Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     02 ஏப்ரல் 2018  
                                                  பாஸ்கா எண்கிழமையில் திங்கள் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் (2: 14, 22-33)

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: "யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே.

கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

தாவீது அவரைக் குறித்துக் கூறியது: "நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும்.

ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.

சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்க மாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.

அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்" என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.

அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்."


=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 16: 1-2. 5,7-8. 9-10. 11 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

அல்லது: அல்லேலுயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2 நான் ஆண்டவரிடம் "நீரே என் தலைவர்" என்று சொன்னேன்.
-பல்லவி

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.
-பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர்.
-பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
-பல்லவி

விரும்பினால் தொடர் பாடலைச் சொல்லலாம்.

(காண்க: பக்கம் 443)
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(திபா 118: 24)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (28: 8-15)

அக்காலத்தில் கல்லறையில் இயேசுவைக் காணவந்த பெண்கள் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய், அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.

திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரைஅணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள்.

அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.

அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து, அப்படைவீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, " நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உட லைத் திருடிச் சென்றுவிட்டனர்" எனச் சொல்லுங்கள்.

ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்" என்று அவர்களிடம் கூறினார்கள்.

அவர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஆண்டவர் இயேசு உயிர்த்துவிட்டார்! அல்லேலூயா!

சில ஆண்டுகளுக்கு முன்பாக பங்களாதேஷ் நாட்டில் நற்செய்திப்பணி செய்துவந்த ஒரு மறைபோதகர், அங்கிருந்த மக்கள் கிறிஸ்துவைக் குறித்து ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக "Jesus" என்ற திரைப்படத்தை அவர்களுக்குப் போட்டுக்காட்டினார்.

இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு அவருடைய பணிவாழ்வு எல்லாவற்றையும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள், இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதைப் பார்த்ததும் "ஓவென" அழ ஆரம்பித்தார்கள். இன்னும் ஒருசிலர், "இயேசுவே! உமக்கா இந்த சிலுவை மரணம்!" என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள். இதைக் கூட்டத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஓர் இளைஞர், கொஞ்சம் படித்தவர் அங்கிருந்த மக்களைப் பார்த்து, "அன்பு மக்களே! இயேசு, சிலுவையில் அறியப்பட்டு, கொல்லப்பட்டுவிட்டார் என்று கலங்கவேண்டாம், அவர் இறந்தாலும் மூன்றாம்நாள் வெற்றிவீரராய் உயிர்த்தெழுவார்... சிறிது நேரம் பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

அந்த இளைஞர் சொன்னதைக் கேட்டு கூட்டம் அமைதியானது. சிறுதுநேரத்தில் இயேசு உயிர்த்தெழுகின்ற காட்சி வந்தது. அதைக் கண்டதும் மக்கள், "ஆமாம்! இயேசு இறந்தாலும் வெற்றி வீரராய் உயிர்தெழுந்துவிட்டார்" என்று மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கத் தொடங்கினார்கள். ஆமாம், சாவால் இயேசுவை தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை, அவர் சாவை வென்று, வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்துவிட்டார். அல்லேலூயா!.

நற்செய்தி வாசகத்தில், கல்லறையைக் காணவந்த பெண்கள், கல்லறை வெறுமையாய் இருப்பதைக் கண்டு, ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்டு அச்செய்தியை சீடர்களுக்கு அறிவிக்க விரைகின்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, "அஞ்சாதீர்கள்" என்று சொல்லி அவர்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார். இயேசு அந்தப் பெண் சீடர்களிடத்தில், "அஞ்சாதீர்கள்" என்று சொல்வதை நாம் பல விதங்களில் எடுத்துக்கொள்ளலாம். முதலாவதாக, இயேசு அந்தப் பெண் சீடர்களிடத்தில் "அஞ்சாதீர்கள்" என்று சொல்வதன் வழியாக தாம் சொன்னதுபோன்றே உயிர்த்தெழுந்துவிட்டேன் என்பதை நிரூபித்துக்காட்டுகின்றார். இரண்டாவதாக, தான் உயிர்த்துவிட்டதால், இனிமேல் யூதர்களுக்கோ வேறு யாருக்கோ அஞ்சவேண்டும் என்றும் எடுத்துக்கூறுகின்றார். கல்லறையில் இயேசுவின் உடல் இல்லாததைக் கண்டு, அந்த பெண்சீடர்கள் ஒருவிதத்தில் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று மகிழ்ந்திருந்தாலும் இன்னொரு விதத்தில் இயேசுவின் உடலுக்கு என்னவாயிற்றோ என்று அச்சமுற்றிருக்கலாம், அப்படிப்பட்ட தருணத்தில்தான் இயேசு அவர்களைப் பார்த்து, "அஞ்சாதீர்கள்" என்று வாழ்த்துகின்றார்.

இயேசு அந்த பெண் சீடர்களுக்குச் சொல்லக்கூடிய இரண்டாவது செய்தி, "என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்களைக் காண்பார்கள்" என்பதாகும். இதன்மூலம் இயேசு அவர்களைப் நற்செய்திப் பணியாளர்களாக மாற்றுகின்றார். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தாலும் அது நமக்குக் கொடுக்கக்கூடிய முதன்மையான வேண்டுகோள், நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதாகும். இயேசு சொன்னதைப் போன்று அந்தப் பெண் சீடர்கள், ஏனைய சீடர்களிடத்தில் சென்று, ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த செய்தியையும், அவர்கள் கலிலேயாவுக்குப் போகவேண்டும் என்ற செய்தியையும் எடுத்துச் சொல்கின்றார்கள்.

இயேசுவின் உயிர்ப்பை நினைவுகூருகின்ற நமக்கும், அவர் சீடர்களுக்குக் கொடுத்த அதே செய்தியைத்தான் தருகின்றார். நாம் அஞ்சாது வாழ்கின்றோமா? சீடர்கள் துணிவோடு நற்செய்தியை அறிவித்தது போன்று நாமும் ஆண்டவரின் உயிர்ப்புச் செய்தியை அறிவிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இன்னபிற தீய சக்திகளுக்கும் பயந்து, நாம் கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்தை மறைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய அச்ச உணர்வை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு அஞ்சா நெஞ்சத்தினராய் நாம் வாழவேண்டும்.

அடுத்ததாக, அன்றாட வாழ்க்கையில் பலருக்கும் பயப்படாமல், ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்க நாம் தயங்குகின்றோம். இயேசுவைப் பற்றி அறிவித்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? இந்த சமூகம் என்ன சொல்லுமோ? என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். சீடர்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல், ஆண்டவரின் உயிர்ப்புச் செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொன்னார்கள். இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவருடைய உயிர்ப்புச் செய்தியை எந்தவிதத் தயக்கமின்று, எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்பதுதான் நம்முடைய கடமையாக இருக்கின்றது.

ஆகவே, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா மகிழ்வில் இருக்கும் நாம், அஞ்சா நெஞ்சத்தினராய் வாழ்வோம். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"இயேசு, "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார் (மத்தேயு 28:10)

-- சாவை வென்று புத்துயிர் பெற்று எழுந்த இயேசு தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சியை நான்கு நற்செய்தி நூல்களும் விவரிக்கின்றன. என்றாலும் அவை தருகின்ற தகவல்களில் ஆங்காங்கே முரண்பாடு காணப்படுகிறது. இயேசு அனுபவித்த துன்பங்கள், அவருடைய சிலுவைச் சாவு போன்றவற்றை விவரிப்பதில் நான்கு நற்செய்தி நூல்களும் பெரும்பாலும் ஒத்திருந்தாலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி விவரிக்கும்போது ஏன் வேறுபடுகின்றன என்னும் கேள்விக்கு விவிலிய அறிஞர்கள் தரும் பதில் இது: வெவ்வேறு நற்செய்தி ஆசிரியர்களும் தமக்குக் கிடைத்த வெவ்வேறு மரபுகளைத் தம் நூல்களில் பதிவுசெய்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நற்செய்தி நூல் ஆசிரியரும் தம் இறையியல் பார்வைக்கு ஏற்ப இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை விவரிக்கின்றனர். இது உண்மையென்றாலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய அடிப்படைத் தகவல்கள் நான்கு நற்செய்தி நூல்களிலும் ஒரே விதத்தில் அமைந்துள்ளன. முதலில், நமக்குத் தென்படும் உண்மை: "இயேசு எவ்விதத்தில் உயிர்த்தெழுந்தார்" என்பது குறித்து நற்செய்தி நூல்கள் தகவல் தரவில்லை. இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி வரலாற்றைக் கடந்த ஒரு நிகழ்ச்சி, ஒரு மறைபொருள்; அதாவது, இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பது "இறந்த உடல் மீண்டும் உயிர்பெற்றது" என்னும் விதத்தில் அமைந்ததல்ல. மாறாக, நாசரேத்து இயேசு இவ்வுலகில் நம்மைப் போல் வாழ்ந்தார்; சிலுவையில் அறையப்பட்டு இறந்தார்; ஆனால் சாவுக்குப் பின் அவர் புதிய உருவில், கடவுளின் மாட்சியில் நுழைந்து உயிர்வாழ்கின்றார்.

-- இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்தது என்பது மட்டுமே இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை நிரூயஅp;பிக்கப் போதுமானதன்று. ஏன், கல்லறை வெறுமையானது பற்றி ஒரு சர்ச்சையே எழுந்தது என்பதை மத்தேயு குறிப்பிடுகிறார் (காண்க: மத் 28:11-15). வெறுமையான கல்லறையோடு இணைந்து இன்னொரு செய்தியும் தேவைப்பட்டது. அதாவது, இறைவனிடமிருந்து சீடர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்தி: "இயேசு உயிர்பெற்றெழுந்துவிட்டார்" என்பது. இச்செய்தியின் ஒளியிலும் வெறுமையான கல்லறை பற்றிய தகவலின் அடிப்படையிலும் சீடர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டார்கள். ஆனால் இந்த நம்பிக்கை சீடர்களிடம் முதலில் இருக்கவில்லை. இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியதை அவர்கள் புரிந்திருக்கவில்லை. இயேசு உயிர்பெற்றெழுந்துவிட்டார் என இறைவெளிப்பாடு அவர்களுக்குக் கிடைத்தபிறகே சீடர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டனர். நாம் இயேசுவை நம்புவதும் இதன் அடிப்படையில்தான். இயேசுவைக் கண்டு, அவரோடு பழகி வாழ்ந்த சீடர்கள் இயேசுவின் இறப்பிற்குப் பிறகு இயேசு புதிய முறையில் உயிர்வாழ்கின்றார் என்பதைத் தங்கள் அனுபவ வாயிலாக உணர்ந்தனர். அந்த அனுபவத்தை நற்செய்தி நூல்களில் பதிவுசெய்துள்ளனர். நாமும் அச்செய்தியை ஏற்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நம்பிக்கையோடு ஏற்கின்றோம். நம் வாழ்விலும் கிறிஸ்துவின் புத்துயிர் துலங்கி மிளிர வேண்டும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

"
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!