|
30 ஏப்ரல் 2018 |
|
பாஸ்காக்
காலம் 4ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு,
கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18
அந்நாள்களில் பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன்
சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர்.
இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான
லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும்
தப்பிச் சென்றார்கள். அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள்.
லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால்
ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை.
அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம்
நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து
உரத்த குரலில், "நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்" என்றார்.
அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார். பவுல் செய்ததைக்
கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், "தெய்வங்கள் மனித உருவில்
நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்று குரலெழுப்பிக் கூறினர்.
அவர்கள் பர்னபாவைச் "சேயுசு" என்றும், அங்குப் பவுலே பேசியபடியால்
அவரை "எர்மசு" என்றும் அழைத்தார்கள். நகருக்கு எதிரிலுள்ள
சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில்
வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட
விரும்பினார்.
இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள்
மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து
சென்று உரக்கக் கூறியது: "மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?
நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற
பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள
அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர்
அனைத்து மக்கள் இனங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி
விட்டிருந்தார்; என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும்
இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல
செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்;
வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள்
உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச்
செய்கிறார்."
இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை
ஒருவாறு தடுக்க முடிந்தது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 115: 1-2. 3-4. 15-16 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: எங்களுக்கன்று, ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்.
அல்லது: அல்லேலூயா.
1 எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று: மாட்சியை உம் பெயருக்கே
உரித்தாக்கும்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை
உமக்கே உரியதாக்கும். 2 "அவர்களுடைய கடவுள் எங்கே" எனப் பிற
இனத்தார் வினவுவது ஏன்? பல்லவி
3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும்
செய்கின்றார். 4 அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும்
பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! பல்லவி
15 நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும்
மண்ணையும் உருவாக்கியவர் அவரே. 16 விண்ணகமோ ஆண்டவருக்கு
உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 26
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர்
உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய
அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு
அனைத்தையும் கற்றுத்தருவார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 21-26
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என்
கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு
கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு
கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை
வெளிப்படுத்துவேன்."
யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் - அவரிடம்,
"ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு
வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?" என்று கேட்டார்.
அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: "என்மீது அன்பு
கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும்
அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன்
குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக்
கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை
அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு
இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என்
பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர்
உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய
அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.""
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
மனிதனை தெய்வமாக்கிப் பார்க்க சமூகம் விரும்புகின்றது.
இதனை சில மனிதர்களும் விரும்பி ஆசிக்கின்றார்கள்.
சில செயல்களை பார்க்கும் சமூகம் அந்த செயலை செய்ததற்கு, அந்த
மனிதனை தெய்வமாக்கிப் பார்க்கின்றார்கள்.
அன்றைக்கு சீடர்களையும் தெய்வமாக்கிப் பார்க்க முற்பட்ட போது
அந்த கோட்பாட்டிற்கு உடன்படாத சீடர்கள், தாங்களும் மனிதர்களே.
துங்களால் அல்ல, மாறாக, தாங்கள் வழிபடும் இறைவனாலேயே இத்தகைய
காரியங்கள் ஆனது என்பதனை கற்றுக் கொடுத்து, அவர்களை உண்மைக்
கடவுளை வழிபட செய்தனர்.
இன்றைக்கு புளாங்காயிதம் அடைந்து, அதிலே அற்ப இன்பம் கண்டு
பூரிப்படைகின்றனர். சமூகத்தை நேரிய வழியிலே நடத்திட நல்ல
தெளிவான சிந்தையுள்ளவர்கள் இன்றைய தேவை.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது
அன்புகொண்டுள்ளார்".
ஒரு சிற்றூரில் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் இருவர்
இருந்தார்கள். அவர்களில் ஒருவர் திருமணமானவர், மற்றவரோ
திருமணமாகாதவர். இரண்டு பேரும் சேர்ந்தே தந்தைவழி வந்த நிலத்தை
பயிரிட்டு, அதிலிருந்து கிடைத்த இலாபத்தை சமமாகப் பங்கிட்டு
வந்தார்கள்.
ஒருநாள் திருமணமான சகோதரருக்கு திடிரென்று ஒரு யோசனை வந்தது.
"நாம்தான் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளோடு வாழ்க்கையில்
செட்டில் ஆகிவிட்டோமே, நமக்கு எதற்கு நிலத்திலிருந்து வருகின்ற
விளைச்சலில் பாதி?, இந்தப் பாதியில் கொஞ்சம் திருமணமாகாமலும்
வாழ்க்கையில் செட்டிலாகாமலும் இருக்கின்ற நம்முடைய தம்பிக்குக்
கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்பதே அந்த யோசனை. உடனே
அவன் தன்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வைத்திருந்த தானிய
மூட்டைகளைக் கொஞ்சம் இரவோடு இரவாக தூக்கிக்கொண்டு போய்,
தன்னுடைய தம்பியின் தானியக் களஞ்சியத்தில் போட்டுவிட்டு
வந்தான்.
அண்ணனைப் போன்றே தம்பிக்கும் ஒரு யோசனை வந்தது. "நாம்தான்
திருமணமாகாத ஒண்டிக்கட்டை அல்லவா!. நமக்கு எதற்கு நிலத்தின்
விளைச்சலிலிருந்து பாதி? இந்தப் பாதியில் கொஞ்சம் குடும்பம்
குழந்தைகளோடு இருக்கின்ற நம்முடைய அண்ணனுக்குக் கொடுப்பதே
சரியானது" என்பதுதான் அந்த யோசனை. உடனே அவன் தன்னுடைய தானியக்
களஞ்சியத்திலிருந்து தானிய மூட்டைகளைக் கொஞ்சம் தூக்கிக்கொண்டு
போய் அண்ணனின் தானியக் களஞ்சியத்தில் இரவோடு இரவாகப்
போட்டுவிட்டு வந்தான். இப்படி ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல்,
ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்கு உரிய தானிய மூட்டைகளைத்
தூக்கிக்கொண்டுபோய் தனது சகோதரரின் தானியக் களஞ்சியத்தில்
போட்டுவிட்டு வந்தார்கள். இதனால் யாருடைய தானியக்
களஞ்சியத்திலும் தானிய மூட்டைகள் குறைந்தது போன்று இல்லை.
இது சகோதரர்கள் இருவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. என்னடா!
நாமோ நம்முடைய தானியக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் தானிய
மூட்டைகளை எடுத்துக்கொண்டு போய் நம் சகோதரரின் தானியக்
களஞ்சியத்தில் போட்டுவிட்டு வருகின்றோம். அப்படியிருந்தும்
தானிய மூட்டைகள் குறைந்தது மாதிரி இல்லையே என்று
யோசித்தார்கள். இருந்தாலும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்
தொடர்ந்து தானிய மூட்டைகளை தன்னுடைய சகோதரரின் களஞ்சியத்தில்
போடுவதாய் இருந்தார்கள்.
இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க, சகோதரர்கள் இருவரும்
ஒருநாள் இரவில் தங்களுடைய தானியக் களஞ்சியத்திலிருந்து தானிய
மூட்டைகளை தூக்கிக்கொண்டுபோய் மற்றவருடைய தானிய களஞ்சியத்தில்
போட விரைந்தார்கள். அவ்வாறு அவர்கள் தானிய மூட்டைகளைத்
தூக்கிக் கொண்டு விரையும்போது இருட்டினில் ஒன்றுமே தெரியாமல்
ஒருவர்மீது ஒருவர் மோதிக்கொண்டார்கள். அவர்கள் மோதிய பின்னே
அவர்களுக்குத் தெரிந்தது இத்தனை நாளும் என்ன நடந்தது என்று.
உடனே அவர்கள் இருவரும் கட்டியணைத்துக் கொண்டு, ஒருவர்மீது
ஒருவருக்கு இருக்கும் தங்களுடைய அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள்.
இது நடந்து பல ஆண்டுகள் கழித்து, அந்த ஊர் மக்கள் தங்களுடைய
ஊரில் புதிதாகக் கோவில் கட்டுவதற்கு எந்த இடம் சரியான இடம்
என்று தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ ஒருவர், முன்பொரு
நாள் இரவில் சகோதரர்கள் இருவர் அன்பொழுக சந்தித்துக் கொண்ட
அந்த இடமே கோவில் கட்டுவதற்குச் சரியான இடம் என்று முன்மொழிய
அதனை எல்லோரும் அமோதித்தார்கள். ஆமாம், அன்பு பொங்கி வழியும்
இடத்தில்தானே ஆண்டவன் குடிகொள்வான்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப்
பார்த்து, "என் கட்டளைகளை ஏற்றுக் கடைபிடிப்பவர் என்மீது அன்பு
கொண்டுள்ளார்" என்கின்றார். நாம் இயேசுவின் மீது
கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கு நமக்குப் பல்வேறு
வழிகள் இருந்தாலும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து
வாழ்வதே ஆகச் சிறந்த வழி. கட்டளைகளைக் கடைபிடிக்காமல்,
என்னதான் பக்தியாக இருந்தாலும் ஆலய வழிபாடுகளில்
கலந்துகொண்டாலும் நாம் இயேசுவை அன்பு செய்கின்றோம் என்று
சொல்லிக்கொள்ள முடியாது. ஆதலால், இயேசு நமக்குக்
கொடுத்திருக்கின்ற கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதே அவரை
அன்பு செய்வதற்கான தலைசிறந்த வழி ஆகும்.
அடுத்ததாக, இயேசுவை அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து
வாழ்வதன் மூலம் அவரை அன்பு செய்தோமென்றால், அவரும் தந்தைக்
கடவுளும் நம்மை அன்பு செய்வார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள்
நமக்குள்ளே வந்து குடிகொள்வார்கள். இது இயேசுவை அன்பு
செய்வதனால் நாம் பெறுகின்ற நன்மையாக இருக்கின்றது.
ஆகவே, இயேசுவும் தந்தைக் கடவுளும் நமக்குள் வந்து குடிகொள்ள
இயேசுவின் அன்புக் கட்டளையைக் கடைபிடித்து வாழ்வோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|