Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     17   ஜூன்  2018  
                                                பொதுக்காலம் 10ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 17: 22-24

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நான் நடுவேன். இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன்.

அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.

ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 25a)
=================================================================================
திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1b காண்க)

பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று. 1 ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. 2 காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி

12 நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். 13 ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி

14 அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 15 ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6-10

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.

எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந் தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம்.

ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறு பெற்றுக்கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவாக்கு வித்தாகும்; கிறிஸ்துவே விதைப்பவர்; அவரைக் கண்டடைகிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எல்லா விதைகளையும்விடச் சிறியது. எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகிறது.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.

முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது" என்று கூறினார்.

மேலும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும் பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்ட பின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்" என்று கூறினார்.

அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

(எசே 17: 22 -24 ; 2 கொரி 5: 6-10 ; மகு 4: 26-34)
"நீ ஒரு சிறிய விதைதான், உனக்குள் ஒளிந்திருப்பதோ பெரிய மரம்"

சில ஆண்டுகளுக்கு முன்பாக McGuffeys Reader என்னும் ஆங்கில மாத இதழில் வந்த ஒரு கதை. கற்பனைக் கதைதான்.

ஒரு பத்திரிக்கையாளரின் வீட்டில் பழைய கடிகாரம் ஒன்று இருந்தது. அந்தக் கடிகாரம் திடிரென்று ஒருநாள் தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது. "நீ உன்னுடைய ஓட்டத்தை ஏன் இப்படி முடித்துக்கொண்டாய்?" என்று பத்திரிக்கையாளர் அதனிடம் கேட்டபோது, அது, "எனக்கு ஓராண்டிற்கு 3,15,36,000 (மூன்று கோடியே பதினைந்து லட்சத்து, முப்பது ஆறாயிரம்) முறை டிக் டிக் டிக் என அடிக்கவேண்டுமே, அதை நினைத்துப் பார்த்தபோது, எனக்கு மலைப்பாக இருந்தது. அதனால்தான் என்னுடைய ஓட்டத்தை நிறுத்திக்கொண்டேன்" என்று பதில் சொன்னது.

கடிகாரம் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர் அதனிடம் பேசத் தொடங்கினார். "இங்கே பார்! நீ ஓராண்டிற்கு 3,15,36,000 முறை டிக் டிக் டிக் என அடிக்கவேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே, ஒரு நொடிக்கு ஒரு டிக் அடித்தாலே போதும் என நினைத்துக்கொள், உன்னால் ஓராண்டிற்கு 3,15,36,000 நொடிகள் என்ற மிகப்பெரிய இலக்கை மிக எளிதாகக் கடந்து விடலாம்" என்றார். அதன்பிறகு அந்தப் பழைய கடிகாரம் ஒரு நொடிக்கு ஒரு டிக் என அடித்து, மிகப் பெரிய இலக்கை எளிதாக எட்டியது.

எந்த ஒரு மாற்றமும் சரி, முன்னேற்றமும் சரி திடிரென்று தோன்றிவிடுவதல்ல, படிப்படியாகத் தோன்றக்கூடியது என்னும் உண்மையை இந்த கதையானது நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதினோறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் இறையாட்சி திடிரென்று தோன்றுகின்ற ஒன்றல்ல, அது படிப்படியாக வளரக்கூடியது என்னும் செய்தியைத் தாங்கி வருகின்றது. நாம் அதனைக்குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை கடுகு விதைக்கு ஒப்பிடுகின்றார். கடுகுவிதை என்பது எல்லா விதைகளிலும் சிறிய விதை. ஆனால், அது வளர்ந்து மரமாகின்றபோது வானத்துப் பறவைகள் எல்லாம் தங்குகின்ற அளவுக்கு பெரிய மரமாக மாறுகின்றது. அதுபோன்றுதான் நாசரேத்து என்னும் குக்கிராமத்தில் விதைக்கப்பட்ட இறையாட்சிக்கான விதை, வளர்ந்து, எல்லா நாடுகளையும், எல்லா மக்களையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவரும் என்கிறார் இயேசு கிறிஸ்து. ஆகையால், இறையாட்சி என்பது திடிரென்று ஓர் இரவுக்குள் வளர்ந்துவிடுகின்ற ஒன்றல்ல, அது படிப்படியாக வளரக்கூடியது என்னும் உண்மையை மிக எளிதாக நாம் அறிந்துகொள்ளலாம்.

இறையாட்சி படிப்படியாக வளரக்கூடியது என்னும் சிந்தித்த நாம், அந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதையும் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு படிக்கின்றோம். "உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்துப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிகழ்களில் அவை வந்து தங்கும்".

மேலே படித்த வார்த்தைகளை ஆழமாகப் படித்திருந்தோம் என்றால், ஏன் இன்னுமொரு முறை படித்தோம் என்றால், கடவுள்தான் கேதுரு மரத்தின் வளர்சிக்குக் காரணம் என்னும் உண்மையை எளிதாக அறிந்துகொள்ளலாம், இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் நாம் படிக்கக்கேட்ட தானாய் முளைத்து வரும் விதை உவமை கூட ஆண்டவர்தான் அந்த விதையின் வளர்சிக்குக் காரணம் என்று சொல்வார் இயேசு கிறிஸ்து. ஆகவே, இறையாட்சி என்ற ஒன்று படிப்படியாக வளர்ந்து, வானத்துப் பறவைகள் அனைத்தும் தங்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய மரமாக வளர்வதற்கு முழுமுதல் காரணம் ஆண்டவர்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. (இங்கே குறிப்பிடப்படும் வானத்துப் பறவைகள் என்பதை இறையாட்சி எல்லாருக்கும் உரித்தானதாகப் புரிந்துகொள்ளலாம்).

அப்படியானால், இறையாட்சியில், அதன் வளர்ச்சியில் மனிதர்களின் பங்கு தேவையில்லையா? என்னும் கேள்வி எழுகின்றது. இறையாட்சியின் வளர்ச்சியில் மனிதர்களின் பங்கு தேவையில்லை என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் எல்லாம் கருவிகளாக இருந்து செயல்படுகின்றார்கள். ஆனால், ஆண்டவர்தான் அதன் வளர்ச்சிக்கு முதற் காரணம் என்பதுதான் உண்மை. தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார், "நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகின்றவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுகிறவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை" (1 கொரி 3: 6-8). எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். மனிதர்களாகிய நாம் அனைவருமே கடவுளுடைய கையில் கருவிகள்தானே ஒழிய, நாம் கடவுளாக இருக்க முடியாது என்பதை பவுலடியார் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். எனவே, இறையாட்சியின் வளர்ச்சியில் மனிதர்களின் துணை சிறிது இருந்தாலும், ஆண்டவரே அதற்குப் பின்னால் அதன் வளர்சிக்குக் காரணமாக இருக்கின்றார் என்னும் உண்மையை மிக ஆழமாக உணர்ந்துகொள்ளலாம்.

இறையாட்சி படிப்படியாக வளரக்கூடியது, அதன் வளர்சிக்கு ஆண்டவரே முழுமுதற் காரணம் என்று சிந்தித்த நாம், இறையாட்சிக்குத் தடையாக, இடறலாக, ஏன் அதைக் குறித்து அக்கறை கொள்ளாமல் இருப்போருக்கு இறைவன் எத்தகைய தண்டனைத் தருகின்றார் என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். வேறு வார்த்தைகளில் கூறவேண்டும் என்றால், இறையாட்சியைக் குறித்து கண்களால் தொடர்ந்து பார்த்து கண்டுகொள்ளாமலும், காதால் கேட்டு, அதனைக் கருத்தில் கொள்ளாமல் இருப்போருக்கு (மாற் 4:12) இறைவன் எத்தகைய தண்டனையைத் தருகின்றார் என்றும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பவுலடியார் இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், "நாம் அனைவரும் கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்த போது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறு பெற்றுக்கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்" என்கிறார். ஆகையால், இயேசுவின் போதனையைக் கேட்டு, இறையாட்சிக்கு உகந்தவர்களாக இருக்கின்றோமா? இல்லையா? என்பதைப் பொறுத்துதான் நமக்குத் தீர்ப்பு இருக்கின்றது என்பது உண்மையாக இருக்கின்றது.

நாம் இறைவனின் வார்த்தைக்கு செவிமடுத்து, இறையாட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றோமா? அல்லது இறைவார்த்தைக்கு செவிமடுக்காமல், இறையாட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை போடுகின்றோமா? என்று சிந்துத்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவார்த்தையின் படி வாழாமல், நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வாழ்ந்து, சுயநலச் சேற்றில் சிதைந்து, நம்முடைய வாழ்வையே சீரழித்துக்கொண்டிருக்கின்றோம். இப்படி இறைவார்த்தைக்கு செவிகொடுக்காமல், இறையாட்சிக்கு முட்டுகட்டையாய் இருந்தோம் என்றால், நாம் ஆண்டவரின் திருமுன் நிற்க தகுதியற்றுப் போய்விடுவோம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

ஓரூரில் யாருக்குமே எந்தவொரு உதவியும் செய்யாமல், எல்லாருடைய வெறுப்பையும் சம்பாதித்த மிக மோசமான பெண்ணொருத்தி இருந்தாள். திடிரென்று ஒருநாள் அவள் இறந்துபோக, சாத்தான் வந்து, அவளை நரகத்திற்குத் தூக்கிக்கொண்டு போனது.

அப்போது அந்தப் பெண்மணியின் காவல்தூதர், "இவர் தன்னுடைய வாழ்க்கையில் எந்தவொரு நன்மையும் செய்யவில்லையா?..., ஏதாவது ஒரு நன்மை செய்திருந்தால்கூட இவளை நரகத்திலிருந்து மோட்சத்திற்குக் கொண்டுபோய்விடலாமே என்று மிகத் தீவிரமாக யோசித்தார். அந்நேரத்தில் அவருடைய சிந்தனைக்கு அந்தப் பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன்பாக, அவருடைய வெங்காயத் தோட்டத்தில் விளைந்திருந்த வெங்காயத்தைப் பறித்து, அதனை பசியோடு இருந்த ஒரு பிச்சைக்காரருக்குக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

உடனே காவல்தூதர் கடவுளை அங்கிச் சென்று, அந்தப் பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன்பாக பசியாய் இருந்த பிச்சைக்காரருக்கு வெங்காயம் ஒன்றைக் கொடுத்ததை எடுத்துச் சொல்லி, அவருக்கு மோட்சத்தில் இடம் தருமாறு கேட்டார். கடவுளும் அந்தப் பெண்மணியின் காவல்தூதர் அவருக்காகப் பரிந்து பேசியதைப் பார்த்து, "சரி, அந்தப் பெண்மணி அவ்வாறு உதவி செய்ததால், நீர் உம்முடைய கையில் அந்த வெங்காயத்தைப் பிடித்துக்கொள்ளும், அதைப் பிடித்துக்கொண்டு அவள் நரகத்திலிருந்து மோட்சத்திற்கு வரமுடியுமென்றால் வரட்டும். இல்லையென்றால் அவள்பாடு" என்று சொல்லிவிட்டு, கடவுள் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்.

காவல்தூதர் அந்தப் பெண்மணியைக் காப்பாற்றும் பொருட்டு தன்னுடைய கையில் வெங்காயத்தின் ஒரு நுனியைப் பிடித்துக்கொண்டு, அதன் மறுநுனியை நரகத்தில் கொடிய வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை நோக்கி வீசினார். அவளும் வெங்காயத்தின் மறுநுனியைப் பிடித்துக்கொண்டு மேலே மோட்சத்திற்கு வந்தாள். அவள் மேலே செல்வதைப் பார்த்து, நரகத்தில் இருந்த ஏனையோர் அவளுடைய காலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு, அவள் பின்னாலேயே வந்தார்கள். இதைப் பார்த்து சினம்கொண்ட அந்தப் பெண்மணி, "மோட்சம் செல்ல எனக்குத் தான் வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்றது, உங்களுக்கு அல்ல" என்று சொல்லி தன்னுடைய காலை உதறி, அவர்களைக் கீழே தள்ளினாள். அதற்குள் அவள் பிடித்திருந்த வெங்காயத்தின் நுனி முறிந்துபோகவே அவளும் கீழே விழுந்து நரகவே வேதனையை அனுபவிக்கத் தொடங்கினாள்.

தான் மட்டும் வாழவேண்டும், நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்போருக்கு கடைசியில் இத்தகையதோர் அழிவுதான் ஏற்படும் என்னும் உண்மையை இந்தக் கதையானது மிக அருமையாக எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், இறைவார்த்தையின் படி வாழாமல், இறையாட்சிக்கு முட்டுகட்டையாய் இருப்போருக்கு இதுபோன்ற தீர்ப்பு நிச்சயமாக உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஆகவே, இறையாட்சி படிப்படியாக வளரக்கூடியாது, அதற்கு ஆண்டவர்தான் முழுமுதற் காரணம், அதற்குத் தடையாய் இருப்போருக்கு ஆண்டவர் தக்க தண்டனையைத் தருவார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இறையாட்சியின் மீதிப்பீடுகளுக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
முதல் வாசகம்: எசேக்கியல் 17;22-24
திருப்பாடல்கள்: 92; 1-2;12-15 2
கொரிந்தியர்: 5 6-10
மாற்கு: 4; 26-34

விதைகளா? விழுதுகளா?
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது இந்த பழமொழியை நாம் பலமுறை உபயோகப்படுத்தியிருப்போம். பலர் சொல்லவும் கேட்டிருப்போம். கடுகில் அவ்வளவு மருத்துவ குண நலன்கள் இருப்பதாலேயே இவ்வாறு சொல்கிறோம். விதைகளிலேயே மிகவும் சிறிய விதை கடுகாகத்தான் இருக்கும். பயன் தருவதிலேயும் அதிக பயன் தருவதும் இதுவாகத்தான் இருக்கும். நாம் பொதுவாக வீடுகளில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று கடுகு. கடுகு, எண்ணெயோடு சேர்ந்து தரும் மணமும் சுவையுமே நமது சமையலை நிறைவான ஒன்றாக மாற்றுகிறது. சிலருக்கு கடுகு தாளிக்கும் வாசனையே பசியை தூண்டிவிடும் . சிறுவயதில் எங்கள் வீட்டில் பெரும்பாலும் காலை உணவு பழைய சோறாகத் தான் இருக்கும். எண்ணெய் கடுகு கருவேப்பிலை மிளகாயோடு சேர்த்து தாளிக்கப்படும் பழைய சோறுக்கு இணை எந்த இட்லி பொங்கலுக்கும் வராது. கடுகின் மகத்துவம் அவ்வளவு மகத்துவமிக்கது. உடலின் உள்ளுறுப்புக்களின் நலனான வாதம் பித்தம் ஜீரணம் போன்றவற்றிற்கும் வெளிப்புற உறுப்புக்களின் நலனான மூட்டு வலி கை கால் இடுப்பு வலி போன்றவற்றிற்கும் மிகவும் பயன்படுகிறது. கடுகு எண்ணெய், கடுகுத் தூள், கடுகு கீரை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை. தெரிந்தோ தெரியாமலோ நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகு சார்ந்த பொருட்களில் அத்தனை நன்மைகள் இருக்கின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடுகின் பயன் தெரியுமோ இல்லையோ கடுகைப் பற்றி நன்கு தெரியும்.

இயேசு தனது போதனைகளில் பெரும்பாலும் உவமைகளையும் கதைகளையும் பயன்படுத்துவது அதிகம். அவை அதிகமாக அந்த பகுதி மக்களுக்கு பழக்கமான, பயன்பாட்டோடு தொடர்புடைய ஒரு பொருளாகவோ கதையாகவோ தான் இருக்கும். வலை, முத்து, விதைப்பவர், காணாமல் போன ஆடு, விளக்கு, தாலந்து, ஊதாரி மைந்தன், என அனைத்து உவமைகளுமே மக்களோடு தொடர்புடைய பொருட்கள் ஆட்கள் சம்பந்தப்பட்டவை. அவ்வகையில் கடுகும் மக்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு பொருளாகத் தான் இருந்திருக்கும். இன்றைய நற்செய்தியில் இயேசு இறையாட்சியை கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். சிறிய கடுகு விதை மண்ணில் விதைக்கப்பட்டு, பின்னர் பெரிய மரமாக வளர்வது போல் இறையாட்சி என்னும் நம்பிக்கை நம்முள் கடுகு விதை போல விதைக்கப்பட்டு கடுகு மரமாக வளர வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.

இறையாட்சி நமக்குள் இருக்கிறது. நம் உள்ளத்தில் இருக்கிறது. அது விதையாக இருக்கிறதா? இல்லை விழுது தரும் மரமாக இருக்கிறதா என்று சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. கடுகு விதை மிகவும் சிறியது. மரமோ மிகப் பெரியது.

விதை சிறிய உருண்டை வடிவம். மரமோ சொல் வடிவத்தால் விவரிக்க முடியாத அளவு பெரியது.

விதை பறவைகளுக்கு உணவாக அமைகிறது. மரம் பறவைகள் வந்து உணவு உண்ணும் இடமாக (உண்ணும் விடுதி) மாறுகிறது.

விதை பறவையின் நிழலுக்கு அடியில் இளைப்பாறுகிறது. மரம் பல பறவைகள் வந்து தங்கி இளைப்பாறும் இடமாக மாறுகிறது.

விதை பறவைகளால் எடுத்துச் செல்லப்பட்டு உணவாகிறது. மரம் பல பறவைகளை தன்னிடம் வரவழைக்கும் இடமாக மாறுகிறது.

இறையாட்சி என்னும் கடவுளின் அரசு நம்பிக்கை, நம்முள்ளும் துளிர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் விதையை வளர வைத்து , மரமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். பலர் விதையாகவே வாழ்ந்து, பறவைகளுக்கு அந்த நேரத்துக்கு மட்டும் உணவாகின்றோம். சிலர் நம்முடைய சொல் செயல் வாழ்வு முறை மூலமாக பலர் வாழ்க்கைக்கு மருந்தாகிறோம். சிலர் நம்முடைய பண்பு நலன் உறவு முறை மூலமாக பலருடைய வாழ்வுக்கு மணமும் சுவையும் சேர்க்கிறோம் . விதையாக இருந்தால் சிலருக்கு மட்டுமே பயன் தர முடியும். மரமாக மாறினால் தான் பலருக்கும் பயன் தருவதோடு பல பயன் தரும் மரங்களையும் உருவாக்க முடியும். விதைகளா? மரங்களா? நாம் எதுவாக இருக்கிறோம். எதுவாக மாறப்போகிறோம் என்பதை சிந்தித்து வாழ்வோம். வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும் நமக்கு சாதகமாக நடப்பதில்லை. நாம் தாம் அதை தீர்மானித்து நமக்கு ஏற்றவையாக மாற்றிக் கொள்ள வேண்டும். விதையோ மரமோ வீரியமிக்க ஒன்றாக இருக்கின்றோமா என நம்மை நாமே சுய ஆய்வு செய்து கொள்வோம். இது தான் வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணிவிடாது இதைவிட மேலான ஒன்று உண்டு என்று முன்னோக்கி செல்வோம். இதுவல்ல வாழ்க்கை, இதற்கு மேலான ஒரு வாழ்வு உண்டு என்று எண்ணி தன் வாழ்வை மாற்றிய ஒரு மனிதனின் கதையைக் காண்போம்

ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!
ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. (இப்படி ஒரு சட்டம் நம்மூரில் இருந்திருக்க வேண்டும்). இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.

இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் கிடைத்தது. நன்கு பணி செய்தான் . மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான். அவன் ஐந்தாண்டு பணி முடிந்தது. அவன் செயலைப் பார்த்த மக்களுக்கு மன்னனை அனுப்ப மனம் வரவில்லை இருப்பினும் சட்டத்தை மாற்ற முடியாதல்லவா? அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். முகத்தில் எந்த் கவலையும் இல்லை. மிகவும் சந்தோஷமாக இருந்தான். மக்கள் வாயைப் பிளந்தனர் "இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறார்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!"
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், "மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!"

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.
அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவரோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறார். படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் "மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?"
"தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!"
"அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?"
"தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!"
"பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?"
"அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!" என்றான் மன்னன். காட்டை அழித்து நாட்டாக்கியது ஒரு தவறு. ஆட்சியில் கொள்ளை அடித்து புது நாட்டை உருவாக்கியது ஒருதவறு என்றாலும் அந்த மன்னன் இன்னும் வாழ வழி இருக்கிறது என்று எண்ணியது ஒரு புதுமை. இதற்கு முன் இருந்த அனைவரும் இறந்து மடிய இவன் வேறு மாதிரியாக சிந்தித்திருக்கிறான்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை? பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!

சிந்தனைத் திறனும் திட்டமிட்டு செயல் புரிதலும் ஒருவரிடம் அமைந்தால் அவரால் எதையும்சாதிக்கமுடியும் நமது இயல்க்கு எது என தீர்மானிப்போம் விதையாக வாழ்ந்து மடிவதா? இல்லை விழுது தரும் மரமாக வாழ்ந்து பயன் தருவதா?
!விவசாயமும் விவசாயிகளும் அழிந்து மாண்டு கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்த இறையாட்சி பற்றிய கடுகு உவமை நம்மை அவர்களுக்காக செபிக்க அழைக்கிறது. விழுதாக மாறி நம்மை பாதுகாக்க வேண்டிய விவசாயம் இன்று நம் கண்களுக்கு களைச்செடி போல் காட்சியளித்து நம் கண் முன்னே இருந்து அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற செபிப்போம். இயற்கை முறையில் உண்டு உடல் நலத்தோடும் மகிழ்வோடும் வாழ்ந்து வந்த நாம் செயற்கை உணவுகள் நல்லது என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டதனால் வந்த விளைவு இயற்கையை தீமை என கருதியது. இன்று ஏராளமான பாதிப்புக்கு உள்ளான பின்பு இயற்கையை நாடுகிறோம் . அது நம்மை விட்டு வெகு தொலைவில் போய் கொண்டிருக்கிறது. இயற்கையையுமது சார்ந்த பொருட்களையும் இயேசு உவமையாக பயன்படுத்தியது அதன் மேன்மையை நாம் நன்கு உணர்ந்தவர்கள் என்பதனாலும், இன்னும் அதிகம் உணர வேண்டும் என்பதனாலும் தான். கடுகு உவமையை இறையாட்சிக்கு பயன்படுத்திய இயேசு நாம் அது போல் பயன் தரக்கூடிய வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவே.

கதையில் பார்த்த மன்னன் போல நமது இலக்கு எதுவென நிர்ணயிப்போம் . விதையாக வடிவம் பெற்ற நாம் மரமாக மாற முயற்சிப்போம். பல பறவைகள் இளைப்பாறும், நிழல் பெறும் மரமாக நமது வாழ்வு மாற இறையருள் வேண்டுவோம் . இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஆமென்.

மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
கடுகு விதை .. ..பெருங்கிளைகள் விடும்."

கடுகு விதை முளைத்து வளர்ந்து பெருங்கிளைகள் விடுமாம். வானத்துப் பறவைகள்; அதன் கிளைகளில் தங்குமாம். அறிவியல் கடுமையாக உதைக்குதல்லவா! நண்பர்களே, இது அறிவியல் ஆராய்ச்சி புத்தகம் அல்ல. இறைவனைப்பற்றியும் மனித மீட்பும்பற்றிய வெளிப்படுத்துதல் அடங்கிய புத்தகம்.

கடுகு விதையிலிருந்து பெரிய மரம் தோன்றுகிறது, அதற்கு பெரிய பல கிளைகள் இருக்கிறது, இவை சொல்லும் செய்தி என்னவென்றால் - 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை' கடுகிலிருந்து மரமும் வளரும். கடவுளும் மனிதனாவார். கன்னியின் வயிற்றில் மனினாகவும் பிறப்பார். நாம் செயல்படுகிறோம். நாம் வல்லமையுள்ள இறைவன்.

இறையாட்சியை கடுகு விதையிலிருந்து கிளைகள் உள்ள மரத்தை உண்டாக்கும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடுகிறார். இறை அரசு அத்தனை வியப்புமிக்கது. இறை ஆற்றல் அதிர்ச்சிiயுயம் ஆச்சரியத்தையும் தரும் வல்லமைகொண்டது. எத்தனை கிளைகள், வேர்கள், விழுதுகள் வெட்டப்பட்டும், இறையரசின் செயல்பாடுகளில் தயக்கமோ தடுமாற்றமோ இருப்பதில்லை. ஏனென்றால் செயல்படுவது இறைவன். அவரது ஆற்றலின் வெளிப்பாடுகள் அதிசயமானவை.

இறையரசின் செயல்பாடு கடவுளின் வல்லமைக்குச் சான்று. இறைவன் ஆற்றலோடு திருச்சபையில் செயலாற்றுகிறார் என்பதற்குச் சொல்லப்பட்டதே இவ்வுவமை. உம் திருச்சபையை இறைவா நீர் வழிநடத்தும் விதம் ஆச்சரியமானதே. இதை ஏற்றுக்கொள்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

வலிமையற்ற வலிமை, உருவற்ற உரு - இறைவனால், என்னால்!

எசேக்கியேல் 17:22-24
2 கொரிந்தியர் 5:6-10
 மாற்கு 4:26-34

கடந்த சில நாள்களுக்கு முன்பாக என் நண்பர் ஒருவருக்கு பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன். பிறந்து 9 நாள்கள் ஆகியிருந்த அந்த ஆண் குழந்தையை நாங்கள் போவதற்குச் சற்று நேரத்திற்கு முன் குளிப்பாட்டி, சாம்பிராணி புகை போட்டு, பிங் கலரில் னாட்-பிஹைன்ட் போட்டு, கைக்கு கருப்பு வளையல், வசம்புக் கயிறு, சின்ன டயப்பர் அணிவித்து 'ஐ லவ் யு சோ மச்' என்று சின்ன சின்னதாய் பிரின்ட் போட்ட மஞ்சள் கலர் துண்டில் கிடத்தியிருந்தார்கள். என் உடன் நண்பர் அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அப்படியே வாரி எடுத்துக்கொண்டார். 'கழுத்து, கழுத்து' என்ற மற்றவர்கள் கத்தினார்கள். ஆனால், வெகு இலகுவாக பிறந்த குழந்தையின் கழுத்தை அசையாமல் சேர்த்துப் பிடித்துக்கொண்டார் அவர். கையில் எடுத்தவர் குழந்தையை இரசக்க ஆரம்பித்தார். 'சின்ன உதடு, சின்ன விரல், சின்ன நகம், சின்ன மூக்கு' என வர்ணனை நீண்டுகொண்டே வந்தது. 'இறைவனின் படைப்பே அற்புதம். நமக்குத் தேவையான எல்லாவற்றையும் எப்படி குட்டி குட்டியாக வைத்திருக்கின்றார்' என ஆச்சர்யப்பட்டார் அவர். நாம் பிறந்தபோது நமக்கு இல்லாமல் பாதியில் வருவது பல் மட்டும்தான் என நினைக்கிறேன். பாதியில் வருவதால் தான் என்னவோ அது பாதியிலேயே போய்விடுகிறது.

'மனிதன் மனிதனாகப் பிறக்கிறானா?' அல்லது 'அவன் மனிதனாக மாறுகிறானா?' என்பது சமூகவியலில் கேட்கப்படும் கேள்வி. அதாவது, ஒரு மனிதனின் சூழல்தான் அவனை உருவாக்குகிறது என்பது சமூகவியலின் வாதம். இயல்பாக விட்டுவிட்டால் மனிதர்கள் மனிதர்களாக உருவாவதில்லை என அவர்கள் சொல்வதுண்டு.

வலுவற்ற ஒரு குழந்தை வலுவான ஓர் ஆணாக, பெண்ணாக வளர்ச்சி அடைய எது காரணம்? பெற்றோர், சுற்றத்தார், பின்புலம், பணம், உணவு போன்றவை காரணமாக இருந்தாலும் மனிதர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஆக, வலுவற்றவை வல்லமை பெறுவதற்கு வெளிப்புற ஆற்றல் கொஞ்சம் தேவைப்பட்டாலும், அவை தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்தால் அவை வல்லமை பெற முடியும்.

இன்று நாம் பல நேரங்களில் - நம் உடல் நோய்வாய்ப்படும்போது, நம் இல்லத்தில் வசதி குறைவுபடும்போது, நம் உறவுநிலைகள் நம்மைவிட்டுப் பிரியும்போது, நமக்கப் பிடித்த ஒருவர் இறக்கும்போது, நம் வீடு அல்லது தொழில் ஆகியவற்றை இழக்க நேரும்போது, நாம் எதிர்பாராத விபத்தை சந்திக்கும்போது - நம் வலுவற்ற நிலைகளை உணரலாம். இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு வலிமையையும், நம் உருவற்ற நேரங்களில் நமக்கு உருவையும் தருவது எது என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

நேரிடையாகப் பார்த்தால் இன்றைய முதல் வாசகம் (காண். எசே 17:22-24) இஸ்ரயேலின் வளர்ச்சி பற்றியும், இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:6-10) மனித உடலின் உயிர்ப்பு பற்றியும். மூன்றாம் வாசகம் (காண். மாற் 4:26-34) இறையாட்சி பற்றியும் பேசுகிறது.

ஆனால் இந்த மூன்றின் - இஸ்ரயேல், உடல், இறையாட்சி - பின்னணியில் இருப்பவை எது? அல்லது இந்த மூன்றிற்கும் பொதுவாக இருக்கும் காரணி எது? வலுவின்மை. எப்படி?

பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் தன் மண்ணை இழந்து, தன் ஆலயத்தை இழந்து, தன் திருச்சட்டத்தை இழந்து, தன் கடவுளை இழந்து அநாதையாக வலுவற்று நிற்கிறது.

நாம் இந்த உலகத்தில் குடியிருக்கும் உடல் நோய்வாய்ப்பாட்டு, குறைவுபட்டு, இப்பவோ பிறகோ என்று நம்மைச் சுமந்து சோர்வுற்று வலுவற்று நிற்கிறது.

இயேசு கொண்டு வந்த இறையாட்சி அவரின் இறப்புக்குப் பின் உயிர் பெறுமா? இல்லையா? என்று தயங்கி நிற்கிறது.

இந்த மூன்று நிலைகளும் மாறிப்போகும்: இஸ்ரயேல் வளர்ச்சி பெறும். உயிர் குடிபெயரும். இறையாட்சி வேரூன்றிப் பரவும்.

இப்படியான நம்பிக்கையை இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் உருவகங்கள் நமக்குச் சொல்கின்றன.

உருவகம் 1: நுனிக்கிளை

'தலைவராகிய ஆண்டவர் கூறுவது: உயர்ந்து கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன்' எனத் தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம். கேதுரு மரம் என்பது ஒரு ஊசியிலைத் தாவரம். நம்ம ஊர் நெட்லிங்கம், யூகலிப்டஸ், சவுக்கு மரம் போல. இவைகள் புதிதாக வளர்க்க வேண்டுமென்றால் இதன் தண்டுப்பகுதியை வெட்டி சாணம் பூசி சாக்கில் சுற்றி வைக்க வேண்டும். வெறும் நுனிக்கிளையை வைத்தால் இவை வளர்வதில்லை. ஆனால் ஆண்டவரின் செயல் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நுனிக்கிளையை வைக்கின்றார்.

நுனிக்கிளை என்பதன் பொருள் மூன்று:

ஒன்று, நுனிக்கிளை வலுவற்றது. நாம் குளிக்கப் போகும் போது, அல்லது நடக்கும்போது வேப்பமரம் கைக்கு எட்டும் தூரத்தில் கிளைபரப்பி இருந்தால் அதைச் சற்றே வளைத்து நுனிக்கிளையை நாம் உடைத்து பல் துலக்கவோ, அதன் கொழுந்தைச் சாப்பிடவோ செய்கின்றோம். இப்படியாக எந்தவொரு ஆயுதமும் இன்றி நாம் வெறும் விரல்களால் ஒடிக்கும் அளவிற்கு வலுக்குறைந்து இருப்பது நுனிக்கிளை.

இரண்டு, நுனிக்கிளை தேவையற்றது. நம் வீடுகளின் ஜன்னல்களை ஏதாவது ஒரு மரம் உரசினால் அந்த மரத்தின் நுனிக்கிளையை நாம் தறித்துவிடுகிறோம். நுனிக்கிளையை இழப்பதனால் மரம் ஒன்றும் அழிந்து விடுவதில்லை. ஆக, தேவையற்றது என நாம் ஒதுக்குவது நுனிக்கிளையைத்தான்.

மூன்று, நுனிக்கிளைகள் யாரின் பார்வைiயும் இழுப்பதில்லை. நம் கண்முன் நிற்கும் மரத்தைப் பார்த்து, 'எவ்ளோ பெரிய மரம்!' என வியக்கும் நாம், ஒருபோதும் அதன் நுனிக்கிளையைப் பார்த்து, 'எவ்ளோ அழகான நுனிக்கிளை!' என்று நாம் வியப்பதில்லை. நுனிக்கிளைகள் ஒருபோதும் நம் பார்வையை ஈர்ப்பதில்லை.

இப்படித்தான் வலுவற்றதாக, தேவையற்றதாக, யாரின் பார்வையையும் ஈர்க்காததாக இருக்கிறது இஸ்ரயேல். ஆனால் அது இறைவனின் கை பட்டவுடன் எப்படி மாறிப்போகிறது? 'கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகை பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாக்கிக்கொள்ளும்' என்கிறார் எசேக்கியேல் இறைவாக்கினர். ஆக, தலைவராகிய ஆண்டவரின் கரம் பட்டவுடன் எந்தவித வெளிப்புற சூழலின் உதவியும் இல்லாமல் மரமானது வலுப்பெறுகிறது. தேவையுள்ளதாகிறது. பறவைகளின் கவனத்தை ஈர்க்கிறது.

இறுதியில், 'நானே செய்து காட்டுவேன்' என்று தன் செயலின் ஆற்றலை உலகறியச் செய்கின்றார் இறைவன்.

உருவகம் 2: குடி பெயர்தல்

வாடகை வீட்டில் இருப்பவர்களின் வலி தெரியுமா? அவர்கள் அந்த வீட்டிற்கு எவ்வளவுதான் வாடகை கொடுத்தாலும், எவ்வளவு உரிமையோடு பயன்படுத்தினாலும், அதை தங்களின் முகவரியாகக் கொண்டாலும் அந்த வீட்டின் மேல் அவர்களுக்கு உரிமை இருப்பதில்லை. அவர்கள் அந்த வீட்டைவிட்டு ஒருநாள் வெளியேறியே ஆக வேண்டும்.

நம் உடலை இப்படிப்பட்ட வாடகை வீட்டிற்கு உருவகம் செய்கின்றார் பவுல். நம் உயிர் வாடகைக்கு இருக்கும் வீடுதான் இந்த உடல். இந்த உடலின் நிலையாமை நாம் வளரும்போதும், நோயுறும்போதும், முதுமை அடையும்போதும், இறக்கும்போதும் நமக்குத் தெரிகிறது. காண்கின்ற உடலாக இருப்பதால் இது நிலையற்றதாக இருக்கிறது. நம்பிக்கை உடல் அல்லது காணாத உடல் நிலையானது. ஆக, நாம் இறக்கும்போது நம் உயிர் காண்கின்ற இந்த உடலிலிருந்து காணாத அந்த உடலுக்கு, நிலையற்ற இந்த உடலிலிருந்து நிலையான அந்த உடலுக்கு குடிபெயர்கிறது. ஆக, வாடகை வீட்டிலிருந்து நாம் சொந்தவீட்டிற்குப் போகின்றோம். வலுவற்ற நிலையிலிருந்து வலுவான நிலைக்குப் போகின்றோம். மனிதத்தில் இருந்து இறைமைக்குச் செல்கின்றோம்.

ஆக, இங்கேயும் இறைவனின் கரம்தான் செயலாற்றுகிறது. உயிரை இந்த உடலில் வாடகைக்கு வைத்த இறைவன் அதை ஒரு நேரத்தில் எடுத்து வேறு ஒரு உடலில் வைத்துவிடுகின்றார். நிலையற்ற ஒன்றை நிலையானதாக்குகின்றார்.

இவ்வாறாக, இங்கே செயலாற்றுபவர் இறைவன்.

உருவகம் 3: தானாக வளரும் விதை, கடுகு விதை

இரண்டு உருவகங்களாக இவை தெரிந்தாலும் 'தானாக வளரும் கடுகு விதை' என இதைச் சுருக்கிவிடலாம். கடுகை விதைத்த விதைப்பவர் அதை அப்படியே மறந்துவிடுகின்றார். அது சிறியதாக இருந்தாலும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது வளர்கிறது - தளிர், கதிர், தானியம் என விரிகிறது. 'பயிர் விளைந்ததும் அரிவாளோடு புறப்படுகிறார் விதைப்பவர்.'

இங்கே விதைப்பவர் விதைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. விதை தான் பெற்றிருக்கின்ற ஆற்றலால் அப்படியே வளர்கிறது. ஆற்றல் உள்ள விதையைக் கண்டுபிடித்து விதைத்தவர் அதன் உரிமையாளர். ஆக, உருவம் சிறியதாக இருந்தாலும், அது வித்திடப்பட்டதை உரிமையாளரே மறந்து போனாலும், அல்லது அதன் இருப்பை 'சிறிது' என்று மற்றவர்கள் ஒதுக்கிவிட்டாலும் அது வளர்கிறது. தான் பெற்றிருக்கின்ற தன் ஆற்றலின் முழு வளர்ச்சியை அது உணர்ந்துகொள்கிறது.

இவ்வாறாக, கடந்த உருவகங்களில் இறைவனின் அருள்கரமும், இங்கே வலிமையற்றது தான் இயல்பாகவே பெற்றிருக்கின்ற உள்ளாற்றலும் செடியின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன.

இவ்வாறாக, வலிமையற்றது வலிமை பெற இரண்டு காரணிகள் அவசியம்: (அ) இறைவன், (ஆ) விதை.

இந்த விதையை நான் என் வாழ்வின் வலுவின்மைக்கு ஒப்பிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். என் வாழ்வை நுனிக்கிளையாக ஊன்றி வைத்தவரும், இந்த உடல் என்னும் வாடகை வீட்டில் என்னைக் குடிவைத்தவரும் இறைவன். அதே நேரத்தில் நான் உருவில் சிறியதாக இருந்தாலும், என் உரு மற்றவர்களின் பார்வையில் சிறியதாக இருந்தாலும் வளர்ந்து கிளை பரப்பி, அடுத்தவரை என்னிடம் ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் என்னகத்தே உண்டு.

இவ்வாறாக, வலிமையற்றது வலுப்பெறுதலும், உருவற்றது உருப்பெறுதலும் இறைவன் கையிலும், என் கையிலும் உள்ளது.

இதன் உள்பொருள் அல்லது வாழ்வியல் சவால்கள் மூன்று:

அ. நான் இறைவனின் கையில் என்னை சரணாகதி ஆக்க வேண்டும். அவர் என்னை எங்கே நட விரும்புகிறாரோ அங்கே அவர் என்னை நட என் கைகளை விரித்துக்கொடுக்க வேண்டும்.

ஆ. என் பின்புலம், என் சூழல், என் நட்பு வட்டம், என் அழைப்பு எனக்கு சில மேலோட்டமான அடையாளங்களைத் தந்தாலும் அவற்றையும் தாண்டி என்னை உந்தித் தள்ளுவது என்னுள் இருக்கும் ஆற்றலே. இந்த ஆற்றலை நான் அடையாளம் கண்டு அதை முழுமையாகச் செயல்படுத்துதல் அவசியம்.

இ. வளர்ச்சி என்றால் வலியும் அங்கே சேர்ந்தே இருக்கும். விதை தன் சொகுசான கூட்டை உடைக்க வேண்டும். வேர் மண்ணைக் கீறி உள்ளே செல்ல வேண்டும். வாடகைக்கு இருந்து விட்டு மாறிச் செல்லும்போது நிறைய சுமக்க வேண்டும். உடைதல், கீறுதல், சுமத்தல் அனைத்தும் வலி தருபவை. ஆனால், வலி மறைந்துவிடும். அந்த வலியினால் வந்த வளர்ச்சி நிலைத்து நிற்கும்.

வலுவற்ற, உருவற்ற என்னை, உங்களை அவர் கைகளில் சரணாகதி ஆக்குவோம். அவரின் கை பட்டவுடன் நம் ஆற்றல் நம்மை அறியாமலேயே நம்மிலிருந்து வெளிப்படும்.

அவரின் கரமும், என் ஆற்றலும் இணைந்தால் வலுவற்றவை வலிமை பெறும், உருவற்றவை உருவம் பெறும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Teaching Faculty Saint Paul's Seminary Tiruchirappalli - 620 001

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!