|
27
ஜூன் 2018 |
|
பொதுக்காலம்
12ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் திருமுன் அரசர் யோசபாத்து உடன்படிக்கை செய்துகொண்டார்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 22: 8-13; 23: 1-3
அந்நாள்களில் தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை
நோக்கி, "ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்"
என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.
பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, "அரசே!
உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின்
இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர்"
என்று சொன்னான்.
மேலும் அவன் அரசரிடம், "குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக்
கொடுத்துள்ளார்" என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக்
காட்டினான். அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக்
கிழித்துக்கொண்டார். பின் குரு இல்க்கியாவையும், சாப்பானின்
மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்கோரையும், எழுத்தன்
சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, "அரசர் இட்ட கட்டளை
இதுவே: நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும்,
யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது
என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில்
நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும்
இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக்
கொழுந்து விட்டு எரிகிறது" என்றார். அரசரது அழைப்புக்கிணங்கி
யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம்
வந்து குழுமினர். அப்பொழுது அரசரும், யூதா நாட்டினர் அனைவரும்,
எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும்,
சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு
வந்தனர். அரசரோ ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை
நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் காதில் விழுமாறு
வாசித்தார். அரசர் தூணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி
நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்கு முறைகளையும்,
நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும்,
அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை
நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை
செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 119: 33-34. 35-36. 37, 40 (பல்லவி: 33a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியைக் கற்றுத்தாரும்.
33 ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்;
நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். 34 உம் திருச்சட்டத்தின்படி
நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.
பல்லவி
35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில்,
அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 36 உம் ஒழுங்குமுறைகளில் என்
இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; தன்னலத்தை நாட விடாதேயும். பல்லவி
37 வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்; உம்
வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும். 40 உம் நியமங்களைப்
பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு
வாழ்வளியும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 4,5b
அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல
நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான்
அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார்
ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு
கொள்வீர்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "போலி இறைவாக்கினரைக்
குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக்
கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள்
கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக்
கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள்.
முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப்
பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக்
கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம்
நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக்
கொடுக்க இயலாது. நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு
நெருப்பில் எறியப்படும்.
இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே
இனங்கண்டு கொள்வீர்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
போலிகள் இனம் கண்டறியப்பட வெண்டும்.
போலி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் கண்டறியப்பட்டு பிடித்து
நீதிமன்ற காலலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர்
ஆண்டாண்டு காலமாக இந்த நிலையில் பணி செய்து வந்தவர்கள். இவர்களில்
பலர் தியாகத்தோடு உழைத்தவர்களும் உண்டு, பணத்திற்காக உழைத்த
போலிகளும் உண்டு. இவர்களிடம் மருத்துவம் காலம் காலமாக பார்த்து
வந்திருக்கின்றனர்.
நமது வரிப்பணத்தில் படித்த பல மேதைகள் பணம் கொழிக்கும் மேலை
நாடுகளில் சுகபோகமாக வாழ்ந்து வர இத்தகையவர்கள் கிராமத்தில் காலம்
காலமாக தியாகத்தோடு தெரிந்ததை கொண்டு உழைத்து வந்திருக்கின்றனர்.
இத்தனை ஆண்டுகளும் அரசு அறியாமலா இருந்தது. கண்டு கொள்ளாமல் இருந்ததற்கு
காரணம் என்ன? இன்றைக்கு கைது செய்ததற்கு காரணம் என்ன? இவர்களை
வளர்த்ததில் மக்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் பொறுப்புண்டல்லவா.
பொறுப்பில்லாத படித்த மேதாவிகள் கண்டு கொள்ளாமல் மக்களின் வரிப்பணத்தை
பெற்றவர்கள் அவர்களின் நலத்தில் அக்கரை காட்டாதது குற்றமில்லையா.
போலிகள் வளர்வதில் இன்று மக்களுக்கு பொறுப்புண்டு என்பது போலவே
எதில் போலியானலும் அதை வளரவிடுவதில் அரசுக்கும், திருச்சபைக்கும்
அதன் பொறுப்பாளர்களுக்கும் பொறுப்புண்டு.
உணர்வார்களா, திருந்துவார்களா, திருத்துவார்களா,
காப்பாற்றுவார்களா?
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்
அமெரிக்காவைச் சார்ந்த ராபர்ட் என்னும் இளைஞன் ஒருமுறை
செய்தித்தாளில் ஒரு வித்தியாசமானதொரு அறிவிப்பை
விடுத்திருந்தான். அந்த அறிவிப்பு இதுதான்: நீங்கள் பேனா, மை
இல்லாமலே எழுதலாம். இது இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு"
என்று அறிவிப்புச் செய்திருந்தான்.
இந்த அறிவிப்பைப் பார்த்ததும் மக்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.
பேனா, மை இல்லாமலே எழுதலாமா?, அப்படியென்ன அறிய கண்டுபிடிப்பு
அது என்று மக்கள், அதை வாங்குவதற்கு போட்டிபோட்டனர். நிறையப்
பேர் ராபர்டுக்கு காசோலையை அனுப்பி வைத்தனர். இதனால் அவருக்கு
காசோலையும், பணவிடையையும் வந்து குவிந்ததன. இதைக்கண்டு அவர்
திக்குமுக்கு ஆடிப்போனார்.
ஒருநாளில் அவர் மக்களுக்கு இப்படியாக ஒரு அறிவிப்புக்
கொடுத்தார்; "அன்பார்ந்த மக்களே, மெத்தப் படித்தவர்களே! பேனா
இல்லாமல், மை இல்லாமல் எழுதும் பொருளை உங்களுக்கு அறிமுகம்
செய்கிறேன். அது வேறொன்றும் இல்லை பென்சில்தான்" என்று அறிவித்தார்.
இதைக்கேட்டு மக்கள் பெரிதும் ஏமாந்துபோனார்கள்.
போலியான விளம்பரங்களைக் கண்டு, அறிவிப்புகளைக் கண்டு மக்கள் எந்தளவுக்கு
ஏமாந்து போகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "போலி இறைவாக்கினர்களைக்
குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஆட்டுத்தோலைப்
போர்த்திக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள். ஆனால் உள்ளேயோ அவர்கள்
கொல்லையிட்டுத் தின்னும் ஓநாய்கள்" என்கிறார்.
இஸ்ரயேல் மக்களுடைய சமூக மற்றும் சமய வாழ்வில் போலி இறைவாக்கினர்களுக்குப்
பஞ்சமில்லை. பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 2:1 ல்
வாசிக்கின்றோம், "முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர்
தோன்றினர். அவ்வாறே, உங்களிடையேயும் போலி இறைவாக்கினர்கள
தோன்றுவார்கள். அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப்
புகுத்திவிடுவார்கள்; தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும்
மறுதலிப்பார்கள்; விரைவில் அழிவை தம்மீது வருவித்துக் கொள்வார்கள்"
என்று.
ஆதலால், போலி இறைவாக்கினர்கள் என்று அழைக்கப்படும் மனிதர்கள்
மக்களிடம் தப்பான கொள்கைகளைப் பரப்பி, அவர்களைத்
திசைதிருப்பும் வேலையை சரியாகச் செய்துகொண்டிருந்தார்கள். இயேசுவின்
காலத்திலும்கூட தெயுதா, கலிலேயனான யூதா போன்றோர் தாமே மெசியா
என சொல்லிக்கொண்டு, ஒருசில மக்களையும் தங்களோடு
சேர்த்துக்கொண்டு, மக்களிடம் வலம்வந்தனர். கடைசியில் அவர்கள்
அழிந்தே போனார்கள். ஆகவே, போலி இறைவாக்கினர்கள் அழிந்துபோவார்கள்
என்பது இறைவார்த்தை சொல்லும் செய்தியாகும்.
இந்த வேளையில் இயேசுவின் சீடர்களாக இருக்கும் நமக்கு முன்னால்
இரண்டு சவால்கள் இருக்கின்றன. ஒன்று போலி இறைவாகினர்களை அடையாளம்
கண்டுகொள்வது. இரண்டு நாம் போலித்தனம் இல்லா நல்வாழ்வு வாழ்வது.
போலி இறைவாக்கினர்களை அடையாளம் கண்டுகொள்வது என்கிறபோது, இன்றைய
காலகட்டத்தில் அது மிகவும் தேவையாக இருக்கின்றது. ஏனென்றால் இன்றைக்கு
பொய்க்கும், போலிக்கும் வித்தியாசம் தெரியவில்லை; உண்மையென்ன,
பொய் என்ன என்பதை நம்மால் பிரித்துப்பார்க்க முடியாமல்
போய்விட்டது. அந்தளவுக்கு போலியானது அத்தியாவசியப் பொருட்களிலிருந்து,
ஆடம்பரப் பொருட்கள்வரை மலிந்துவிட்டது. ஆன்மீகத்தளத்திலும்
போலி இறைவாக்கினர்கள், போலி ஆன்மீகவாதிகள் மலிந்துபோய்விட்டார்கள்.
ஆகவே, இந்த போலியான உலகில் உண்மை எதுவெனக் கண்டறிவதுதான் நாம்
செய்யக்கூடிய மிக முக்கியமான காரியமாகும்.
அடுத்ததாக, நாம் போலிகளை இனம்கண்டுகொள்வதோடு மட்டுமல்லாமல்,
போலியான வாழ்வு வாழாமல், உண்மையான வாழ்க்கை வாழவேண்டும். பல நேரங்களில்
உண்மையாக இருப்பதால், உண்மையின் வழி நடப்பதால் ஆபத்துக்களையும்,
துன்பங்களையும் சந்திக்க நேரிடும் என்பதற்காக பொய்யான, போலியான
வாழ்க்கை வாழ்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். ஆண்டவர் இயேசு
கூறுவார், "உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்று (யோவான்
8: 32). நாம் உண்மையின் வழியில் நடக்கும்போது துன்பங்கள் வந்தாலும்,
இறைவன் அளிக்கும் ஆசிரைப் பெற்றுக்கொள்வோம்.
எனவே, இயேசுவின் பின்னால் செல்லும் நாம், போலிகளை இனங்கண்டு
கொள்வோம். உண்மையின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
"போலி (இறைவாக்கினர்களைக்) குறித்து எச்சரிக்கையாய்
இருங்கள்"
ஸ்வீடனில் எஸ்கில்ஸ்டுனா (Eskilstuna) என்ற நகரம் உள்ளது. அங்கே
நகைக்கடை அதிபர் ஒருவர் இருந்தார். திடீரென ஒருநாள் அவர் மாரடைப்பு
வந்து இறந்துபோனார். அவருடைய இறப்புக்குப் பிறகுதான் அவருடைய
உண்மையான நிலைமை தெரியவந்தது. அவர் அத்தனை வருடமும் சம்பாதித்து
வைத்திருந்தது பணத்தை அல்ல, கடனை. இதனால் நகைக்கடை உட்பட அவரின்
சொத்துகள் முழுவதும் பறிபோயின. அந்தக் குடும்பம் நடுத்தெருவில்
நிற்காத குறை. நகைக்கடை அதிபருக்கு ஒரே ஒரு மகன்.
சாப்பாட்டுக்கே பிரச்னை எனும் நிலைமையும் அந்தக் குடும்பத்துக்கு
வந்தது.
இதற்கு மத்தியில் ஒருநாள் நகைக்கடை அதிபரின் மனைவி, மகனை அழைத்தார்.
நீலக்கல் (Sapphire) பதித்த ஒரு நெக்லஸை அவனிடம் கொடுத்தார்.
"இது உன் அப்பா ரொம்ப ஆசையா எனக்கு வாங்கிக் கொடுத்த நெக்லஸ்.
இதைக் கொண்டுபோய் உன் சித்தப்பாகிட்ட கொடுத்துட்டு, இதுக்கு என்ன
பணம் கிடைக்குமோ அதை வாங்கிட்டு வா" என்று சொன்னார். நகைக்கடை
அதிபரின் தம்பியும், அதே ஊரில் ஒரு நகைக்கடை வைத்திருந்தார்.
அம்மாவின் வார்த்தையைத் தட்ட முடியாத மகன், சித்தப்பாவின் கடைக்குப்
போனான். அவரிடம் நெக்லஸை நீட்டினான். விஷயத்தைச் சொன்னான்.
அவனுடைய சித்தப்பா, நெக்லஸை வெகு கவனமாக ஆராய்ந்தார். பிறகு
சொன்னார்... "மகனே! உன் அம்மாகிட்ட போய் இப்போ மார்க்கெட் நிலவரம்
நல்லா இல்லைனு சொல்லு. கொஞ்ச நாள் காத்திருந்து இதை வித்தா நல்ல
விலை கிடைக்கும்". அவன் யோசனையோடு சித்தப்பாவைப் பார்த்தான்.
"இன்றைய செலவுக்கு என்ன செய்வது?" அவர் அத்தோடு விடவில்லை. அவன்
வீட்டுச் செலவுக்கு கணிசமாக ஒரு தொகையைக் கொடுத்தார். அடுத்த
நாளிலிருந்து, அவர் கடைக்கு வந்து நகைத்தொழிலைக் கற்றுக்கொள்ளச்
சொன்னார். அதன் மூலம் அவன் குடும்பத்துக்கும் ஒரு வருவாய்
கிடைக்கும் என அறிவுறுத்தினார். அந்தப் பையன் மகிழ்ச்சியோடு
திரும்பிப் போனான்.
மறுநாளிலிருந்து சித்தப்பாவின் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தான்.
விலையுயர்ந்த நகைகளையும், கற்களையும் எடைபோடவும், அதன் மதிப்பைத்
தெரிந்துகொள்ளவும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகினான். அந்தத்
தொழிலில் வெகுவாகக் கைதேர்ந்தவனானான். நகையின் மதிப்பை அறியவும்,
வைரம் உள்ளிட்ட கற்களின் எடைபோடவும் அவனைத் தேடி அக்கம் பக்கத்து
ஊர்களிலிருந்தெல்லாம் வர ஆரம்பித்தார்கள். அவன் புகழ் மெள்ள
மெள்ள வளர்ந்துகொண்டே இருந்தது.
ஒருநாள் சித்தப்பா அவனை அழைத்தார். "மகனே போய் உன் அம்மாகிட்ட
சொல்லு. "மார்க்கெட் நல்லா இருக்கு. இப்போ அந்த நெக்லஸை வித்தா
நல்ல விலைக்குப் போகும்"னு. நாளைக்கு மறக்காம அந்த நெக்லஸை எடுத்துட்டு
வா". அவன் அன்று இரவு வீடு திரும்பியதும், முதல் காரியமாக அம்மாவின்
நீலக்கல் நெக்லஸை எடுத்துப் பார்த்தான். சோதித்தான். அதிர்ந்து
போனான். அந்த நெக்லஸில் இருந்தது விலையுயர்ந்த கல் அல்ல, போலி.
அடுத்த நாள் அவன் சித்தப்பாவின் கடைக்கு வந்தான். "நெக்லஸ்
கொண்டு வந்தியா?" என்று கேட்டார் சித்தப்பா. "இல்லை" என்றான்
அவன். "ஏன்?" என்று அவர் கேட்க, அவன் "அதுல இருந்தது போலிக்கல்.
பத்து பைசாவுக்குப் பெயராது" என்றான்.
சற்று நேரம் இருவருக்குமிடையே அமைதி நிலவியது. பிறகு பையன்
கேட்டான், "நான் அன்னிக்கி இந்த நெக்லஸைக் கொண்டு வந்தப்போ, "இப்போ
மார்க்கெட் நிலவரம் நல்லா இல்லை. கொஞ்ச நாள் காத்திருந்து இதை
வித்தா நல்ல விலை கிடைக்கும்"னு ஏன் சொன்னீங்க?". "இதை அன்னிக்கிக்
கொண்டு வந்தப்போ நீ உடைஞ்சு போயிருந்தே. உனக்குப் பணம் தேவையா
இருந்துது. அந்த நேரத்துல "இது போலி"னு நான் சொல்லியிருந்தா,
நான் பொய் சொல்றேன்னு நீ நினைச்சிருப்பே. உன்னோட வீட்டு நிலைமை
சரியில்லைனு தெரிஞ்சதாலதான் போலி நகையை, நல்ல நகைனு நான்
சொன்னேன். இப்போ உனக்கு இதுல நல்ல அனுபவம் வந்துருச்சு. உனக்கே
இது போலினு தெரிஞ்சிடுச்சு. அதுனாலதான், இதைக் கொண்டுவரச்
சொன்னேன்" என்றார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வு, ஒரு விஷயத்தை எந்த நேரத்தில் எப்படிச்
சொல்லவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் அதே நேரத்தில் எல்லாவற்றிலும்
போலிகள் இன்றைக்கு மலிந்து மலிந்து போய்விட்டன என்பதையும் மிக
அப்பட்டமாக எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசத்தில் ஆண்டவர் இயேசு, "போலி இறைவாக்கினர்களைக்
குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்" என்கின்றார். இயேசு
விடுக்கும் எச்சரிக்கை இறைவனின் வாக்கை எடுத்துரைக்கும் இறைவாக்கினர்களில்கூட
போலிகள் இருக்கிறார்களா? என்று நம்மை ஆச்சரியப்பட வைப்பதாக இருக்கின்றது.
யார் இந்த போலி இறைவாக்கினர்கள்? என்று அறிந்துகொள்ள வேண்டும்.
ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி, அவருடைய பெயர் விளங்கச்
செய்யாமல் தன்னுடைய பெயரை விளங்கச் செய்யும், தன்னுடைய சுய இலாபத்தைப்
பார்க்கும் அனைவரும் போலி இறைவாக்கினர்கள்தான்.
ஆகவே, நாம் இத்தகைய போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாக
இருக்கவேண்டும். மட்டுமல்லாமல் நாமும் போலியாக இல்லாமல் உண்மையானவர்களாக
இருக்கவேண்டும். அப்படி நாம் இருக்கும் பட்சத்தில் இறைவனின் அன்பு
மக்களாவோம் என்பது உறுதி.
ஆகவே, போலிகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்போம். உண்மையின்
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|