|
05
ஜூலை 2018 |
|
பொதுக்காலம்
13ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 10-17
அந்நாள்களில் பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின்
அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லி அனுப்பினான்: "இஸ்ரயேல்
வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான். அவன் சொல்வதை
எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை.
ஏனெனில், "எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல்
அடிமையாய்க் கொண்டு போகப்படும்' என்று ஆமோஸ் சொல்லுகிறான்."
பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து
போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு
உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும்
இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம். அரசுக்குரிய
இல்லம்" என்று சொன்னான்.
ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்:
"நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும்
இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்.
ஆடுகள் ஓட்டிக்கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, "என்
மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு' என்று அனுப்பினார்.
எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: "இஸ்ரயேலுக்கு எதிராக
இறைவாக்கு உரைக்காதே; ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப் பேசாதே'
என்று நீ சொல்கிறாய்!
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்;
உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்; உன் நிலபுலம் பங்குபோட்டுக்
கொள்ளப்படும், நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்; இஸ்ரயேல்
தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 9b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையும் நீதியுமானவை.
7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
பல்லவி
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
பல்லவி
9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும்
நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை
முற்றிலும் நீதியானவை. பல்லவி
10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை;
தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
02 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத்
தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம்
ஒப்படைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8
அக்காலத்தில் இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை
அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில்
கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர்.
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம்,
"மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், "இவன் கடவுளைப் பழிக்கிறான்"
என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகளை இயேசு
அறிந்து அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன
சிந்திப்பதேன்? "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா, "எழுந்து
நட" என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட
மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள
வேண்டும்" என்றார்.
எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய
கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.
அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.
இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை
மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
நடந்ததை கண்டு மக்கள் கடவுளை போற்றி புகழ்ந்தனர். அறிஞர்கள்,
குருக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
படித்தவர்கள் தங்களது படிப்பின் மமதையில் ஆணவம் கொள்கின்றனர்.
சாதாரண சாமானியர்கள் யதார்த்தத்தை யதார்த்தமாக ஏற்று கொள்ள
முற்படுகின்றனர்.
அறிவு ஆணவம் கொள்ள செய்து, நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தி,
அவநம்பிக்கை கொள்வதோடு கடவுளுக்கு எதிராகவும் செயல்பட செய்கின்றது.
அறிவுக்கும் கடிவாளம் தேவையே. அளவுக்கு மிஞ்சிக் கொள்ளாத அறிவு
தேவை. அது ஆணவம் கொள்ளாதவாறு எச்சரிக்கை உணர்வு மிக அவசியம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன
நியூயார்க் நகரில் மேயராக இருந்தவர் மதிப்பிற்குரிய பியோரெல்லோ
லா கார்டியோ (Fiorello La Guardia) என்பவர்.
ஒருநாள் அவரிடம் ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கில்
ரொட்டித்துண்டை திருடியதற்காக வயதான ஒரு மனிதர், அவர் முன்பாக
நிறுத்தி வைக்கப்பட்டார். வழக்கை விசாரித்துப் பார்த்துவிட்டு
அவர் அந்த வயதான மனிதரிடம் சொன்னார், "ஐயா! நீங்கள் செய்த
திருட்டுக் குற்றத்திற்காக உங்களுக்கு நான் பத்து டொலர் அபராதம்
விதிக்கிறேன்" என்றார்.
இதைக்கேட்ட அந்த வயதான பெரியவர், "பத்து டாலருக்கு நான் எங்கே
போவேன். கையில் பணம் இல்லாததால்தான் குடும்பத்தினரின் பசியைப்
போக்க திருடினேன். இப்போது அதற்கும் அபராதம் விதித்தால் நான்
என்ன செய்வது?" என்று வருந்தி நின்றார்.
பெரியவரின் நிலையை உணர்ந்த மேயர் பியோரெல்லோ லா கார்டியோ,
"இந்த அபராதத் தொகையை எப்படியும் திருப்பிச் செலுத்தவேண்டும்
அல்லவா?" என்று யோசித்துப் பார்த்துவிட்டு, தன்னுடைய சட்டைப்
பைக்குள் கையைவிட்டு, பத்து டாலரை எடுத்து அபராதத் தொகையாகச்
செலுத்தினார். பின்னர் அந்த மனிதரிடம் அவர், "நீ செலுத்த
வேண்டிய அபராதத் தொகையை நானே செலுத்திவிட்டேன். இப்போது உன்மீது
சுமத்தப்பட்ட குற்றம் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, நீ விடுதலை
செய்யப்படுகின்றாய்" என்று சொல்லி, அவரை விடுதலை செய்து அனுப்பினார்.
இவ்வாறு பியோரெல்லோ லா கார்டியோ, பெரியவர் மீது கொண்ட அன்பினால்
அவர் செய்த குற்றம் அனைத்தையும் மன்னித்துவிட்டு, அவரை விடுதலை
செய்து அனுப்பினார்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னிடம் கொண்டுவரப்பட்ட
முடக்குவாதமுற்ற மனிதரை மன்னித்து, அவரை அவருடைய நோய்நொடிகள்
அனைத்திலிருந்தும் விடுதலை செய்து அனுப்பினார். இயேசு அம்மனிதருடைய
பாவங்களை மன்னிக்கிறார் என்பதை அறியும் மறைநூல் அறிஞர்கள்,
"இவன் கடவுளைப் பழிக்கிறான்" என்று தமக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
இதை உணரும் இயேசு, "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு
அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்" என்கிறார்.
இங்கே இரண்டு காரியங்கள் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.
முதலாவது காரியம் இயேசு பாவங்களை மன்னிப்பது குறித்தது. இயேசுவுக்கு
பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இருக்கிறதா? என்ற மறைநூல் அறிஞர்களின்
கேள்விக்கு விவிலியத்திலே விடை இருக்கிறது.
கொலோசெயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 1ஆம் அதிகாரம் 15-17 ஆகிய
வசனங்களில் படிக்கின்றோம், "ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை....
ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய்
அவருக்காய் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும்
அவரோடிணைந்து நிலைபெறுகின்றன" என்று. இதை வைத்துப்
பார்க்கும்போது எல்லாவற்றையும் படைத்து, எல்லாவற்றின்மீதும் அதிகாரம்
கொண்டிருக்கும் இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாராமும்
உண்டு என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
அடுத்ததாக நலம்வேண்டி வந்த முடக்குவாதமுற்றவரது நோயினை இயேசு
நேரடியாக நீக்காமல், எதற்காக பாவங்களை மன்னித்து, நோயை நீக்கவேண்டும்
என்பது தொடர்பானது.
யூதர்கள் (ஏன் நாம் கூடத்தான்) நோய்நொடிகள் பாவத்தின் விளைவாக
வருவது என்று நம்பினார்கள். யோவான் நற்செய்தியில்கூட பார்வையற்று
இருந்த ஒருவனைப் பார்த்த இயேசுவின் சீடர்கள் அவரிடம்,
"ஆண்டவரே, இவன் இப்படிப் பிறக்கக் காரணம் இவன் செய்த குற்றமா?
அல்லது இவனது பெற்றோர் செய்த குற்றமா? என்று கேட்கின்றனர்
(யோவான் 9:2). அதற்கு இயேசு மறுமொழியாக, "இவர் செய்த பாவமும்
அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர்
வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்பார். ஆக,
நோய் நொடியானது பாவத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது என்பதை
இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
எனவேதான் இயேசு பாவம்தான் நோய்க்கு காரணம் என்று நம்பி
வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம், முடக்குவாதமுற்ற மனிதரின் பாவங்களை
மன்னிப்பதன் வழியாக அவருக்கு நலம்தருகிறார்.
ஆகையால் நாம் இயேசுவுக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்பதை நம்பி
வாழ்வோம். அவரிடம் நம்மையே முழுமையாய் ஒப்படைப்போம். அதன்வழியா
Fr. Maria Antonyraj, Palayamkottai.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக்
கண்டு...
கரடு முரடான மலைப்பாதை. அதில் இளைஞன் ஒருவனுக்கு, இரவில் பயணம்
செய்யவேண்டிய நிர்பந்தம். அப்படி அந்த இளைஞன் செல்லும்போது,
திருப்பத்தில் ஏற்பட்ட லேசான தடுமாற்றம், அவனை பெரிய
பாதிப்புக்குள்ளாகியது.
"அம்மா" என்று அலறியவனாய் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டவன்,
மலைப்பாதையில் உருண்டான். உருண்டவன் பாதையின் ஓர தடுப்பைக்
கடந்து சருகினான். அத்தனை வேகமாய் சருகும்போதும் வேட்டையாடும்
புலி நகங்களை பதிப்பதுப்போல் கல்லின் மீதும், மண்ணின் மீதும்
விரல்களை வைத்து பதித்துக்கொண்டே உருண்டான். வாழ்க்கையில் அவன்
செய்த அத்தனைப் புண்ணியங்களுக்கும் பலனாக கடைசியாக அவனுக்கு
கிடைத்தது ஒரு சிறிய மரக்கிளை. போன உயிர் வானம் வரை சென்று
திரும்பியது போல் ஒரு படபடப்பு மனதில். .எங்கிருக்கிறோம்,
என்னவாகப் போகிறோம் என்று யோசித்துப்பார்க்கவே முடியாத
அளவுக்கு மனதிற்கும் கண்ணிற்கும் திரையாய் கும்மிருட்டு.
திக்...திக்...திக்... இதயத்தின் துடிப்பு தெளிவாக உணர்ந்தான்.
மூன்று ஆடுகளில், பலிகொடுக்கப்பட்ட இரண்டு ஆடுகளின்
துடிப்பைக்கண்ட மூன்றாவது ஆட்டின் நிலைமையிலிருந்தான் அவன்.
மரண பீதி, இதுவரை கேள்விப்பட்டிருந்த வார்த்தை இப்போது நேரில்.
காப்பாற்றுவார் யாருமில்லையா? "காப்பாத்துங்க...
காப்பாத்துங்க..." அழுகுரலுடன் ஒரு அபயக்குரல்.
திடீரென்று எங்கிருந்தோ ஒரு அசரீரி, "மனிதா பயப்படாதே...நான்
உன்னை காப்பாற்றுகிறேன். நீ பற்றியிருக்கும் மரக்கிளையை
விட்டுவிடு". கடுமையான தாகத்திற்கு தண்ணீரை விஷம் கலந்து
கொடுத்ததைப்போல் ஒரு உணர்வு. என்ன ஆனாலும் சரி மரக்கிளையை விட
மாட்டேன் என்பதாய் மனதிற்குள் ஒரு சபதம். மரண பயம். அதிகப்
பசி. மயக்கத்தின் உச்ச நிலை.. கீழே விழாமல் தடுத்திருந்தது மரண
பயத்தோடு கூடிய பிடிகள். வியர்வையில் குளியல்.... இப்படியும்
அப்படியுமாக இரவை விரட்டிக்கொண்டு மெல்ல கதிரவன் தன் காலை
பூமியில் பதிக்க தொடங்கியதும்... முக்கால் மயக்கத்தில் கண்
திறந்து பார்த்தான் எங்கிருக்கிறோம் என, கீழே பார்த்தவனுக்கு
பெருமகிழ்ச்சியுடன் கூடிய பேரதிர்ச்சி. ஆம் அவன் தொங்கிக்
கொண்டிருந்த இடத்திற்கும் பாறையாலான ஒரு தளத்திற்கும் ஒரு
முழமே இடைவெளி.
விடிந்தது பொழுது மட்டுமல்ல. அவனின் உள்ளத்தின்
நம்பிக்கையும்தான். அசரீரியின் வார்த்தைகளின் உண்மையையும்,
தன்னுடைய அவநம்பிக்கையினால் ஏற்பட்ட பேரிழப்புகளையும் எண்ணி
மனம் நொந்து தன்மீது தானே சினம் கொண்டான்.
எதன்மீதும் யார்மீதும் நம்பிக்கையில்லாமல் அவநம்பிக்கையோடு
நிலை எத்துணை பரிதாபமானது என்பதை விளக்கிச் சொல்லும் இந்தக்
கதை நமது சிந்தனைக்குரியது.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, நம்பிக்கையினால் நலம் பெற்ற
ஒருவரைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துச்
சொல்கின்றது. நம்பிக்கை ஒருவருக்கு எத்தகைய ஆசிர்வாதத்தைப்
பெற்றுத் தருகின்றது என்று இப்போது பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சொந்த ஊருக்கு
வருகின்றார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நான்கு பேர்
கட்டிலில் கிடத்தி, இயேசுவுக்கு முன்பாகக் கொண்டுவருகிறார்கள்.
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, அந்த
முடக்குவாதமுற்றவருக்கு நலமளிக்கின்றார். மத்தேயு
நற்செய்தியில் முடக்குவாதமுற்றவரை கட்டிலில் கிடத்தி எப்படிக்
கொண்டுவந்தார்கள் என்று சொல்லப்படாவிட்டாலும் ஒத்தமை நற்செய்தி
நூல்களில் ஒன்றான மாற்கு நற்செய்தியில் இது குறித்து மிகத்
தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
இயேசு தன் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் போதித்துக்
கொண்டிருக்கின்றார். அவருடைய போதனையைக் கேட்க ஏராளமான பேர்
திரண்டு வருகிறார்கள். இதனால் முடக்கமுற்றவரைச் சுமந்துகொண்டு
வரக்கூடியவர்கள், இயேசு இருந்த வீட்டின்மீது திறப்பு
உண்டாக்கி, அதன்வழியாக முடக்குவாதமுற்றவரைக் கீழே
இறக்குகிறார்கள். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு
அவருக்கு நலமளிக்கின்றார். நற்செய்தியின் ஒருசில இடங்களில்
இயேசு மக்களுடைய அவ நம்பிக்கையைக் கண்டு ஆச்சரியப்பட்டாலும்,
இன்னும் ஒருசில இடங்களில் ஒருசில மனிதர்களிடமிருந்த
நம்பிக்கையைக் கண்டு ஆச்சரியப்படத்தான் செய்கிறார். நூற்றுவத்
தலைவர் இதற்கு நல்ல உதாரணம். அந்த வரிசையில் முடக்குவாத
முற்றவரைச் சுமந்துகொண்டு வந்தவர்களின் நம்பிக்கையும் இயேசுவை
வியப்பில் ஆழ்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.
முடக்குவாதமுற்றவரைச் சுமந்து கொண்டு வந்தவர்களிடம் இருந்த
நம்பிக்கை நமக்கு இருக்கின்றதா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். பல நேரங்கில் நாம் இறைவனிடத்திலும் நம்மோடு
வாழ்பவர்களிடத்திலும் ஏன் நம்மிடத்திலும் கூட நம்பிக்கை
இல்லாமல் இருக்கின்றோம். இத்தகைய நிலையை மாற்றி நாம்
நம்பிக்கையோடு வாழ்வது சிறப்பானது.
ஆகவே, இயேசுவிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|