|
09
ஏப்ரல் 2018 |
|
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வானதூதர்
கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன விழா (மார்ச் 25)
இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப்
பெற்றெடுப்பார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்
7: 10-14; 8: 10b
அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச்
சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு
கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு
கேட்டுக்கொள்ளும்" என்றார்.
அதற்கு ஆகாசு, "நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க
மாட்டேன்" என்றார். அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே!
நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம்
சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட
சோதிக்கப் பார்க்கிறீர்களோ?
ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ,
கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப்
பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர்
"இம்மானுவேல்" என்று பெயரிடுவார்.
ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்" என்று கூறினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-திபா 40: 6-7ய. 7b-8. 9. 10
=================================================================================
பல்லவி: இறைவா, இதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும்
பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள்
திறக்கும்படி செய்தீர். 7a எனவே,
"இதோ வருகின்றேன்." பல்லவி 7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என்
கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான்.
பல்லவி
9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில்
அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே!
நீர் இதை அறிவீர். பல்லவி
10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை;
உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும்
கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு
நான் ஒளிக்கவில்லை. பல்லவி
இரண்டாம் வாசகம்
என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10
சகோதரர் சகோதரிகளே, காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின்
இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு
வந்தபோது, "பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால்
ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம்
போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, `இதோ
வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது"
என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், "நீர் பலிகளையும்
காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும்
விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல" என்று அவர் முதலில்
கூறுகிறார்.
பின்னர் "உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்" என்கிறார்.
பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார். இந்தத்
திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச்
செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1: 14ab
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்;
நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அல்லேலூயா!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
தூயலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள
நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர்
தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு
மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத்
தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்"
என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து
எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக்
கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு
இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத
கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு
அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி
செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். அதற்கு
மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!"
என்றார்.
வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை
உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம்
முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற
இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில்,
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். பின்னர் மரியா,
"நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஒரு தாய் கோவில் வாசல் முன்பாக நின்று கொண்டு சத்தமாக, "கடவுளே
நான் இறந்தால் நரகம் தான் போகவேண்டும்" என்று ஜெபித்தாள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த குருவிற்கு அதிர்ச்சி. எல்லாரும்
சொர்க்கம் போகத்தானே கடவுளிடம் வேண்டுவார்கள், ஆனால் இந்தப்
பெண்மணியோ நரகம் போகவேண்டும் என்று ஜெபிக்கிறாளே என்று உள்ளுக்குள்
குழம்பிப்போனார். ஆனாலும் அவளிடம் எதுவும் கேட்டவில்லை.
இரண்டு மூன்று நாள்கள் அந்தத் தாய் இப்படியே வேண்டிக்
கொண்டிருந்ததால் குரு நேரடியாக அவளிடம் போய்க்கேட்டுவிட்டார்,
"அம்மா எல்லாரும் சொர்க்கம் போகத்தானே ஜெபிப்பார்கள். ஆனால்
நீயோ நரகம் போக வேண்டும் என்று ஜெபிக்கிறாயே. உனக்கு என்ன ஆயிற்று"
என்றார்.
அதற்கு அந்தத் தாய், "சாமி, எனக்குத் திருமணமாகி நீண்ட நாட்கள்
குழந்தையே இல்லை. தவமிருந்து தான் ஒரு பையனைப் பெற்றெடுத்தேன்.
ஆனால் அவனோ ரொம்ப கொடியவானாகிப் போனான். ஊர் மக்கள் எல்லாம்
அவனை "அயோக்கியன்" என்று தான் திட்டுவார்கள். என் மகனுடைய நடவடிக்கைகள்
சரியில்லை என்று சொல்லி என் கணவர் கூட தற்கொலை செய்துகொண்டார்.
அப்படிப் பட்டவன் இறந்தால் நிச்சயம் நரகம் தானே போவான். நரத்திலே
அவனை அன்பு செய்ய யாருமே இருக்க மாட்டார்கள். அதனால்தான் நான்
நகரம் போகவேண்டும் என்று ஜெபிக்கிறேன்" என்றாள்.
அந்தத் தாயின் பாசத்தை நினைத்து குரு ஆச்சர்யப்பட்டுப் போனார்.
இன்று திரு அவையானது இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு
பெருவிழாவைக் கொண்டாடுகிறது. அதாவது நம்மை அதிக அதிகமாய் அன்பு
செய்யும் அன்னை மரியாளுக்கு வானதூதர் மக்கள வார்த்தை சொன்ன
விழாவைக் கொண்டாடுகிறது. மரியாள் நம்மைப் பெற்றெடுத்த தாயைவிட
அதிகமாய் அன்பு செய்பவர். நம்மோடு இருப்பவர்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆகாசிடம், ஓர் இளம்பெண் கருவுற்று ஓர்
ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று
பெயரிடுவீர்" என்ற ஓர் அடையாளம் வழங்கப் படுகிறது. அந்த அடையாளமானது
மரியன்னை வழியாக நிறைவேறுகிறது.
பாவத்தாலும், குற்றங்களாலும் பலவீனம் அடைந்த மானிட சமுதாயத்திற்கு
மரியாள் தன்னுடைய "ஆம்" என்ற ஒரு வார்த்தையால் உயிர்
கொடுக்கிறார். "உமது அடிமை, உமது திருவுளப்படி நடக்கட்டும்" என்று
மரியாள் கடவுளின் திருவுளம் நிறைவேற ஒரு கருவியாக மாறுகிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் "உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்"
என்று வாசிக்கக் கேட்கிறோம். நாம் அன்னை மரியாளைப் போன்று,
போன்று கடவுளின் திருவுளப்படி நடந்து, கடவுளின் ஆட்சி இம்மண்ணில்
நடக்க கருவிகளாவோம்.
மங்கள நிலவே, மாமரி அன்னையே! வாழ்க வாழ்கவே!
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
நிகழ்வு
பிரபல ஆங்கில எழுத்தாளரான ஜே. மாரூஸ் (J. Maurus) என்பவர் சொல்லக்கூடிய
ஒரு கதை.
ஒருமுறை வானத்தில் நீண்ட நேரமாக வட்டமடித்துக் கொண்டிருந்த கழுகு
ஒன்று ஒரு குடிசையின் வெளிமுற்றத்தில் தூக்கிக்கொண்டிருந்த
சிறு குழந்தையையைக் கண்டது. உடனே அது வேகமாகச் சென்று, தன்னுடைய
இரண்டு கால்களுக்கும் இடையே அந்தக் குழந்தையை தூக்கி
வைத்துக்கொண்டு மேலே பறந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில்
இருந்தவர்கள் எல்லாம் அந்தக் குழந்தையை கழுகிடமிருந்து
காப்பாற்றுவதற்கு எவ்வளோ முயற்சித்தார்கள். ஆனால் அந்தக் கழுகு
குழந்தையை தூக்கிக்கொண்டு ஊருக்கு வெளியே இருந்த மலையில் உள்ள
தன்னுடைய கூட்டினில் போய் வைத்துக்கொண்டது.
குழந்தையை மீட்பதற்காக அந்த ஊரில் இருந்த நாட்டாமை மலையேற முயற்சி
செய்தார். ஆனால் சிறுது தூரத்திலேயே அவர் கால்கள் வலிக்கிறது
என்று சொல்லிக்கொண்டு கீழே இறங்கிவிட்டார். அவருக்குப் பின் அந்த
ஊரில் இருந்த ஓர் ஆடு மேய்க்கும் இளைஞன் தான் மலையேறுவதில்
கெட்டிக்காரன் சொல்லிவிட்டு மலையேறினான். மலையில் பாதிதூரம் ஏறிய
அந்த ஆடுமேய்க்கும் இளைஞன் இனிமேலும் தன்னால் மலையேற முடியாது
என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டான். இறுதியாக ஒரு சாதாரண
ஏழைப் பெண்மணி மலைமீது ஏறத் தொடங்கினாள். செங்குத்தாக உயர்ந்து
நின்ற அந்த மலையில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி, மலைமேல் இருந்த
கழுகின் கூட்டினை அடைந்தார். அங்கே இருந்த கழுகை ஒரு கம்பால்
அடித்து விரட்டிவிட்டு, குழந்தையை கையோடு தூக்கிக்கொண்டு கீழே
வந்தார்.
அங்கே கூடியிருந்த மக்களுக்கு எல்லாம் ஆச்சரியம். "எப்படி உன்னால்
மட்டும் முடிந்தது?" என்று எல்லாரும் அவளைக் கேட்டார்கள். அதற்கு
அந்தப் பெண்மணி, "அது என்னுடைய குழந்தை" என்று ஒரே
வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்.
தாயானவள் தன்னுடைய பிள்ளைக்காக எதையும் செய்வாள், ஏன் தன்னுடைய
உயிரையும் தருவாள். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
வரலாற்றுப் பின்புலம்
இன்று நாம் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை
சொன்னதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். தொடக்கத்தில் இவ்விழா
"இயேசுவின் மனித அவதாரப் பெருவிழா" என்று கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர்தான் இன்று நாம் வழங்கும் இப்பெயரால் அழைக்கப்பட்டது.
வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு
ஒரு சாதாரண நிகழ்வு கிடையாது. அது மனித வரலாற்றையே
மாற்றிப்போட்ட நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மரியாள்
சொன்ன ஆம் என்ற ஒற்றைச் சொல்லால்தான் "வார்த்தை வடிவான கடவுளால்
நம்மிடையே குடிகொள்ள முடிந்தது" (யோவா 1:14); மீட்பு இந்த உலகிற்கு
வந்தது. ஆகையால் இந்த நிகழ்வின் முக்கியத்துவதை முதலில் நாம்
உணர்ந்துகொள்ள வேண்டும்.
கபிரியேல் அதிதூதர் மரியாளிடம், "அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர்
உம்முடனே!" என்று சொன்னவுடன், இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்
மரியாள் கலங்குகிறார். இதைக் குறித்து தூய பெர்னார்டின் இவ்வாறு
கூறுவார், "மரியாளிடம் வானதூதர் "உலகத்திலேயே நீதான் மிகப்பெரிய
பாவி" என்று சொல்லியிருந்தால்கூட அவள் ஏற்றிருப்பாள். ஆனால்
அவரோ அருள்மிகப்பெற்றவரே என்று சொன்னதால்தான் மரியாள் கலங்குகிறார்.
காரணம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டு
கலங்கத்தான் செய்யும்".
தொடர்ந்து வானதூதர் மரியாவிடம், "இதோ, கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராய்
இருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை
தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர்
யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்று சொன்னபோது, மரியாள்,
"இது எப்படி நிகழும்?", நான் கன்னி ஆயிற்றே!" என்கிறார். மரியாள்
இப்படிக் கேட்பதில் அர்த்தமில்லாமல் இல்லை. ஏனென்றால் விவிலியத்தில்
வயது முதிர்ந்தோர் கருவுற்று குழந்தையைப் பெற்ற நிகழ்வு இருக்கிறது.
ஆனால் கன்னி ஒருத்தி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வு
இல்லை. அதனால் மரியாள் அப்படிக் கேட்கிறார். மரியாளுடைய
கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட வானதூதர், "தூய ஆவி உம்மீது
வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம்
பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்"
என்று சொன்னபிறகு மரியாள், "நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படி
எனக்கு நிகழட்டும்" என்கிறார். உடனே தூய ஆவியார் அவர்மீது இறங்கி
வர இயேசுவை கருத்தரிக்கிறார்.
ஆகவே, மரியாள் "ஆம்" என்று சொன்ன அந்த ஒரு சொல்லில் மீட்பு இந்த
மண்ணுலகிற்கு வந்துவிட்டது என நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆதிபெற்றோரான
ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மறுத்ததால் பாவம் இந்த மண்ணுலகில்
நுழைந்தது. அந்தப் பாவத்தை மரியாள் தான் சொன்ன ஆம் என்ற
சொல்லினால் விரட்டியடிக்கிறார். வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு
மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு கி.பி. 431 ஆம் ஆண்டிற்குப்
பிறகு இன்றுவரை விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாளுக்கு வானதூதர் கபிரியேல் மங்கள வார்த்தை சொன்ன விழாவைக்
கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி
என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. இறைத்திருவுளத்திற்கு பணிந்து நடத்தல்
நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், எனவே நாம் ஒவ்வொருவரும்
நம்முடைய விருப்பத்தின்படி அல்ல, இறைவிருப்பத்தின் படி நடக்கவேண்டும்.
இதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார். ஆனால் பல
நேரங்களில் இந்த உண்மையை மறந்து, நாம் நம்முடைய விருப்பத்தின்படி
தான்தோன்றித் தனமாக வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஆனால் இன்று நாம் நினைவுகூறும் மரியா தன்னுடைய வாழ்நாள் முழுவதும்
இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்தவர் என்று சொன்னால்
அது மிகையாகாது. ஆண்டவரின் தூதர் மரியாவிடம் இறைவிருப்பத்தை எடுத்துச்
சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும் எல்லாவற்றையும் உணர்ந்துகொண்டு,
"உமது வார்த்தையின் படியே ஆகட்டும்" என்று சொல்லி மரியாள் தன்னுடைய
வாழ்வின் இறுதிக்கட்டம் வரை இறை விருப்பத்தின்படியே நடக்கின்றார்.
இறை விருப்பத்தின் நடப்பதனால் தனக்கு எத்தகைய துன்பம் வரும் என்பதை
அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இருந்தாலும் அவர் எல்லாத் துன்பங்களையும்
சவால்களை மனத்துணிவோடு எதிர்கொண்டார்.
இன்று நாம் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து நடக்கின்றோமா? அல்லது
இறைவன் நம் வழியாய் செயலாற்ற நாம் கருவியை விளங்குகின்றோமா? என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். யோவான் நற்செய்தி 6:38 ல் இயேசு
கூறுவார், "ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை
அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்தேன். இயேசுவிடம், அன்னை மரியாவிடம் விளங்கிய இத்தகைய
மனநிலையை நமதாக்குவோம்.
2. தாழ்ச்சியோடு வாழ்தல்
"தாழ்நிலையில் இருப்போரை ஆண்டவர் உயர்த்துகிறார்" (லூக் 1:53)
என்று மரியாள் இறைவனை நோக்கி பாடல் பாடுவார். இப்பாடல்
யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மரியாவுக்கு நன்றாகவே
பொருந்துகிறது. மரியாள் தாழ்ச்சியோடு வாழ்ந்தார். அதனால்தான்
ஆண்டவர் அவரைத் தேடி வந்தார். மரியாள் ஆண்டவர் இயேசுவைப்
பெற்றெடுத்த பின்னும் அவர் தாழ்ச்சியோடுதான் வாழ்ந்தார். அதனால்தான்
அவர் எங்கோ இருந்த எலிசபெத்தைத் தேடிச் சென்று உதவுகிறார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் தாழ்ச்சியோடு இருக்கிறோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நான் பெரியவன்,
மெத்தப் படித்தவன், எல்லாம் தெரிந்தவன் என்ற ஆணவத்தில், அகங்காரத்தில்
அலைகிறோம். இத்தகைய மனநிலையை மாற்றிக்கொண்டு நாம் தாழ்ச்சியை
ஆடையாக அணிந்துகொண்டு வாழ்வவேண்டும். இயேசு கூறுவார், "தம்மைத்
தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர், தம்மைத்தாமே தாழ்த்துவோர்
உயர்த்தப்படுவர்" (மத் 23:12). ஆகவே, மரியன்னைக்கு விழா எடுக்கும்
இந்த நல்ல நாளில், அவரிடம் விளங்கிய தாழ்ச்சியை, இறை விருப்பத்திற்கு
பணிந்து வாழும் பண்பை நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
"வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க!
ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்" (லூக்கா 1:28)
-- அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை
அதே அன்னையைக் "கடவுளின் தாய்" எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது.
கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனையை நாம் மரியாவுக்கு வழங்குவதில்லை.
ஏனென்றால் மரியா கடவுளின் படைப்பு. கடவுளுக்கு நிகரான நிலை அவருக்குக்
கிடையாது. ஆனால் கடவுளின் திருமகனாகிய இயேசுவை அந்த அன்னை இந்த
உலகிற்குப் பெற்றுத் தந்தார். எனவே, அவருக்குச் சிறப்பு மரியாதை
செலுத்துவது பொருத்தமே என திருச்சபை கற்பிக்கிறது. வானதூதர் கபிரியேல்
மரியாவுக்குத் தோன்றுகிறார். "அருள்மிகப் பெற்றவரே" என்று
கூறி அவரை வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:28). பழைய கத்தோலிக்க
மொழிபெயர்ப்பில் "அருள்நிறைந்தவளே, வாழ்க" என்று இலத்தீன் பாடத்தின்
நேர் தரவாக இருந்தது. புராட்டஸ்டாண்டு சபையினரின் பெயர்ப்பில்
"கிருபை பெற்றவளே, வாழ்க" என்றுள்ளது. உண்மையிலேயே கடவுள் மரியாவுக்கு
ஒரு சிறப்பான மாண்பை அளித்தார் என்பதில் ஐயமில்லை; அதற்கான
விவிலிய ஆதாரமும் உள்ளது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை மரியாவைக்
கடவுளின் நிலைக்கு உயர்த்தி வழிபடுகிறது என்று சிலர் குற்றம்
காண்கிறார்கள். இவ்வாறு குற்றம் காண்பது சரியல்ல என்பதைச்
சுட்டிக்காட்டியாக வேண்டும். அண்மையில் ஒரு வலைப்பதிவில் கண்டது
இது: கேள்வி: "மரியாளை வணங்கக் கூடாது (worshiping Mary is
sin) என உரோமன் கத்தோலிக்கர்களுக்கு விளக்குவது எப்படி?" இதற்கு
தரப்படுகின்ற பதில்: "இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக
இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான். அதில் சந்தேகமில்லை.
சோறு சமைக்க வேண்டுமென்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது.
சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிட வேண்டும். பாத்திரத்தை (cooker)
அல்ல. மரியாள் பாத்திரம். இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது
பாத்திரத்தைக் கடித்துச் சாப்பிடுவது போன்று இருக்கிறது".
-- மேலே தரப்பட்ட மேற்கோளிலிருந்து நாம் அறிவது என்ன? சிலர் கத்தோலிக்கர்
பற்றி உண்மையிலேயே தவறான கருத்துக் கொண்டிருப்பது தெளிவாகவே
தெரிகிறது. கத்தோலிக்கர் மரியாவைக் கடவுளாகக் கருதுவதும் இல்லை,
நம் மீட்பரும் இடைநிலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிகராக
மரியாவைக் கொள்வதும் இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம்
(1962-1965) இந்த உண்மையை அழகாக எடுத்துரைக்கிறது. திருச்சபை
வழக்கில் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற வழிபாடு "ஆராதனை"
(adoration) எனவும் மரியாவுக்கு நாம் அளிக்கின்ற மரியாதை "வணக்கம்"
(veneration) எனவும் கலைச்சொற்களால் குறிக்கப்படுகின்றன. இதோ
வத்திக்கான் சங்கம் தரும் போதனை: "திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு
வணக்கத்தால் (veneration) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது.
ஏனெனில்...இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை
தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து
வணங்கினர்... திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே
தனிப்பட்டது; மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும்
நம் அளிக்கும் ஆராதனையிலிருந்து (adoration) உள்ளியல்பிலேயே இது
வேறுபட்டது; இந்த ஆராதனையை (adoration) இவ்வணக்கம் (veneration)
மிகச் சிறந்தவிதமாய் ஊக்குவிக்கும் எனலாம்" (திருச்சபை, எண்
66).
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு/திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழா
இந்த விழா ஐந்தாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இந்த விழா மார்ச் மாதம்
25 ம் தேதி கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு 9 மாதங்களுக்கு
முன் கொண்டாடப்பட்டது. இது தவக்காலம் அல்லது உயிர்ப்பு
பெருவிழாவின் காலங்களில் வந்ததால், இவ்விழா குறித்துக்காட்டும்
மகிழ்ச்சி பண்புகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே, பிற்காலங்களில் டிசம்பர் 18 ம் தேதிக்கு, இந்த விழா
மாற்றியமைக்கப்பட்டது.
இந்த விழாவானது, மரியாளின் முன்னறிவிப்பு, இயேசு கருவில் உருவான
விழா, இறைமகன் மனிதரான விழா என, பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
1969 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்கு
பின், இந்த விழாவானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
என்று அழைக்கப்பட்டது. புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, இந்த
விழா மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும். புனித வாரத்திலோ
அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு
அடுத்து வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட வேண்டும். இது தவக்காலத்தில்
கொண்டாடப்பட்டாலும் பெருவிழா தான்.
இந்த விழாவின் பெயர், மரியாளின் மீட்புப்பணியில் பங்கு குறைவதாகஅர்த்தம்
கொள்வதற்காக கொடுக்கப்படவில்லை. மாறாக, இந்த விழா இயேசுவின்
மீட்புப்பணியில் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக்
குறிப்பதாக அமைகிறது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
-------------------------------------------------------- |
|