|
21
செப்டம்பர் 2018 |
|
பொதுக்காலம்
24ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர்
விழா.
இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே
கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
(4: 1-7, 11-13)
சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான்
உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு
ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும்
ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து,
தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி
செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே.
அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே;
திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே;
அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்;
எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப
நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத்
திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும்,
ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற
இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும்
இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப்
பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம்.
கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம்
முதிர்ச்சி அடைவோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி
அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
-பல்லவி
3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல்
செவியில் படுவதுமில்லை.
4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை
கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே
கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
-பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா!
இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்.
திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு "என்னைப் பின்பற்றி வா" என்றார். மத்தேயுவும் எழுந்து
இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (9: 9-13)
அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை
இயேசு கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா" என்றார்.
அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய
வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள்
ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், "உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும்
பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர்.
இயேசு இதைக் கேட்டவுடன், "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே
மருத்துவர் தேவை. "பலியை அல்ல, இரக்கத்தையே
விரும்புகிறேன்" என்பதன்
கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை
அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
செய் நன்றி மறவா இயேசுவின் பெண்சீடர்கள்!
1943 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த
தருணம். அமெரிக்கரான பிரட் ஹார்ஜ்ஷைமர் பயணித்துக் கொண்டிருந்த
விமானம், பசிபிக் பெருங்கடலில் ஜப்பானியப் போர் விமானங்களால்
சுட்டு வீழ்த்தப்பட்டது. அவரது அதிர்ஷ்டம் அந்த விமானம் நியூ
இங்கிலாந்து என்ற தீவின் அடர்ந்த காடுகளுக்குக்குள் விழுந்தது.
முப்பதொரு நாட்கள் அவர் அந்தக் காட்டில் உயிருக்குப்
போராடினார். அவரைக் கண்டெடுத்த தீவின் பழங்குடியினர் தங்கள்
குடிசைக்கு அவரை அழைத்துபோய் பாதுகாத்தனர். தீவு ஜப்பானியரின்
ஆட்சியில் இருந்த காலம். ஏழு மாதங்கள் அவர் அந்தப் பழங்குடியினரின்
அரவணைப்பில் பிழைத்திருந்தார். மறைவிடமும் உணவும் தந்தது மட்டுமல்லாமல்
அவருக்கு உடல் நலம் குன்றியபோது மருத்துவமும் செய்து அவர்கள்
அவரது உயிரைக் காப்பாற்றினார்கள்.
ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அவரைக் காப்பாற்றி ஆஸ்திரேலியாவுக்கு
அழைத்துச் சென்றது. போர் முடிந்ததும் அவர் தன் தாயகமான அமெரிக்காவுக்குத்
திரும்பினார். அங்கு அவர் ஒரு கணினி நிறுவனத்தில் விற்பனையாளராகப்
பணியாற்றினார். திருமணம் செய்து கொண்டார், குழந்தைகள் பிறந்தன.
ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றிய மக்களின் நினைவு அவரது மனதை
நீங்கவில்லை. அதைப் பற்றி நினைக்க நினைக்க, அந்த மக்களுக்காக
தான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் என்ற உணர்வு அவருக்கு அதிகமானது.
பதினேழு ஆண்டுகள் கழித்து, தன் குடும்பத்தோடு அவர் நியூ இங்கிலாந்துத்
தீவுக்கு இரண்டாம் முறை வந்தார். ஐந்து டாலர், பத்து டாலர் என்று
நண்பர்களிடமிருந்து வசூல் செய்த பதினைந்தாயிரம் டாலர் தொகையுடன்.
அதன் பின் இன்னும் மூன்று ஆண்டுகள் ஆன பின் மீண்டும் வந்தார்,
இம்முறை நிரந்தரமாகக் குடியேற. தன்னிடமிருந்த காசில் அந்த கிராமவாசிகளுக்குப்
பள்ளிக்கூடம் கட்டித் தந்தார். அதைத் தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில்
மருத்துவமனை, பள்ளிகள், நூலகங்கள் என்று பல சேவைகளையும் அவர்
அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விரிவுபடுத்தினார்.
தன் மறைவுக்கு மூன்றாண்டுகள் முன் ஒரு பேட்டியில், "நியூ இங்கிலாந்து
தீவில் இருப்பவர்கள் என் உயிரைக் காப்பாற்றியவர்கள். இவர்களுக்கு
நான் என்ன கைமாறு செய்தாலும், அது இவர்கள் எனது உயிரைக்
காப்பாற்றியதற்கு ஈடாகாது" என்று சொன்னார் பிரட் ஹார்ஜ்ஷைமர்.
அந்தளவுக்கு நன்றி மறவாமல் தன் வாழ்நாள்தோறும் செஞ்சோற்றுக்
கடன் தீர்த்த பிரட் ஹார்ஜ்ஷைமர் செய்ந்நன்றி மறவாமைக்கு மிகச்
சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார்.
பிரட் ஹார்ஜ்ஷைமர் எப்படி தன் வாழ்நாள் முழுக்க நியூ இங்கிலாந்து
தீவினருக்கு நன்றியுள்ளவராக இருந்தாரோ, அதுபோன்று இயேசுவின்
பெண்சீடர்களில் ஒருசிலர் இயேசுவுக்கு தங்கள் வாழ்நாள் முழுக்க
நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களைக் குறித்துத்தான் இன்றைய
நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. இயேசு அந்தப் பெண்களுக்கு
என்ன நன்மைகளைச் செய்தார், அதற்குக் கைமாறாக அவர்கள் எந்தளவுக்கு
நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
இயேசுவிடமிருந்து நலம் பெற்ற பெண்கள் (சீடர்கள்) பலர் இருந்தாலும்
மூன்று பேரை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது.
ஒருவர் மகதலா மரியா, இரண்டாமவர் ஏரோது மாளிகை மேற்பார்வையாளரான
கூசாவின் மனைவியான யோவன்னா, மூன்றாமவர் சூசான்னா.
மகதலா மரியா இயேசுவிடமிருந்து ஏழு பேய்கள் நீங்கப்
பெறுகின்றார். அதற்கு நன்றிக்கடனாக இயேசுவோடு கடைசி வரைக்கும்
இருக்கின்றார். இயேசுவின் ஆண்சீடர்கள் அனைவரும் ஆபத்து என்று
வந்ததும் ஓடிப்போனாலும் கூட இந்த மகதலா மரியா எதற்கு பயப்படாமல்
சிலுவை மட்டும் கூடவே இருக்கின்றார். இதனால்தான் என்னவோ, உயிர்த்த
ஆண்டவர் இவருக்கு முதலாகக் காட்சி தருகின்றார். இயேசுவிடமிருந்து
நலம்பெற்ற இரண்டாமவர் சூசன்னா. விவிலிய அறிஞர்கள், கப்பர்நாகுமில்
இயேசு ஓர் அரச அலுவலரின் மகனைக் குணப்படுத்தினார் அல்லவா, அந்த
அரச அலுவலருடைய மனைவிதான் இந்த யோவன்னா என்று கூறுவார்கள்.
நோயில் கிடந்த தன் மகனை இயேசு குணப்படுத்தியதால் தன் வாழ்நாள்
முழுக்க அவர் நன்றி உள்ளவராக இருக்கின்றார்.
மூன்றாவதாக நாம் வாசிக்கக் கூடியவர் சூசன்னா. இவருக்கு இயேசு
என்ன நன்மையைச் செய்தார் என்ற குறிப்புகள் இல்லை, இவருக்கும்
இயேசு கட்டாயம் நன்மை செய்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
இந்த மூன்று பேரும் அவர்களோடு இருந்த ஏனைய பெண்களும் இயேசுவின்
நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளைச்
செய்து, நன்றியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
நாமும் இறைவனிடமிருந்து ஏராளமான உதவிகளை, நன்மைகளைப்
பெற்றிருப்போம். அந்த நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பது
நல்லது. ஆகவே, இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக
இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தூய மத்தேயு விழா
பிரான்ஸ் நாட்டிலே சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆயர் ஒருவர்
இருந்தார். அவர் மிகச் சிறந்த பிரசங்கியார்; பேச்சாளரும்கூட.
ஒருமுறை அவரிடத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர், "உங்கள்
வாழ்வில் நீங்கள் செய்த மிகப்பெரிய சாதனை என்ன?" என்று
கேட்டார்". அதற்கு அவர், "என்னிடத்தில் வந்து, ஒருசிலர் "நான்
நன்றாக பிரசங்கம் செய்கிறேன், அது உள்ளத்தை உருக்குவதாக
இருக்கிறது" என்று சொல்வார்கள். அதுவல்ல நான் செய்த சாதனை.
மாறாக "உங்கள் பிரசங்கம் என்னை செயல்படத் தூண்டியது, செயலுக்கு
இட்டுச் செல்வதாக இருக்கிறது" என்று சொல்கிறார்களே அதுதான்
தான் செய்த மிகப்பெரிய சாதனை" என்றார்.
பிரசங்கம் மறையுரை - நம்மை செயலுக்கு இட்டுச்
செல்கிறபோதுதான் அது முழுமை பெறுகிறது என்பதை இந்நிகழ்வு
நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அப்படி உள்ளத்தை உருக்குவதாக
மட்டும் அல்லாமல், நம்மை செயல்படத் தூண்டும் அளவுக்கு
நற்செய்தியை எழுதிய ஒருவருடைய விழாவைத்தான் இன்றைக்கு நாம்
கொண்டாடுகிறோம். அவர் வேறு யாருமல்ல நற்செய்தியாளரான தூய
மத்தேயுவே. மத்தேயுவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இவரது
வாழ்வு, இவரது நற்செய்தி நூலின் சிறப்பு, இவர் நமக்கு
உணர்த்தும் செய்தி என்று மூன்று பகுதிகளாக சிந்தித்துப்
பார்ப்போம்.
முதலாவதாக மத்தேயுவின் வாழ்க்கை வரலாறு: மத்தேயு கலிலேயாவில்
பிறந்தவர். ஏரோது அந்திபாசுவின் ஆளுகைக்குக் கீழ்,
வரிதண்டுபவராகப் பணியாற்றிவர். அக்காலத்தில் வரிதண்டுதல்
என்பது யூதர்களால் நாட்டை காட்டிக்கொடுக்கும் அளவிற்கு
குற்றமாக, இழிவாகக் கருத்தப்பட்டது. மேலும் இத்தகைய தொழிலில்
ஈடுபடுபவர்கள் பாவிகளாகவே கருதப்படுவார்கள். வரிதண்டும்
தொழிலில் ஈடுபட்டிருந்த மத்தேயுவும்கூட இதற்கு விதிவிலக்கல்ல
இத்தகைய சூழலில் ஆண்டவர் இயேசு "என்னைப் பின்பற்றி வா" என்று
சொன்னதும் அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப்
பின்தொடர்கிறார். அவரது உண்மையுள்ள சீடராக வாழ்கிறார். ஆண்டவர்
இயேசுவின் உயிர்புக்குப் பிறகு இவர் மாசிதோனியா, எத்தியோப்பியா
போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவித்ததாகவும், அங்கே
மறைசாட்சியாக இறந்ததாகும் திருச்சபை மரபு சொல்கிறது. இது அவரது
வாழக்கை வரலாறைக் குறித்த செய்திகளாகும்.
இரண்டாவதாக அவரது நற்செய்தியின் சிறப்பு: தூய மத்தேயு என்று
சொல்கிறபோதே நமக்கெல்லாம் அவர் எழுதிய நற்செய்தி நூல்தான்
நினைவுக்கு வருகிறது. அந்தியோக்கு நகரில் வாழ்ந்த யூத
கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட அரமேய்க் மொழியில் எழுதப்பட்ட
இந்நற்செய்தி "இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா" என்பதைத்
தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்நற்செய்தி நூல்
"இறையாட்சி நூல்" என்று அழைக்கப்படுகிறது. காரணம் இறையாட்சி
என்ற வார்த்தையானது 51 முறை வருகிறது. உலக முடிவுவரை எந்நாளும்
உங்களோடு இருப்பேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை
நினைவூட்டுவதால், இது இறைவனின் பாதுகாப்பை உணர்த்தும்
நற்செய்தி நூல் எனவும் எனவும் அழைக்கப்படுகிறது.
மூன்றாவதாக அவர் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதைச்
சிந்தித்துப் பார்ப்போம். மத்தேயு சுங்கச் சாவடியில் வரி
வசூலித்துக்கொண்டு ஏறக்குறைய ஒரு பாவியைப் போன்றே
வாழ்ந்துவந்தார். அப்படிப்பட்ட வேளையில்தான் இயேசு அவரை
தன்பின்னே மனமாறி வர அழைக்கின்றார்.
கடவுள் மத்தேயுவை மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருமே மனந்திரும்பி
வாழ அழைக்கின்றோர். இயேசுவின் முதல் போதனையே மனமாற்றமாகத்தான்
இருக்கிறது. மாற் 1:15 ல் வாசின்றோம், "மனந்திரும்பி
நற்செய்தியை நம்புங்கள்" என்று. எனவே நாம் நம்முடைய பழைய, பாவ
வாழ்க்கையிலிருந்து மனமாறி புதிய வாழ்க்கை வாழுவோம்.
ஒரு வகுப்பிலே மாணவன் ஒருவன் இருந்தான். அவன் சகமாணவர்களது
பொருட்களைத் திருடுவதையே தன்னுடைய வாடிக்கையாகக்
கொண்டிருந்தான். வகுப்பு ஆசிரியருக்கு இச்செய்தி தெரிய வந்து,
அவர் அவனுக்கு எவ்வளவோ அறிவுரை சொன்னாலும்கூட, அவன் தன்னுடைய
திருட்டை விட்டவனாக இல்லை. இது வகுப்பு ஆசிரியருக்கு இன்னும்
மனவருத்தத்தைத் தந்தது.
ஒருநாள் ஆசிரியர் அந்த மாணவனை அழைத்து, கொஞ்சம் பணம்கொடுத்து
வகுப்புத் தேவையான பொருட்களை வாங்கிவரச் சொன்னார். அவனும்
கடைக்குப் போய், பொருட்களை எல்லாம் வாங்கிவந்து ஆசிரியரிடம்
கொடுத்தான். அத்தோடு மீதிப் பணத்தையும் அவரிடம் கொடுத்தான்.
அதன்பிறகு அன்றைய நாளில் நடந்த வகுப்பில், ஆசிரியர் அந்த
மாணவனை எழுந்து நிற்கச் சொல்லி, "இம்மாணவனைப் பொருட்களை
வாங்கிவரச் சொன்னான். அவனும் நேர்மையாக நடந்துகொண்டு பொருட்களை
வாங்கி வந்திருக்கிறான். மீதிப்பணத்தையும் கூட என்னிடத்தில்
தந்திருக்கிறான். இந்த மாணவனைப் போன்று நீங்கள் அனைவரும்
நேர்மையாக, உண்மையாக இருக்கவேண்டும்" என்று அறிவுரை கூறினார்.
இதைக் கேட்ட மாணவன் உள்ளம் குத்துண்டு போனான். ஏனெனில் அன்றைய
நாளிலும் அவன் ஆசிரியர் கொடுத்த பணத்தில் மீதிப் பணத்தை
சரியாகக் கொடுக்கவில்லை. எனவே அவன் தன்னுடைய தவறை நினைத்து
அழுதான். ஆசிரியர் நமக்கு மீண்டும் மீண்டுமாக புத்திமதி
சொல்லியும், நம்பிக்கை வைத்தும் நான் திருந்தவில்லையே என்று
நினைத்து வருந்தினான். அன்றோடு அவன் தன்னுடைய திருட்டை
விட்டுவிட்டு, நல்வழியில் வாழ்ந்தான்.
கதையில் வரும் ஆசிரியர் போன்றுதான் கடவுள் ஆண்டவர் இயேசு
நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி வாழவேண்டும் என்று
விரும்புகிறார். நாம் மத்தேயுவைப் போன்று மனந்திரும்பி
வாழும்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஆதலால் நற்செய்தியாளர் தூய மத்தேயுவின் விழாவைக் கொண்டாடும்
இவ்வேளையில் கடவுள் அவர் வழியாக நமக்கு கொடுத்த நற்செய்தியின்
நூலின் படி வாழ்வோம். மனந்திரும்பி வாழ்ந்து இறையருள்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய
சீடரோடும் விருந்துண்டனர்.
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், 'உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும்
பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?' என்று கேட்டனர்" (மத்தேயு
9:10-11)
-- மத்தேயு என்பவர் வரிதண்டும் தொழில் செய்துவந்தார் (காண்க:
மத் 9:9; மாற் 2:13). அக்காலத்தில் வரிதண்டும் தொழில் இழிந்த
ஒன்றாகக் கருதப்பட்டது. சமயப் பற்றுடைய யூதர்கள் வரிதண்டுவோரை
வெறுத்து, ஒதுக்கினர். ஏனென்றால் வரிதண்டுவோர் பாலஸ்தீனத்தில்
ஆதிக்கம் செலுத்திய உரோமையரின் கைக்கூலிகளாகக் கருதப்பட்டனர்.
இவ்வாறு நாட்டுப் பற்றில்லாதது மட்டுமல்ல, அவர்கள் பிற இனத்தாரோடும்
தம் தொழில் காரணமாக நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தனர். அவர்கள்
நேர்மையற்றவர்களாகக் கருதப்பட்டனர். குறிக்கப்பட்ட தொகைக்கு
மேலாக வரி பிரித்து அதைத் தங்களுக்கென வைத்துக்கொண்டார்கள் என
மக்கள் அவர்கள்மேல் குற்றம் கண்டனர் (காண்க: லூக் 3:13). இவ்வாறு
இழிவாகக் கருதப்பட்ட ஒரு வரிதண்டுபவரை இயேசு தம் சீடராக அழைத்தது
மட்டுமல்ல, அவருடைய வீட்டுக்குச் சென்று விருந்து உண்ணவும்
செய்கின்றார். மேலும் வேறு பல வரிதண்டுவோரும் இயேசுவோடு
விருந்தில் அமர்கின்றனர். இன்னொரு "தாழ்ந்த" இனத்தவரும் இயேசுவோடு
விருந்தில் கலந்துகொள்கின்றனர். இவர்கள் "பாவிகள்" என அழைக்கப்பட்டார்கள்.
இவர்கள் பிற இனத்தவர்களாக இருக்கலாம்; அல்லது யூத சமய நெறிகளைத்
துல்லியமாகக் கடைப்பிடிக்காத யூதராக இருக்கலாம்; அல்லது
"நேர்மையற்ற" தொழில் செய்தவர்களாக இருக்கலாம் (எ.டு: வரிதண்டுதல்,
ஆடு மேய்த்தல், கம்பளிக்குச் சாயமேற்றுதல்). இத்தகைய
"தாழ்நிலை" மக்களோடு உணவருந்தி உறவாடுவது மிக இழிந்த செயலாகக்
கருதப்பட்டது.
-- எனவே சமயத்தில் மிகுந்த பிடிப்புடைய பரிசேயர்கள் இயேசுவிடம்
குற்றம் காண்கிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத்
தெரியவில்லை. அவர் எல்லா மனிதரும் நலமடைய வேண்டும் என்பதற்காகத்
தானே இவ்வுலகிற்கு வந்தார். எனவே, மனிதரிடையே தாழ்ந்தவர் உயர்ந்தவர்
என அவர் வேறுபாடு காட்டவில்லை. கடவுள் வாக்களிக்கின்ற இறுதிக்காலப்
பெருவிருந்தில் எல்லா மக்களுக்கும் இடம் உண்டு என்னும் உண்மையை
முன்னுணர்த்துவதுபோல இயேசு வேறுபாடின்றி மக்களோடு கலந்து உறவாடினார்;
அவர்களோடு கூட அமர்ந்து உணவு உண்டார் (காண்க: மத் 14:32-39;
22:1-14; 26:26-30). வெறுமனே உணவு உண்பது மட்டுமல்ல இயேசுவின்
நோக்கம். விருந்துகளில் கலந்த அவர் மக்களுக்குக் குணமளிக்கவும்
செய்தார் (காண்க: மத் 9:12); பாவ மன்னிப்பும் வழங்கினார் (மத்
9:13). ஓசேயா இறைவாக்கினரின் நூலிலிருந்து மேற்கோள் காட்டி
(காண்க: ஓசே 6:6), இயேசு கடவுளின் இரக்கமும் பரிவும் பலிகளை
விட மேலானவை என்றுரைத்தார் (மத் 9:13). இயேசு நிறுவ வந்த கடவுளாட்சியில்
எல்லா மக்களுக்கும் இடம் உண்டு. குறிப்பாக, யார்யார் நீதி
நிலைநாட்டுவதில் வேட்கை கொண்டுள்ளனரோ அவர்கள் இயேசு வழங்கும்
கொடையை எளிதில் கண்டுகொள்வார்கள் (மத் 5:6). மாறாக, தங்களையே
நேர்மையாளர்கள் என்று கருதி, பிறரை இழிவாக நோக்குவோர் கடவுளாட்சியில்
புகுவதற்கு வழங்கப்படும் அழைப்பை ஏற்க மனமுவந்து முன்வரமாட்டார்கள்
(மத் 9:13). மனிதரிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்காத இயேசுவைப்
போல அவருடைய சீடராகிய நாமும் வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
தூய மத்தேயு விழா
இன்று திருச்சபையானது தூய மத்தேயுவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.
மத்தேயு என்றால் "கடவுளின் கொடை" என்பது பொருளாகும். மத்தேயு
நற்செய்தியாளர் தன்னுடைய பெயருக்கு ஏற்றது போன்று கடவுளிடமிருந்து
பெற்ற கொடையை எல்லா மக்களுக்கும் வழங்கினார். இவர் எழுதிய நற்செய்தி
நூல் மிகவும் சிறப்பானது. பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ
நெறியை இந்தியாவிற்கு அறிவிக்க வந்த தூய பிரான்சிஸ் சவேரியார்
தன்னோடு மத்தேயு நற்செய்தியைத்தான் எடுத்து வந்தார் என்பது மத்தேயு
நற்செய்தியின் சிறப்பு. மேலும் நம்முடைய தேசத் தந்தை காந்தியடிகள்
தன்னுடைய போராட்டத்திற்கான உத்வேகத்தை ஆண்டவர் இயேசுவின் மலைபொழிவிலிருந்துதான்
(மத்தேயு நற்செய்தியிளிலிருந்துதான்) பெறுகிறார் என்பது மத்தேயு
நற்செய்தியின் கூடுதல் சிறப்பு.
இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் இவரது
வாழ்வும், இவரது விழாவும் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
மத்தேயுவைப் பற்றி அறிய முற்படும்போது இவர்
இயேசு
கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் ஒருவர் (மத்
9:9) என்று தெரிகிறது. கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய
மத்தேயுவை, இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டு தனது பன்னிரு
திருத்தூதர்களுள் ஒருவராக்கினார் (மத்10:3).
மாற்கு (3:18), லூக்கா (6:15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் (1:13) நூலும்
மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன.
மாற்கு(2:14), லூக்கா (5:27) நற்செய்திகளில் இவர் அல்பேயுவின்
மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர், ஏரோது அந்திபாசுக்காக
யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய
ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும்
மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
அல்பேயுவின் மகனான மத்தேயு, ரோம ஆளுகையில் இருந்த யூதேயாவின்
கலிலேயா பகுதியில் பிறந்தவர். ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய
குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில்
வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணியாற்றியவர்களை
யூத மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினர்.
கிரேக்க, அரமேய மொழிகளில்
மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில்தான், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக
இருக்க மத்தேயுவை அழைத்தார். தனது அழைப்பை ஏற்ற மத்தேயு, இயேசுவைத்
தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார். இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும்
உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம்,
"இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று
கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு
அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல,
பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மாற்கு 2:16-17)
புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர்
தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு
துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும்,
அவரது உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும்
புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின்
விண்ணேற்றத்துக்கு பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில்
தங்கியிருந்து செபித்தனர். பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு
பின்பு, அவர்கள் அனைவரும் 'இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா'
என்று எருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர்.
சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக
நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா,
பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு
இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்.
கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு
மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக
இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.
கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில்
யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில்
உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன.
இது தவிர யூதக் கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட
நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான
மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத்
தீர்வுகாண மத்தேயு
நற்செய்தி நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள்
எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு
அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது.
அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும்
சுட்டிக்காட்டப்படுகிறது. யூதக் கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும்
சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல் விடுக்கிறது. பிற
இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக
மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய
நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத்
தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும்
இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல்
விடுக்கிறார் (மத்தேயு 28:20). இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள்,
முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன
எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலில் கிறிஸ்தியல்,
திருச்சபையில், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள்
பிணைந்து கிடக்கின்றன.
இவரது வாழ்வையும், நற்செய்தி நூலையும் குறித்து சிந்தித்துப்
பார்த்த நாம் இவரது விழா உணர்த்தும் உண்மை என்ன என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், "கடவுள் எல்லாருக்கும்
மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்;
எல்லாருக்குள்ளும் இருப்பவர்" என்று படிக்கின்றோம். ஆம்,
இறைவனின் பணியை குறிப்பிட்ட மக்கள்தான் செய்யவேண்டும்
என்றில்லை அல்லது இறைப்பணி குறிப்பிட்ட மக்களுக்கு உரியது
என்று நினைப்பது தவறு. அப்பணியைச் செய்ய எல்லாருக்கும் உரிமை
உண்டு, எல்லாருக்கும் பங்கு உண்டு. தூய மத்தேயு வரிதண்டுபவராக/
பாவியாக இருந்தாலும் கடவுள் அவரைத் தன்னுடைய திருப்பணிக்கு
அழைத்தார். எனவே நாம் இறைபணி எல்லாருக்கும் பொதுவானது என்ற
உண்மையை உணர்ந்து கொள்வோம்.
அடுத்தாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார்,
"பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்று. நாம்
ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவைப் போன்று இரக்கத்தின் கருவிகளாக
விளங்க வேண்டும். அதுதான் இந்த விழா உணர்த்தும் மேலான பாடமாக
இருக்கின்றது. நாம் செலுத்தும் பலிகள், பூசைகள் அனைத்தையும்
விட, ஒருவர் மற்றவரிடம் காட்டும் இரக்கம் மிகப்பெரியது.
பெருநகரில் வாழ்ந்துவந்த ஓர் இளைஞர்குலாம் மலைவாசஸ்தலத்திற்கு
சுற்றுலா சென்றது. அங்கே அவர்களுக்கு மலையின் உச்சியில் ஒரு
துறவுமடம் இருப்பதாகும், அங்கே சென்று வந்தால் புண்ணியம்
கிடக்கும் என்ற செய்தி சொல்லப்பட்டது. எனவே அவர்கள் அந்த துறவு
மடத்திற்கு சென்றார்கள்.
அவர்கள் சென்ற நேரம் துறவுமடத்தில் ஒரே ஒரு துறவி மட்டும்
இருந்தார். அவர் அவர்களுக்கு எல்லா இடங்களையெல்லாம்
சுற்றிக்காட்டினார்; உண்பதற்கு உணவு கொடுத்தார். துறவி கொடுத்த
விருந்தை அவர்கள் மகிழ்வோடு பெற்றுக் கொண்டார்கள். அவர்கள்
அப்படியே பேசிக்கொண்டிருந்ததில் இரவு நேரம் நெருங்கி
வந்துவிட்டது. அதனால் அவர் அவர்களை அங்கேயே தங்கச் சொன்னார்.
துறவியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர்கள் அந்த துறவு
மடத்தில் தங்கினார்கள்.
சாம வேலையில் தூக்கத்திலிருந்து எழுந்த துறவி, தன்னை அண்டி
வந்த இளைஞர்கள் நன்றாகத் தூக்குகிறார்களா? என்று பார்க்க
வந்தார்கள். அங்கே அவர்கள் போர்த்த போர்வையில்லாமல் குளிரில்
நடுங்கிகொண்டிருந்தர்கள். அவருக்கு என்ன செய்வதென்ற
தெரியவில்லை. எல்லாருக்கும் போர்த்த போர்வையில்லாத சூழல்,
குளிர்காயவும் விறகுகள் இல்லாத ஒரு இக்கட்டான் ஒரு சூழ்நிலை.
இதையெல்லாம் பார்த்த துறவி, அங்கே இருந்த ஒரு மரத்தால் ஆனா
புத்தர் சிலையை உடைத்து, அதில் நெருப்பு மூட்டி, அவர்களைக்
குளிர் காயச் சொன்னார். துறவி புத்த சிலையைத் தான் உடைத்து
நெருப்பு மூட்டியிருக்கிறார் என்பதை அறிந்த அந்த இளைஞர்கள்
அவரைச் சாகும் வரை அடித்துப் போட்டார்கள்.
தங்களுக்காக நல்ல காரியத்தை புரிந்தாலும், அதைப் புரிந்துகொள்ள
முடியாத இளைஞர்கள் போக்கு நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. ஆகவே
வாழ்வில் எந்த நிலை வந்தாலும் நாம் நம் ஆண்டவரைப் போன்று, தூய
மத்தேயுவைப் போன்று இரக்கமுள்ளவர்களாக இருப்போம்.
தூய மத்தேயு கடவுள் தனக்குக் கொடுத்த கொடையை மக்களுக்காகக்
கொடுத்து, இரக்கத்தின் கருவியாக விளங்கினார். நாமும் நமது
திறமைகளை கடவுளின் மகிமைக்காக, மக்களின் நலனுக்காகப்
பயன்படுத்துவோம். இரக்கத்தின் கருவியாக விளங்குவோம்,
அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|