Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     13 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 2ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால், மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 34-42

அந்நாள்களில் கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர்.

திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: "இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று.

இவற்றுக்குப் பின்பு மக்கள் தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர்.

ஆகவே இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்."

அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப் புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர்.

இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 4b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்.
அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்; ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.  அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.

இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார்.

தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.

பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார்.

அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார்.

இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம்.

இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.

அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள்.

அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

மனிதர்கள் வாழ்வில் எதாவது ஒரு சூழலில் அவமானப்படுவது நடக்கின்றது.
அவமானம் அடைந்தேன் என்பதாலேயே, வாழ்வை நிறுத்திக் கொள்வது என்பது அழகல்ல.
எல்லாரின் வாழ்விலும் இது அரங்கேறுகின்றது.
அறிந்தோ, அறியாமலேயோ, தெரிந்தோ, தெரியாமலேயோ சமுதாயம் பிறமனிதருக்கு இதனை கொடுக்கின்றது. கொடுப்பவரும் பெறுகின்றார்கள் என்பது விநோதமே.
சீடர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஆனால் அதனை கூறித்து மகிழ்ச்சியடைந்தார்கள்.
நாம் மகிழ்வது முறையே, அவருக்காக, அவரது அரசுக்காக அவமானம் அடைந்தோம் என்றால்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
பகிர்ந்து வாழ்வோம், பரகதி அடைவோம்!

பிரஞ்சுப் புரட்சியின்போது நடைபெற்ற நிகழ்வு இது. கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தி லாட்டரிச் சீட்டு ஒன்று வாங்கியிருந்தாள். அந்த லாட்டரிச் சீட்டிற்கு 1500 பவுண்டுகள் பரிசாக விழுந்தன. 1500 பவுண்டுகள் என்றால் அந்தக் காலத்தில் அவ்வளவு பெரிய தொகை. ஆனால், அந்தக் கைம்பெண் தனக்கென்று சிறதளவு மட்டும் பணத்தை எடுத்துக்கொண்டு மீதத் தொகையை தன்னைச் சுற்றி வாழ்ந்து வந்த ஏழை எளியவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார்.

இச்செய்தியைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போன செய்தியாளர்கள், அவரிடம், "கடவுள் உனக்கு இவ்வளவு பெரிய தொகையைப் பரிசாகக் கொடுத்ததே, கணவனை இழந்த நீ உன்னுடைய பிள்ளைகளோடு சந்தோசமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் நீயோ அதைக் கூட உன் அக்கம் பக்கத்துக்கு வீட்டாருக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டாயே! ஏன் அப்படிச் செய்தாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, "கடவுள் எனக்கு இவ்வளவு பெரிய தொகையைப் பரிசாகக் கொடுத்ததே, நான் மட்டும் இந்தத் தொகையை வைத்துக்கொண்டு சந்தோசமாக இருக்கவேண்டுமே என்பதற்காக அல்ல, என்னைப் போன்று கஷ்டப்படும் ஏழை எளியவருக்குப் பகிர்ந்துகொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஒருவேளை நான் மட்டும் இந்தத் தொகையை வைத்து சந்தோசமாக இருக்கும் பெண்மணியாக இருப்பேனாகில், எனக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாக விழுந்திருக்கவே விழுந்திருக்காது" என்றார்.

அந்தக் கைம்பெண் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொண்டது அக்காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. கடவுள் நமக்குக் கொடுத்ததை, பிறரோடு பகிர்ந்து வாழ்கின்றபோது இல்லாமை என்பது இல்லாமலே போய்விடும் என்பதை இந்த நிகழ்வின் அறிந்துகொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வினைக் குறித்துப் படிக்கின்றோம். இந்நிகழ்வு கலிலேயா அல்லது திபேரியாக் கடல் அருகே நடக்கின்றது. இந்த நிகழ்வு நடைபெறக்கூடிய சூழல், பின்னணி போன்றவற்றை அறிந்தோமேன்றால், ஆண்டவர் இயேசு செய்த இந்த அருமடையாளத்தில் எவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்ற என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

பாஸ்கா விழாவைக் கொண்டாட மக்களெல்லாம் எருசலேம் நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கின்ற தருணத்தில்தான் ஆண்டவர் செய்த இந்த அருமடையாளத்தைச் செய்கின்றார். பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேம் நோக்கிப் பயணம் செய்யக்கூடியவர்கள் நிச்சயம் தங்களோடு உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்திருக்கவேண்டும். எப்படி சிறுவன் ஒருவன் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் தன்னோடு கொண்டு வந்தானோ, அது போன்று நிறையப் பேர் தங்களோடு உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்திருக்கவேண்டும். ஏற்கனவே தன்னோடு இருந்து போதனையைக் கேட்ட மக்கள் பசியாய் இருப்பதை உணர்ந்த இயேசு, அவர்களுக்கு உணவு தர முடிவெடுக்கின்றார். அதனடிப்படையில்தான், "இவர்கள் உண்பதற்கு எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்றொரு கேள்வியைக் கேட்டு, கடைசியில் சிறுவனிடம் இருந்ததைப் போன்றே ஏனையோரிடம் உபரியாக அப்பங்களையும் மீன்களையும் கொண்டு ஆண்டவர் இயேசு பெண்கள், குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கின்றார்.

இயேசு செய்த இந்த அருமடையாளம் நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அதில் முதலாவது, இயேசு மக்களை, அவர்களுடைய தேவையை முழுமையாக அறிந்திருக்கின்றார் என்பதாகும். மக்கள் பசியாக இருக்கின்றார்கள் என்பதை யாரும் இயேசுவுக்குச் சொல்லவில்லை. அவராகவே அவர்கள் பசியாக இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்கின்றார். இயேசு மக்கள் பசியாக இருக்கிறார்கள் என்பதை அறிந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களது பசியைப் போக்க அவர்கள்மீது பரிவு கொள்கின்றார். பலர் அடுத்தவருடைய துன்பத்தை அறிந்தாலும் அதனைப் போக்குவதற்கு முன்வருவது கிடையாது. ஆனால், ஆண்டவர் இயேசுவோ மக்கள் பசியாக இருக்கின்றார்கள் என்பதை அறிந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பசியைப் போக்க ஆவன செய்கின்றார்.

இந்த நிகழ்வில் இயேசு செய்த மற்றொரு காரியம் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அது என்னவென்றால், தான் ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததைப் பார்த்துவிட்டு மக்கள் அவரை அரசராக்க முயன்றபோது, அதெல்லாம் தேவையில்லை என்பது போல் மக்களிடமிருந்து விலகிச் செல்கின்றார். இன்றைக்கு நல்லது செய்யும் பலர் ஏதோவொரு ஆதாயத்தோடுதான் செய்கின்றார்கள். ஆனால், இயேசுவோ எந்தவொரு ஆதாயம் இல்லாமல் செய்கின்றார். இதன்மூலம் இயேசு மக்கள்மீது பரிவு கொள்ளும் உண்மையான ஓர் ஆயர் என்பதை நிரூபிக்கின்றார்.

இயேசுவின் வழியில் நடக்கும் மக்களுடைய தேவையை அறிந்து அவற்றை பூர்த்திச் செய்யக்கூடிய நல்ல மனிதர்களாக, பரிவுள்ளம் கொண்டவர்களாக, இருப்பதைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் நல்ல மனம் கொண்டவர்களாக வாழ்வதே சிறந்த ஒரு செயலாகும்.

ஆகவே, நம்மிடம் இருப்பதை இல்லாதவருக்குப் பகிர்ந்தளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!