Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     16  செப்டம்பர் 2018  
                                         பொதுக்காலம் 24ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 5-9a

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவும் இல்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்?

அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்( திபா 116: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 9)
=================================================================================
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். 2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். பல்லவி

3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. 4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; "ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்" என்று கெஞ்சினேன். பல்லவி

5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர். 6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். பல்லவி

8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார். 9 உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டா விட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?

ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்" என்பாரென்றால் அதனால் பயன் என்ன?

அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

ஆனால், "ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன" என யாராவது சொல்லலாம்.

அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(கலா 6: 14)

அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35

அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் அவரிடம், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள்.

"ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார்.

தம்மைப் பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

"மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.

இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார்.

ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்து கொண்டார்.

பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசு என்னும் துன்புறும் ஊழியன்

அது ஒரு சிற்றூர். அந்தச் சிற்றூரின் ஓரமாக ஓராசிரியர் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரே ஒரு ஆசிரியர் என்பதால், எல்லா மாணவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து பாடம் கற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஒருநாள் மதிய வேளையில், எல்லாரும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, வகுப்பறைத் திரும்பி வந்தபோது செல்வி என்ற மாணவி அழுதுகொண்டிருந்தார். ஏனென்று ஆசிரியர் அவளிடம் காரணத்தைக் கேட்டபோது, தன்னுடைய புத்தகப் பையிலிருந்த ஐம்பது ரூபாய் காணாமல் போய்விட்டது என்று செல்வி கண்ணீர் வடித்துக்கொண்டே சொன்னாள். ஆசிரியருக்குக் கோபம் தலைக்கேறியது. சாதாரணமாகவே ஒரு சிறிய தவறுக்கும் மாணவர்களை கடுமையாகத் தண்டிக்கும் அந்த ஆசிரியர், மாணவி ஒருத்தியின் பணம் காணாமல் போய்விட்டது என்று தெரிந்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். "யார் செல்வியின் பணத்தைத் திருடியது?, தயவுசெய்து உண்மையைச் சொல்லிவிடுங்கள், இல்லையென்றால் நடப்பது வேறு" என்று மாணவர்களைப் பார்த்து மிரட்டினார்.

அவருடைய இந்த மிரட்டலுக்குப் பயந்து, முன்வரிசையில் அமர்ந்திருந்த அகிலன் என்னும் மாணவன், "நான்தான் செல்வியின் பணத்தை எடுத்தேன்; நோட்டு புத்தகங்களை வாங்க கையில் காசில்லாததால்தான் அவ்வாறு செய்தேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்றான். அகிலனின் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். அதனால் அவன் அவ்வப்போது இதுபோன்ற சிறுசிறு திருட்டு வேலைகளைச் செய்வதுண்டு. ஆனால், எல்லா முறையும் மிக சாமர்த்தியமாக தப்பித்து வந்தவன், இந்த முறை வசமாக மாட்டிக்கொண்டான்.

அகிலன் தன்னுடைய குற்றத்தை ஒத்துக்கொண்டு மிக அமைதியாக நின்றுகொண்டிருந்தபோது ஆசிரியர் அவனை அடித்துத் துவைப்பதற்காக கம்பினை ஓங்கினார். அதற்குள் பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணிக்கம் என்னும் மாணவன், "ஐயா, அகிலனை தயவுசெய்து அடிக்கவேண்டாம். அவன் மிகவும் பலவீனமானவன், அவனுக்குப் பதிலாக நான் அடி வாங்கிக்கொள்கிறேன்" என்றான். சரி எப்படியும் போகட்டும் என்று சொல்லிவிட்டு, ஆசிரியர் அகிலனை எச்சரித்ததுவிட்டு, மாணிக்கத்தை அடிஅடியென அடித்துத் துவைத்தார். திடகாத்திரமான தேகத்தைக் கொண்டிருந்த மாணிக்கமே ஆசிரியர் அடித்த அடியில் கதறி அழத் தொடங்கினான். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த அகிலன், "எனக்காகத்தானே மாணிக்கம் இவ்வளவு அடிகளை வாங்குகிறான்" என்று மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டு அழுதான்.

அகிலன் செய்த தவற்றிற்காக மாணிக்கம் தன்னுடைய உடலில் அடிகளை வாங்கிக்கொண்டதுபோன்று, நம்முடைய பாவத்திற்காக, ஏன் நம்முடைய மீட்புக்காக இயேசு தன்னுடைய உடலில் துன்பங்களை தாங்கிக்கொண்டு என்பது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. பொதுகாலத்தின் இருபத்து நான்காம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் "இயேசு என்னும் துன்புறும் ஊழியன்" என்னும் சிந்தனைத் தருகின்றன. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பிலிப்பு செசாரியாப் பகுதிகளுக்குச் செல்லும் வழியில் தன்னுடைய சீடர்களிடம், "நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்கின்றார். அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்கின்றார்கள். இயேசு மீண்டுமாக அவர்களிடம், "நீங்கள் நான் யாரெனச் சொல்கிறீர்கள்" என்று கேட்க, சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைக்கின்றார். இயேசு அவரிடம், இதை நீர் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கண்டிப்பாய் கூறுகின்றார். மத்தேயு நற்செய்தியில் பேதுரு இவ்வாறு சொன்னபோது அவரை வானளாவப் புகழ்ந்த இயேசு, இங்கு பேதுருவிடமும் சீடர்களிடமும் இதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்வது மிகவும் சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

இயேசு இவ்வாறு சொன்னதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், பேதுரு (மற்ற சீடர்களும்தான்) இயேசுவை இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலைப் பெற்றுத் தருகின்ற ஒரு அரசியல் மெசியாவாகத்தான் பார்த்தார்கள். ஆனால், இயேசுவைப் பொறுத்தளவில் மெசியா என்பவர் மக்களுக்காக துன்பங்களைத் தாங்கிக்கொள்ளக்கூடியவர்; அவர்களின் மீட்புக்காக தன்னுடைய இன்னுயிரையும் பலியாகத் தரக்கூடியவர். அதனால்தான் அவர் மானிடமகன் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டு கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றார்.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இறை ஊழியர் எத்தகைய துன்பங்களைச் சந்திக்கின்றார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அப்பகுதியில் சொல்லப்படுகின்ற இறை ஊழியர் அல்லது துன்புறும் ஊழியர் இயேசுவே என்று விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். இயேசு, தான் மக்களுக்காகத் துன்பப்படுகின்ற ஒரு துன்புறும் ஊழியன்தானே தவிர, அரசியல் மெசியா அல்ல என்பதால்தான் இயேசு சீடர்களிடம் யாருக்கும் இதைச் சொல்லவேண்டாம் என்று உரைக்கின்றார். அது மட்டுமல்லாமல், துன்பங்களே வேண்டாம் என்று சொன்ன பேதுருவிடம், "என் கண்முன் நில்லாதே, சாத்தானே" என்கிறார்.

மாற்கு நற்செய்தியில் இடம்பெறும் இந்நிகழ்வு இயேசு யார் என்பதையும் இந்நிகழ்வுக்குப் பின்னால் வருகின்ற வார்த்தைகள் அவருடைய சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்னும் உண்மையை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இயேசு அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடியவர் அல்ல, மாறாக, அவர் துன்புறும் ஊழியர் என்பதை மாற்கு நற்செய்தியாளர் மிக அருமையாகப் பதிவுசெய்கின்றார். அது மட்டுமல்லாமல் இயேசுவின் சீடர்களும் அவருடைய வழியிலே - துன்பங்கள் நிறைந்த வழியிலே - நடக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். அதனால்தான் அவர் இயேசு கூறுவதாக, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்ற வார்த்தைகளைப் பதிவு செய்கின்றார். ஆம், இயேசுவின் சீடர்கள் யாவரும் தன்னலத்தைத் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்பற்றவேண்டும்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம் சிலுவைகளை, துன்பங்களைத் தாங்கிக்கொள்ள முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்கில் நாம் பேதுருவைப் போன்று சிலுவையே வேண்டாம் என்று நினைக்கின்றோம். இது எப்படி இருக்கின்றதென்றால் எனக்கு பகல் மட்டும் போதும், இரவு வேண்டவே வேண்டாம் என்பதுபோல் இருக்கின்றது. பகலும் இரவும் சேர்ந்துதான் ஒருநாள் ஆகின்றது. அதுபோன்றுதான் இன்பமும் துன்பமும் சேர்ந்து வாழ்க்கை ஆகின்றது. இன்னும் சொல்லப்போனால், பாடுகள்தான் பரலோகத்திற்கான நுழைவாயிலாகவும் சிலுவைதான் சிம்மாசனத்திற்கான படிக்கட்டாவும் இருக்கின்றது. ஆகவே, நாம் நம்முடைய வாழ்வில் துன்பங்களை, சிலுவைகளை மனவுறுதியோடு தாங்கிக்கொள்ள முன்வரவேண்டும்.

முன்பொரு காலத்தில் முட்பறவை (Thorn Bird) என்றொரு பறவை இருந்ததாம். அந்தப் பறவை உலகத்தில் இருக்கின்ற எல்லாப் பறவைகளை விடவும் அற்புதமாகப் பாடும் வல்லமை கைவரப்பெற்றதாம். அப்பறவை எப்படி இவ்வளவு சிறப்பாக பாடுகின்றது என்பதற்குச் சொல்லப்படுகின்ற செய்தி.

அந்தப் பறவை சிறகு முளைத்துப் பறக்கத் தொடங்கியதும் பெரிய முற்செடி எங்கிருக்கிறது என்று தேடி அலையுமாம். முற்செடியைக் கண்டதும் அதில் போய் அமர்ந்துகொண்டு, முட்கள் தன்னுடைய உடலை ஊடுருவ அனுமதிக்குமாம். அப்போது வலியில் தன்னையே மறந்து, பாடுமாம். அந்தப் பாடல் உயிரினங்கள் அனைத்தையும் உருக்கிவிடுவோம். அது மட்டுமல்லாமல், விண்ணகத்தில் இருக்கின்ற இறைவன்கூட மெய்மறந்து அந்தப் பறவையின் பாடலைக் கேட்டு இரசிப்பாராம். இறுதியாக அப்பறவை வேதனையோடு மெய்மறந்த நிலையில் பாடல்பாடி தன்னுடைய உயிரைத் துறக்குமாம்.

முட்பறவை தன்னுடைய உடலில் துன்பங்களைத் தாக்கிக்கொள்கின்றபோது அற்புதமான பாடலைப் பாடமுடிவது போன்று, நாமும் நம்முடைய வாழ்வில் துன்பங்களை, சிலுவைகளை இயேசுவுக்காய், அவருடைய நற்செய்திக்காய் தாங்குகின்றபோது நம்முடைய வாழ்வும் ஆசிர்வதிக்கப்பட்டதாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

இயேசு ஒரு துன்புறும் ஊழியர், அவருடைய வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் இயேசுவுக்காய், அவருடைய நற்செய்திக்காய் துன்பத்தை துணிவுடனும் பொறுமையுடனும் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று சிந்தித்த நாம் ஆண்டவர் இயேசுவில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக வாழவேண்டும் என்பதை இன்றைய இரண்டாம் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

ஆழமான நம்பிக்கை என்றால், ஜெபம், செயல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். வெறுமென ஜெபம் மட்டும் கிறிஸ்துவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை ஆழப்படுத்திவிடாது, அல்லது செயல் மட்டும் நம்முடைய நம்பிக்கையை முழுமையாக்கிவிடாது. ஜெபமும் அதனால் வெளிப்படுகின்ற செயலும் இணைந்து செல்லவேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கையால்தான் நாம் இயேசுவை முழுமையாக அறிந்து அவரை பிறருக்குக் அறிவிக்க முடியும், அது மட்டுமல்லாமல், அவரைப் போன்று நாம் நம்முடைய வாழ்க்கையை அமைக்க முடியும்.

எனவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், இயேசுவை முழுமையாக அறிந்துகொள்வோம், அவரை வெறுமென அற்புதம் நிகழ்த்துபவராக மட்டும் பார்க்காமல், மக்களின் மீட்புக்காகத் தன்னையே தரும் துன்புறும் ஊழியனாகப் பார்ப்போம். இயேசுக்காக நாமும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வோம், அதன்மூலம் இயேசுவின் மீதுள்ள நம்முடைய ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துவோம், இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தெரிவும் அர்ப்பணமும்

எசாயா 50:5-9
யாக்கோபு 2:14-18
மாற்கு 8:27-35

"இரு மான்களை விரட்டுகிறவன் ஒரு மானையும் பிடியான்" என்பது பழமொழி.

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சரியானவற்றைத் தேர்வு செய்யவும், தேர்ந்து தெரிவு செய்ததற்கு முழுமையாக நம்மை அர்ப்பணம் செய்யவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது. சரியானவற்றைத் தெரிவதும், தெரிந்து கொண்டபின் அதற்கு முழுமையாக அர்ப்பணிப்பதுமே ஒருவருக்கு வெற்றியைத் தரும். நாம் சரியான தெரிவுகளைச் செய்ய கிறிஸ்தவர்களாகிய நமக்கு துணைநிற்பவை நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையும், கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவு நெருக்கமுமே.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 50:5-9) 'துன்புறும் ஊழியன்' என்று தலைப்பிடப்படும் நான்கு பாடல்கள் வரிசையின் மூன்றாம் பாடல். 'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர் கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார். காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார். கற்போர் கேட்பதுபோல் நானும் செவிசாய்க்கச் செய்கின்றார்' (எசா 50:4) என்று தொடங்குகிறது. ஆண்டவரின் ஊழியன் யாரென்றால் இவருக்கு கடவுள்தாமே கற்றுத் தருகின்றார். மேலும், கடவுளின் கற்றுக்கொடுத்தலுக்கு தினமும் அவர் காதுகளைத் திறந்து காத்திருக்கின்றார். ஆனால், இப்படிப்பட்டவருக்கு என்ன நேருகிறது? 'முதுகில் அடிக்கப்படுகின்றார். இவருடைய தாடி பிடுங்கப்படுகிறது. பிடுங்குவதற்கு தாடையையும் இவர் ஒப்புவிக்கின்றார். இவர் நிந்தனை செய்யப்படுகின்றார். காறி உமிழப்படுகின்றார்.' இவ்வாறாக, ஒட்டுமொத்த அவமானத்திற்கும், நிந்தனைக்கும், வேதனைக்கும் ஆட்படுகின்றார். ஏன் இவருக்கு இந்த நிலை? இதற்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், ஒருவேளை இவர் எடுத்த தெரிவுக்காகவும், அந்த தெரிவு கொணர்ந்த அர்ப்பணத்திற்காகவும்தான் இவர் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கின்றார். இருந்தாலும், இவர் தன் தெரிவையும் அர்ப்பணத்தையும் விட்டுவிடவில்லை. தன் எதிரிகளைத் துணிவோடும் மனத்திடத்தோடும் எதிர்கொள்கின்றார். இவர் கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும், இவருடைய கடவுள்சார்நிலையும், கடவுளின் உடனிருப்பும் தொடர்ந்து போராட இவருக்கு ஆற்றல் தருகின்றது. 'ஆண்டவராகிய தலைவர் உடன் நிற்பதால்' இவருடைய எதிரிகள் ஆற்றல் இழக்கின்றனர். இறுதியாக, 'அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்.'

இங்கே 'துணியைப் போல இற்றுப்போதல்' என்ற ஒரு உருவகத்தைப் பார்க்கிறோம். நீண்ட காலமாக மண்ணில் கிடக்கும் ஒரு துணி பார்ப்பதற்கு துணிபோல இருந்தாலும், அந்தத் துணியின் நிறம், அந்தத் துணியின் அச்சு எல்லாம் அப்படியே இருந்தாலும், அதை நாம் கையில் எடுக்கத் தொடங்கினால், அது அப்படியே உதிர ஆரம்பிக்கும். அதுதான் இற்றுப்போதல். ஆக, ஒரு காலத்தில் கையால் வலு கொண்டு இழுத்தாலும் கிழியாத துணி, இப்போது பார்ப்பதற்கு முழுமையாக, வலுவானதாக இருந்தாலும் தொட்டவுடன் உதிர்ந்துபோகும் அளவிற்கு அது வலுவற்று இருக்கிறது.

துன்புறும் ஊழியன் பாடலின் பின்புலம் யூதர்களின் எருசலேம் வருகைதான். பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து பாரசீக மன்னன் சைரஸ் அவர்களால் விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர் யூத மக்கள். தங்களின் சொந்த நகரான எருசலேமுக்கு வந்தபோது எருசலேம் நிலைகுலைந்து கிடக்கிறது. இப்போது தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் அவர்கள் கட்ட வேண்டும். இப்போது இவர்கள் முன் இரண்டு தெரிவுகள்: ஒன்று, பாரசீக அரசோடு கைகோர்த்துக்கொள்வது. அவர்களின் துணையால் மீண்டும் நகரத்தையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இந்த எண்ணத்தைக் கொண்டவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தார்கள். ஏனெனில், கடவுள் தாமே தங்களை எதிரியிடம் ஒப்படைத்துவிட்டார் என்று கடவுளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். இரண்டு, பாரசீக தாக்கத்திலிருந்து விலகி இருப்பது. கடவுளின் உதவியோடு மீண்டும் தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இங்கே நாம் காணும் 'துன்புறும் ஊழியன்' இந்த இரண்டாம் குழுவின் தலைவராக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவரைப் பொறுத்தவரையில் கடவுளின் குரலைக் கேட்பதும், அவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதுமே நன்மையைப் பெற்றுத்தரும். ஆகையால்தான், இவர் 'நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவும் இல்லை' (50:5) என்கிறார். இவ்வாறாக, சரியான தெரிவும், சமரசம் செய்துகொள்ளாத இவரது அர்ப்பணமும் இவருக்குத் துன்பங்களைத் தந்தாலும், இறுதியில் இவர் கடவுளின் துணை கொண்டு அனைவர்மேலும் வெற்றிகொள்கிறார். தன் உயிரே போகும் நிலை வந்தாலும் இவர் தன் தெரிவிலும், அர்ப்பணத்திலும் உறுதியாக இருக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 2:14-18) தொடக்ககால எருசலேம் திருச்சபையில் நிலவிய ஒரு குழப்பம் பற்றி வாசிக்கின்றோம். '... திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்' (கலா 2:16) என்ற பவுலின் போதனையைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர் சிலர். இவர்கள், 'நம்பிக்கை' என்பது 'வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வது' என்றும், 'வேறு எந்தச் செயல்களையும் இதற்குச் செய்யத் தேவையில்லை' என்றும் தங்களின் தவறான புரிதலை மற்றவர்களுக்குப் பரப்பினர். மேலும், விருத்தசேதனம், தூய்மைச் சடங்கு, ஓய்வுநாள் சட்டம் அனைத்தையும் வேண்டாம் எனப் புறந்தள்ளினர். அத்தோடு சேர்த்து இறைவனின் கட்டளைகளையும் ஓரங்கட்டினர். ஆக, 'நான் கடவுளை ஏற்றுக்கொண்டால் போதும்' என்று சொல்லிக்கொண்டு, கடவுளின் 'அன்புக் கட்டளையை' புறக்கணித்தனர். ஆனால், பவுல், 'அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கையே இன்றிமையாதது' (காண். கலா 5:6) என்று சொன்னதை அவர்கள் மறந்தார்கள். இத்தகைய தவறான புரிதல் யாக்கோபின் திருச்சபையை மிகவும் பாதித்தது. நம்பிக்கையாளர்கள் என்று தங்களையே கருதியவர்கள், தங்களின் நம்பிக்கை ஒன்றே தங்களுக்கு மீட்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில், செயல்களை - பிறரன்புச் செயல்களை - ஓரங்கட்டினர். இப்படிச் செய்வது இவர்களுக்கு மிக எளிதாகவும் இருந்தது. ஏனெனில், இப்படி இருக்கும்போது யாரும் யாரைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. 'நம்பிக்கை' என்ற அக உணர்வு 'நடத்தை' என்ற புறச் செயலில் வெளிப்படவேண்டும் எனச் சொல்கிறார் யாக்கோபு. அப்படி செயல்படாமல் இருக்கிற நம்பிக்கை வெறும் கானல்நீர்தான். கானல்நீர் ஒருபோதும் நம் தாகம் தீர்க்காது. மேலும், தன் திருச்சபையில் உள்ள ப்ராக்டிகலான எடுத்துக்காட்டையும் சொல்கின்றார்: 'உணவும், உடையும் இல்லாத ஒருவர் நம்மிடம் வர, அவரிடம் நாம், 'நலமே சென்று வாருங்கள். குளிர்காய்ந்துகொள்ளுங்கள். பசியாற்றிக்கொள்ளுங்கள்' என்று சொல்வதால் அவருக்குப் பயன் என்ன?' செயல் இல்லாத சொற்கள் வெற்றுச்சொற்களே.

ஆக, நம்பிக்கை என்பதை நாம் தெரிவு செய்கிறோம் என்றால், அந்தத் தெரிவிற்கான அர்ப்பணம் இயேசுவின் மனநிலையை நாமும் பெற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. அந்த மனநிலை நம்முடைய பிறரன்பிலும், பிறர்சேவையிலும் வெளிப்பட வேண்டும். அதைவிடுத்து, செயலற்ற நம்பிக்கையை தெரிவு செய்வதும், எந்தவொரு வலியையும் தராத அர்ப்பணத்தைக் கைக்கொள்வதும் சால்பன்று.

நற்செய்தி வாசகத்திற்கு (காண். மாற் 8:27-35) வருவோம்.

'பேதுருவின் அறிக்கை' என்று சொல்லப்படும் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதிதான் மாற்கு நற்செய்தியின் மையமாக இருக்கிறது. இந்தப் பகுதிதான் மாற்கு நற்செய்திதான் திருப்புமுனை. இதுவரை 'இயேசு யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்த வாசகர், 'இயேசுவே மெசியா' என்ற புரிதலை இங்கேதான் பெறுகின்றார். இதற்கு முன்னால் உள்ள பகுதியில் இயேசு தீய ஆவிகளை விரட்டினார், நோயாளர்களுக்கு நலம் தந்தார், சீடர்களுக்குப் போதித்தார், தொழுகைக்கூடத்தில் போதித்தார். ஆனால், இவற்றிற்காக இயேசு இவ்வுலகிற்கு வரவில்லை. இயேசுவின் இச்செயல்களைக் கண்ட மக்கள் அவரை இறைவாக்கினரில் ஒருவராக, திருமுழுக்கு யோவானாக, எலியாவாக அல்லது அவர்களுக்கு இணையானவராகப் பார்த்தனர். ஆகையால்தான், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்ற கேள்வியிலிருந்து, 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்பதன் வழியாக, தன் அடையாளத்தையும், தன் பணியையும் தானே வெளிப்படுத்த தயாராகிறார் இயேசு. பேதுரு சரியாக, 'நீர் மெசியா' என்று சொன்னபோது, தான் வந்ததன் நோக்கத்தையும் வெளிப்படுத்த விளைகிறார் இயேசு. தன் பணியின் உண்மையான இலக்கு - துன்பம், உதறித் தள்ளப்படுதல், கொலை, உயிர்ப்பு - பற்றி முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறார். தன் இறப்பு மிக அருகில் இருக்கிறது என்பதை மனித அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயேசுவுக்கே கடினமாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும், தான் தெரிவு செய்ய வேண்டிய பாதையும், தான் காட்ட வேண்டிய அர்ப்பணமும் அதுவே என்பதில் தெளிவாக இருந்தார் இயேசு. உயிர்ப்பின் மேல் உள்ள நம்பிக்கை அவருக்கு துணிவைக் கொடுத்தாலும், மனிதன் என்ற நிலையில் தான் கொடுக்க வேண்டிய அர்ப்பணத்தின் விலை அவருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கும்.

பேதுரு இயேசுவின் தெரிவையும், அர்ப்பணத்தையும் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுரு இயேசுவைப் பற்றி வேறு எண்ணங்கள் வைத்திருந்தார். மேலும், இயேசுவின் தெரிவு மற்றும் அர்ப்பணத்திலிருந்து அவரை விலக்கிவிடத் துடிக்கின்றார். ஆனால், இயேசு பேதுருவை 'சாத்தானே' என கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுருவின் வார்த்தை இயேசுவின் தெரிவை மாற்றுவதாகவும், அவரின் அர்ப்பணம் என்னும் பாதையில் குறுக்கே நிற்பதாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் இயேசு சீடத்துவத்தின் விலை என்ன என்பதைப் பற்றித் தன் சீடர்களோடு பகிர்ந்துகொள்கின்றார். தன் தெரிவும் அர்ப்பணமும் மட்டுமல்ல. மாறாக, தன் சீடர்களின் தெரிவும் அர்ப்பணமும் தான் தேர்ந்துகொண்டதை ஒட்டியதாகவே இருக்க வேண்டும் எனக் கற்பிக்கின்றார். இயேசு இறப்பைத் தேடிச் செல்லவில்லை. மாறாக, இறப்பை தழுவிக்கொள்வதால்தான் வாழ்வை அடைய முடியும் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே அவர் உலகிற்கு வந்தார். இப்பாதை துன்பத்தின் பாதை என்றாலும் இதைத் தெரிந்துகொண்டார்.

இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு நாம் சரியானவைகளைத் தெரிவு செய்யவும், சரியானவற்றிற்கு நம்மை அர்ப்பணம் செய்யவும் தூண்டுகிறது.

எசாயாவின் காலத்தில், கடவுளுக்கு எதிரான பாதையைத் தெரிவு செய்யப் பலர் நினைத்தனர். ஆனால், துன்புறும் ஊழியன், 'கடவுள்' என்னும் பாதையைத் தெரிவு செய்து, அதற்குத் தன்னை அர்ப்பணிக்கிறார்.

யாக்கோபின் திருச்சபையில், வெறும் கோட்பாடுகளை நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளும் எளிய பாதையைத் தெரிவு செய்த நம்பிக்கையாளர்கள், தம் சகோதர, சகோதரிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அவர்களை நற்செயல்களோடு கூடிய நம்பிக்கை என்னும் பாதையைத் தெரிவு செய்யவும், ஒவ்வொரு பொழுதும் தங்கள் நம்பிக்கையை நற்செயல்களால் வெளிப்படுத்தும் அர்ப்பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் அவர்கள் தூண்டுகிறார் யாக்கோபு.

பேதுருவுக்கு துன்பம் மற்றும் சிலுவையின் தெரிவும், அர்ப்பணமும் 'மெசியா' என்னும் இயேசுவுக்குத் தேவையற்றதாகத் தெரிந்தது. ஏனெனில், இயேசுவை ஓர் 'அரச' அல்லது 'அருள்பணியாளர் மெசியாவாக' அவர் கற்பனை செய்திருந்தார். ஆனால், இயேசு தன் தெரிவும், அர்ப்பணமும் சிலுவையே என்பதை பேதுருவுக்கும், சீடர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் தெளிவாகச் சொல்கின்றார்.

இப்படிப்பட்ட சரியான தெரிவுகளைச் செய்பவர்களும், சரியான தெரிவுகளுக்குத் தங்களையே அர்ப்பணம் செய்பவர்களுமே, இன்றைய பதிலுரைப் பாடல் சொல்வதுபோல, 'உயிர் வாழ்வோர் நாட்டில் ஆண்டவரின் திருமுன் வாழ முடியும்' (திபா 116).

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள் எவை?

நம் வாழ்வில் நமக்கு முன் பல தெரிவுகள் உள்ளன. எந்நேரமும் நம் கண் முன் நிறைய விருப்பங்கள், நம் காதுகளில் நிறைய ஒலிகள், நிறைய வசீகரங்கள், நிறைய மயக்கங்கள் நம்மை இங்கும் அங்கும் அலைக்கழிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், நம்பிக்கையாளர் உறுதியான தளத்தில் நிற்க வேண்டும். அந்த தளத்தில் இருந்து தன் தெரிவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் சரியான தெரிவை மேற்கொள்ளவும், சரியான அர்ப்பணத்தைக் கொண்டிருக்கவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது.

நாம் சரியான தெரிவை மேற்கொள்ளும்போது, அந்தத் தெரிவிற்கு ஏற்ற அர்ப்பணத்தைக் கொண்டிருக்கும்போது இறைவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை முதல் வாசகத்தின் துன்புறும் ஊழியன் நமக்குச் சொல்கிறார். ஊழியனின் விடாமுயற்சியும் அர்ப்பணமும் அவரை எதிரிகளின் நிலையிலிருந்து உயர்த்தியது. அவருக்கு கடவுளின் பாதுகாப்பு எப்போதும் உடனிருந்தது. அவர் தன் அர்ப்பணத்திற்கு கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருந்தாலும் அவர் பெற்ற பரிசு பெரிதாக இருந்தது. நாம் இங்குமங்கும் அலைக்கழிக்கப்படும்போது கடவுளை நோக்கி குரல் எழுப்பினால் அவர் அருகில் வருவார். நாம் சரியான தெரிவுகளை மேற்கொள்ள அவர் நமக்கு உள்ளொளி தருவார்.

இரண்டாவதாக, நம் நம்பிக்கை நம் நற்செயல்களில் வெளிப்பட வேண்டும். நம்பிக்கை என்பது வாழ்க்கை. இந்த வாழ்க்கை மற்றவரோடு உள்ள உறவில் வெளிப்பட வேண்டும். அன்றாடம் நம் கண்முன் நிறைய மக்களைப் பார்க்கிறோம் - பசித்தவர்கள், இருப்பிடம் இல்லாதவர்கள், தேவையில் இருப்பவர்கள். இவர்களைக் காணும்போதெல்லாம் நாம் தெரிவு எப்படி இருக்கிறது? நம்முடைய இயலாமையிலும் அவர்களுக்கு நம் உடனிருப்பைக் காட்ட முடிகிறதா? அவர்களோடு கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க முடிகிறதா நம்மால்?

மூன்றாவதாக, இயேசுவின் வாழ்வு மற்றும் பணியின் திருப்புமுனையில் அவர் எடுக்க வேண்டிய தெரிவு மற்றும் அர்ப்பணத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்டோம். அவரின் தெரிவையும் அர்ப்பணத்தையும் கண்ட நாம் அலைக்கழிக்கப்படும் நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் தெரிவும் அர்ப்பணமும் எப்படி இருக்கிறது?

இறுதியாக,

நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் சரியான தெரிவை எடுக்கவும், அதற்கேற்ற அர்ப்பணத்தைக் கொடுக்கவும் வேண்டும். இதை நாம் எப்படிச் செய்வது? என் குருமட வாழ்வில் எனக்குப் பயிற்சியளித்த ஒரு வயதான அருள்தந்தை இப்படிச் சொன்னார்: 'ஏதாவது முடிவு எடுக்குமுன், கண்களை மூடி உனக்குப் பரிச்சயமான இயேசுவின் முகத்தை மனத்திரையில் கொண்டுவா. அந்த முடிவை எடுக்கும்போது அந்த முகம் சிரித்தால் அது சரியான முடிவு. அந்த முகம் மௌனம் காத்தால் அது தவறான முடிவு.' இந்தப் பயிற்சி எனக்குப் பல நிலைகளில் பலன் தந்திருக்கிறது.

நான் என் வாழ்வில் சரியானவற்றைத் தெரிவு செய்யாமல், சரியானவற்றுக்கு என்னை அர்ப்பணம் செய்யாமல் இருக்கும்போது, நான் இரண்டு மான்கள் பின்னால் ஓடுகிறான். விளைவு, என்னால் ஒரு மானையும் பிடிக்க முடிவதில்லை.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Teaching Faculty
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!