Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     01 ஜூலை 2018  
                                           பொதுக்காலம் 13ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11a நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 7,9,13-15

சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம்.

இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும்.

"மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை" என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

அக்காலத்தில் இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.

தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார்.

இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.

அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது.

அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக்கொண்டார்.

தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.

உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார்.

அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், `என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!" என்றார்கள்.

ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.

இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள்.

அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார்.

அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.

சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்" என்றார். அதற்கு, `சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள்.

உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



அல்லது

குறுகிய வாசகம



சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-24, 35b-43

அக்காலத்தில் இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.

தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார்.

இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.

தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள்.

அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார்.

அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்" என்றார். அதற்கு, `சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(சாஞா 1: 13-15, 2:23-24 ; 2 கொரி 8:7,9,13-15 ; மாற் 5: 21-43)

அழியாமைக்கென்று மனிதர்களைப் படைத்த கடவுள்!

ஓர் ஊரில் செல்வம் என்னும் ஒருவன் இருந்தான். அவன் மிகப்பெரிய தொழிலதிபராக விளங்கிவந்தான். அவனுக்கென்று சொத்து சுகம் என எல்லாமும் இருந்தன. ஆனால், அவன் கடவுள்மீது மட்டும் நம்பிக்கை இல்லாமல் இருந்தான்.

அவனுடைய தாய் இதற்கு முற்றிலும் எதிர்பதம். அவள் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை வைத்திருந்தாள். ஒருநாள் அவள் தன் மகனை அழைத்து, "செல்வம்! நீ உன்னுடைய தொழிலில் இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கின்றாயே, அதற்காக இறைவனுக்கு நன்றிசொல், இறைவனின் அருள் மட்டும் உன்னோடு இல்லாதிருந்தால், தொழிலில் நீ இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது" என்றாள். அதைக் கேட்ட செல்வம், "என்னால் இறைவனுக்கெல்லாம் நன்றி செலுத்த முடியாதம்மா, நான் எதற்கு அவருக்கு நன்றி செலுத்தவேண்டும்?, தொழிலில் நான் இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பதற்குக் காரணம் என்னுடைய கடின உழைப்பு தானே தவிர, அவருடைய அருள் கிடையாது, அதனால் அவருக்கு எல்லாம் என்னால் நன்றி சொல்லமுடியாது" என்று மறுத்துவிட்டான்.

"மகனே செல்வம்! அப்படியெல்லாம் சொல்லாதப்பா! கடவுளின் அருள் மட்டும் இல்லையென்றால் யாராலும் எதையும் செய்ய முடியாது" என்றாள் தாய். அதற்கு செல்வம், "கடவுள் அருள் இல்லையென்றால் யாராலும் எதையும் செய்யமுடியாது, அவர் மிகப்பெரியவர் என்று சொல்கிறாயே, எங்கே அவரை என்னைக் கொல்லச் சொல் பார்க்கலாம், ஒருவேளை இந்த ஐந்து நிமிடத்திற்குள் அவர் என்னைக் கொன்றுவிட்டால், அவர் பெரியவர் என்று ஒத்துகொள்கின்றேன். இல்லையென்றால் அவர் இல்லவே இல்லை என்பது உண்மை" என்றான்.

தாய் அவன் சொன்னதற்கு பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அவன் சொன்ன ஐந்துநிமிடங்கள் ஆயின. ஆனாலும் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அப்போது அவன் தாயைப் பார்த்துக் கொக்கரித்தான், "இங்கே பார்! கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது, அவர் மட்டும் இருந்திருந்தால் இப்போது என்னை அவர் கொன்றுபோட்டிருப்பாரே" என்றான். தாய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

இது நடந்து சில மணி நேரத்திற்குப் பிறகு செல்வத்தின் தாயுக்கும் அவனுடைய பத்து வயது மகனுக்கும் சிறிய வாக்குவாதம் வந்தது. அப்போது செல்வத்தின் தாய் அவனிடம், "உன்னுடைய மகனைப் பார், அவன் என்னை பெயர் சொல்லிக் கூப்பிட்டு, தரக்குறைவாகப் பேசுறான் அவன் இப்படி நடந்துகொண்டதால், அவன் இப்போது கொல்லப்பட வேண்டும்" என்றாள். தாய் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டுப் போன செல்வம், "என் மகன் உங்களைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான் என்பதற்காக அவனை எப்படிக் கொன்றுபோடுவது?, வேண்டுமானால் நான் அவனைக் கண்டிக்கின்றேன்" என்றான்.

தன் மகன் செல்வத்திற்கு உண்மையை உணர்த்த இதுதான் சரியான தருணம் என்பதை உணர்ந்த தாய் அவனிடம், "மகனே உன் மகன் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான் என்பதற்காக நீ அவனைக் கொல்லமுடியாது என்று சொல்கிறாயே, அது போன்றுதான் கடவுளும். நீ அவரை மறுக்கின்றாய் என்பதற்காக அவர் உன்னைக் கொல்லமாட்டார். ஏனென்றால், தந்தையாகிய அவர் தன்னுடைய பிள்ளையின் அழிவில் ஒருபோதும் மகிழ்வதில்லை. அவன் வாழவேண்டும் என்றே விரும்புகிறார்" என்றாள்.

ஆம், இறைவன் தன்னுடைய பிள்ளைகள் வாழவேண்டும் என்றுதான் விரும்புவாரே ஒழியஅழியவேண்டும் என்று விரும்புவதில்லை. பொதுக்காலத்தின் பதிமூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று, நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் அழியாமைக்கென்று மனிதர்களைப் படைத்த கடவுள் என்னும் செய்தியைத் தருகின்றன. நாம் அதைக்குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

சிநேரங்களில் நாம் பேசிக்கொள்வதுண்டு உலகில் நடக்கும் போர்கள், இயற்கைச்சீற்றங்கள் எல்லாம் கடவுள் மனிதனை அழிப்பதற்காக பயன்படுத்தும் சாதனங்கள்" என்று. அது ஒருபோதும் உண்மையில்லை, அக்கருத்து தவறானது என்பதை சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் எடுத்தியம்புகின்றது. அங்கு நாம் வாசிக்கின்றோம், "சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. வாழ்வோரில் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார்; கடவுள் மனிதர்களை அழியாமைகென்றே படைத்தார்" என்று. அப்படியானால், கடவுள் நாம் வாழவேண்டும் என்று விரும்புகிறாரே ஒழிய, அழிந்து போகவேண்டும், சாகவேண்டும் என்று விரும்பவில்லை என்பது உண்மையாகின்றது.

அப்படியானால் உலகில் நடக்கும் தீமைகள், வன்முறைகள், அழிவுகளுக்கு எல்லாம் யார் காரணம் என்னும் கேள்வி எழுகின்றது. அதற்கான பதிலை முதல் வாசகமே தருகின்றது. "அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்" என்று. ஆகையால், இதுவரைக்கும் ஏற்பட்ட அழிவுகளுக்கும், தீமைகளுக்கும் சாத்தானும் அதனோடு கைகோர்த்து இருப்பவர்களும் தான் காரணம் என நாம் உறுதியாகச் சொல்லலாம்.

கடவுள் நாம் வாழவேண்டும் என்றே விரும்புகின்றார் என்று சிந்தித்த நாம், வாழ்வதற்கான, அழியாமையைப் பெற்றுக்கொள்வதற்கு என்ன வழி என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அழியா வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு நற்செய்தி வாசகம் சொல்கின்ற ஒரே, உன்னதமான வழி இறைவன்மீது நாம் கொள்ளும் நம்பிக்கை ஆகும். இறைவனின் மீது நம்பிக்கை கொள்வதனால் வாழ்வு எப்படிக் கிடைக்கின்றது என்பதை இன்றைய நற்செய்தியில் வருகின்ற இருவர் நமக்குத் தெளிவாக விளக்குகின்றார்கள். ஒருவர் தொழுகைக்கூடத் தலைவராகிய யாயிர், இன்னொருவர் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி.

இங்கே நம்பிக்கைதான் தொழுகைக்கூடத் தலைவராகிய யாயிரின் மகளுக்கும் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கும் வாழ்வினைப் பெற்று தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. நாம் இறைவன்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைப்பது கிடையாது, அதனாலே நாம் கேட்பதைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோம். எனவே, நாம் இறைவன் மீது ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================ஏன் இந்த அமளி?

சாலமோனின் ஞானம் 1:13-15,2:23-24
 2 கொரிந்தியர் 8:7,9,13-15
 மாற்கு 5:21-43

'ஏன் இந்த அமளி?' - இயேசு தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் வீட்டிற்கு வெளியே அவரின் இறந்த மகளுக்காக அழுது புலம்பிய மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கேட்ட இந்தக் கேள்வியோடு இன்றைய சிந்தனையை நாம் தொடங்குவோம்.

'ஏன் இந்த அமளி?' என்ற இந்தக் கேள்வியை ஒற்றை எழுத்தை மாற்றி, 'ஏன் இந்த அமலி?' என்று கேட்டுவிட்டால், 'அமலி' என்ற பெயர் கொண்டவர்கள் எல்லாம் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

'அமளி' என்றால் கூச்சல் அல்லது குழப்பம் அல்லது புலம்பல். கூச்சல் மற்றும் குழப்பத்தைவிட புலம்பல் என்ற பொருளே இந்த வார்த்தைக்குச் சரியாகப் பொருந்தும். அதாவது, நடக்கக்கூடாத ஒன்று அல்லது நம் மனதிற்கு ஏற்பில்லாத ஒன்று நடந்துவிடும்போது நம் மனமும், நம் வாயும் உச்சரிக்கும் வார்த்தைகள்தாம் அமளி. ஆக, அமளியில் ஒரு வகையான சோகம், விரக்தி, ஏமாற்றம், சோர்வு இருக்கும். ஆனால் இந்த அமளியினால் ஒரு நன்மையும் இல்லை. இந்த மாதிரியான அமளி என்னும் புலம்பல் நிலை நம்மில் உருவாகப் பல காரணிகள் இருக்கலாம். அவற்றில் மூன்று காரணிகளை முன்வைக்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு:

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 1:13-15,2:23-24) ஆசிரியர், 'இறப்பு' எழுப்பும் அமளி பற்றியும்,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 8:7,9,13-15) தூய பவுல், 'குறைவு' எழுப்பும் அமளி பற்றியும்,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 5:21-43) மாற்கு, 'நலமின்மை' எழுப்பும் அமளி பற்றியும் குறிப்பிடுகின்றார்.

'இறப்பு,' 'குறைவு,' 'நலமின்மை' - இந்த மூன்று காரணிகளால் நாமும்கூட நம் வாழ்வில் இன்று புலம்பிக்கொண்டிருக்கலாம். இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் நம்முன் இயேசு வந்து நம்மிடம் கேட்பதெல்லாம் இந்த ஒற்றைக் கேள்விதான்: 'ஏன் இந்த அமளி?' 'ஏன் இந்தப் புலம்பல்?'

அமளி மற்றும் புலம்பல் வரக் காரணம் நாம் கடவுளின் இருப்பை மறந்துவிடுவதுதான் என்பது இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கின்ற பாடமாகவும் இருக்கிறது.

அ. இறப்பும் கடவுளின் இருப்பும்

'இந்த உலகில் இறப்பு ஏன்?' 'வாழ்வோர் ஏன் இறக்கின்றனர்?' என்று கேள்விகள் எழுப்பும் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், 'அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது' என்றும், 'கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்றே படைத்தார்' என்றும் எழுதுகின்றார். ஆக, இன்று சாவு நம்மைத் தழுவினாலும் கடவுள் நம்மை அழியாமைக்கென்று படைத்திருப்பவர். அவருடைய சாயலில் படைக்கப்பட்டுள்ள நாம் ஒருபோதும் அழிவதில்லை. நாம் பிறந்தது முதல் ஒவ்வொரு நொடியும் இறப்பை நோக்கியே அடியெடுத்து வைக்கின்றோம். இறப்பை நோக்கித்தான் நாம் நகர்கிறோம் என நினைக்கத் தொடங்கினால் நாம் ஒருபோதும் வாழ மாட்டோம். எல்லாம் இறக்கத்தானே போகிறோம் என நினைத்து ஒன்றும் செய்யாமல் ஓய்ந்திருப்போம். ஆனால், இறவாமைக்கான ஆவல்தான் நம்மை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி நோக்கி உந்தித் தள்ளுகிறது. 'இல்லை, உனக்கு எல்லாம் முடிந்துவிட்டது, நீ ஒன்றும் செய்யாதே' என்று நம் உள்ளம் நம்மிடம் பேச ஆரம்பித்தால் அது நமது குரல் அல்ல. மாறாக, பேயின் அல்லது அலகையின் குரல். நம் உள்ளத்தில் ஒலிக்கும் கடவுளின் குரல், 'பரவாயில்லை. தொடர்ந்து செல். போராடு' என்று மட்டும் சொல்லி நம்மை முன்நோக்கித் தள்ளும். ஆக, நாம் உடல் அளவில் இறப்பதற்கு முன் சில நேரங்களில் மனதளவில் இறந்துவிடுகிறோம். நாம் கடவுளின் உடனிருப்பை நம்மில் உணரும்போது இறப்பு என்ற அமளி அடங்கிவிடுகிறது.

ஆ. குறைவும் கடவுளின் இருப்பும்

மாசிதோனிய திருச்சபைக்காக கொரிந்து மக்களிடம் பொருள்கள் சேகரிக்கும் தூய பவுல், அவர்கள் 'நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகியவற்றில் வளர்வதோடு அன்பிலும், அறப்பணியிலும் வளர வேண்டும்' என அறிவுறுத்துகின்றார். இதை வலியுறுத்த பவுல் இரண்டு மேற்கோள்களைக் காட்டுகின்றார்: (1) இயேசுவின் பிறப்பு - 'அவர் செல்வராயிருந்தும் (கடவுளாயிருந்தும்) உங்களுக்காக ஏழையானார் (மனிதரானார்), (2) 'மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை. குறைவாகச் சேகரித்தவருக்கு எதுவும் குறைவுபடவில்லை' (விப 16:18). ஆக, கடவுளின் இருப்பு குறைவானவர்களை நிறைவாக்குகிறது. பசி என்னும் குறையால் வாடி இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் மன்னா வழங்கியபோது, சிலர் அடுத்த நாளைக்குரிய கவலையினால் மன்னாவைச் சேகரித்து வைத்தபோது, அப்படி வைக்கப்பட்ட மன்னா புழுவாகிவிடுகிறது. மிகுதியாகச் சேர்த்ததால் அவர்களுக்கு எதுவும் மிஞ்சவில்லை. அதேபோல ஒன்றும் சேர்த்து வைக்காதவர்களுக்கு எந்தவொரு குறையும் இல்லை. இவ்வாறாக, நம்மிடம் உள்ள குறைவை நிறைவு செய்வது கடவுளின் இருப்பாகவும், அவரின் அரும்செயலாகவும் இருக்கிறது.

இ. நலமின்மையும் கடவுளின் இருப்பும்

இன்றைய நற்செய்தியில் நலமற்றிருக்கும் இரண்டு மகள்களைப் பற்றி வாசிக்கின்றோம். முதல் மகள் 12 வயதான யாயிரின் மகள். இவள் நலமற்றிருப்பதாகவும், இயேசு வந்து அவள் மீது கைகளை வைக்க வேண்டி அவளுடைய தந்தை இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றார். இரண்டாம் மகள் 12 ஆண்டுகள் இரத்தப்போக்கினால் நலமற்று இருப்பவள். இவள் தானே வந்து இயேசுவின் மேலாடையைத் தொடுகிறாள். இருவருமே இறப்பு நோக்கிய பயணத்தில் இருக்கின்றனர். சிறுமி சீக்கிரம் இறந்துவிடுகிறாள். பெண்மணி கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறாள். இந்த இருவரும் இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வை மாற்கு மிக அழகாக பதிவு செய்கின்றார்.

'இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்' என்னும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் (மத் 9:18-26, மாற் 5:21-43, லூக் 8:40-56) பதிவு செய்கின்றனர். ஆனால், இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்த யோவான் (காண். மாற் 5:37) இதை பதிவு செய்யவில்லை. மத்தேயு நற்செய்தியாளர் யாயிரின் மகள் முதலிலேயே இறந்துவிடுவதாக எழுதுகின்றார் (மத் 9:18-19). சிறுமிக்கு பன்னிரண்டு வயது என்பது மாற்கு இறுதியில் சொல்கின்றார் (5:42). ஆனால், லூக்கா அதை முதலில் சொல்கின்றார் (8:42). மாற்கு நற்செய்தியில் இயேசு உயிர்பெற்ற குழந்தைக்கு கடைசியாக சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:43). ஆனால் லூக்காவில் அவள் உயிர்பெற்றவுடன் சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:55). ஆக, ஒத்தமவு நற்செய்தியாளர்களின் பதிவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.

இந்த நற்செய்திப் பகுதியை வெறும் இலக்கியப் பகுதியாக வாசித்தாலும் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. என்ன பிரச்சினை? இயேசுவின் இரண்டு புதுமைகள் (பெண் நலம் பெறுதல், சிறுமி உயிர்பெறுதல்) வௌ;வேறு இடத்தில் சொல்லப்பட்டவை, பிற்காலத்தில் பிரதி எடுப்பவர்களின் தவற்றால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டதா? அல்லது வேறு வேறு வாய்மொழியாக வந்த கதைகளை நற்செய்தியாளர்கள் ஒன்றாக இணைத்துவிட்டனரா? இயேசுவோடு பயணம் செய்த பெரிய கூட்டம், யாயிரின் வீடு வரவர குறைந்து போவதன் காரணம் என்ன? கதைத்தளமும், அந்தத் தளத்தில் பிரசன்னமாகியிருக்கும் நபர்களும்கூட மாறுபடுகின்றனர். சாலை, கூட்டம், நெரிசல் என இருந்த கதைதளம், திடீரென வீடு, மூன்று சீடர்கள், சிறுமி என மாறிவிடுவதன் பொருள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

அ. மாற்கு நற்செய்தியாளரின் இலக்கிய உத்தி. என்ன இலக்கிய உத்தி? ஒப்புமை. அதாவது, ஒற்றுமை-வேற்றுமையின் வழியாக ஒரு பொருளை உணர்த்துவது. இந்த நற்செய்திப் பகுதியில் இரண்டு அறிகுறிகள் அல்லது புதுமைகள் நடக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை - ஒருவர் நலம் பெறுகிறார். மற்றவர் உயிர் பெறுகிறார். இரண்டு பேரும் பெண்கள். ஒருவர் வறுமையில் வாடியவர். மற்றவர் செல்வச் செழிப்பில் திளைத்தவர். இருவருக்குமே பொதுவாக இருப்பவை 12 ஆண்டுகள் - முதல் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் துன்பம், இரண்டாம் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் மகிழ்ச்சி. முதல் பெண்ணுக்கு பரிந்து பேச எவரும் இல்லை. ஆனால் இரண்டாம் பெண்ணுக்கு பரிந்து பேச தந்தை, இறந்த நிலையில் அழ வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள். இருவரையும் குணமாக்குவது இயேசுவின் தொடுதல்: முதல் நிகழ்வில் பெண் இயேசுவைத் தொடுகின்றார். இரண்டாம் நிகழ்வில் இயேசு சிறுமியைத் தொடுகின்றார். முதல் நிகழ்வில் கூட்டம் மௌனம் காக்கிறது. இரண்டாம் நிகழ்வில் கூட்டம் மலைத்துப் போகிறது.

ஆ. இரண்டாம் நிகழ்வு நடப்பதற்கு முதல் நிகழ்வு தளத்தைத் தயாரிக்கிறது. அல்லது முதல் நிகழ்வின் தாமதம்தான் இரண்டாம் நிகழ்வு நடக்க காரணமாக அமைகிறது. முதல் நிகழ்வு நடப்பதற்கு முன் சிறுமி உடல்நலம் இல்லாமல் இருக்கிறாள். ஆனால், அந்தச் சிறுமி இறக்கவும், இறப்பு செய்தி அவளின் அப்பாவைத் தேடி வருவதற்கும், இறந்தவுடன் அழுவதுற்கு அவளின் குடும்பத்தார் கூடி வருவதற்கும் நேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தை உருவாக்கிக்கொடுக்கிறது முதல் நிகழ்வு. ஆக, முதல் நிகழ்வில் வரும் இரத்தப்போக்குடைய பெண், கூட்டம், நெரிசல் அனைத்தும் கதையின் கரு வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன.

இ. பயணநடை இலக்கிய உத்தி. நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் மற்றொரு உத்தி 'பயணநடை'. அதாவது, இயேசுவின் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அவரின் பயணத்தில் நடப்பதாக எழுதுவது. மிக நல்ல உதாரணம், இயேசுவின் எம்மாவு பயணம். இந்த நடையின் உட்கூறுகள் என்ன? பயணத்தின் தொடக்கம், பயணம், மற்றும் பயணத்தின் முடிவு. இன்றைய நற்செய்தியில் இயேசு மறுகரையிலிருந்து யாயிரின் இல்லத்திற்குப் பயணம் செய்கிறார். பயணத்தின் தொடக்கத்தில் சீடர்கள் அல்லது கூட்டம் இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது. பயணத்தின் இறுதியில் கூட்டம் இயேசுவைக்கண்டு மலைத்துப்போய் அவரில் மேல் நம்பிக்கை கொள்கிறது. ஆக, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு இயேசு மக்களை பயணம் செய்ய வைக்கின்றார். இந்தப் பயணத்தின் மையமாக இருப்பது நம்பிக்கை பற்றிய இயேசுவின் வார்த்தைகள்: குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு, 'மகளே, உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று!' என்கிறார் (5:34). உயிர்பெற வேண்டிய மகளின் தந்தையிடம், 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று கூறுகிறார் (5:36). ஆக, இந்த மையம் தெளிவானால், பயணநடை தெளிவாக விளங்குகிறது.

ஆக, இலக்கிய அடிப்படையில் அல்லது கதையியல் அடிப்படையில் பார்த்தால் ஒரே நிகழ்வுதான் இரண்டு தளங்களில் வளர்ச்சி பெறுகின்றது. ஆக, இவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

முதல் புதுமை: இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதல் (5:24-34).

யாயிரின் வேண்டுதலுக்கு இணங்கிய இயேசு அவரின் இல்லம் நோக்கிப் புறப்படுகிறார். வாசகரின் மனம் யாயிரின் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், புதிய கதாபாத்திரத்தை உள்நுழைக்கின்றார் மாற்கு. இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கூட்டத்தில் ஒருவராக அவர் நிற்கிறார். கூட்டத்தில் நிற்கும்போது நமக்கு பெயர் தேவைப்படுவதில்லைதானே. அவரைப் பற்றி மூன்று விடயங்களைக் குறிப்பிடுகிறார் மாற்கு: அவள் பன்னிரண்டு ஆண்டுகளாய் அவதிப்படுகிறாள், மருத்துவரிடம் தன் பணத்தையெல்லாம் இழந்துவிட்டாள், இப்போது இன்னும் கேடுற்ற நிலையில் இருக்கிறாள். இப்படிப்பட்ட ஒரு பெண் மற்றவர்களைத் தொடுவது தீட்டு என்று சொன்னது லேவியர்நூல் 15:19-33. 'இயேசுவைத் தொட்டால் நலம் பெறுவேன்!' என அவள் சொல்லிக்கொள்கிறாள். ஒருவரின் தொடுதல்கூட குணமாக்க முடியும் என அக்காலத்தவர் நம்பினர். ஏன் ஒருவரின் நிழல் பட்டால்கூட நலம் பெற முடியும் என அவர்கள் நம்பியதால் தான் பேதுருவும், யோவானும் சாலையில் செல்லும்போது நோயுற்றவர்களை கட்டிலில் கொண்டுவந்து கிடத்துகின்றனர் (காண். திப 5:15). கூட்டத்தின் நடுவே வந்து தொடும் அவளின் துணிச்சல் அவள் எந்தவிதத் தடைகளையும் தாண்டத் தயாராக இருந்தாள் என்பதையும், எந்த அளவிற்கு தன் நோயினால் கஷ்டம் அனுபவித்திருப்பாள் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. இயேசு தன் உடலிலிருந்து ஆற்றல் வெளியேறுவதை உணர்கிறார். வழக்கமாக, மற்றவர்களின் மனதில் இருப்பவற்றை இயேசு உணர்வார் என்று சொல்லும் மாற்கு, இங்கு இயேசு தன்னில் நடப்பதை தான் உணர்வதாகச் சொல்கின்றார். 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்விக்கு, சீடர்கள், 'இவ்வளவு கூட்டம் நெரிசலாக இருக்கிறது! இங்க போய் யார் தொட்டது? யார் இடிச்சதுன்னு? கேட்குறீங்களே?' என்று பதில் சொல்கின்றனர் சீடர்கள். இயேசுவின் சீடர்கள் அமளி கொள்கின்றனர். புலம்புகின்றனர்.இது ஒரு 'முரண்பாடு' - என்ன முரண்பாடு? இயேசுவுக்கு அருகில் இருக்கும் சீடர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், தூரத்தில் இருக்கும் ஒரு பெண் அவரைக் கண்டுகொள்கின்றார். பயம் தொற்றிக்கொள்கிறது அந்தப் பெண்ணை. இரண்டு வகை பயம்: ஒன்று, தான் 'திருடியது' கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது. மற்றொன்று, தான் இயேசுவைத் தீட்டாக்கிவிட்டோம் என்பது. ஆனால், இயேசு தூய்மை-தீட்டு பற்றி கவலைப்படுபவர் அல்லர். இயேசு அந்தப் பெண்ணை இப்போது அடுத்தநிலை குணமாக்குதலுக்கு அழைத்துச் செல்கின்றார். அவரின் நம்பிக்கையைப் பாராட்டுகின்றார். 'மகளே' என்று அவரை அழைப்பதன் வழியாக தன் இறையரசுக் குடும்பத்தில் உறுப்பினராக்குகின்றார் இயேசு.

முதல் புதுமையில் இந்தப் பெண்மணி இரண்டு தடைகளைக் கடக்கின்றார்: (அ) முதலில் கூட்டம் என்னும் தடை. (ஆ) இரண்டாவது, அச்சம் என்னும் தடை.

இரண்டாம் புதுமை. யாயிரின் மகள் உயிர் பெறுதல். தன் மகளுக்கு சுகம் வேண்டி வந்தவர், தன் மகளின் உயிர் பெறுகிறார். இரத்தப்போக்குடைய பெண்ணின் எதிர்ப்பதமாக நிற்கிறார் யாயிர். தொழுகைக்கூடத் தலைவர். ஆக, கடவுளை யார் பார்க்கலாம், பார்க்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர் இவர். நிறைய பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர். தனக்கென வேலையாட்களையும் வைத்திருக்கின்றார். ஆனாலும், எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தன் மகளுக்கு நலம் கேட்டு இயேசுவின் காலடியில் கிடக்கின்றார். தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவின் காலில் விழுகிறார் - இயேசு உயிர்த்த சில ஆண்டுகள் கழித்து, புதிய நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் யூதர்களின் தொழுகைக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாற்கு நற்செய்தியாளரின் திருச்சபையும் இப்படி வெளியேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தொழுகைக்கூட தலைவரையே இயேசுவின் காலில் விழ வைப்பதன் வழியாக இயேசுவை தொழுகைக்கூடத்தை விட மேலானவர் என்றும், இயேசுவைச் சந்திக்கு தொழுகைக்கூடம் தேவையில்லை, சாலையோரம் கூட அவரைச் சந்திக்கலாம் என்ற மாற்று சிந்தனையை விதைக்கின்றார் மாற்கு. முதல் புதுமை இரண்டாம் புதுமையின் இடையில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் யாயிரின் மகள் இறந்து, அந்த இறப்பு செய்தி யாயிரின் காதுகளையும், இயேசுவின் காதுகளையும் எட்டுகிறது. 'துணிவோடிரும்! நம்பிக்கை கொள்ளும்!' என தைரியம் தருகிறார் இயேசு. யாயிரின் வீடு வருகிறது. தன் நெருக்கமான மூன்று சீடர்களுடன் (காண். 9:2, 14:33) உள் நுழைகிறார். இடையில் கூட்டத்தினரின் தடை - அதாவது, அவர்களின் கிண்டல். சிறுமியைத் தொட்டு எழுப்புகிறார். மக்கள் வியக்கின்றனர்.

இரண்டாம் புதுமையில் யாயிர் தன் உள்ளே அச்சம் கொண்டிருந்தாலும் அவருக்கு வெளியேயும் இரண்டு தடைகள் இருக்கின்றன: (அ) முதலில், வேலையாள்கள். 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர்?' இவர்களின் வேலை மகளின் இறப்பு செய்தியை சொல்வது மட்டும்தான். ஆனால், 'போதகரை தொந்தரவு செய்யாதீர்' என தம் தலைவருக்கே அறிவுறுத்துகின்றனர். மேலும், இவர்கள் இயேசுவை நலம் தரும் கடவுளாகப் பார்க்காமல் வெறும் போதகராக மட்டுமே பார்க்கின்றனர். (ஆ) யாயிரின் வீட்டு வாசலில் இருந்த கூட்டம். இந்தக் கூட்டத்தினர் அழுது ஓலமிட்டுப் புலம்புகின்றனர். ஓலம் என்பது உச்சதொனியின் குரல். இறந்தவுடன் நம்மை விட்டுத் தூரப் போகும் ஒருவரிடம் மெதுவாக பேசினால் அவருக்குக் கேட்காது. ஆகையால்தான் நாம் ஓலமிட்டு, கூக்குரலிட்டு அவர்களை அழைக்கிறோம். இந்த ஓலத்தைக் கடிந்து கொள்கின்ற இயேசு, 'சிறுமி தூங்குகிறாள்' என்கிறார். கூட்டம் நகைக்கிறது. 'என்னப்பா இவ்வளவு சத்தத்திலா ஒருவர் தூங்க முடியும்!' என்று கேட்பதுபோல இருக்கிறது அவர்களின் நகைப்பு. இந்த இரண்டு தடைகளும் கடவுளின் இருப்பை உணர்ந்துகொள்ள யாயிருக்கு தடையாக இருக்கின்றன.

இவ்வாறாக, 'இறப்பு,' 'குறைவு,' 'நலமின்மை' என்ற மூன்று காரணிகளால் எழும் அமளி மற்றும் புலம்பலுக்கு கடவுளின் இருப்பு விடையாக இருக்கிறது.

கொஞ்ச நேரம் மௌனமாக அமர்ந்து நான் என்னையே ஆராய்ந்து பார்த்தால், எனக்குள்ளும் அந்த அமளி இருப்பது தெரியும். நூலகம்போல அமைதியாக இருக்க வேண்டிய நம் மனம் மீன் மார்க்கெட் போல கூச்சல் குழப்பமாக இருக்கிறது. நம் மூளை சில நேரங்களில், 'இது இப்படித்தான். போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர்?' என்று கடவுளிடமிருந்து நம்மை அந்நியமாக்கிவிடத் தூண்டும். ஆனால், இந்தப் போதகரை நாம் தொந்தரவு செய்வோம். அவர் கூட்டத்தின் நடுவே இருந்தாலும். அல்லது தனியே இருந்தாலும். நாம் அவரைத் தேடிச் செல்லும் நாம் அவரின் இருப்பை நம்மில் உணர்ந்தோம் என்றால் அந்த இருப்பை இறப்பு, குறைவு, நலமின்மை கொண்டிருக்கும் மற்றவர்களை நாடிச் சென்று அவரின் இருப்பை அவர்களுக்கு நம் இருப்பால் உறுதி செய்யவேண்டும்.

சின்னச் சின்ன சீண்டல்கள் என்னுள்ளும், வெளியிலிருந்தும் வந்தால், நான் இன்று கேட்பது,

'ஏன் இந்த அமளி?'

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Teaching Faculty  Saint Paul's Seminary  Tiruchirappalli - 620 001


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!