Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   20  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 24ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.

பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிட வில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 118: 1-2. 16-17. 28 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். பல்லவி

28 என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( மத் 11: 28 )

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-50

அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய் பந்தியில் அமர்ந்தார்.

அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.

அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். இயேசு அவரைப் பார்த்து, "சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்" என்றார்.

அதற்கு அவர், "போதகரே, சொல்லும்" என்றார். அப்பொழுது அவர், "கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்" என்றார்.

இயேசு அவரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார். பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.

ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.

பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார். "பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


சிந்தனை

விருந்தோம்புதல் நம்முடைய நல்ல பழக்கம். அதனை விரும்பி செய்தால் உறவு உறுதிப் பெறும்.

விருந்தோம்புதல் இன்று கடமைக்காக அமைந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பரபரப்பாக இருப்பதும், பராமுகமாக இருப்பதும், இன்று அதிகரித்துப் போய் விட்டதால் விருந்தோம்புதல் இன்று அர்த்தம் இழந்து போகின்றது.

நம்முடைய கலாச்சராத்தின் வேர்களுக்கு சென்று நம்முடைய பழக்கத்தை புதுப்பித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். விருந்தோம்புதலில் வருவோரின் தேவை அறிந்து, நம்முடைய கரிசனை, அன்பு, பரிவு, இரக்கம் இவற்றின் அடிப்படையில் கவனிப்பது தான் சிறப்பு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

பாவங்களை மன்னிக்கும் இயேசு!

ரஷ்யாவை நிக்கோலாஸ் என்ற மன்னர் ஆண்டு கொண்டிருந்த தருணம். அவருடைய படையிலிருந்த தளபதி, ஒருநாள் இரவு தன்னுடைய டைரியை எடுத்து, தான் யார் யாருக்கு, எவ்வளவு கடன் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதைக் குறிக்கத் தொடங்கினார். இந்தப் பட்டியலை அவர் எழுதிய பிறகு, "இந்தக் கடனையெல்லாம் தீர்ப்பது யார்?" என்று எழுதி வைத்தார்.

ஏற்கனவே களைப்பாக இருந்த தளபதி, தான் பட்ட கடன் என்னும் துன்பக்கடலில் மூழ்கி, அமர்ந்த இடத்தில் அப்படியே தூங்கிவிட்டார். இதற்கிடையில் மாறுவேடம் பூண்டு, தமது படைத் தளபதிகளைப் பரிசோதனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மன்னர் நிக்கோலாஸ் அன்று இரவு பரிசோதனை செய்வதற்காக வந்தபோது, தளபதி தூங்கிக்கொண்டிருப்பதையும் அவர் அருகில் ஒரு டைரி திறந்த நிலையில் கிடப்பதையும் அந்த டைரியில், 'யார் யாருக்குக் கடன் கொடுக்க வேண்டும்' என்பதும் அதன் இறுதியில் "யார் இந்தக் கடனைத் தீர்ப்பது?" என்று எழுதப்பட்டிருப்பதையும் கண்டார்.

உடனே அவர், "யார் இந்தக் கடனைத் தீர்ப்பது?" என்று எழுதப்பட்டிருந்ததற்குக் கீழ், "மன்னர் நிக்கோலாஸ்" என எழுதிவிட்டுப் போனார். தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அந்தத் தளபதி, தன்னுடைய டைரி திறந்து கிடப்பதையும் அதில், 'யார் இந்தக் கடனைத் தீர்ப்பது?' என்பதற்குக் கீழ் மன்னர் நிக்கோலாஸ் என்று எழுதப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

மறுநாள் மன்னர் அந்த டைரியில் குறிப்பிட்டிருந்தவாறு, அந்தத் தளபதியின் கடனை அடைக்க பெருந்தொகை தந்து உதவினார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில், அந்த தளபதியின் கடனை எப்படி மன்னர் நிக்கோலாஸ் தீர்த்துவைத்தாரோ, அதுபோன்று நம் அனைவரது பாவக் கடனையும் ஆண்டவர் இயேசு தீர்த்துவிட்டார், மன்னித்துவிட்டார்.

இன்றைய நற்செய்தி வாசகமானது ஆண்டவர் இயேசு பாவத்தில் விழுந்து கிடந்த ஒரு பெண்ணின் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பதைக் குறித்துச் சொல்கின்றது. ஆண்டவர் இயேசு பாவிப் பெண்ணின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்த நிகழ்வு எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது. இந்த நிகழ்வின் வழியாக நாம் என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இயேசு கிறிஸ்து பரிசேயரான சீமோனின் வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். இயேசுவை தன்னுடைய வீட்டிற்கு உணவருந்த அழைத்திருக்கின்றோமே, அவருக்கு உரியமுறையில் விருந்தோம்பல் செய்யவேண்டுமே என்றெல்லாம் சீமோன் நினைக்கவில்லை. இதற்கு மத்தியில் ஆண்டவர் இயேசு சீமோனின் வீட்டில் இருப்பதை அறிந்த பாவிப் பெண் ஒருத்தி, இயேசுவின் அருகில் வந்து, அவருடைய பாதங்களை நறுமணத் தைலத்தால் கழுவி, கூந்தலால் துடைத்து முத்தி செய்கின்றார். இதைப் பார்த்து பதற்றமடைகின்ற சீமோன், இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகின்ற இந்தப் பெண்மணி யார் என்று இவர் அறிந்திருப்பாரே, இவள் பாவியாயிற்றே" என்று முணுமுணுகின்றார். அப்போதுதான் இயேசு, சீமோன் தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்வதையும் அடுத்தவரைப் பாவியென ஒதுக்குகின்ற போக்கினையும் கடுமையாகச் சாடுகின்றார்.

நேர்மையாளர் என தன்னைக் காட்டிக்கொண்ட சீமோனிடம், இயேசு ஒரு விருந்தினரை எப்படி வரவேற்கவேண்டும் எப்படி எல்லாம் உபசரிக்கவேண்டும் என்பதுகூடத் தெரியாமல் அடுத்தவரிடம் குறைகாணுகிறாயே, உண்மையில் உன்னிடத்தில் தவறு இருக்கின்றது என்று அவருடைய தவற்றினைச் சுற்றிக்காட்டுகின்றார். அடுத்து, பாவிப் பெண் என்று சமூகம் நினைத்த ஒருபெண்ணை, வீட்டிற்கு வரும் விருந்தினரை எப்படி உபசரிக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முன்னிருத்துகின்றார். இங்கே மக்களுடைய பார்வைக்கு நேரமையாளராகத் தெரிந்த பரிசேயரான சீமோன் குற்றவாளியாகப் போய்விடுகின்றார், ஊரார் கண்ணுக்கு பாவியாகத் தெரிந்த பெண்மணியோ ஆண்டவருடைய பார்வைக்கு நல்லவராகத் தெரிகின்றார். ஆகவே, யாரையும் அவருடைய புறத் தோற்றத்தைப் பார்த்து எடைபோடக்கூடாது.

அடுத்ததாக, கடவுள் எல்லாரையும் அன்பு செய்கின்றார் என்றாலும் தன்னை அதிகமாக அன்பு செய்கிறவரை அவர் இன்னும் அதிகமாக அன்பு செய்கின்றார். இந்த உண்மையை இன்றைய இறைவார்த்தை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. பாவிப்பெண் இயேசுவின் மீதுகொண்ட அன்பை அளவுகடந்த விதமாய் வெளிப்படுத்துகின்றார். அவருடைய அன்பினால் தொடப்பட்ட இயேசு, அந்தப் பெண்மணியின் குற்றங்களை அனைத்தையும் மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். ஆகையால், யாராரெல்லாம் கடவுளை அளவு கடந்த விதமாய் அன்பு செய்கின்றார்களோ அவர்களைக் கடவுள் அளவுகடந்த விதமாய் அன்பு செய்கிறார் என்பது உறுதி.

ஆகவே, நம்மை நேர்மையாளர் என்றும் பிறரைக் குற்றவாளி என்று கருதும் போக்கினை விடுவோம். ஆண்டவர் மீது அளவுகடந்த அன்பு கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!