|
05 ஏப்ரல் 2018 |
|
பாஸ்கா
எண்கிழமை வியாழன் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள்
கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
3: 11-26
கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும்
விடாமல் பற்றிக்கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்றுச் சாலமோன்
மண்டபம் என்னும் இடத்திற்கு ஒருசேர ஓடிவந்தனர். பேதுரு இதைக்
கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: "எருசலேம் மக்களே, நீங்கள்
ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த
வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன்
எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்?
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள்
தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப்
புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்து விட்டீர்கள். அவன் அவருக்கு
விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.
நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை
விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை
நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு
எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.
இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின்
பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான்
இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு
முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.
அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச்
செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம்
மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும்
முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள்
போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்.
அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக
ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார். விண்ணேற்றமடைந்த
இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம்வரை விண்ணுலகில் இருக்கவேண்டும்.
பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக்
குறித்துக் கூறியிருந்தார்.
மோசேயும், "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிட மிருந்து
என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார். அவர் உங்களுக்குக்
கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள். அந்த இறைவாக்கினருக்குச்
செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்"
என்று கூறியுள்ளார்.
சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி
அறிவித்து வந்தனர். அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை உரிமையாக்கிக்கொள்பவர்கள்
நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், "உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள்
அனைத்தும் ஆசி பெறும்" என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள்
உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக்கொள்பவர்கள்
நீங்களே.
ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீய செயல்களை விட்டு விலகி
ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச்
செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 8: 1a,4. 5-6. 7-8 (பல்லவி: 1ab)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
1a ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு
மேன்மையாய் விளங்குகின்றது! 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு
அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்? பல்லவி
5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச்
சூட்டியுள்ளீர். 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படிச்
செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
பல்லவி
7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், 8 வானத்துப்
பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள்
அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி
விரும்பினால் தொடர் பாடலைச் சொல்லலாம்.
(காண்க: பக்கம் 443)
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 118: 24
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;
இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும்
என்று எழுதியுள்ளது.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48
அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தை
பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு
இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு
பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு
அமைதி உரித்தாகுக!" என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள்
திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய்
நினைத்தார்கள். அதற்கு அவர், "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?
ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும்
என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்;
எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக்
கிடையாதே" என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம்
கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்கு
உள்ளாகி இருந்தார்கள்.அப்போது அவர் அவர்களிடம், "உண்பதற்கு இங்கே
உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த
மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து
அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
பின்பு அவர் அவர்களைப் பார்த்து, "மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர்
நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள
அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச்
சொல்லியிருந்தேனே" என்றார்; அப்போது மறைநூலைப்
புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார்.
அவர் அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ
வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம்
தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட
வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்"
என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
உயிர்ப்பினை புரிந்து கொள்ள விவிலிய அறிவு இருக்க வேண்டும் என்பதனை
மிகவே அருமையாக விவரிக்கின்றார். விவிலிய அறிவே நம்மை இயேசுவின்
உயிர்ப்பினை புரிந்து கொள்ளச் செய்யும். உயிர்ப்பு உண்டு என்பதனை
விவிலியம் ஏற்கனவே முன் அறிவித்துள்ளது. எனவே உயிர்ப்ப நடந்துள்ளத
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதுவே உண்மை.
இதற்கு இன்னும் உறுதி தரும் பொருட்டு, ஆவியாக அல்ல, மனிதனாகவே
உயிர்ப்பு நடந்தள்ளது என்பதனை விவரிக்க, உங்களிடையே என்ன உண்பதற்கு
உள்ளது என்று கேட்டு வாங்கி சாப்பிடுகின்றார். தன் உண்மையான உயிர்ப்பினை
உறுதி செய்கின்றார்.
நம்புவோம். நலம் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
உலக அளவில் நான்காவது பணக்காரராக இருப்பவர் ப்ருனையைச் சார்ந்த
சுல்தான் என்பவர் (Sultan of Brunei). அரேபியாவில் உள்ள
ப்ருனையில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் அனைத்தும் இவருக்குத்தான்
சொந்தம். மட்டுமல்லாமல் உலகில் உள்ள மிகப்பெரிய அரண்மனை இவருடையதுதான்.
லண்டனில் கல்வி, நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள், கப்பல்கள்,
உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் உயர்தர உணவகங்கள் என்று இவருக்கு
இருக்கின்ற சொத்து பத்துகள் ஏராளம்.
இதனால்தான் என்னவோ இவர் அடுத்து எங்கு செல்கின்றார், என்ன
செய்கிறார் என்பதை யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கின்றார்.
ஒருவேளை இவர் அடுத்து எங்கு செல்கின்றார் என்ன செய்கின்றார் என்பது
மற்றவருக்குத் தெரிந்துவிட்டால், அவர்கள் கடத்திக்கொண்டு போய்
அவரிடமிருப்பதைப் பறித்துவிடுவார்கள் என்பதால் அதனை யாருக்கும்
சொல்லாமல் இரகசியம் காத்து வருகின்றார்.
சுல்தானிடம் பணம் சொத்து சுகம் எல்லாம் கொட்டிக் கிடந்தது என்ன
பயன்?. நிம்மதியாக, அமைதியாக ஓரிடத்தில் இருக்க முடியாதது மிகவும்
துரதிஸ்டவசமாகும். ப்ருனை சுல்தானைப் போன்றுதான் நிறையப் பேர்
பணம், சொத்து சுகம் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல், மன அமைதியில்லாமல்
நடைபிணங்களாக அலைந்துகொண்டிருக்கின்றார்கள். இன்னும்
சொல்லாப்போனால், இந்த சமூகமே அமைதியை இழந்த சமூகமாக இருக்கின்றது.
இத்தகைய பின்னணியில்தான் நாம் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு
தன் சீடர்களுக்குச் சொல்கின்ற, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக"
என்ற வார்த்தைகளை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நற்செய்தி வாசகத்தில், சீடர்கள் அனைவரும் யூதர்களுக்கு பயந்து
தங்களை அறைக்குள் அடைத்துக் கொண்டு இருக்கும்போது உயிர்த்த ஆண்டவர்
இயேசு அவர்கள் நடுவில் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக"
என்கின்றார். சீடர்களோ ஏதோ ஆவியைக் கண்டவர்களைப் போன்று
திகிலுற, இயேசு அவர்களிடம், "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன்
இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும்
கால்களையும் பாருங்கள். நானேதான்" என்று சொல்லி அவர்களைத் திடப்படுத்துகின்றார்.
உயிர்த்த ஆண்டவர் இயேசு தன் சீடர்களுக்குச் சொன்ன, "உங்களுக்கு
அமைதி உரித்தாகுக" என்ற வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள்
கிடையாது. அவை திடப்படுத்தக்கூடிய வார்த்தைகள்; ஆட்சியாளர்களுக்கும்
அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் அஞ்சி வாழ்ந்த சீடர்களுக்கு
ஆறுதல் அளிக்கக்கூடிய வார்த்தைகள். இவ்வார்த்தைகளைக் கேட்ட
பின்பு, சீடர்கள் பயத்திலிருந்தும் கலக்கத்திலிருந்தும் விடுதலை
பெற்றவர்களாய் துணிவுடன் ஆண்டவருக்குச் சான்று பகரத் தொடங்குகிறார்கள்.
இயேசு தன் சீடர்களுக்குச் சொன்ன அதே வார்த்தைகளைத் தான் இன்று
நமக்கு சொல்கின்றார். நாம் எல்லாவித அச்ச உணர்வுகளிலிருந்தும்
விடுதலை பெற்று ஆண்டவருக்குச் சான்று பகர்கின்றோமா? என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அடுத்ததாக இயேசு சொன்ன, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்னும்
வார்த்தைகளை, வாழ்வில் மன அமைதியில்லாமல், வேதனையோடு இருக்கக்கூடிய
மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளலாம்.
இயேசுவின் இறப்பால் சீடர்கள் பெரிதும் வேதனைக்கும் கலக்கத்திற்கும்
உள்ளாகி இருப்பார்கள். இப்படிப்பட்ட தருணத்தில்தான் உயிர்த்த
ஆண்டவர் இயேசு அவர்கள் நடுவில் தோன்றி, தான் உண்மையாகவே உயிர்த்துவிட்டேன்
என்று அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு உங்களுக்கு அமைதி
உரித்தாகுக என்று வாழ்த்துகின்றார். இயேசு கூறிய இத்தகைய
வாழ்த்தினால் அவர்கள் நிச்சயம் வேதனையிலிருந்து ஆறுதலை அடைந்திருக்க
முடியும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
வாழ்வில் நிம்மதியையும் மன அமைதியையும் தொலைத்து நிற்கும்போது
நாம் ஆண்டவர் இயேசுவை நாடி வருகின்றோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். பல நேரங்களில் நிம்மதியை மன அமைதியை யாராரிடமெல்லாமோ
தேடித் போகின்றோம். அல்லது போதை இன்னபிற காரியங்களில் அமைதியைத்
தேடி அலைகின்றோம். உண்மை என்னவென்றால் இயேசு ஒருவரைத் தவிர
வேறு யாராலும் உண்மையான அமைதியைத் தர முடியாது. அதனால்தான் இயேசு
சொல்கின்றார், "இந்த உலகம் தர முடியாத அமைதியை நான் உங்களுக்குத்
தருகின்றேன்" என்று. வாழ்வில் நிம்மதியை, உண்மையான அமைதியைத்
தொலைத்துவிட்டு சக்கேயு யாராரிடத்தில் எல்லாமோ சென்றிருக்கலாம்.
அவர்களால் அவருக்கு அமைதியைத் தரமுடியவில்லை. மாறாக இயேசு ஒருவரால்தான்
தர முடிந்தது.
ஆகவே, இந்த உலகம் தர முடியாத அமைதியைத் தருகின்ற இயேசுவிடம்
நாம் வருவோம். அதன்வழியாக அவர் தரக்கூடிய உண்மையான அமைதியைப்
பெற்றுக்கொண்டு, இறைவனின் அன்பில் நிலைத்திருப்போம். இறையருள்
நிறைவாய் பெறுவோம். Antony
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
"சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவே
நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்னு அவர்களை
வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர்
ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்" (லூக்கா 24:36-37)
சாவிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றியபோது
சீடர்கள் அவரை எளிதில் கண்டுகொள்ளவில்லை என்பதை நற்செய்தி நூல்கள்
அடிக்கடி குறிப்பிடுகின்றன. அவர்கள் "ஓர் ஆவியைக் காண்பதாக
நினைத்தார்கள்" (லூக் 24:37), அவர்களை அச்சம் மேற்கொண்டிருந்தது
என்றும் லூக்கா குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. உயிர்த்தெழுந்த
இயேசு சாதாரண மனித உருவில் சீடர்களுக்குத் தோன்றவில்லை என்பதையே
இது காட்டுகிறது. சீடர்கள் இயேசுவை அடையாளம் காண்பதற்கு நேரம்
பிடித்தது. இயேசு அவர்களுக்குத் தம் கைகளையும் கால்களையும்
தொட்டுப்பார்க்கச் சொல்கிறார். மேலும் இயேசு சீடர்களை
வாழ்த்திய முறையும் நம் கவனத்தை ஈர்க்கிறது. சீடர்களை சந்திக்கும்போதெல்லாம்
இயேசு, "உங்களுக்கு அமைதி!" என வாழ்த்துகிறார். அமைதி என்னும்
சொல் விவிலியத்தில் ஆழ்ந்த பொருள்கொண்டது. கடவுளின் அருள், ஆசி,
அன்பு, இரக்கம் அனைத்தையும் உள்ளடக்கிய கொடை தான் அமைதி. இதை
எபிரேய மொழியில் "ஷலோம்" என்பர். இச்சொல்லே இஸ்லாமியரிடையே
"சலாம்" என வழங்குகிறது. ஆக, இயேசு தம் சீடர்களுக்கு வழங்குகின்ற
அமைதி வெறும் வாழ்த்துரை மட்டுமல்ல; கடவுள் தம் அன்பையும் அருளையும்
தம் மக்களோடு இயேசுவின் வழியாகப் பகிர்ந்துகொள்கிறார்.
இயேசுவைக் கண்ட பிறகும் சீடர்கள் அவரை அடையாளம் காண நேரம்
பிடித்தது. நம் வாழ்விலும் சில வேளைகளில் நாம் இயேசுவின் பிரசன்னத்தைக்
கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். ஏதோ ஓர் ஆவிபோலத் தான் அவர் நம்மிடையே
உலவுவதாகக் கூட நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவன்று. இயேசு
தம் சீடர்களோடு உலகம் முடியும் வரை இருப்பதாக வாக்களித்திருக்கிறார்.
"இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்"
(மத் 28:20) என இயேசு கூறிய வாக்குறுதி நமக்கு மன உறுதி தரவேண்டும்.
நம்மோடு வாழ்கின்ற இயேசு நமக்குக் கடவுளின் அமைதியை அளிக்கின்றார்.
அப்பம் பிட்கின்ற வேளையிலும் அதைப் பகிர்ந்துகொள்கின்ற தருணத்திலும்
அவருடைய உடனிருப்பு சிறப்பான விதத்தில் துலங்குகிறது. நாமும்
ஒருவருக்கொருவர் அமைதி வழங்குவோராக, ஒருவரோடொருவர் அப்பம் பகிர்வோராக
வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
நற்செய்தி (லூக் 24:35-48)
நெருக்கடி மேலாண்மை
இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடந்த நிகழ்வுகளை இந்த வாரம்
வாசித்துக்கொண்டிருக்கிறோம். இயேசுவின் உயிர்ப்பில் நிலவிய
பெருத்த சந்தேகம்,
"இயேசு உயிர்த்தபோது அவருக்கு உடல் இருந்ததா?
அல்லது அவர் வெறும் ஆவியா?" என்பதுதான். இந்த சந்தேகத்தை ஒவ்வொரு
நற்செய்தியாளரும் ஒவ்வொரு விதமாக கையாளுகின்றனர். மாற்கு உயிர்ப்பு
பற்றி அமைதி காக்கின்றார். மத்தேயு தோமா வழியாக விரலை விட்டை
சோதனை செய்கின்றார். யோவான் மகதலா மரியாளைக் கொண்டு இயேசுவை இறுகப்
பற்றிக்கொள்ள வைக்கின்றார். லூக்கா அவரை வேகவைத்த மீன்துண்டு
சாப்பிட வைக்கிறார்.
உயிர்த்த இயேசுவின் உடல் வித்தியாசமாக இருக்கிறது. நம்மைபோல
அவர் சதை கொண்டு இருக்கின்றார். அதே நேரத்தில் பூட்டிய அறைக்குள்ளும்
நுழைகின்றார்.
இயேசுவின் உடல் ஆராய்ச்சியை விடுத்து இந்த நற்செய்தி பகுதியை,
அதாவது லூக்கா நற்செய்தியாளரின் நிறைவுப் பகுதியை, மேலாண்மைக்கண்
கொண்டு பார்ப்போம்.
மேலாண்மையியல் முக்கியமான ஒன்று "நெருக்கடி மேலாண்மை" -
"க்ரைசிஸ் மேனேஜ்மென்ட்"
நாம் எவ்வளவுதான் கரெக்டாக இருந்தாலும் நெருக்கடி வந்தே தீருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன் ஊருக்குச் சென்றிருந்தேன். என் ஞானதந்தை
அவர்கள் பஞ்சு அள்ளிப்போடும் எந்திரத்தில் கையைக் கொடுத்து தன்
மூன்று விரல்களை இழந்து கட்டுப்போட்டுக்கொண்டு நின்றார். கட்டுப்போட்ட
அந்தக்கையை பார்த்தவுடன் எனக்கு பயமாக இருந்தது. ஆனால் அவர் ஒன்றும்
நடக்காததபோல எனக்கு கைகொடுக்க என்னை நீட்டி கை நீட்டினார்.
காலையில் எழுதல், உணவு, சைக்கிள் பயணம், வேலை, வீடு, தூக்கம்
என்று இருந்தவர் இப்போது உடல்சார்ந்த நெருக்கடியை சந்திக்கின்றார்.
இவருக்கு உடலிலும் நெருக்கடி. இவரின் வருமானம் நிறுத்தப்படுவதால்
குடும்ப உறவிலும் நெருக்கடி. வேலைக்கு புறப்பட்டு சென்ற அந்த
நாளில் அவர் இப்படி ஒரு நெருக்கடி வரும் என நினைத்திருக்கமாட்டார்.
நெருக்கடிகள் பல நேரங்களில் திடீரென்றுதாம் வருகின்றன.
இயேசுவின் சீடர்களுக்கு வந்த முதல் நெருக்கடி இயேசுவின் இறப்பு.
இறப்போடு போயிருந்தால் ஏழு நாள்கள் அழுதுவிட்டு அமைதியாய் இருந்திருப்பார்கள்.
இரண்டாம் நெருக்கடி அவரின் உயிர்ப்பு. உயிர்ப்புக்குப் பின்
அவர் ஆங்காங்கே தோன்றுவதாக கேள்விப்படுகின்றனர். இது அவர்களுக்கு
சந்தேகத்தைக் கூட்டுகிறதே தவிர அவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கவில்லை.
அச்சம், ஐயம், வியப்பு, மகிழ்ச்சி என பல உணர்வுகளை ஒரே நேரத்தில்
கொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடி நிலையை மேலாண்மை செய்ய இயேசு
மூன்று வாழ்க்கைப்பாடங்களை வைக்கின்றார்:
அ. "அமைதி"
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்பது அரமேயத்தில் வெறும் "ஷலோம்"
என்பதுதான். யூத மரபில் ஒருவர் மற்றவரைக் காணும்போது, "ஷலோம்"
என்று வாழ்த்துகின்றனர். ஷலோம் என்றால் ஓட்டையில்லாத பானை. அதாவது
ஒழுகாத பானை. பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து அதில் சின்ன
வெடிப்பு இருந்தால் தண்ணீர் அங்கே வழிந்துவிடும். நெருக்கடி
நிலையில் நமக்கு நிறைய ஆற்றல் லீக்கேஜ் இருக்கும். ஆக, நம்
பானை வெடிப்பு இன்றி "ஷலோம்" (முழுமையாக) இருக்க வேண்டும்.
ஆ. "உடலை ஆவி என நினைக்காதீர்கள்"
இருப்பதை இருப்பதாக பாருங்கள். இல்லாததை இருப்பதாக
பார்க்காதீர்கள். "ஐயோ! பிரச்சினை ஆயிடுச்சு. இனி இப்படி ஆயிடும்.
அப்படி ஆயிடும்" என்று பதறுதல் கூடாது. "பதறிய காரியம் சிதறிப்போகும்"
என்பது பழமொழி.
இ. "புள்ளிகளை இணையுங்கள்"
இயேசு தான் பட்ட பாடுகள், துன்பம், இறப்பு, உயிர்ப்பு அனைத்தையும்
மோசே, இறைவாக்கு, திருப்பாடல் ஆகியவற்றோடு இணைத்துப் பார்ப்பதோடல்லாமல்,
"இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்று சீடர்களை எதிர்காலத்தில்
நிறுத்தி எல்லாப் புள்ளிகளையும் இணைக்கிறார். நம்ம வாழ்விலும்
ஒவ்வொரு நகர்வும் ஒரு புள்ளி. அந்தப் புள்ளிகளை சற்றே
மேல்நின்று பார்த்து இணைக்க வேண்டும்.
இறுதியாக,
இந்த மூன்று பாடங்களும் ஃபெயிலியர் என்றால்,
"சாப்பிட என்ன இருக்கு?" என்று கேட்டு, அதை வாங்கி, அப்படியே
அமர்ந்து சாப்பிட வேண்டும்.
Fr. Yesu Karunanidhi
Madurai
-------------------------------------------------------- |
|