|
24
செப்டம்பர் 2018 |
|
பொதுக்காலம்
25ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 3: 27-35
உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச்
செய்ய மறுக்காதே. அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ
வைத்துக் கொண்டே,
"போய் வா, நாளைக்குத் தருகிறேன்" என்று
சொல்லாதே.
அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள்
உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா? ஒருவர் உனக்கு
ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.
வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப்
பின்பற்றாதே. ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்;
நேர்மையாளரோடு அவர் உறவு கொள்கின்றார். பொல்லாரது வீட்டின்மேல்
ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில்
அவரது ஆசி தங்கும்.
செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில்
உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்; ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய
நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 15: 2-3a. 3bc-4. 5 (பல்லவி: 1b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?
2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார
உண்மை பேசுவர்;
3a தம் நாவினால் புறங்கூறார். பல்லவி
3bc தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை
உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த
வாக்குறுதியை மீறார். பல்லவி
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக்
கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(மத் 5: 16)
அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள்
விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை
விளக்குத் தண்டின்மீது வைப்பர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
8: 16-18
அக்காலத்தில் மக்கள் கூட்டத்தை நோக்கி இயேசு கூறியது: "எவரும்
விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின்
கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி
அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.
வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும்
வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. ஆகையால், நீங்கள்
எத்தகைய மன நிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்.
உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று
அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்."
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
சிந்தனை
எத்தகைய மனநிலையோடு கேட்கிறோம் என்பது மிக முக்கியமானது. இறைவனே
கற்றுக் கொடுக்கின்றார். பெற்றுக் கொண்டோம் என்ற மனநிலையோடு
கேளுங்கள் என்று.
அத்தகைய ஆழமான நம்பிக்கை நம்மிலே வேர் விட வேண்டும்.
தருவார். எப்பொழுது ஏன் எப்படி கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு
தெரியும் எனவே தான் உன் மனவிருப்பத்தை நான் நிறைவு செய்வேன் என
வாக்களித்திருக்கின்றார். எனவும் உரிய காலத்திலே செய்வார்
பெற்றுக் கொள்வோம் என்ற மனநிலையோடு
கேட்பது நமது கடமை. கேட்போம்
பெற்றுக் கொள்வோம். பெற்றுக் கொள்வதில் நிறைவு காண்போம்.
பெற்றுக் கொண்டதற்காய் நன்றியுள்ளவர்களாய் வாழ்ந்து
காட்டுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எழுந்து, ஒளி வீசு!
பார்வையற்ற ஒருவரால் முனைவர் பட்டம் பெறமுடியுமா? அப்படியே
முனைவர் பட்டம் பெற்றாலும் அவரால் தன்னைப் போன்ற
பார்வையற்றவர்களுடைய எதிர்கால வாழ்விற்கு உதவ முடியுமா?. இந்த
இரண்டு கேள்விகளுக்கும் முடியும் என்று தன்னுடைய வாழ்க்கையால்
நிரூபித்துக் காட்டியவர்தான் இராதாபாய் என்பவர். இவர் தற்போது
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள வரலாற்றுத்
துறையில் தலைவராக இருக்கின்றார். இவரால் இத்தகைதொரு உன்னத
நிலையை எப்படி அடைய முடிந்தது என்று எண்ணிப் பார்க்கும்போது
நமக்கே வியப்பாக இருக்கின்றது.
இராதாபாய் பிறந்த நான்காவது மாதத்திலே பார்வைக் குறைபாடு
உள்ளவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு நான்கு வயது
நடக்கும்போது பார்க்கும் திறனே போனது. இதனால் இவருடைய தாயார்
மிகவும் மனமுடைந்து போனார். ஆனால் இவருடைய தந்தை இவரிடத்தில்,
"பார்க்கும் திறன் போனால் என்ன? உன்னை எப்படியாவது சாதனைப்
பெண்ணாக மாற்றிக்காட்டுவேன்" என்று சொல்லி அவருக்கு
உற்சாகமூட்டி, சங்க இலக்கியம் முதல், பாராதியார் கவிதைகள் வரை
கற்றுக் கொடுத்தார்.
பள்ளிப்படிப்பை நல்லவிதமாய் முடித்த இராதாபாய், பிரியா என்ற
பெண்மணியின் உதவியுடன் இளங்கலை படிப்பை முடித்து, முதல்
பெண்ணாய் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து முதுகலைப் பட்டம்
பெற்று, பின்னர் முனைவர் பட்டம் பெற்று தென்னிந்திய அளவில்
யாருமே சாதிக்க முடியாத சாதனையைச் செய்திருக்கின்றார். இவர்
புதுகோட்டை அரசு மகளிர் கல்லூரியில் துறைத்தலைவராக இருப்பதோடு
மட்டும் மல்லாமல், இணையத்தில்
"வள்ளுவன் பார்வை" என்ற இதழை
நடத்திக்கொண்டு தன்னைப் போன்ற பார்வையற்ற மாணவர்களின் எதிர்கால
வாழ்விற்கு தன்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.
தனக்குப் பார்வை போனதை பெருங்குறையாக நினைத்து
வருந்திக்கொண்டிருக்காமல், கடினமாகப் போராடி தனது வாழ்க்கையில்
முன்னுக்கு வந்ததது மட்டுமல்லாமல், தன்னைப் போன்ற பார்வையற்ற
மனிதர்கள் பலருடைய எதிர்கால வாழ்விற்கும் கலங்கரை விளக்காகத்
திகழ்கின்ற இராதாபாய் அவர்களின் சாதனையை எண்ணி வியக்காமல்
இருக்க முடியவில்லை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, நாம் ஒவ்வொருவரும்
சுடர்விடும், எல்லாருக்கும் ஒளிதரக்கூடிய விளக்காக மாறவேண்டும்
என்றொரு அழைப்பினைத் தருகின்றார். விளக்கு என்றால் அது
எல்லாருக்கும் ஒளிதரக்கூடிய அளவில் விளக்குத் தண்டின்மீது
இருக்கவேண்டும். அப்படி இல்லாமல், கட்டிலின் கீழ் இருந்தால்
அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதுபோன்றுதான் ஒவ்வொரு
கிறிஸ்தவரும். இந்த உலகிற்கு ஒளியாக இருக்கவேண்டிய
ஒவ்வொருவரும் தங்களுடைய வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும்
ஒளிதருபவர்களாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் தங்களுடைய
ஓளியை மறைத்து வைத்துக்கொண்டு வாழ்பவர்கள் கிறிஸ்தவர்களாக
இருப்பதற்குத் தகுதியற்றவர்களாகிப் போகிறார்கள் என்கிறார்
இயேசு.
ஒளிக்கு பல பண்புகள் உண்டு, முதலாவது ஒளி இருளில் நடப்பவருக்கு
வெளிச்சத்தைக் கொடுக்கும். கிறிஸ்துவின் வழி நடக்கின்ற
ஒவ்வொருவரும், தான் இருக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு,
தன்னுடைய வாழ்வால் நல்ல வழியைக் காட்டவேண்டும். இரண்டாவது, ஒளி
இருளை, தீமையைப் போக்கக் கூடியதாக இருக்கும். கிறிஸ்துவின் வழி
நடக்கின்ற யாவரும் தான் இருக்கக்கூடிய சமூகத்தில் காணக்கூடிய
பல்வேறு தீமைகளை அழித்து நன்மையை விளைவிக்கக்கூடியவர்களாக
இருக்க வேண்டும்.
மூன்றாவது ஒளி எப்போதும் வெண்மையானதாக, தூய்மையானதாக
இருக்கும். உலகிற்கு ஒளியாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும்
ஒவ்வொருவரும் தூய மாசற்ற வாழ்க்கை வாழ்ந்து, மற்றவருக்கு
எடுத்துக் காட்டாக இருக்கவேண்டும்.
இப்படி ஒளியின் தன்மைகள் இருக்கின்றபோது, உலகிற்கு ஒளியாக
இருக்க அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் நம்முடைய வார்த்தையால்
மட்டுமல்ல, வாழ்வாலும் ஒளியாக இருக்கவேண்டும். மத்தேயு
நற்செய்தி 5:16 ல் இயேசு கூறுவார், "உங்கள் ஒளி மனிதர் முன்
ஒளிர்க. அப்போது உங்கள் நற்செயல்களைக் காண்கின்றவர்கள் உங்கள்
விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்" என்று (மத் 5:16).
ஆம், நாம் ஒளிமயமான வாழ்க்கையை வாழ்கின்றபோது அந்தப் பெருமை
நம் இறைவனுக்கே சேரும். ஆகையால் நம்முடைய சிறப்பான வாழ்வால்
இறைவனுக்குப் பெருமை சேர்க்கவேண்டும். அதைவிடுத்து நம்முடைய
திறமைகளை மறைத்து வைப்பதோ அல்லது, அதனை பயன்படுத்தாமல்
இருப்பதோ கூடாத ஒரு செயலாகும்.
ஆகவே, உலகிற்கு ஒளியாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம்
ஒவ்வொருவரும் ஒளியாக இருப்போம். சமூகத்தில் இருக்கின்ற இருளான
காரியங்களை விளக்குவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
நீங்கள் உலகிற்கு ஒளி; ஆதலால் உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க.
இரவு நேரத்தில் ஒரு வயதான தம்பதியினர் பெருநகரின் சாலை ஒன்றில்
நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது திடிரென்று மின்சாரம்
தடைபடவே அவர்கள் வழிதெரியாமல் திகைத்து நின்றார்கள். நீண்டநேரம்
ஆகியும் அப்பகுதிக்கு மின்சாரம் வருவே இல்லை. எப்படியும்
வீட்டுக்குச் சென்றுவிடவேண்டும் என்றொரு நிலையிருந்ததால் அவர்கள்
யாரிடமாமவது உதவி கேட்டு வீட்டுக்குச் செல்ல
துடித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் போவோர், வருவோரிடமெல்லாம்
அவர்கள் உதவிகேட்கத் தொடங்கினார்கள்.
அப்போது ஒரு மனிதர் கையில் குச்சியுடன் (Stick) நடந்து வந்துகொண்டிருந்தார்.
வயதான அந்த முதியவர்களின் அபயக் குரலைக் கேட்டதும் அவர், "நான்
உங்களுக்கு வழி காட்டுக்கிறேன்" என்று சொல்லி அவர்களை அவர்களுடைய
வீடுவரை அழைத்துக்கொண்டு வந்தார்.
இந்த இரவு வேளையில் தங்களை வீட்டிற்கு அழைத்து அந்த புதிய மனிதருக்கு
நன்றிசெலுத்தலாம் என்று அவர்கள் அவரை முழுதாகப் பார்த்தபோதுதான்
தெரிந்தது அவர் ஒரு பார்வையற்ற மனிதர் என்று. அவர்களுக்கு ஆச்சரியம்
தாங்க முடியவில்ல. "எப்படி உங்களால் எங்களை இந்த இருட்டில் வழிநடத்தி
வரமுடிந்தது" என்று கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம்,
"நான் பார்வையற்றவனாக இருந்தாலும், எனக்கு இந்த பகுதியில் நடந்து
வந்த அனுபவம் இருக்கிறது. அதனால்தான் உங்களை என்னால் எளிதாக வழிநடத்தி
வர முடிந்தது" என்றார்.
தான் பார்வையற்றவராக இருந்தாலும், இருளில் தவித்த அந்த
முதியவர்களுக்கு வழிகாட்டியாக/ ஒளியாக இருந்தது நாம் அனைவரும்
இந்த உலகிற்கு ஒளியாக இருக்கவேண்டும் என்பதைத் தெளிவாக
விளக்குகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "எவரும் விளக்கை ஏற்றி
அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ்
வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி
அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்" என்கிறார். இதையே நாம்
மத்தேயு நற்செய்தியில் படிக்கும்போது, "நீங்கள் உலகிற்கு
ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பார் (மத் 5:14). ஆம், நாம்
ஒவ்வொருவரும் கடவுள் நமக்குக் கொடுத்த திறமையை, வாய்ப்பு
வசதிகளைப் பயன்படுத்தி உலகிற்கு ஒளியாக இருக்கவேண்டும்
என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.
இப்போது நாம் எப்படி உலகிற்கு ஒளியாவது என்று சிந்தித்துப்
பார்ப்போம். பொதுவாக மனிதர்களாகிய நம்மால் தாமாக ஒளிதர
முடியாது. மாறாக ஒளியாகிய கடவுளிடமிருந்து நாம் ஒளியைப்
பெற்றுக்கொண்டால்தான் பிறருக்கு ஒளிதர முடியும். எப்படி
நிலவானது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்றுக்கொண்டு, உலகிற்கு
ஒளியை வழங்குகின்றதோ அதுபோன்று நாமும் இறைவனிடமிருந்து ஒளியைப்
பெற்றுக்கொண்டால்தான் இவ்வுலகிற்கு ஒளியாக முடியும். அதற்கு
நாம் இறைவனோடு இணைந்திருக்கவேண்டும்.
ஆண்டவர் இயேசு கூறுவார், "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால்
எதுவும் செய்ய முடியாது" என்று (யோவான் 15:5). ஆம், நாம்
இறைவனோடு இணைந்திருந்தால்தான் ஒளிதர முடியும்.
அடுத்ததாக நாம் நற்செயல்கள் புரிவதன் வழியாக, பிறருக்கு
வழிகாட்டுவதன் வழியாக உலகிற்கு ஒளியாக முடியும். இறைவாக்கினர்
எசாயா புத்தகம் 58:10 ல் வாசிக்கின்றோம்,
"பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை
நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட
உன் நிலை நண்பகல் போல் ஆகும்" என்று. ஆம், நம்மோடு வாழக்கூடிய
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களுக்கு உற்ற துணையாக
இருக்கின்றபோது நாம் இந்த உலகிற்கு ஒளியாக மாறுகின்றோம்.
ஆனால் நடைமுறையில், நாம் இந்த உலகிற்கு ஒளியாக இல்லாமல்,
இருளாகவே இருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் கடவுள் கொடுத்த
திறமைகளையும், வாய்ப்பு வசதிகளையும் நாமே பயன்படுத்திக்கொண்டு,
விளக்கை மரக்காலுக்குள் மறைத்து வைக்கும் மனிதர்களைப்
போன்றவர்களாகின்றோம். ஆகவே இத்தகைய ஒரு சுயநலமான போக்கை,
யாரைக் குறித்தும் அக்கறையில்லாத வாழ்க்கை முறையை
நம்மிடமிருந்து நாம் அகற்றவேண்டும்.
ஆண்டவர் இயேசு சொல்லும் தாலந்து உவமையில் ஒரு தாலந்து பெற்ற
மனிதன், அதனைப் பயன்படுத்தாமல், நிலத்தைத் தோண்டி புதைத்து
வைத்தான். அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட தாலந்தை
பயன்படுத்தாததனால் தலைவரிடமிருந்து தண்டனையைப் பெற்றான்.
நாமும் கடவுள் நமக்குக் கொடுத்த கொடைகளைப் பயன்படுத்தி, இந்த
உலகிற்கு ஒளியாக மாறாதபோது நாமும் கடவுளின் கோபத்தை நம்மீது
வருவித்துக் கொள்கிறாம்.
ஆகவே, கடவுள் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்தாமல், மறைத்து
வைக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, இந்த உலகிற்கு ஒளிதரும்
மக்களாவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|