|
16 ஏப்ரல் 2018 |
|
பாஸ்காக்
காலம் 3ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி
வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால்
இயலவில்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து
வாசகம் 6: 8-15
அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே
பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்.
அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச்
சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா,
ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால்
அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும்
எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.
பின்பு அவர்கள், "இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள்
சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்" என்று கூறச் சிலரைத்
தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல்
அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள்.
உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு
இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து
நிறுத்தினார்கள்.
அவர்கள், "இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும்
எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்" என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், "நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார்
என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை
மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்" என்றார்கள்.
தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது
அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 119: 23-24. 26-27. 29-30 (பல்லவி:
1b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
அல்லது: அல்லேலூயா.
23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,
உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.
24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே
எனக்கு அறிவுரையாளர். பல்லவி
26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக்
கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும். 27 உம்
நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு
செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி
29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை
எனக்குக் கற்றுத்தாரும். 30 உண்மையின் பாதையை நான்
தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன்
நிறுத்தியுள்ளேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4b
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக,
கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே
உழையுங்கள்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட
கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள்.
முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை
என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி
இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப்
பார்த்திருந்தார்கள்.
அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள்
உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து
சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட
மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச்
சென்றனர்.
அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு
வந்தீர்?" என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல,
மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக
உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய
கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார்.
அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக
இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு
ஏற்ற செயல்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நம்முடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும்.
நம்முடைய விருப்பத்தை செயலாற்றவே விரும்புகின்றோம்.
செயல்கள் சிறியவையோ பெரியவையோ, பல நேரத்தில் நாம் செய்யும் செயல்கள்
அனைத்தும், நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாகவே அமைக்கின்றோம்.
கடவுளுக்கு ஏற்றவையாக மாற்ற நினைத்தால் மாத்திரமே செயல்கள்
வெற்றி பெற முடியும்.
திருமணமோ, திருவிழாக்களோ, வீடுகட்டுமான பணியோ அல்லது எந்தவொரு
செயலோ நாம் அவரிடம் ஓப்படைத்து, அவருடைய விருப்பத்தை அறிந்து
செய்வதை விடுத்து, நம்முடைய விருப்பத்தை மாத்திரமே கவனத்தில்
கொள்கின்றோம். நாள் பார்ப்பது, நேரம் பார்ப்பது, இவை கடவுளின்
ஆசீரைப் பெற்றுத் தருமா?
நம் செய்கள் வெற்றி பெறாமல் போவதற்கு காரணம், அவருக்கு எற்புடையாவையாக்கி
செய்யாமல் போவதால் தான்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
நிலையற்றவைகளில் அல்ல, நிலையானவைகளில் மனதை செலுத்துவோம்.
ரஷ்யாவைச் சார்ந்த பிரபல எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் சொல்லக்கூடிய
கதை இது.
ஓர் ஊரில் பெரும் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனிடம் ஏராளமான
சொத்துகள் பத்துகள் குவிந்துகிடந்தன. அப்படியிருந்தாலும் அவன்
இருப்பதை வைத்து சந்தோசமாக வாழ நினைக்காமல் மேலும் மேலும் செல்வத்தை
பெருக்கிக் கொள்ளும் பேராசைக்காரனாக இருந்தான்.
ஒருநாள் அவனுக்கு பக்கத்து ஊரில் இருக்கின்ற நிலக்கிழார் ஒருவர்
தன்னுடைய நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்கின்ற செய்தி
தெரிய வந்தது. எனவேஅவன் மறுநாள் காலையில் அந்த நிலக்கிழாரிடம்
சென்று, தான் நிலங்களை வாங்க வந்திருப்பதாகச் சொன்னான். உடனே
அந்த நிலக்கிழார், "நிலத்தின் விலை நூறு ரூபிள் (ரஷ்ய பணம்).
இந்த நூறு ரூபிளுக்கு சூரியன் உதிப்பதிலிருந்து, அது மறையும்
வரை உன்னால் எவ்வளவுதூரம் நிலத்தைக் கடந்து செல்ல முடியுமோ அவ்வளவு
தூரம் வரைக்கும் உள்ள நிலம் உனக்குச் சொந்தம்" என்றார்.
நூறு ரூபிளுக்கு இவ்வளவு நிலமா என்று மனதில் நினைத்துக்கொண்டவனாய்,
"சரி நீங்கள் சொல்வதற்கு நான் உடன்படுகிறேன்" என்று
சொல்லிவிட்டு, 100 ரூபிளை அவரிடம் கொடுத்துவிட்டு நிறைய நிலங்களை
தன்வயப்படுத்தவேண்டும் என்ற முனைப்பில் வேகமாக ஓடத் தொடங்கினான்.
ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் அந்த செல்வந்தன் ஓடியிருப்பான்,
அதற்குமேல் அவனால் ஓடமுடியவில்லை. எனவே அவன் ஓடுவதை
நிறுத்திவிட்டு வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான். குறிப்பிட்ட தூரம்வரைதான்
அவன் நடந்திருப்பான். அதற்குமேலும் அவனால் வேகமாக நடக்கமுடியவில்லை.
இருந்தாலும் நிறைய நிலங்களை தனக்குச் சொந்தமாக்க வேண்டுமே என்ற
எண்ணத்தில் இன்னும் வேகவேகமாக நடந்தான். இப்படி அவன் வேகவேகமாக
நடந்து போனதால், ஓரிடத்தில் குழி இருப்பதைக் கவனியாமல் அதனுள்
காலை விட்டான். அந்தோ பரிதாபம் அவனுடைய கால இடறி, அந்த இடத்திலே
இறந்துபோனான்.
இருப்பதைக் கொண்டு நிறைவுகொள்ளாமல் மேலும் மேலும் வேண்டும் என்று
சொத்து சுகங்களை, இன்ன பிற காரியங்களைத் தேடி அலைவோருடைய கதி
கடைசியில் இப்படித்தான் இருக்கும் என்பதை இந்தக் கதையின் வழியாக
நாம் அறிந்துகொள்ளலாம். கதையில் வரும் செல்வந்தனைப் போன்றுதான்
இன்றைக்குப் பலர் நிலபுலன்களை சொத்து சுகங்களை சேர்க்கவேண்டும்
என்ற முனைப்பில் நிம்மதியைத் தொலைத்து நிற்பது மிகவும் பரிதாபத்திற்கு
உரியது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவைத் தேடிவரக்கூடிய மக்கள் அவரிடம்,
"ரபி, எப்போது இங்கு வந்தீர்?" என்று கேட்கின்றார்கள். அதற்கு
இயேசு அவர்களிடம், "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல,
மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்கின்றார். இப்படிச்
சொல்லிவிட்டு இயேசு அவர்களிடம், "அழிந்து போகும் உணவுக்காக உழைக்க
வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியா உணவுக்காகவே உழையுங்கள்" என்கின்றார்.
இயேசு மக்களைப் பார்த்துச் சொல்கின்ற இவ்வார்த்தைகள் நம்முடைய
ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
பெரும்பாலான நேரங்களில் நாம் எதற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றோம்
என்று சிந்தித்துப் பார்த்தால், அழிந்துபோகக்கூடிய நிலையற்ற
வாழ்வுதராத பணம். பொருள், சொத்து, சுகம், நிலபுலன் இவற்றுக்காகவே
உழைத்துக்கொண்டிருக்கின்றோம் என்ற உண்மை நமக்குப் புலப்படும்.
இவற்றால் நமக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்துவிடுமா என்றால், அது
மிகப்பெரிய கேள்விக்குறி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால்
லூக்கா நற்செய்தியில் இயேசு சொல்வார், "மிகுதியான உடைமைகளைக்
கொண்டிருப்பதால் மட்டும் ஒருவனுக்கு வாழ்வு வந்துவிடாது" என்று
(லூக் 12: 15). அப்படியானால், நம்மிடம் இருக்கின்ற பணம்
பொருள், நிலபுலன் இவற்றால் நமக்கு வாழ்வு கிடைத்துவிடாது என்பது
உண்மையாகின்றது. அப்படியானால் எதனால், யாரால் நமக்கு வாழ்வு
கிடைக்கும் என்று சிந்தித்துப் பார்க்கும்போது இயேசு ஒருவரால்
மட்டுமே நமக்கு வாழ்வு கிடைக்கும் என்ற உண்மை விளங்கும். எனவே
நாம் இயேசுவை தேடிச் செல்கின்றபோது நிச்சயம் வாழ்வடைவோம் என்பது
உறுதியாகின்றது.
இயேசுவை தேடிச் செல்கின்றபோது எத்தகைய மனநிலையோடு தேடிச்
செல்கின்றோம் என்பதும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
இயேசுவின் காலத்தில் இருந்த மக்கள் அவரைத் தேடி, அவருடைய
பின்னாலே சென்றார்கள். ஆனால், அவர்கள் தங்களுடைய தேவைகள்
பூர்த்தியாகும் என்ற எண்ணத்திலே சென்றார்கள். அதனால் இயேசு அவர்களைக்
கடிந்துகொள்கின்றார். நாம் இயேசுவைத் தேடிச் செல்லவேண்டும் அதுவும்
நல்ல மனநிலையோடு தேடிச் செல்லவேண்டும். அப்போதுதான் நாம் வாழ்வடைய
முடியும்.
ஆகவே, நிலையற்ற இன்பத்தைத் தரக்கூடியவற்றைத் தேடிச் செல்லாமல்,
நிலையான இன்பத்தைத் தரக்கூடிய ஆண்டவர் இயேசுவைத் தேடிச்
செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
'
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|