|
25
செப்டம்பர் 20185 |
|
பொதுக்காலம்
25ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பொன்மொழிகள் பல.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21:
1-6,10-13
மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது;
வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி
விடுகிறார்.
மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த்
தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப்
பார்க்கிறார்.
பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு
உவப்பளிக்கும். மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம்
- இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.
திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது
திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.
ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்து
விடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.
பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை
அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை. ஏளனம் செய்வோரை அடிக்கும்போது
அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு
அறிவு புகட்டும்போது அவர் மேலும் அறிவுடையவராவார்.
நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக்
கொண்டிருக்கிறார். அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து
அழித்து விடுகிறார்.
ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன்
தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க
மாட்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 119: 1,27. 30, 34. 35, 44 (பல்லவி: 35a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.
1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி
நடப்போர் பேறுபெற்றோர். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும்
உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை
செய்வேன். பல்லவி
30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை
என் கண்முன் நிறுத்தியுள்ளேன். 34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க
எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.
பல்லவி
35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில்,
அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 44 உமது திருச்சட்டத்தை
நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப்
பின்பற்றுவேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 11: 28)
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர்
இன்னும் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும்
சகோதரர்களும் ஆவார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21
அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள்.
ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை.
"உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே
நின்று கொண்டிருக்கிறார்கள்'' என்று அவருக்கு அறிவித்தார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே
என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼
சிந்தனை
கேட்டு நடப்போரே, உறவினில் உள்ளோராகின்றனர்.
உறவே வேண்டாம் என்று பணிவின்றி, கீழ்ப்படிய மறுப்போர் எண்ணிக்கை
இன்று அதிகரித்து வருவது ஆபத்தானது.
இறைவார்த்தையை கேட்டு, பணிந்து நடப்போரே என்னுடைய உறவுக்காரர்
ஆவார் என்று தன்னை பின் தொடர்ந்தவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
இதற்காக தன்னுடைய தாயை உதறிவிட்டார் என்று அர்த்தம்
கொடுப்போர், அந்த தாயும் இறைவார்த்தைக்கு ஆம் என்று பதிலளித்து
உறவுக்காரர் ஆனார் என்பதை ஏற்றுக் கொள்ளாதவரே.
இன்றைக்கு கேட்டு நடந்து உறவினிலே வாழ்ந்திட அழைக்கப்
பெறுகின்றோம். இல்லங்களில், துறுவரங்களில், பிள்ளைகள்
பெற்றோருக்கும், தலைவருக்கு உடன் இருப்போரும் கேட்டு நடந்தாலே
உறவு நிலை நாட்டப்படும். சுமூகமான சூழல் உருவாகும். இதனாலே தலைவர்கள்
உங்களை கூறிந்து கணக்கு கொடுக்க கடமைப்பட்டவர்கள் என்பதாலே அவர்களுக்கு
பணிந்து நடந்து வாருங்கள் என்கின்றார் பவுல்.
கேட்டு நடந்து உறவினை உறுதி செய்வோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகின்றவர்களே என்
தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்"
மாவீரன் அலெக்ஸ்சாண்டருடைய படையில் படைவீரன் ஒருவன் இருந்தான்.
அவன் படைவீரன் என்ற பெயருக்கு எந்தவிதத்திலும் தகுதியில்லாமல்
இருந்தான். சில சமயங்களில் அவன் போர் நடந்துகொண்டிருக்கும்போது,
போர்க்களத்திலிருந்து வெளியேறி தனியாக ஓர் இடத்தில் போய் அமர்ந்துகொள்வான்.
போர் முடிந்தபிறகு மற்ற படைவீரர்களோடு அவன் சேர்ந்துகொள்வான்.
இப்படி பயந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்த அந்த
பயந்தாங்கோழி படைவீரனைக் குறித்து மாவீரன் அலெக்ஸ்சாண்டர்
கேள்விப்பட்டார். தன்னுடைய படையில் இப்படி ஒரு வீரான என்று அவரே
ஆச்சரியப்பட்டார். பின்னர் அவர் அந்தப் படைவீரனை தன்னிடத்தில்
வரச் சொல்லி ஆணையிட்டார். அரசரின் ஆணைக்கிணங்க அந்தப் படைவீரனும்
வந்தான். அப்போது மாவீரன் அலெக்ஸ்சாண்டர் அந்தப் படைவீரனிடத்தில்
கேட்டார், "உன்னுடைய பெயர் என்ன?". அவன் சற்று நடுக்கத்தோடு
சொன்னான், "என்னுடைய பெயர் அலெக்ஸ்சாண்டர்". என்று.
உடனே மாவீரன் அலெக்ஸ்சாண்டர் அந்தப் படைவீரனைப் பார்த்துச்
சொன்னார், "அலெக்ஸ்சாண்டர் என்ற பெயரை வைத்துக்கொண்டு இப்படி
பயந்துகொண்டு இருப்பதா? ஒன்று பெயரை மாற்று. இல்லையென்றால் பயந்து
பயந்து சாகும் இந்தப் போக்கை மாற்று".
அலெக்ஸ்சாண்டர் என்ற பெயரை வைத்துக்கொண்டு பயந்துகொண்டிருப்பது
எப்படி கூடாத ஒருவிசயமோ, அதுபோன்றுதான் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு
கிறிஸ்துவின் போதனைக்கேற்ப வாழாததும். கிறிஸ்தவர்கள் என்றால்
கிறிஸ்துவின் போதனைக்கு ஏற்பவும் அவருடைய வார்த்தையைக் கேட்டு
அதன்படி நடக்கின்றவர்களாகவும் இருக்கவேண்டும். அதைத்தான் இன்றைய
நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு
போதித்துக்கொண்டிருக்கும்போது, அவரைப் பார்ப்பதற்காக அவருடைய
தாயும் அவருடைய சகோதரர்களும் வருகிறார்கள். அவர்கள் வந்த
செய்தி இயேசுவிடத்தில் தெரிவிக்கப்பட்டபோது, இயேசு அவர்களிடம்,
"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிரவர்களே என் தாயும்
சகோதர்களும் ஆவார்கள்" என்கின்றார்.
இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளில் இருந்து நாம் இரண்டு உண்மைகளைக்
கற்றுக்கொள்ளலாம். ஒன்று, இறையாட்சிக் குடும்பம் என்பது இரத்த
உறவுகளைக் கடந்தது என்பதாகும். இரண்டு, இயேசுவைப் பெற்றெடுத்தவர்
மட்டும் அவருக்குத் தாயில்லை. அவருடைய வார்த்தையைக் கேட்டு,
அதன்படி நடக்கிறவர்களும் அவருக்குத் தாயாகிறார்கள் என்பதாகும்.
இந்த இரண்டு காரியங்களைக் குறித்து இப்போது சற்று ஆழமாக
சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு மனிதராக ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் அவர் தன்னை ஒரு
குறுகிய வட்டத்திற்குகுள் அடக்கிக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக
பன்னிரெண்டு வயதில் இயேசு காணாமல்போய் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டபோது
அவருடைய தாயார் அவரிடம், "நானும் உன்னுடைய தந்தையும் உம்மை
மிகுந்த கவலையோடு தேடிகொண்டிருந்தோமே?" என்று கேட்கின்ற போது
இயேசு, "நான் என் தந்தையின் அலுவலில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது
உங்களுக்குத் தெரியாதா?" என்கின்றார். அதாவது தான் ஒரு
குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் சொந்தமில்லை, தந்தைக் கடவுளின்
எல்லாம் மக்களுக்கும் சொந்தம் என்பதை இயேசு சொல்லாமல்
சொல்கின்றார். மேலும் இயேசு எல்லாரும் தன்னுடைய உயிரெனவே
பார்த்துப் பழகினர். ஆகையால், இயேசுவின் இறையாட்சிக் குடும்பம்
என்பது பரந்து விரிந்தது, அது எல்லா மக்களையும் உள்ளடக்கியது
என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அடுத்ததாக, இயேசுவின் தாயாக அவருடைய சகோதர சகோதரியாக நம்மாலும்
மாற முடியும். எப்போது என்றால், நாம் அவருடைய வார்த்தையைக்
கேட்டு அதன்படி நடக்கின்றபோது. ஒருவேளை நாம் கிறிஸ்தவர்களாக இருந்தும்
அவருடைய வார்த்தையைக் கேட்டு நடக்கவில்லை என்றால் நாம் கிறிஸ்தவர்கள்
என்று அழைக்கப்பட தகுதியற்றவர்கள் ஆகிப்போய்விடுகின்றோம்.
யூதர்கள் இப்படித்தான், "நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர். ஆபிரகாம்
எங்களுக்குத் தந்தை" என்று சொல்லி பெருமை பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் திருமுழுக்கு யோவான் அவர்களிடம், "ஆபிரகாம் உங்களுக்குத்
தந்தை என்று பெருமை பாராட்டவேண்டாம், கடவுள் நினைத்தால் இந்தக்
கற்களிலிருந்தும் ஆபிரகாமிற்கு பிள்ளைகள் தோன்றச் செய்வார்" என்பார்.
அதாவது ஒருவருடைய பிறப்பினால் அவருக்குப் பெருமை கிடையாது.
மாறாக அவருடைய வாழ்க்கையினாலேயே அவருக்குப் பெருமை உண்டு என்பதை
இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாக
இருக்காமல், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்க முயற்சிப்போம்.
பிறப்பினால் பெருமை வரும் என்ற குறுகிய எண்ணத்தை விடுத்து,
வாழ்கின்ற வாழ்வினால் மட்டுமே பெருமை என்பதை உணர்வோம். இறைவழியில்
நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடத்தல்.
இராணுவ முகாமில் தங்கி பயற்சி எடுத்துக்கொண்டு வந்த கிறிஸ்தவ
மதத்தைச் சார்ந்த இராணுவ வீரன் ஒருவன் விடுமுறைக்கு தன்னுடைய
சொந்த ஊருக்குச் செல்ல இரயில் நிலையத்தில் வேக வேகவேகமாக ஓடிவந்தான்.
எப்படியாவது இரயிலில் இடம் பிடித்துவிடவேண்டும் என்ற பரபரப்பில்
இருந்ததால் அவன் எதிரே வந்த பழங்களைக் கூடையில் வைத்து
விற்கும் சிறுவனைக் கவனிக்கவில்லை. அதனால் அவன் சிறுவன்மீது
மோதி, சிறுவன் வைத்திருந்த பழங்கள் எல்லாம் சிதறி ஓடின.
ஒரு நிமிடம் அவன் நிலைகுலைந்து நின்றான். நாம் இருக்கும் அவசரத்தில்
இது வேறு நடக்கவேண்டுமா? என்று தன்னுடைய நிலையை நினைத்து
நொந்துக்கொண்டான். பின்னர் அவன் அந்த சிறுவனைப் பார்த்தபோது
அவனுடைய உள்ளத்தில் ஓர் இரக்க உணர்வு தோன்றியது. ஏனென்றால் அந்த
சிறுவன் ஒரு பார்வையற்றவன். எனவே தன்னால் நடைபாதை எங்கும் சிதறிக்
கிடக்கும் பழங்களை ஒன்றாக சேர்த்துத்தருவது என்று முடிவு
செய்தான். அதன்படி ஆங்காங்கே சிதறிக் கிடந்த பழங்களை ஒன்றாகச்
சேர்ந்து அவன் அந்த சிறுவனின் பழக்கூடையில் வைத்தான்.
இதை அறிந்து அந்தச் சிறுவன் இராணுவ வீரனின் கைகளை
பிடித்துக்கொண்டு, "நீங்கள்தான் இயேசுவா?" என்று கேட்டான். அதற்கு
அந்த இராணுவ வீரன், "இல்லை இல்லை. நான் இயேசு அல்ல, இயேசுவைப்
போன்று வாழ முயற்சிப்பவன்" என்றான்.
ஆம், ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துவாழும்போது, வறியவர்களின்
தேவைகளைப் பூர்த்திசெய்யும்போது நாம் இயேசுதான், அவருடைய அன்புப்
பணியாளர்கள்தான்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்குப் போதித்துக்
கொண்டிருகும்போது, அவரைக் காண அவருடைய தாயும், சகோதரர, சகோதரிகளும்
வருகிறார்கள். இச்செய்தியை மக்கள் இயேசுவிடம் சொல்லியபோது அவர்
அதற்கு பதில்மொழியாக, "இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பவர்களே
என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள்" என்கிறார்.
இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு பல உண்மைகளை எடுத்துக்கூறுகிறது.
முதலாவதாக இயேசு இரத்த உறவுகளைக் கடந்தவராக இருக்கின்றார் என்பதே
ஆகும். இயேசு தன்னுடைய தாய், சகோதர, சகோதரிகள் என்ற குறுகிய வட்டத்திற்குள்
சிக்கிக்கொண்டு வாழவில்லை. இன்றைக்கு தங்களை மக்கள் பணியாளர்கள்,
எல்லாருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய
குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் தலைவர்களைப்
போன்று அல்லாமல் இயேசு எல்லாரும் ஒரே குடும்பம் என்ற மனநிலையில்
வாழந்தவர். அதனால்தான் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கும்
யாவருமே என்னுடைய தாயும், சகோதரர்களும் ஆவார்கள் என்கிறார்.
அடுத்ததாக நாம் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறவேண்டும்
என்றால் தந்தைக் கடவுளின் திருவுளத்தை ஏற்று நடக்கவேண்டும் என்று
சொல்கிறார். இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரிகளாக மாறுவது என்பது
மிகப்பெரிய கொடை, மிகப்பெரிய பாக்கியம். இது யாருக்குமே
கிடைக்காத ஒரு வரம். அப்படிப்பட்ட வரத்தை ஆண்டவர் இயேசு தன்னுடைய
தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழியாக அடையலாம் என்கிறார்.
நிறைவாக ஒருவர் இயேசுவைப் பெற்று எடுப்பதானாலோ அல்லது இயேசுவோடு
பிறப்பதனாலோர் இயேசுவுக்கு தாயாகவோ அல்லது சகோதர, சகோதரிகளாக
மாறிவிடமுடியாது. யூதர்கள் தாங்கள் ஆபிரகாமின் மக்கள் என்று
சொல்லிக்கொண்டு தாறுமாறான வாழ்க்கை வந்தார்கள். அவர்களின்
நினைப்பு எல்லாம் தாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வந்தாலும் கடவுளின்
மக்கள் என்பதுதான். ஆனால் திருமுழுக்கு யோவான் அவர்களைப்
பார்த்து, "ஆபிரகாம் எங்கள் தந்தை என உங்களிடையே சொல்லிப்
பெருமை கொள்ளவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப்
பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர் என்கிறார் (மத்
3:9).
இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு சிந்தித்துப் பார்க்கும்போது
ஒருவர் இயேசுவைப் பெற்றெடுப்பதனாலும், இயேசுவோடு பிறப்பதனாலும்
அவருக்குத் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறிவிட முடியாது. மாறாக
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவேண்டும்.
இயேசு கூறும் இந்த வரையறைகளை வைத்துப் பார்க்கும்போது அன்னை
மரியா இயேசுவை பெற்றெடுத்தனால் மட்டுமல்ல, தந்தையின்
திருவுளத்தை ஏற்று நடந்ததனாலும் இயேசுவுக்குத் தாயாகிறார்.
ஆகவே, நாம் பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் அதனால் நமக்கு மீட்பு
உண்டு என்ற தவறான எண்ணத்தில் வாழாமல், உண்மையிலே தந்தைக்
கடவுளின் திருவுளத்தை ஏற்று வாழ்வோம். இயேசுவின் தாயாகும்,
சகோதர சகோதரிகளாகும் பேற்றினைப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|