Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            08   ஜூன்  2018  
                                                           இயேசுவின் திருஇதயம் பெருவிழா
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் உள்ளம் உன் பக்கம் திரும்பியுள்ளது.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1,3-4,8c-9

ஆண்டவர் கூறியது: இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்புகூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எப்ராயிமுக்கு நடை பயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவில் இருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - எசா 12: 2-3. 4b cd. 5-6 (பல்லவி: 3)
=================================================================================
பல்லவி: மீட்பருளும் ஊற்றினின்று அகமகிழ்வோடு முகந்து கொள்வீர்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி


இரண்டாம் வாசகம்

அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-12, 14-19

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிகாலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான் வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிகாலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார்.

கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது. இதன் காரணமாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக!

அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறை மக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 29ab

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

அல்லது

1 யோவா 4: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 31-37

அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.

ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.

பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்துபோயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்பவேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார்.

"எந்த எலும்பும் முறிபடாது" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் "தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார்கள்" என்றும் மறைநூல் கூறுகிறது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஓர் ஊரில் பேச்சாளர் ஒருவர் இருந்தார். பேச்சாளர் என்று மக்கள் அவரை அழைக்கிறார்களோ இல்லையோ, அவர் தன்னை பேச்சாளர் என்று அழைத்துகொள்வார். அப்படிப்பட்ட பேச்சாளர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார். வரவேண்டிய பேச்சாளர் கடைசி நேரத்தில் வரமுடியாது போனதால் அவர் அழைக்கப்பட்டிருந்தாரே ஒழிய, யாரும் அவரை விரும்பி அழைக்கவில்லை. ஆனால் அவரோ மக்கள் தன்னை பெரிய பேச்சாளர் என அங்கிகரித்துவிட்டார்கள் என்ற கர்வத்தில் மேடையில் வீற்றிருந்தார்.

எல்லாரும் பேசி முடித்ததும் அவர் பேசவேண்டிய நேரம் வந்தது. அப்போது அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம், ஐயா! நான் சுமார் எவ்வளவு நேரம் பேச வேண்டும்? என்று கேட்டார். அவரோ சிறிதும் தாமதியாமல், நீங்கள் எவ்வளவு நேரம் பேசினாலும் சுமாராகத்தான் பேசுவீர்கள், அதனால் சட்டுபுட்டு என்று பேசி முடியுங்கள் என்றார். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத அந்த பேச்சாளருக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது.

ஊருக்குள் பலர் இப்படித்தான் தங்களைப் பேச்சாளர்கள் என்று அழைத்துக்கொண்டு திரிகிறார்கள். உண்மையில் அவர்கள் நல்ல பேச்சாளர்களாக? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

யார் நல்ல பேச்சாளரோ/ போதகரோ இல்லையோ ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு நல்ல, தலைசிறந்த பேச்சாளர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில் வரக்கூடிய, பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற வார்த்தைகள் அதை உறுதி செய்வதாக இருக்கின்றது. ஆம், இயேசு உண்மையிலே ஒரு தலைசிறந்த பேச்சாளர்/ போதகர். அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் என்று நற்செய்தியில் வரக்கூடிய பல பகுதிகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

இப்போது நாம் இயேசு எப்படி நல்ல பேச்சாளராக விளங்கினார், எவையெல்லாம் ஒரு ஒரு நல்ல பேச்சாளரை/ போதகரை உருவாக்குகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இயேசு ஒரு நல்ல போதகராக விளங்குவதற்கு முதன்மையான காரணம் அவர் மக்களுக்குப் புரிகின்ற வகையில், அவர்கள் அன்றாடம் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு போதித்ததாகும். இன்றைக்கு ஒருசில பேச்சாளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் யாருக்கும் புரியாத வகையில், புரியாத மொழிகளில் பேசுவார்கள். இப்படிப்பட்ட போதகர்களுடைய நினைப்பு எல்லாம், யாருக்கும் புரியாத வகையில் பேசுவதுதான் நல்ல போதனைக்கான முதன்மையான தகுதி என்று. அப்படியில்லை ஒரு நல்ல போதகர் எல்லாரும் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் போதிக்கவேண்டும். அந்த விதத்தில் இயேசு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் போதித்து அவர்களுடைய மனதில் இடம் பிடித்தார்.

இயேசு ஒரு நல்ல போதகராக விளங்குவதற்கான இரண்டாவது காரணம், அவருடைய பேச்சில் உண்மையான அன்பு இருந்தது. ஆம், ஏதோ கடமைக்காக அவர் போதிக்கவில்லை. மாறாக ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருந்த மக்கள்மீது பரிவுகொண்டு, உண்மையான அன்போடு போதித்தார். அதனால்தான் அவருடைய போதனையைக் கேட்பதற்கு பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்தார்கள். எனவே, ஒரு பேச்சாளர்/ போதகர் நல்ல போதகராக உருவாக வேண்டும் என்றால், அவரிடத்தில் மக்கள்மீதான அன்பும் கரிசனையும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் ஒரு நல்ல, தலைசிறந்த போதகராக உருவாக முடியும்.

இயேசு ஒரு நல்ல போதகராக விளங்குவதற்கான மூன்றாவது, அதே நேரத்தில் மிக முக்கியமான காரணம் அவரிடத்தில் இருந்த அதிகாரம் ஆகும். அதிகாரம் என்று சொல்கின்றபோது மக்களை அடக்கி ஆள்வதற்கு பயன்படுத்தபடும் அதிகாரம் கிடையாது. மாறாக, தந்தைக் கடவுளிடமிருந்து அவர் பெற்றுக்கொண்ட அதிகாரம். அந்த அதிகாரம் அவர் பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்களைப் போலன்றி வல்லமையோடு போதிப்பதற்கு உறுதுணையாக இருந்தது.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் போதிக்கின்றபோது அவர்கள் அப்படிச் சொன்னார்கள், இங்கே இப்படிச் சொல்லப்பட்டிருகின்றது என்றுதான் போதித்தார்கள். ஆனால் இயேசு அப்படியில்லை. அவர் போதிக்கின்றபோது நான் உங்களுக்குச் சொல்கின்றேன் என்று போதித்தார். அதனால் அவருடைய போதனையில் ஒரு வல்லமை, அதிகாரம் இருந்தது. எனவே, ஒருவர் நல்ல போதகராக விளங்குவதற்கு, அவருடைய திறமை மட்டும்போதாது, இறைவனின் அணுக்கிரகமும் வேண்டும். இயேசுவிடத்தில் எல்லாம் இருந்தது.

ஆகவே, இப்படிப்பட்ட நல்ல போதகருடைய போதனையின்படி நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
திருஇருதய பெருவிழா

இயேசுவின் திருஇருதய பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருஇருதயப் பெருவிழா அருள்பணியாளர்களின் அர்ப்பண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது.

'ஆனால் படைவீரர் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன.' என நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.

விவிலியத்தில் இரண்டு பேருடைய விலா திறக்கப்படுகிறது.

படைப்பின் தலைமகனாகிய முதல் ஆதாம்.

படைப்பின் பிதாமகனாகிய இரண்டாம் ஆதாம் இயேசு.

முதல் ஆதாம் ஆழ்ந்து தூங்குகின்றார்.

இரண்டாம் ஆதாம் இறந்து தொங்குகின்றார்.

முதல் ஆதாமின் விலாவைத் திறப்பவர் ஆண்டவராகிய கடவுள்.

இரண்டாம் ஆதாமின் விலாவைத் திறப்பவர் படைவீரர்.

முதல் ஆதாமின் விலாவிலிருந்து எலும்பு எடுக்கப்பட்டது.

இரண்டாம் ஆதாமின் விலாவிலிருந்து இரத்தமும், தண்ணீரும் எடுக்கப்படுகின்றன.

எலும்பு என்பது நம் உடலின் திடப்பொருள்.

தண்ணீர் என்பது நம் உடலின் திரவப்பொருள்.

இரத்தம் என்பது திடப்பொருளின் மேல் பரவிக்கிடக்கும் நாளங்களில் ஓடும் திரவப்பொருள்.

திடமும், திரவமும் கலந்தால்தான் மனிதம் பிறக்க முடியும்.

இதையேதான் பட்டினத்தாரும்,

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி

இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி

உணர்வு கலங்கி ஒழுகிய விந்து

ஊறு சுரோணித மீது கலந்து

என எழுதுகின்றார்.

அதாவது, இங்கே ஆணிடம் ஊறும் விந்து மற்றும் பெண்ணிடம் ஊறும் சுரோணிதம் கலந்து குழந்தை உருவாகிறது என்கிறார். இவரின் கூற்றுப்படி விந்து மனித உடலின் திடப்பகுதிக்கும், சுரோணிதம் மனித உடலின் திரவிப்பகுதிக்கும் காரணமாக இருக்கிறது.

படைப்பில் இதுவரை மேலோங்கி இருந்த எலும்பின்மேல் இயேசுவின் இரத்தமும் தண்ணீரும் தெளிக்கப்படுகிறது. இதன் பொருள் என்ன? படைப்பு உயிர் பெறுகிறது.

எசேக்கியேல் 37:1-14ல் நாம் பள்ளத்தாக்கில் நிறைந்து கிடந்த உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

படைப்பு முழுவதும் உலர்ந்து எலும்புகள். படைப்பின்மேல் விழும் இயேசுவின் இரத்தமும் தண்ணீரும் உலர்ந்தவற்றிற்கு ஈரம் தருகிறது.

திருஇருதயப் பெருநாளில் காய்ந்துபோன, உலர்ந்துபோன நம் உடலை, உள்ளத்தை, மனதை இறைவன் தன் இரத்தத்தால், தண்ணீரால் ஈரமாக்க அவரிடம் அவற்றை கொண்டுவருவோம்.

இது முதல் பொருள்.

இரண்டாவதாக, ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்பணியாளர் திராட்சை இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன், திருக்கிண்ணத்தின் இரசத்தோடு ஓரிரு தண்ணீர்த் துளிகளைச் சேர்க்கின்றார். அப்படி அவர் சேர்க்கும்போது சொல்லப்படும் செபம் இதுதான்:

'இந்த தண்ணீர் மற்றும் இரசத்தின் மறைபொருளால்

நாங்கள் கிறிஸ்துவின் இறைத்தன்மையில் பங்குபெறுவோமாக.

அவரே தாழ்வுற்று எங்களின் மனிதத்தன்மையில் பங்கேற்றார்.'

ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் 'இரத்தம்,' 'தண்ணீர்' என்ற இரண்டையும் கலந்து இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். 'இரத்தம்' அல்லது 'இரசம்' இயேசுவின் இறைத்தன்மையையும், 'தண்ணீர்' நம் ஒவ்வொருவரின் மனிதத்தன்மையையும் குறிக்கிறது. கிண்ணத்தில் ஊற்றப்பட்டவுடன் இரண்டும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன.

நம்மிடம் பிரிக்க முடியாதபடி இறை மற்றும் மனித இயல்புகள் இருக்கின்றன. இயேசு தன்னிடமும் இவை இருந்தன என்பதை தன் விலாவைத் திறந்து காட்டிவிட்டார்.

ஆக, நம்மிடம் இருக்கும் இந்த இரண்டு இயல்புகளும் ஒருங்குநிலையில் இயங்க இன்றைய நாளில் செபிக்கலாம்.

மூன்றாவதாக,

இன்று நம் எல்லா இதயங்களையும் அவரிடம் ஒப்புக்கொடுப்போம். இதயம் சார்ந்த நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதயத்தின் இருப்பை நாம் அதன் நோயின்போதுதான் நாம் உணர்கிறோம். ஆனால், நம் இயக்கத்திற்குக் காரணமான இந்த இதயத்தைப் பாதுகாக்க நம் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, நல்ல உணர்வுகள் அவசியம் என்பதை இன்று நாம் நன்றாக உணர்கிறோம். நம் இதயங்களைப் பேணிக்காக்க இன்று உறுதி எடுக்கலாம்.

இயேசுவின் திருஇருதயமே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்!

Fr. Yesu Karunanidhi
Trichy

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!