந்து
போதித்துவிட்டு கீழே இறங்கி வருகின்றார். அப்போது தொழுநோயாளர்
ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா! நீர் விரும்பினால் எனது நோயை
நீக்க உம்மால் முடியும்"என்கின்றார். இயேசு அந்தத் தொழுநோயாளரை
எப்படிக் குணப்படுத்தினார் என்று பார்ப்பதற்கு முன்பாக
தொழுநோயாளர் நமக்கு எப்படி மிகச் சிறந்த வாழ்வியல் பாடங்களைக்
கற்றுத் தருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது மிகச் சிறப்பான
ஒரு காரியமாகும்.
முதலில் தொழுநோயாளர் மேற்கொண்ட முயற்சியை நாம் பாராட்டியாக
வேண்டும். ஏனென்றால் யூத சமூகத்தில் தொழுநோயாளர்கள் ஊருக்கு
வெளியே தான் இருக்கவேண்டும். அவர்கள் மக்களிடம் நெருங்கி வருவதோ,
அவர்கள் மக்களோடு பேசுவதோ என்பது கூடாத ஒரு காரியம். இப்படி இருக்கும்போது
நற்செய்தி வரும் தொழுநோயாளர் யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை,
நான் ஆண்டவர் இயேசுவிடமிருந்து குணம்பெற வேண்டும் என்று முயற்சி
எடுத்து அவரிடத்தில் செல்கின்றார். ஆச்சரியம் என்னவென்றால்,
அவருடைய முயற்சிக்குப் பலன் கிடைக்கின்றது. நாமும் நம்முடைய தனிப்பட்ட
வாழ்வில் இது முடியவே முடியாது என்று முடங்கிப் போகாமல், முயன்றால்
முடியாதது ஏதுமில்லை என்ற நம்பிக்கையில் முயற்சி செய்து
பார்த்தால் எதுவும் சாத்தியமே.
தொழுநோயாளரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய இரண்டாவது பாடம்
என்னவென்றால், அவரிடத்தில் இருந்த பணிவு அல்லது தாழ்ச்சி தான்.
நற்செய்தியில் அவர் ஆண்டவருக்கு முன்பாக பணிந்து வணங்கினார் என்று
வாசிக்கின்றோம். தான் ஆண்டவர் இயேசுவுக்கு முன்பாக ஒன்றுமில்லை
என்று அவர் உணர்திருக்கவேண்டும். அதனால்தான் அவர் இயேசுவுக்கு
முன்பாக பணிந்து வணங்குகின்றார். நம்முடைய வாழ்க்கையிலும் நாம்
பணிவோடும் தாழ்சியோடும் இருந்தோம் என்று சொன்னால், இறைவனுடைய
ஆசிரை அளவுகடந்த விதமாய் பெறுவது உறுதி.
தொழுநோயாளரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்றாவது பாடம்
தன்னிலும் பெரியவருக்கு - இயேசுவுக்கு - மதிப்பளித்ததாகும்.
தொழுநோயாளர் ஆண்டவர் இயேசுவை "ஐயா" என்று அழைக்கின்றார். ஐயா
என்பது சாதாரண வார்த்தை கிடையாது, அது மதிப்பிற்கு உரிய
வார்த்தையாகும். அத்தகைய வார்த்தையைச் சொல்லித்தான் அவர் இயேசுவை
அழைக்கின்றார். இதைவிடவும் அவர் இயேசு தன்னைக் கட்டாயம் குணப்படுத்த
வேண்டும் என்று வற்புறுத்தாமல் "நீர் விரும்பினால் எனது நோயை
நீக்க உம்மால் முடியும்"என்கின்றார். இறைவனிடத்தில் நாம்
வேண்டுகின்றபோது அவருக்கு விருப்பமானால் நாம் வேண்டியது நடக்கவேண்டும்
என்று நினைக்கவேண்டுமே ஒழிய, நமது விருப்பம்தான் நிறைவேறவேண்டும்,
நாம் நினைத்ததுதான் நடக்கவேண்டும் என்று ஒருபோதும் நினைக்கக்
கூடாது.
இப்படி பெரும் முயற்சி செய்து தாழ்சியோடும் அதே நேரத்தில் தளரா
நம்பிக்கையோடும் தன்னிடம் வந்த தொழுநோயாளரை ஆண்டவர் இயேசு அன்பொழுகத்
தொட்டுக் குணப்படுத்துகின்றார். தொழுநோயாளரைத் தொடுவது தீட்டான
ஒரு காரியம். மேலும் தொழுநோயாளரை தன் அருகில் வைப்பதற்கே பலர்
யோசிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் ஆண்டவர் இயேசு அவரிடம்,
"நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக"என்று சொல்லி அவரைக்
குணப்படுத்துகின்றார்.
ஆகையால், நம்மீது உண்மையான அன்பு கொண்டிருக்கும் ஆண்டவர் இயேசுவை
நம்பிக்கையோடு நாடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|