|
31
ஜூலை
ு 2018 |
|
பொதுக்காலம்
17ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை
முறித்துவிடாதீர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22
ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த
வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்;
இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள்
நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச்
சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ!
பசியால் நலிந்தவர்கள்!
இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத
நாட்டில் அலைகின்றனர். நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா?
சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி
ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக்
காத்திருந்தோம்; பயனேதும் இல்லை! நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்;
பேரச்சமே மிஞ்சியது! ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள்
மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; நாங்கள்
உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். உம் பெயரை முன்னிட்டு எங்களை
உதறித் தள்ளாதீர்; உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்;
நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை
முறித்துவிடாதீர்.
வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா?
வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே,
நீர் அல்லவா அதைச் செய்யக்கூடியவர்; நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்;
ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 79: 8. 9. 11,13 (பல்லவி: 9c)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.
8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம்
எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப் பட்டிருக்கின்றோம்.
பல்லவி
9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு
எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை
விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி
11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத்
தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. 13 அப்பொழுது உம்
மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப்
போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம்,
அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும்
நிலைத்திருப்பர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக
முடிவிலும் நடக்கும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு
வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து,
"வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக்
கூறும்" என்றனர்.
அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: "நல்ல விதைகளை விதைப்பவர்
மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட
மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன்,
அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு
களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக
முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார்.
அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி
கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில்
தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது
நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர்.
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
சிந்தனை
நேர்மையாளர்கள் என்றும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையை தருகின்றது.
அவர் படைத்தவர் நேர்மையாய் நடந்து கொள்வது போல நாமுமு;
நேர்மையாய் நடந்து கொள்ள அழைக்கப்படுக்கின்றோம்.
உலகினரின் எண்ணம் வேறு கடவுளின் எண்ணம் வேறு.
படைத்தவர் என்றுமே வாக்கு மாறாதவர். நேர்மையாளருக்குரிய
கைம்மாறு தந்து அவர்களை தன் பக்கம் ஏற்றுக் கொள்வார்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல்
ஒளி வீசுவர்"
அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களைப் பற்றிச்
சொல்லப்படுகின்ற ஒரு நிகழ்வு.
ஜார்ஜ் வாஷிங்டனின் அப்பா ஆசை ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து
வந்தார். ஒருநாள் வாஷிங்டனுக்கு புதிய கோடாலி ஒன்று கிடைக்க,
அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்தார்.
அவர் வெட்டித் தள்ளியதில் அவருடைய அப்பா வளர்த்த செர்ரி மரமும்
ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு
அதிர்ச்சி.
"மரத்தை யார் வெட்டியது?" என அவர் எல்லாரிடமும் கேட்க, வாஷிங்டனோ,
தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டார். உண்மை தெரிந்து கோபத்தில்
ஏதேனும் செய்து விடுவாரோ என வீட்டிலிருந்த எல்லாரும் நடுங்கிக்
கொண்டிருக்க, வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாக இருந்தார். பின்னர்
மகனை அழைத்து, "நான் கோபக்காரன் என்று தெரிந்தும், நீ உண்மையை
சொன்னாய் பார்த்தியா, அந்த நேர்மை எனக்கு ரொம்பப்
பிடிச்சிருக்கு. மேலும் செர்ரி மரம் வெட்டப்படாம இருந்திருந்தா
எனக்குக் கிடைக்கிற சந்தோஷத்தைவிட, நீ உண்மை பேசியதால் எனக்குக்
கிடைத்திருக்கின்ற சந்தோஷம் மிகப்பெரியது" என்று மகனின்
நேர்மையைப் பாராட்டினார்.
இந்நிகழ்வு வாஷிங்டனின் மனத்தில் ஆழமாகப் பதிந்து போனது. அதன்பிறகு,
தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய விஷயத்துக்கும்
பொய் சொல்லாமல் நேர்மையோடு நடக்கவேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக
இருந்தார். அதுவே அவரை அமெரிக்காவின் முதல் அதிபராக உயர்த்தியது.
அவர் அமெரிக்க அதிபராக தொடர்ந்து இரண்டுமுறை இருந்தார் என்பது
குறிப்பிடத் தக்கது.
ஆம், நேர்மையோடு நடக்கின்ற யாவரும், தங்களுடைய வாழ்வில் உயர்ந்த
இலட்சியங்களை அடைவார் என்பது உண்மை.
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு வயலில் தோன்றிய களைகள்
உவமையைப் பற்றி தன்னுடைய சீடர்களுக்கு விளக்கிச் சொல்கின்றார்.
அப்படிச் சொல்கின்றபோது இறுதியாகச் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான்,
"அப்போது நேர்மையாளர் தன் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல்
ஒளி வீசுவர்" என்பதாகும். இவ்வார்த்தைகளை நாம் இன்றைய சிந்தனைக்கு
எடுத்துக் கொள்வோம்.
இன்றைக்கு நேர்மையாளர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிதான ஒரு
காரியமாகப் போய்விட்டது. இதற்கு முக்கியமான காரணம் ஒருவர்
நேர்மையாளராய் இருப்பதனால் சந்திக்கக்கூடிய சவால்கள்தான்.
ஒருவர் நேர்மையாளராய் வாழ்கின்றபோது அவர் "இந்த
சமூகத்திற்குப்" பிடிக்காதவர்களாய் ஆகிவிடுகின்றார். அதைவிட
சுற்றி இருப்பவர்கள் அவரை, "பிழைக்கத் தெரியாதவன்", "ஊரோடு
ஒத்து வாழத் தெரியாதவன்" என்று கேலி செய்கின்ற அவலநிலைக்கு
உள்ளாகிவிடுகின்றார். இதனாலேயே பலர் எதற்கு நேர்மையாளராய்
வாழவேண்டும் என்று, ஊரோடு ஒத்து வாழத் தொடங்கிவிடுகிறார்கள்.
இதற்கு ஒருசிலர் விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பலர்
இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
இன்னொரு பக்கம் தீயவர்கள், தவறான வழியில் செல்லக்கூடியவர்கள்
வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதுகூட, இந்த சமூகத்தில்
நேர்மையாளராய் வாழ்வதைவிடவும் தீயவராய் வாழ்ந்தால்தான்
பிழைக்கமுடியும் என்ற தவறான கருத்து நிலவுவதற்கும்
நேர்மையாளர்கள் அருகிப் போவதற்கும் காரணமாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு
சொல்லக்கூடிய, "நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்
போல் ஒளி வீசுவர்" என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?
நேர்மையாளர்களை இந்த சமூகம் வேண்டுமானால் புறக்கணிக்கலாம்,
துன்புறுத்தலாம். ஆனால், ஆண்டவருடைய ஆட்சியில் அவர்களுக்கு
என்று சிறப்பிடம் உண்டு என்பதுதான் உண்மை. மத்தேயு நற்செய்தி
5:11,12 ல் இயேசு கூறுவார், "என் பொருட்டு மக்கள் உங்களை
இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை
எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து
பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக்
கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு
முன்பிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்"
என்று. ஆம், இந்த உலகம் நீதியோடும் நேர்மையோடும்
நடக்கின்றவர்களைத் துன்புறுத்தலாம். ஆனால், இறைவனுடைய
ஆட்சியில் அவர்களுக்கு மிகுந்த கைம்மாறு கிடைக்கும்; கதிரவனைப்
போல் ஒளிவீசுவர் என்பது உண்மை.
ஆகவே, இந்த உலகம் நம்மை ஏசுமோ, பேசுமோ என்றெல்லாம் நினைத்துக்
கவலைப் படமால், இறுதிவரைக்கும் நேர்மையோடும் நீதியோடும்
நடப்போம். விண்ணகத்தில் இறைவன் நமக்குத் தருகின்ற ஆசிர்வாதம்
மிகுதியாக இருக்கும் என நம்புவோம். எப்போதும் இறைவழியில்
நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|