|
|
29 ஜூலை 2018 |
|
| பொதுக்காலம்
17ம் வாரம் -
2ம் ஆண்டு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4: 42-44
அந்நாள்களில் பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில்
செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப்
பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம்
கொண்டு வந்தார்.
எலிசா, "மக்களுக்கு உண்ணக் கொடு" என்றார்.
அவருடைய பணியாளன், "இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?"
என்றான்.
அவரோ, "இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில்
"உண்ட
பின்னும் மீதி இருக்கும்" என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றார்.
அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது
வாக்கின்படி மீதியும் இருந்தது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- (திபா 145: 10-11. 15-16. 17-18 (பல்லவி:
16)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும்
நிறைவேற்றுகின்றீர்.
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது
அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப்
பேசுவார்கள். பல்லவி
15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க
வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16 நீர் உமது
கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும்
நிறைவேற்றுகின்றீர். பல்லவி
17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம்
செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும்
யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,
ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; ஆண்டவரும் ஒருவரே;
திருமுழுக்கும் ஒன்றே.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
4: 1-6
சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான்
உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு
ஏற்ப வாழுங்கள்.
முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர்
அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும்
ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள்
ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே.
அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே;
திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே;
அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்;
எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
( லூக் 7: 16 )
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர்
தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
அனைவரும் வயிறார உண்டனர்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச்
சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல்
நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு
மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா
விழா அண்மையில் நிகழவிருந்தது.
இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக்
கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?"
என்று பிலிப்பிடம் கேட்டார்.
தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக்
கேட்டார்.
பிலிப்பு மறு மொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம்
வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார்.
அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,
"இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை
அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை
எப்படிப் போதும்?" என்றார்.
இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும்
புல்தரையாய் இருந்தது.
அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம்.
இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்
தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார்.
அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது.
அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச்
சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார்.
மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய
துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு
வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள்.
அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப்
போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச்
சென்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
மக்களுக்கு உணவளித்த இயேசு!
ஒரு தந்தை தன்னுடைய மகன் பதின்வயதைக் கடந்து இளைஞனாக மாறியதும்,
அவனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, "இந்தப் பணத்தை
வைத்துக்கொண்டு சந்தைக்குச் சென்று தொழில் செய்து வா, இனிமேலும்
நீ என்னையே நம்பியிராமல் உன்னுடைய சொந்தக் காலில் நிற்கப்
பார்" என்று சொல்லி அனுப்பிவைத்தார். அந்த இளைஞனும் தந்தை
கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு சந்தைக்குச் சென்றான்.
அவன் சந்தைக்குச் செல்லும் வழியில் கந்தல் ஆடையோடும் மெலிந்த
தேகத்தோடும் ஒருவன் மரத்தடியில் படுத்துக்கிடந்தான். இளைஞன் அந்த
மனிதனைப் பார்த்தபோது, அவன் சாப்பிட்டே பலநாட்கள் ஆனது போன்று
தெரிந்தது. உடனே அவன் அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்று, தந்தை
அவனுக்கு தொழில் செய்வதற்குக் கொடுத்த பணத்தை எடுத்துக்
கொடுத்து, உணவு வாங்கி வந்து, அதனை அந்த மனிதனுக்குச் சாப்பிடக்
கொடுத்தான். இளைஞன் வாங்கிக்கொடுத்த உணவினைச் சாப்பிட்டதும்,
அந்த மனிதன் உடல் வலிமை பெற்று எழுந்து உட்கார்ந்தான். இளைஞன்
தன்னிடம் இருந்த மீத பணத்தையும் அந்த மனிதனிடமே கொடுத்து, அதனை
அவனுடைய உணவுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு.
வீட்டுக்குத் திரும்பி வந்தான்.
வீட்டு வாசலில் அவனுடைய தந்தை நின்றுகொண்டிருந்தார். தன்னுடைய
மகன் வருவதைப் பார்த்த தந்தை அவனிடம், "மகனே! இன்றைக்குத்
தொழில் எப்படி இருந்தது, தொழிலில் ஏதாவது இலாபம் ஈட்டினாயா?"
என்று கேட்டார். அதற்கு அவன், "இன்றைக்கு நீங்கள் கொடுத்த பணத்தை
வைத்துக்கொண்டு தொழில் எதுவும் செய்யவில்லை, ஆனால் பசியாய் இருந்த
ஏழைக்கு உணவு கொடுத்தேன்" என்றான். இதைக் கேட்ட அவனுடைய தந்தை
அவன்மேல் சினம்கொண்டு, "என்ன, நான் கொடுத்த பணத்தை வைத்து, ஏழைக்கு
உணவு கொடுத்தாயா, ஏழைக்கு உணவு கொடுப்பதனால் என்ன இலாபம், பலன்
கிடைத்து விடப்போகிறது?" என்று கேட்டார். அதற்கு அவன்,
"பசியாய் இருந்த ஏழைக்கு உணவு கொடுத்ததனால் இங்கு வேண்டுமானால்
பலன் கிடைக்காமல் போகலாம், ஆனால், மேலே இறைவன் எனக்குப் பலன்
தருவார்" என்றான். மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தந்தையால் தொடர்ந்து
எதுவும் பேச முடியவில்லை.
குரு நானக்கின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த நிகழ்வு
பசியாய் இருக்கின்ற மனிதர்களுக்கு உணவு கொடுக்கவேண்டும், அப்படி
நாம் உணவு கொடுக்கும்போது, இறைவன் அதற்கு தக்க பலன் தருவார் என்னும்
உண்மையை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. பொதுக்காலத்தின் பதினேழாம்
ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள்
மக்களுக்கு உணவளிக்கும் இறைவன் என்னும் செய்தியைத் தாங்கி வருவதாக
இருக்கின்றன. இறைவன் தன்னுடைய மக்களுக்கு எவ்வாறு உணவளிக்கின்றார்,
அவர்களுடைய தேவையை எப்படி கவனித்துக்கொள்கின்றார் என்று இப்போது
பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து,
மறுகரைக்குச் சென்றபோது, பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து
வருகிறார்கள். அவர்கள் இயேசுவோடு நீண்ட நேரம் இருந்து, அவருடைய
போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த படியால், அவர்கள் பசியாய் இருப்பதை
இயேசு உணர்கின்றார். உடனே இயேசு பிலிப்பிடம், "இவர்கள் உண்பதற்கு
நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று கேட்கின்றார்.
பிலிப்போ, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு
ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்கின்றார்.
இங்கே இயேசுவின் வார்த்தைகளுக்கும் பிலிப்பின் வார்த்தைகளுக்கும்
உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசுவோ மக்களின்
தேவையை உணர்ந்து, அவர்களுடைய பசியை எப்படிப் போக்குவது என்று
சிந்திக்கும்போது, பிலிப்போ அதில் உள்ள சிக்கலை மட்டுமே
பார்க்கின்றார். அதனால்தான் அவர் அப்படிச் சொல்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் கூட கடவுளின் அடியவராகிய எலிசாவிடம்
ஒருவர் இருபது வாற்கோதுமை அப்பங்களையும் ஒரு கோணிப்பை நிறைய
முற்றிய தானியங்களைக் கொண்டு வந்தபோது, எலிசா அவரிடம்,
"மக்களுக்கு உணவு கொடு" என்கிறார், அதற்கு அவர், "இந்த நூறு
பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்று கேட்க, எலிசா
அவரிடம், "இவற்றை இம்மக்களுக்கு உண்ணக்கொடு. ஏனெனில் உண்ட
பின்னும் மீதி இருக்கும்" என்கிறார். அம்மனிதர் அவர்களுக்கு
உணவினைப் பரிமாற, எல்லாரும் உண்ட பின்னும் மீதம் இருக்கின்றது.
ஆகையால், நமக்கு முன்பாக இருக்கும் பொறுப்பினை, சவாலினை
பிலிப்பை போன்றோ, எலிசாவிடம் வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டு வந்த
மனிதரைப் போன்றோ தட்டிக் கழிக்கவும் செய்யலாம். அப்படி இல்லையென்றால்,
நமக்கு முன்பாக இருக்கும் பொறுப்பினை நேர்மறையோடு எடுத்துக்கொண்டு,
அற்புதங்கள் நிகழக் காரணமாக இருக்கலாம்.
ஆண்டவர் இயேசுவும், எலிசாவும் தங்களுக்கு முன்பாக இருந்த
மக்களுக்கு உணவு கொடுக்கவேண்டும் என்னும் பொறுப்பினை நேர்மறையோடு
அணுகி, அற்புதங்கள் நிகழக் காரணமாக இருக்கின்றார்கள். நாம் நமக்கு
முன்பாக இருக்கும் பொறுப்பினை/ சமூகக் கடமையை எப்படி அணுகுகின்றோம்
என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், "நீங்கள்
பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும்
பொறுமையோடும் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து,
தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி
செய்யுங்கள்" என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் நமக்கு அடுத்திருப்பவரை,
குறிப்பாகத் தேவையில் இருப்பவரை அன்போடு தாங்கிக் கொள்ளவேண்டும்.
அப்போதுதான் நாமும் இறைவனின் அன்பு மக்களாக மாறமுடியும்.
இன்றைக்கு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலகாலகட்டத்தில்
ஒருவருக்கு மற்றவர் மீது உண்மையான அன்பில்லை, ஒருவர் மற்றவருடைய
தேவையைக் கவனித்துக்கொள்ளும் இல்லை. இது எல்லா இடங்களிலும்
பொருந்தும் என்று சொல்லமுடியாது. ஒருசில இடங்களில் இயேசுவைப்
போன்று எளியவர் பால் அக்கறை கொண்டு உதவக்கூடிய நல்ல உள்ளங்கள்
இருக்கத்தான் செய்கின்றார்கள். நாம் இயேசுவைப் போன்று எல்லாருக்கும்
உதவவேண்டும் என்பதில்லை, நற்செய்தியில் வருகின்ற ஐந்து அப்பங்களையும்
இரண்டு மீன்களையும் கொண்டுவந்த சிறுவனைப் போன்றாவது நம்மால்
இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும். அப்போது நம் வழியாக இறைவன் எல்லாரையும்
ஆசிர்வதிப்பார்.
எனவே, நமக்கு முன்பாக இருக்கின்ற பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல்,
இயேசுவைப் போன்று எல்லாருக்கும் இரங்குவோம், எளியவருக்கு உணவளிப்போம்
ஒருவர் மற்றவரை அன்போடு தாங்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|