|
19
செப்டம்பர் 2018 |
|
பொதுக்காலம்
24ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 12: 31-13: 13
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய்
நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு
எடுத்துக் காட்டுகிறேன்.
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும்
அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும்
போலாவேன்.
இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள்
அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம்
பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு
நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல்
நான் ஒன்றுமில்லை.
என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலையே
சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல்
எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி
கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம்
நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு
தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்;
அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய்
இருக்கும்.
இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும்
கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும்
அழியாது.
ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும்
உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்.
நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன்; குழந்தையின்
மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான்
பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டு விட்டேன்.
ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பது போல் மங்கலாய்க்
காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான்
அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல்
முழுமையாய் அறிவேன்.
ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 118: 1-2. 16-17. 28 (பல்லவி: 1a)
=================================================================================
(திபா 33: 2-3. 4-5. 12, 22 (பல்லவி: 12b))
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள்
பேறுபெற்றோர்.
2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு
யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை
அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.
பல்லவி
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம்
நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும்
விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
பல்லவி
12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது
உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது
இருப்பதாக! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 6: 63b, 68b )
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும்
ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள்
உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள்
ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35
அக்காலத்தில் இயேசு, "இத்தலைமுறையின் மக்களை யாருக்கு
ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை
வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு
'நாங்கள் குழல்
ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்;
நீங்கள் அழவில்லை' என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு
ஒப்பானவர்கள்.
எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு
அருந்தவும் இல்லை; திராட்சை மது குடிக்கவும் இல்லை; அவரை,
'பேய் பிடித்தவன்' என்றீர்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர்
உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, `இம்மனிதன்
பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும்
பாவிகளுக்கும் நண்பன்' என்கிறீர்கள். எனினும் ஞானம் மெய்யானது
என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எல்லாவற்றுக்கும் குறைசொல்பவர்கள்!
முற்றும் துறந்த துறவி பட்டினத்தார். ஒரு சமயம் அவர்
நீண்டதூரம் நடந்துவந்த களைப்பினால், அறுவடை நடந்து
முடிந்திருந்த வயலில், தலையை வரப்பில் வைத்துக்கொண்டு அப்படியே
தூங்கினார்.
அப்போது பெண்கள் இருவர் பட்டினத்தார் படுத்திருந்த பக்கமாய்
நடந்து வந்தார்கள். அந்த இரண்டு பெண்களில் ஒருத்தி, "அங்கே
பாரடி! யாரோ ஒரு துறவி படுத்திருப்பது போன்று தெரிகிறது" என்று
சொல்லிக்கொண்டு, அவரை நோக்கி கும்பிட்டுவிட்டுக் கடந்துபோனாள்.
இன்னொரு பெண்ணோ, "அந்த ஆளையா துறவி என்று சொல்கின்றாய்...
தலையணை வைத்துத் தூங்குவது மாதிரி, வரப்பை தலையாக
வைத்துக்கொண்டு தூங்குகிறான். இவனா துறவி, சுகவாசி!" என்று
கடுஞ்ச்சொல் வீசிவிட்டுக் கடந்து போனாள். அந்தப் பெண் சொன்ன
சொல் லேசாக பட்டினத்தாரின் காதில் விழ, "அட கிரகத்த!, அசதியில்
தலையை வரப்பில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டோம். அதற்காகவா
இந்தப் பெண்மணி இப்படிப் பேசிவிட்டுப் போகிறாள், எதற்கு இந்த
வீண்வம்பு என்று, வரப்பிலிருந்து தலையை எடுத்துக் கீழே
வைத்துக்கொண்டு தூங்கத் தொடங்கினார்.
சிறிது நேரத்தில் அந்த வழியாகப் போன பெண்கள் இருவரும் திரும்பி
வந்தனர். பட்டினத்தார் வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே
வைத்துக்கொண்டு தூங்குவதைப் பார்த்த முதல் பெண்மணி
பரிதாபப்பட்டு, "பாத்தியாடி! நீ சொன்னதைக் கேட்டு, உடனே அவர்
தன்னுடைய தலையை கீழே இறக்கி வைத்துக்கொண்டு படுத்துவிட்டார்.
இப்போதாவது ஒத்துங்கள். அவர் முற்றும் துறந்த முனிவர் என்று"
என்றாள். இரண்டாவது பெண்மணியோ, "அடி போடி! இவனெல்லாம் முற்றும்
துறந்த முனிவரா? தன்னைப் பற்றிய யார் யார் என்னென்ன
பேசுகிறார்கள் என்று ஒட்டுக்கேட்கின்றான். அதைப் பற்றிக்
கவலைப்படுகிறான். இவனெல்லாம் ஒரு துறவியா? என்று போடு
போட்டாள். பட்டினத்தாருக்கு தலைசுற்றிப் போனது.
நாம் எப்படி இருந்தாலும், என்ன செய்தாலும் அதைக் குறை
சொல்வதற்கு ஆள் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வு
நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் இதுபோன்று எதற்கெடுத்தாலும் குறைகூறி
வந்த பரிசேயக் கூட்டத்தை ஆண்டவர் இயேசு கடுமையாகச்
சாடுகின்றார். அவர்களுடைய போக்கை சிறுபிள்ளைத்தனம் என
கண்டிக்கின்றார்.
மெசியாவின் வருகைக்காக இஸ்ரயேல் மக்களைத் தயார் செய்தவர்
திருமுழுக்கு யோவான். அவர் பாலைவனத்தில் இருந்து, ஒறுத்தல்
முயற்சிகளை மேற்கொண்டு, மக்களுக்குத் திருமுழுக்குக்
கொடுத்தும் மக்கள் மனமாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தும்
மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவந்தார். அப்படிப்பட்டவரை
பரிசேயக் கூட்டம் பேய் பிடித்தவன் என்று விமர்சித்தது.
இதற்கு மாறாக ஆண்டவர் இயேசு மக்களோடு சேர்ந்து உண்டார்,
குடித்தார். அவர்களோடு பழகினார். ஆனால் பரிசேயக் கூட்டமோ அவரை,
"இவன் பாவிகளின் நண்பன்", பெருந்தீனிக்காரன் என்று விமர்சனம்
செய்தது. இப்படி எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தாலும்
விமர்சிக்கின்ற, குறைகூறுகின்ற போக்கைத்தான் ஆண்டவர் இயேசு
சிறுபிள்ளைத் தனம் என்று கடுமையாகச் சாடுகின்றார்.
இங்கு நாம் இரண்டு காரியங்களைப் பற்றித்
தெரிந்துகொள்ளவேண்டும். ஒன்று விமர்சனத்தின் தேவை பற்றி.
இன்னொன்று தேவையற்ற விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளது? அல்லது
புறந்தள்ளுவது பற்றி.
நம்மை நோக்கி வருகின்ற எல்லா விமர்சனங்களையும் நாம் கெட்டவை
என்று புறந்தள்ளிவிட முடியாது. நம்மீது உண்மையான அக்கறை
கொண்டவர்கள், நம்முடைய வளர்ச்சியில் பெரிதும் மகிழக்
கூடியவர்கள் சொல்லக்கூடிய விமர்சங்களை நாம் நம்முடைய கருத்தில்
கொள்ளவேண்டும், சமயங்களில் அவை நம்மை கஷ்டப்படுத்தினாலும்கூட.
யாராரெல்லாம் இப்படிப்பட்ட வளர்ச்சிக்குரிய விமர்சனங்களை
கருத்தில்கொண்டு செயல்படுகின்றார்களோ, அவர்கள் தங்களுடைய
வாழ்வில் முன்னுக்கு வருவது உறுதி.
இன்னொரு வகையான விமர்சனம் இருக்கின்றது. இப்படிப்பட்ட
விமர்சனம் ஒருவரை அதாள பள்ளத்தில் தள்ளி,
வீழ்த்தக்கூடியவையாகவே இருக்கும். இப்படிப்பட்ட விமர்சனங்கள்
எல்லாம் பொறாமையின் அடிப்படையில் வரக்கூடியவை ஆகும். ஆண்டவர்
இயேசுவின்மீது வீசப் பட்ட விமர்சனங்கள் இதுபோன்றவைதான். இயேசு
அத்தகைய விமர்சனங்களை விவேகத்தோடு கையாண்டு, அதனை ஒதுக்கிக்
தள்ளினார். பொது வாழ்வில் ஈடுபடக்கூடியவராக இருக்கட்டும்
குடும்ப வாழ்வில் ஈடுபடுபவராக இருக்கட்டும். யாராக இருந்தாலும்
இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளுவது நல்லது.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், நம்மீது
வீசப்படுகின்ற விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்வோம்.
பிறருடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை விடுத்து,
அவர்களின் வளர்ச்சிக்குத் துணையாக இருப்போம். இறைவனுக்கு உகந்த
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|