|
08 ஏப்ரல் 2018 |
|
பாஸ்கா காலம்
இரண்டாம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
4: 32-35
அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே
உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக்
கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.
திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என
மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும்
மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை
அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து
திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு
பகிர்ந்து கொடுக்கப்படும்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 118: 2-4. 16ab-18. 22-24
(பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
2 "என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என இஸ்ரயேல் மக்கள்
சாற்றுவார்களாக! 3 "என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என ஆரோனின்
குடும்பத்தார் சாற்றுவார்களாக! 4 "என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு"
என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி
16யbஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச்
செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின்
செயல்களை விரித்துரைப்பேன். 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக்
கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்;
அகமகிழ்வோம். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
5: 1-6
அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும்
கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர்
பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்பு
கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும்
அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக்
கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள்
நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.
ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்;
உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத்
தவிர உலகை வெல்வோர் யார்?
நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால்
மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார்
சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 20: 29
அல்லேலூயா, அல்லேலூயா!
"தோமா, நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு
பெற்றோர்," அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச்
சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.
அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு
அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின்
அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக்
கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.
இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப்
பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ,
அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ,
அவை மன்னிக்கப்படா" என்றார்.
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு
இல்லை.
மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள்.
தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப்
பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி
நான் நம்பமாட்டேன்" என்றார்.
எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே
கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள்
பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில்
நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.
பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு.
உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை
கொள்" என்றார்.
தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!"
என்றார்.
இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர்
பேறுபெற்றோர்" என்றார்.
வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள்
முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.
இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி
அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
இயேசு, சீடர்களை நோக்கி, "மண்ணுலகில் நீங்கள் எவருடைய பாவங்களை
மன்னிப்பீர்களோ அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை
மன்னியாதிருப்பீர்களோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படா" என்றார்.
ஒப்புரவு என்ற திருவருட்சாதனம் இங்கே பிறக்கின்றது. மண்ணுலகில்
பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு" என்ற இறைமகன்,
தனக்குரிய அந்த அதிகாரத்தை தன்னைப் பின்பற்றிய தம் சீடர்களுக்குக்
கொடுக்கிறார்; என்றால், அவர் தம் வாழ்வில் சீடர்களுக்கு எவ்வளவு
உன்னத இடத்தை, மதிப்பைக் கொடுத்திருக்கிறார் நாம் நன்கு உணர
வேண்டும்.
இறைவனிடமிருந்து பெற்ற இந்த திருவருட்சாதனத்தையே நம் அருட்பணியாளர்கள்
நமக்கு வழங்குகின்றனர். நோய்களைக் குணமாக்கவும், தீயஆவிகளை ஓட்டவும்
சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்ததை ஏற்கும்; நாம், பாவங்களை மன்னிக்கும்
அதிகாரம் கொடுத்ததையும் ஏற்று, இறைவனின் ஆசி பெற்ற அந்த அருட்சாதனத்தை,
எவ்வித நிந்தனைகளுக்கும், தேவையற்ற விமர்சனங்களுக்கும் உட்படுத்தாமல்,
அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுப்போம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கைக் கொள்வோம்!
நாட்டுப்புறக் கதை இது. பல ஆண்டுகளாகக் காடுகளிலேயே வாழ்ந்துவந்த
காட்டுவாசி மனிதன் ஒருவன் ஒருநாள் தற்செயலாக அருகிலே இருந்த ஒரு
சிறு நகரத்திற்குச் சென்றான். சிறுநகரத்தில் இருந்த ஒரு
கடையின் வெளியே முகம்பார்க்கும் கண்ணாடிகள் விற்பனை
செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கண்ணாடிகளிலிருந்து
வெளிப்பட்ட ஒளி "பளிச் பளிச்" என்று அவனுடைய கண்ணைப் பறிக்கவே,
அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. எனவே அவன்
கடைக்காரரிடம் சென்று, கண்ணாடி ஒன்றைத் தருமாறு கேட்டான்.
கடைக்காரர், "கையில் பணம் இருக்கின்றதா?" என்று சைகை காட்ட,
அவன் இல்லை என்பதுபோல் தலையை ஆட்டினான். பின்னர் கடைக்காரர்
அவனுடைய கையில் இருந்த பழங்களை கொஞ்சம் வாங்கிக்கொண்டு, அதற்கு
ஈடாக அவனுக்கு ஒரு கண்ணாடியைக் கொடுத்து அனுப்பினார்.
காட்டுவாசி கண்ணாடியை வாங்கி அதனைக் கூர்ந்து பார்த்தபோது,
அதனுள் அவனுடைய தந்தையின் உருவம் இருப்பதைக் கண்டு மிகவும்
ஆச்சரியப்பட்டுப்போனான். (அவனுடைய உருவம்தான் அதற்கு முன்பாகக்
கண்ணாடியே பார்த்திராத அவனுக்கு, அவனுடைய தந்தையின்
உருவம்போன்று தெரிந்தது). எனவே, அவன் தனது தந்தையின் உருவம்
தெரிகின்ற கண்ணாடியை தன்னுடைய மனைவிடம் காட்டலாம் என்று மிக
ஆவலாக எடுத்துக்கொண்டு சென்றான். ஆனால், போகும்போதுதான்
தெரிந்தது தன்னுடைய தந்தையை தனது மனைவிக்குப் பிடிக்காது
என்று. அதனால் மனைவிக்குத் தெரியாமலே தன்னுடைய தந்தையின்
உருவம் தெரிகின்ற கண்ணாடியை வீட்டில் இருக்கும்
மரப்பட்டிக்குள் வைக்கத் தீர்மானித்தான். வீட்டிக்கு வந்தபிறகு
அதனை நடைமுறைப்படுத்தினான்.
அவன் ஒவ்வொருநாளும் காட்டுக்கு வேட்டையாடச் செல்லும்போது
மரப்பெட்டிக்குள் இருந்த "தந்தையின் உருவம்" தெரிகின்ற
கண்ணாடியைப் பார்த்துவிட்டுத்தான் சென்றான். அதை மிகவும்
அதிர்ஷ்டமாக நினைத்து வந்தான். தன் கணவரின் செயல்பாடு ஒருசில
நாட்களாக வித்தியாசமாக இருக்கின்றது என்பதை அறிந்த அவனுடைய
மனைவி அவன்மீது சந்தேகப்படத் தொடங்கினாள். மட்டுமல்லாமல், தன்
கணவர் மரப்பெட்டிக்குள் அப்படி என்னதான்
மறைத்துவைத்திருக்கின்றார் என்று அவன் போன பிறகு
மரப்பெட்டியைத் திறந்து பார்த்தாள். மரப்பெட்டியைத்
திறந்துபார்த்தபோது, உள்ளே இருந்த கண்ணாடியில் அவளுடைய முகம்
தெரிந்தது. ஆனால், அது அவளுடைய முகம்தான் என்பதுகூடத்
தெரியாமல், "இந்த கிழவியைப் பார்க்கத்தான் இந்த ஆள்
இத்தனைநாளும் வேட்டையாடப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு
வெளியே போகிறாரோ, அந்த ஆள் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்"
என்று கொலைவெறியோடு காத்திருந்தாள்.
தன்னுடைய தந்தையின் உருவத்தைப் பார்க்கின்றோம் என்று
காட்டுவாசி நினைக்க, அவனுடைய மனைவியோ யாரோ ஒரு பெண்ணைத்தான்
தன் கணவர் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று
சந்தேகேப்பட்டதைப் போன்று, நாமும்கூட நம்மோடு வாழ்பவர்களை, ஏன்
இறைவனைக் கூட சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றோம். இத்தகைய
போக்கு தவறானது, அதுவும் இயேசுவின் சீடருக்கு அது இருக்கவே
கூடாது என்பதையும், ஆண்டவர் இயேசுவிடத்தில் ஆழமான
நம்பிக்கைகொண்டு வாழவேண்டும் என்றும் இன்றைய இறைவார்த்தை
நமக்கு எடுத்துச் சொல்கின்றது. நாம் அதனைக் குறித்து இப்போது
சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து தங்களை
அறைக்குள் அடைத்துக்கொண்டு இருந்தபோது, உயிர்த்த ஆண்டவர் இயேசு
அவர்களுக்குத் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக"
என்கின்றார். சீடர்கள் ஆண்டவரைக் கண்டதால் மகிழ்ச்சி
கொள்கின்றார்கள். பின்னர் அவர்கள் உயிர்த்த ஆண்டவரைக் கண்ட
செய்தியை, தோமாவிடம் எடுத்துரைகின்றார்கள். ஏனென்றால், ஆண்டவர்
வந்தபோது தோமா அங்கு இல்லை. சீடர்கள் உயிர்த்த ஆண்டவரைக்
கண்டதாகச் சொன்ன செய்தியைக் கேட்டு, நம்ப முடியாதவராய் தோமா,
"நான் ஆண்டவரின் கையில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பில் என்
கையையிட்டு, அவருடைய விலாவில் என் கையை விட்டாலொழிய
நம்பமாட்டேன்" என்கின்றார்.
எட்டு நாட்களுக்குப் பிறகு சீடர்கள் எல்லாம் குழுமி இருக்க
இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, "உங்களுக்கு அமைதி
உரித்தாகுக" என்று வாழ்த்திவிட்டு, தோமாவிடம், "தோமா! என்
கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பில் உன் விரலையிடு, என்
விலாவில் உன் கையை இடு" என்று சொல்கின்றார். அவரோ, "ஆண்டவரே!
என் கடவுளே!" என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை
வெளிப்புடுத்துக்கின்றார். அப்போது இயேசு அவரிடம், "நீ என்னைக்
கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்"
என்கின்றார்.
"இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்" என்று இயேசு பல முறை
உயிர்ப்பைக் குறித்துச் சொல்லியிருக்கின்றார், அது
மட்டுமல்லாமல், உயிர்த்த ஆண்டவரை சீடர்கள் கண்ணால் கண்டு, அதனை
தோமாவிற்கு அறிவித்திருக்கின்றார்கள். அப்படியிருந்தம் தோமா,
மேற்சொன்ன வார்த்தைகளைச் சொல்வது அவருடைய சந்தேகப் புத்தியைக்
காட்டுகின்றதே அன்றி, வேறொன்றும் இல்லை. பல நேரங்களில்
நாமும்கூட, ஆண்டவர் இயேசுவை முழுமையாக நம்பாமல், அவரை
ஒருவிதமான சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கின்றோம். இத்தகைய
நிலையைப் பார்த்துத்தான் ஆண்டவர் இயேசு, "ஐயம் தவிர்த்து
நம்பிக்கை கொள்" என்று சொல்கின்றார். ஆகவே, நாம் நம்மிடம்
இருக்கின்ற ஐயப்பாட்டைத் தவித்து, ஆண்டவரிடத்தில் அசைக்க
முடியாத நம்பிக்கை கொண்டுவாழ முயற்சி எடுக்கவேண்டும்.
இயேசுவிடத்தில் நம்பிக்கைகொண்டு வாழவேண்டும் என்று
சிந்தித்துப் பார்த்த நாம், அந்த நம்பிக்கையோடு மட்டும்
நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை முடிவுறுகின்றதா என்றால் நிச்சயமாக
இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், தூய யாக்கோபு
எழுதிய திருமுகத்தில் வாசிக்கின்றோம், "நம்பிக்கை செயல்வடிவம்
பெறாவிட்டால், தன்னிலே அது உயிரற்றது" என்று (2: 14-16). இது
உண்மையிலும் உண்மையான செய்தி. நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை
வைத்திருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு, அதற்கேற்ப வாழவில்லை
என்றால், நாம் ஆண்டவரிடம் கொண்ட நம்பிக்கையினால் என்ன பயன்
விளைந்துவிடப் போகின்றது. ஆகவே, நாம் இறைவனிடத்தில் கொள்ளும்
நம்பிக்கை செயல்வடிவம் பெறவேண்டும்.
இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுத்து
வாழ்ந்தவர்கள் பலர் இருந்தாலும், நமக்கு மிகப்பெரிய முன்
உதாரணமாக இருப்பவர்கள் தொடக்ககால கிறிஸ்தவர்கள் என்று சொன்னால்
அது மிகையாகாது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகம், அவர்கள் எப்படி
முன் மாதிரியான வாழ்க்கை - நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கின்ற வாழ்க்கை
-
வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அவர்கள்
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தார்கள்; அவர்களுள் எவரும்
தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை, எல்லாம்
அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. அதனால் தேவையில் உழல்வோர்
எவரும் அவர்களிடத்தில் காணப்படவில்லை. இதன்வழியாக அவர்கள்
மக்களுடைய நன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள் என்று
வாசிக்கின்றோம்.
"சொல்லில் சிறந்த சொல் செயல் என்பார்கள்". அக்கூற்றிற்கு ஏற்ப
தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை
வெறும் வார்த்தைகளால் மட்டும் அறிவிக்கவில்லை, அவர்கள்
தங்களுடைய வாழ்வினால் அறிவித்தார்கள்; இருப்பதை இல்லாதவரோடு
பகிர்ந்து வாழ்ந்து வாழ்ந்தார்கள்; ஒருமனப் பட்டவர்களாய்
வாழ்ந்தார்கள். அதனால் அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்து
மற்றவர்களும் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள்.
இதனாலேயே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்தது.
இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு வாழும் நாம், நம்மிடம் இருப்பதை
இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். பல நேரங்களில் "தனக்குப் போகத்தான் தானமும்
தர்மமும் என்ற மனநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இது உண்மையான
கிறிஸ்தவ மனநிலையாக இருக்காது. இயேசுவின் வழியில் நடப்பவர்கள்
தங்களிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவேண்டும்.
ஒரு குடும்பத்தில் தந்தை, தாய், அவர்களுடைய இரண்டு மகன்கள்
ராயன், கெவின் என நான்கு பேர் வாழ்ந்துவந்தார்கள். ஒரு நாள்
தாயானவள் கேக் தயாரித்துக் கொண்டிருந்தாள். அதனை மூத்தவன்
ராயனும் இளையவன் கெவினும் அருகிலே இருந்து
கவனித்துக்கொண்டிருந்தார்கள். தாய் கேக் தயாரித்து முடித்ததும்
இருவரும், "இது எனக்குத்தான் வேண்டும், எனக்குத்தான் வேண்டும்"
என்று கத்தி கூப்பாடு போட்டார்கள். அப்போது தாய் அவர்கள்
இருவரிடம், "இரண்டு பேரும் பாதிபாதியாக பகிர்ந்து உண்ணலாமே"
என்றாள். அவள் சொன்னதைக் கேட்காமல் இருவரும், "பாதிபாதியாக
எல்லாம் பகிருந்து உண்ண முடியாது, உண்டால் முழுவதுமாகத்தான்
உண்ணவேண்டும்" என்று கத்தினார்கள். அப்போது அவள் அவர்களைப்
பார்த்து, "ஒருவேளை இயேசு மட்டும் இங்கிருந்தால், அவர்,
"இந்தக் கேக் எனக்கு வேண்டாம், என்னுடைய சகோதரன் வேண்டுமானால்
சாப்பிடட்டும்" என்று சொல்லி விட்டுக் கொடுத்திருப்பார்"
என்றார்.
அவள் இவ்வாறு சொல்லி முடிப்பதற்குள் முத்தவன் ராயன் தாயைப்
பார்த்து, "அம்மா! இங்கு கெவின் வேண்டுமானால் இயேசுவாக
இருக்கட்டும், நான் அவருடைய சகோதராக இருக்கின்றேன்" என்று
சொல்லிகொண்டு முழு கேக்கையும் தூக்கிக் கொண்டு ஓடிப்போனான்.
நம்மிடம் பகரக்கூடிய மனநிலை இன்னும் வரலவில்லை என்பதைத்தான்
இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது. இயேசுவின் சீடர்கள்,
அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்பவர்கள் பகர்தலில் சிறந்து
விளங்குவதான் சிறப்பானது.
நாம் பகிர்தலில், ஒருவர் மற்றவர் மீதான அன்பில் வளர்கின்றபோது
இயேசுவின் சீடர்களாக மாறுவதோடு மட்டுமல்லாமல், கடவுளின்
அன்புப் பிள்ளைகாளாகவும் மாறுவோம் என்பது உறுதி. இன்றைய
இரண்டாம் வாசகம் அதைத்தான் நமக்கு எடுத்துரைக்கின்றது.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரிடத்தில் முழுமையான
நம்பிக்கை கொண்டு வாழ்வோம். நம்பிக்கை கொள்வதோடு
மட்டுமல்லாமல், நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்போம்.
அதன்வழியாக இறைவனின் அன்பு மக்களாவோம், இறையருளை நிறைவாய்
பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
தோமாவின் அழைப்பு
திருத்தூதர் பணிகள் 4:32-35
1 யோவான் 5:1-6
யோவான் 20:19-31
திருவழிபாட்டு ஆண்டின் பாஸ்கா காலத்தின் 2ஆம் ஞாயிற்றை அலங்கரிக்கும்
நாயகன் திருத்தூதர் தோமா. இந்த நாயகனின் அழைப்பை நம் இன்றைய
சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். நற்செய்தி நூல்களில் 4
திருத்தூதர்களின் (பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு) அழைப்பு
மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது. உயிர்ப்புக்குப் பின்
தோமாவுக்குத் தோன்றும் நிகழ்விற்கும் மோசேயின் அழைப்பு நிகழ்விற்கும்
(விப 3) ஏதோ தொடர்பு இருப்பதாகவே நான் உணர்கிறேன். இதில் என்ன
விந்தை என்றால், மற்ற திருத்தூதர்களின் அழைப்பு அவர்களுக்கான
அழைப்பாக மட்டுமே இருக்கிறது. ஆனால், தோமாவின் அழைப்பு நம் ஒவ்வொருவருக்கான
அழைப்பாக இருக்கிறது.
எப்படி?
முதலில் தோமா என்ற கதைமாந்தரைப் புரிந்துகொள்வோம்.
தோமா பேசியதாக யோவான் நற்செய்தியாளர் (மட்டும்) மூன்று இடங்களில்
பதிவு செய்கின்றார்:
முதலில், இலாசர் உயிர்ப்பு நிகழ்வு. இலாசரை உயிர்ப்பிக்க
விரும்பிய இயேசு, 'மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்'
என்கிறார். 'ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்'
என்று மற்ற சீடர்கள் தயக்கம் காட்டியபோது, 'நாமும் செல்வோம்,
அவரோடு இறப்போம்' (யோவா 11:16) என்று துணிந்து சொல்கிறார்
தோமா.
இரண்டாவதாக, இறுதி இராவுணவில் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவிய
இயேசு, யாருக்கும் புரியாததுபோல 'நான் அங்க போறேன். இங்க
போறேன். வழி தெரியாது. வகை தெரியாது. உறைவிடம் இருக்கு. தந்தை
இருக்காரு' என்று சொல்லிக்கொண்டே போக, தோமா குறுக்கிட்டு, 'ஆண்டவரே,
நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க
நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்துகொள்ள இயலும்?'
(யோவா 14:5)
என்கிறார்.
மூன்றாவதாக, தாங்கள் உயிர்த்த இயேசுவைக் கண்டதை மற்ற சீடர்கள்
தோமாவிடம், 'நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்' என்று சொல்ல, 'அவருடைய
கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை
விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'
(யோவா 20:25) என்கிறார்.
மேற்காணும் மூன்று நிகழ்வுகளின் பின்புலத்தில் தோமாவின் மூன்று
பண்புகளை நாம் முன்வைக்கலாம்:
அ. தோமா பயம் இல்லாதவர். அச்சங்கள் தவிர்த்தவர்
வாரத்தின் முதல் நாள் மாலையில் இயேசு சீடர்களுக்குத் தோன்றியபோது,
சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளை அடைத்துக்கொண்டு அறையில்
ஒளிந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால், தோமா அவர்களோடு இல்லை. ஆக,
அவர் வெளியில்தான் இருந்திருக்கின்றார். ஒருவேளை நகரில் என்ன
நடக்கிறது என்பதைப் பார்க்க அவர் வெளியில் சென்றிருக்கலாம். அல்லது
தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருக்கலாம். அல்லது
யூதாசுக்கு என்ன நடந்தது என்ற பார்க்கச் சென்றிருக்கலாம். எப்படியோ
அவர் அவர்களோடு இல்லை. அவரின் தனிமை அவர் பயமற்றவர் என்பதைக்
காட்டுகிறது.
ஆ. தோமா ப்ராக்டிகல் ஆனவர்
வானத்தில் தெரியும் ஆகாய தாமரையைவிட கையில் இருக்கும் மல்லிகைப்பூ
பெரிது என நினைத்தவர் தோமா. ஆகையால்தான் இயேசு தன் வான்
வீட்டிற்கான வழியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, 'நீர்
போகிற இடமே தெரியாதபோது வழி எப்படித் தெரியும்?' எனக்
கேட்கிறார். மேலும், இயேசுவின் உயிர்ப்பின்போது பல இறைமக்களின்
உடல்கள் உயிர்த்தெழுந்ததாகவும் அவர்கள் எருசலேமில் பல இடங்களில்
தோன்றினார்கள் எனவும் மத்தேயு நற்செய்தியாளர் பதிவு
செய்கின்றார். ஆக, தோமாவைப் பொறுத்தமட்டில் சீடர்களுக்குத்
தோன்றியது இவர்களில் யாராவது ஒருவருடைய உடலாக இருக்கலாம். ஏன்?
யூதாசு கூட தோன்றியிருக்கலாம். விலாவில் காயம், கரங்களில் காயம்பட்ட
உடல் இயேசுவின் உடலாகத்தான் இருக்க முடியும். இவ்வாறாக, நம்புவதற்கும்
லாஜிக் வேணும், பக்தியிலும் கொஞ்சம் ப்ராக்டிகாலிட்டி வேணும்
என நினைக்கிறார் தோமா.
இ. தோமா உள்மனச்சுதந்திரம் கொண்டவர்
'நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்' என்று சீடர்கள் சொன்னவுடன், தான்
அந்த வாய்ப்பை தவற விட்டோம் என்ற வருத்தமோ, குற்ற உணர்வோ, அல்லது
'இவர்கள் எல்லாம் பார்த்துவிட்டார்களே' என்று தன் சக திருத்தூதர்கள்மேல்
பொறாமையோ இல்லை. மேலும் 'நீங்கள் உயிர்த்த ஆண்டவரைப் பார்த்த
பாக்கிசாலிகள்' என்று அவர்களை மேலே உயர்த்திக் கொண்டாடவும் இல்லை.
வெளிப்புறத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் தன் உணர்வைப்
பாதிக்காத ஒருவரே உள்மனச்சுதந்திரம் கொண்டவர். அதை நிறைவாகப்
பெற்றிருக்கிறார் தோமா.
நிற்க.
இங்கு, தோமாவுக்குத் தோன்றிய இயேசுவின் மூன்று பண்புகளையும் பற்றிச்
சுருக்கமாகச் சொல்லிவிடுவோம்:
அ. இயேசு தன் சீடர்களைக் கடிந்துகொள்ளவில்லை
வாரத்தின் முதல் நாள் மாலை தோன்றியபோதும், எட்டாம் நாள் தோன்றியபோதும்
இயேசு தம் சீடர்கள் தம்மைவிட்டு ஓடியதற்காகவோ, அல்லது தம்மை
அவர்கள் மறுதலித்ததற்காகவோ, பூட்டிய வீட்டிற்குள் ஒளிந்துகொண்டிருப்பதற்காகவோ
அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. 'எல்லாரும் இங்க இருக்க, நீ மட்டும்
எங்க போன?' என்று தோமாவையும் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்களைக்
காணும்போதெல்லாம், 'அமைதி' (ஷலோம்) என்று மட்டுமே
சொல்கின்றார். சிலுவையிலேயே அவர் எல்லாக் காயங்களையும் மன்னித்துவிட்டதால்
என்னவோ அவருக்கு இங்கே மன்னிக்க ஏதும் இல்லை.
ஆ. இயேசு தன் சீடர்களின் எண்ணங்களை அறிந்திருந்தார்
ஆகையால்தான் தோமா தன் சக திருத்தூதர்களிடம் பேசியது அவருக்குத்
தெரிந்தது. சீடர்களின் பயம், கலக்கம், திகில், அச்சம், வியப்பு,
மகிழ்ச்சி என அவர்களின் எல்லா உள்ளுணர்வுகளையும் அறிந்திருந்தார்
இயேசு.
இ. இயேசு நேரத்தையும் இடத்தையும் கடந்தவராக இருந்தார்
பூட்டிய அறைக்குள் நுழையும் வகையிலும், அதே நேரத்தில் எதையும்
தொட்டு உணரும் நிலையிலும் இயேசு இருந்தார். இயேசுவின் சமகாலத்தின்
கிரேக்க புரிதல்படி ஆவிக்கும் மனித உடலுக்கும் உள்ள வேற்றுமை
'பார்த்தல்,' 'கேட்டல்,' 'தொடுதல்' என்னும் மூன்று உணர்வுகளில்
இருந்தது. இயேசு இந்த மூன்று உணர்வுகளையும் கொண்டவராக இருக்கிறார்.
இந்த மூன்று பண்புகளுக்காகத்தான் என்னவோ, இயேசு தன் முன்
தோன்றி, 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை
நீட்டி என் விலாவில் இடு' என்ற சொன்னவுடன், 'நீரே என் ஆண்டவர்!
நீரே என் கடவுள்!' என சரணாகதி அடைகின்றார்.
மற்றவர்கள் எல்லாம் இயேசுவில் ஆண்டவரைக் கண்டனர். ஆனால், தோமா
மட்டுமே அவரில் கடவுளைக் காண்கிறார். தோமாவின் மிகப்பெரிய நம்பிக்கை
அறிக்கை இது.
இந்த நம்பிக்கை அறிக்கையோடு யோவானும் தன் நற்செய்தியை நிறைவு
செய்கிறார்.
இந்த இடத்தில் மோசேக்கும், தோமாவுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பதிவு
செய்வோம்:
அ. அழைக்கப்பட்டபோது மோசேயும், தோமாவும் தனியே இருக்கின்றனர்.
ஆ. எகிப்தில் இஸ்ரயேல் மக்களின் துன்பங்களைக் கண்டு, அவர்கள்
துயரங்களின் ஒலியைக் காதால் கேட்டதால் இறங்கி வருகின்றார் கடவுள்.
இங்கே தோமாவின் ஏக்கத்தைக் கண்டு, எதிர்பார்ப்பு வார்த்தைகளைக்
கேட்டவுடன் இறங்கி வருகின்றார் இயேசு.
இ. அந்த நிகழ்விலும் யாவே இறைவனின் பெயர் 'ஆண்டவர்' என்றும் 'கடவுள்'
என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கேயும் அதே சொற்களால் இயேசுவை
அழைக்கின்றார் தோமா.
ஈ. அங்கே இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனைக் தங்கள் கடவுள் என ஏற்றுக்கொள்கின்றனர்.
இங்கே தோமா இயேசுவைத் தன் கடவுள் என ஏற்றுக்கொள்கின்றார்.
உ. அங்கே மோசே தயக்கம் காட்டுகிறார். இங்கே தோமாவும் தயக்கம்
காட்டுகிறார்.
ஊ. மோசே கடவுளை முட்புதரில் கண்டார். நம்பினார். ஆனால், அவர்
சொன்னதைக் கேட்ட மக்கள் காணாமலே நம்பினர். இங்கே தோமா இயேசுவைக்
கண்டார். நம்பினார். இவர்(கள்) சொன்னதைக் கேட்ட, கேட்கின்ற
நாம் இன்றுவரை இயேசுவை நம்புகின்றோம்.
இவ்வாறாக, மோசேக்கு கிடைத்த முட்புதர் அனுபவம் அவரை பாரவோன்
முன்னிலையில் நிறுத்தியதுபோல, தோமாவுக்கு கிடைத்த இந்த அனுபவம்
அவரைக் கண்டங்களைக் கடந்து செல்லும் திருத்தூதர் ஆக்குகிறது.
இயேசு-தோமா நிகழ்வு நமக்கு ஒரு அழைப்பையும், ஒரு ஆறுதலையும்
விடுக்கிறது:
அழைப்பு: 'நம்பிக்கையற்றவனாய் இராதே! நம்பிக்கை கொள்!'
நம்பிக்கை என்பது ஒரு சாய்ஸ். நான் நம்பிக்கையற்றவனாகவும் இருக்கலாம்.
நம்பிக்கையாளனாகவும் இருக்கலாம். முந்தைய நிலையிலிருந்து
பிந்தைய நிலைக்குக் கடந்து வருகின்றார் தோமா. தோமாவின் இந்தப்
பயணம் ஒரு போராட்டமாக, தயக்கமாக, ஐயமாக இருக்கிறது. இஸ்ரயேல்
மக்களும் மோசேயையும், மோசே சொன்ன கடவுளையும் உடனே முழுமையாக நம்பிவிடவில்லை.
அவர்களும் தயக்கம் காட்டுகின்றனர். சந்தேகம் கொள்கின்றனர். நம்பிக்கையில்
பின்வாங்குகின்றனர். மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக
முணுமுணுக்கிறார்கள்.
இந்த நம்பிக்கை எனக்கு ரொம்ப அவசியம். என் நாளை நகர்த்த உதவுவது
இதுவே.
கடவுள் மேல் உள்ள நம்பிக்கை மட்டும் நம்பிக்கை அல்ல. பிறர்மேல்,
தன்மேல் வைப்பதும் நம்பிக்கையே. 'நம்பிக்கை' என்பது 'எமேத்' என்று
சொல்கிறது எபிரேயம். 'எமேத்' என்றால் பாறை. அதாவது, தளர்ச்சியின்
எதிர்ப்பதம் இது. தளராத, நொறுங்காத, அசையாத எதுவும் நம்பிக்கையே.
தளராத, நொறுங்காத, அசையாத ஒன்றின்மேல்தான் நாம் அதைவிட மேலானதைக்
கட்ட முடியும்.
இன்று இறைநம்பிக்கை, பிறர்நம்பிக்கை, தன்நம்பிக்கை என்னும்
முக்கோணத்தில் நான் நம்பிக்கையற்றவனாய் இருக்கக் காரணமாக இருப்பது
எது? அதை நான் எப்படி களைகின்றேன்?
ஆறுதல்: 'காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'
'காண்பதையும், கேட்பதையும், தொடுவதையம் தாண்டிய ஒரு உலகம் இருக்கிறது'
எனச் சொல்கிறது இயேசுவின் இந்த ஆறுதல். நம் வீடுகளில் இறந்த நம்
அப்பாவோ, அம்மாவோ நம்மோடு இப்போது இல்லை என்றாலும், அவர்களின்
நினைவு நமக்கு ஒருவித ஆற்றலைத் தருகிறதே. ஏன்? காண்கின்றவர்கள்
தரும் ஆற்றலைவிட காணாத அவர்கள் எனக்கு எப்படி நம்பிக்கை தர
முடிகிறது? ஆக, வாழ்வை விரித்து, விசாலமாகப் பார்த்தல் அவசியமாகிறது.
இயேசுவைச் சுற்றி கால வட்டங்கள் வரைந்துகொண்டே சென்றால் நாம்
இப்போது 2018ஆம் வட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். தோமாவும்
அவருடைய சக திருத்தூதர்களும் இயேசுவைக் காண்கின்றனர். நம்புகின்றனர்.
ஆனால், நமக்கு அந்த முதல் நேரிடை அனுபவம் கிடையாது. நாம் நம்புவது
சீடர்களின் சீடர்களின் சீடர்களின் சீடர்களின் ... சீடர்களையே.
ஆக, நீங்க, நான், அவர் என எல்லாருமே காணாமலே நம்புவோர்தாம்.
இறுதியாக,
காண முடியாதவற்றையும் கண்டு நம்பக் கற்றுக்கொண்டோமென்றால்,
காண்கின்ற எந்த மனிதரோடும் நம்மால் இணக்கமாகவும், அமைதியாகவும்,
பகிர்ந்துகொண்டும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் வாழ முடியும்.
அந்த நிலையைத்தான் இன்றைய முதல் வாசகம் (திப 4:32-35) நமக்குப்
படம்பிடித்துக்காட்டுகிறது.
தோமாவின் அழைப்பு - அவருக்கும், உங்களுக்கும், எனக்கும் - நம்பிக்கை
கொள்ள, காண முடியாதவற்றைக் காண!
(அருட்தந்தை இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|