Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     28 அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 30ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9

ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; `ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள்.

இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.

அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2ab அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி

2cd " ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.

அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறிதவறி நடப்போருக்கும் பரிவு காட்டக்கூடியவராய் இருக்கிறார்.

அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.

மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்ததுபோன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும்.

அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. " நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்.

இவ்வாறே மற்றோரிடத்தில், " மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்றும் கூறப்பட்டுள்ளது.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, " இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார்.

பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், " தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, " அவரைக் கூப்பிடுங்கள்" என்று கூறினார்.

அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, " துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்" என்றார்கள்.

அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.

இயேசு அவரைப் பார்த்து, " உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்.

பார்வையற்றவர் அவரிடம், " ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றார்.

இயேசு அவரிடம், " நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
விடாமுயற்சியுடன் கூடிய நம்பிக்கை!

அன்றைக்கு அந்த மருத்துவமனையில் இருந்த பிரசவ வார்டுப் பகுதி மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏனென்றால், அங்கு வந்த ஒரு நிறைமாக கர்ப்பிணி மிகுந்த வேதனையோடு அலறிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்கூட மிகுந்த பதற்றத்தோடுதான் பிரசவம் பார்த்தார்.

ஒருசில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணி ஓர் அழகான பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுக்குப் பிறந்த குழந்தையை கையில் ஏந்திய மருத்துவர் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அந்த அதிர்ச்சியை எப்படி குழந்தையின் தாயிடத்தில் சொல்வது என்ற ஒருவிதமான பதற்றத்தோடு அவர் அந்தப் பெண்மணியிடம் பேசத் தொடங்கினார். "அம்மா! இப்போது நான் உங்களிடத்தில் சொல்லக்கூடிய செய்தியைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகவேண்டாம்" என்றார். "அதிர்ச்சி தரக்கூடிய அளவுக்கு அப்படி என்ன செய்தியைச் சொல்லப்போகிறீர்கள்?, ஒருவேளை என்னுடைய குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதா?" என்று கேட்டாள். " அப்படியில்லை உங்களுடைய குழந்தை பிறந்தபோதே பார்க்கும் திறனில்லாமலும், கேட்கும் திறனில்லாமலும் பிறந்திருக்கின்றது" என்றார். " அப்படியா! என்னுடைய குழந்தைக்கு கண்தெரியாதா?, காது கேட்காதா?  ஐயோ நான் என்ன செய்வேன்" என்று அவள் அலறினாள்.

மருத்துவமனையிலிருந்து திரும்பிய அந்தப் பெண்ணானவள் உடல் குறைபாடுகளோடு பிறந்த தன்னுடைய குழந்தையோடு மிகுந்த அன்போடு வளர்த்தெடுத்தாள். அந்தக் குழந்தையும் வளர்ந்து கைகளால் தொட்டுத் தொட்டு எல்லாவற்றையும் கற்றுகொண்டாள். பிற்காலத்தில் அவள் எல்லாராலும் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு வளர்ந்தாள். நிறையப் புத்தங்களை எழுதினாள்; பல்வேறு இடங்களுக்குச் சென்று பலருக்கும் ஊக்கமும் உத்வேகமும் தரக்கூடிய சொற்பொழிவுகளை ஆற்றி வந்தாள்.

இப்படி பிறக்கும்போதே பார்வை இல்லாது, காது கேளாது பிறந்து, பிற்காலத்தில் எல்லாரும் வியந்து பார்க்கக்கூடிய பெண்மணியாய் விளங்கியவள் வேறு யாருமல்ல ஹெலன் ஹெல்லரே ஆவார். அவர்தான் பார்க்கும் திறனற்றும் கேட்கும் திறனற்றும் பிறந்தார். அவர்தான் பிற்காலத்தில் எல்லாரும் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு சிறப்பு வாய்ந்த பெண்மணியாய் விளங்கினார். அவர் இவ்வாறு விளங்கியதற்குக் காரணம் அவருடைய நம்பிக்கையும் அதோடு கூடிய விடாமுயற்சியும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், நம்பிக்கைத்தான் உடல் குறைபாடுகளோடு பிறந்த ஹெலன் ஹெல்லரை உலகம் வியந்து பார்க்கக்கூடிய பெண்மணியாய் மாற்றியது.

பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களோடு எரிக்கோவிலிருந்து எருசலேம் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார். அவரைச் சூழ்ந்து மக்கள் எல்லாம் போய்க்கொண்டிருக்கின்றார்கள். இதற்கிடையில் பாதையோரமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பர்த்திமேயு என்னும் பார்வையற்றவர் இயேசு அவ்வழியாய் போவதை அறிந்து, " தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்குகின்றார். இயேசுவைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த மக்களோ, அவரைக் கத்தவேண்டாம் என்று அதட்டுக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர், " தாவீதின் மகனே எனக்கும் இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்துகின்றார். இதனால் அவருடைய கூக்குரல் இயேசுவின் செவிகளை எட்டுகின்றது. அவர் அந்த பார்வையற்ற பிச்சைக்காரனை அழைத்து அவருக்கு நலம் தருகின்றார்.

இயேசு பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு பார்வையளித்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்னென்னவென்று இப்போது பார்ப்போம்.

முதலாவதாக இந்த நிகழ்வு உணர்த்தும் செய்தி பார்வையற்றவரின் உறுதியான நம்பிக்கை ஆகும். பார்வையற்ற பர்த்திமேயுவின் நம்பிக்கை எவ்வாறு இருந்தது என்று பார்க்கும்போது, அவர் இயேசுவை சாதாரண ஒரு போதகராக மட்டும் பார்க்கவில்லை, மாறாக, அவர் இயேசுவை தாவீதின் மகனாக, மெசியாகப் பார்க்கின்றார். அது மட்டுமல்லாமல், இயேசு தனக்கு நிச்சயம் குணம் தருவார் என்ற நம்பிக்கையோடு கத்துகின்றார். இயேசு அவரை அழைக்கின்றபோது, இனிமேலும் தான் பாதையோரம் அமர்ந்து பிச்சை எடுக்கின்ற நிலைவராது என்பதால் தன்னுடைய மேலுடையை தூக்கி எறிந்துவிட்டு, நம்பிக்கையோடு ஆண்டவரிடம் செல்கின்றார். ஆண்டவரும் அவருடைய நம்பிக்கையைக் கண்டு, அவருக்குப் பார்வையளிக்கின்றார். ஆகவே, நம்பிக்கைதான் பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு நலம் தந்தது என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

பார்வையற்ற பர்த்திமேயுவை ஆண்டவர் இயேசு குணப்படுத்தி நிகழ்வு நமக்கு உணர்த்தும் இரண்டாவது செய்தி அவரிடமிருந்த விடாமுயற்சி ஆகும். தொடக்கத்தில் பர்த்திமேயு, " தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்று கத்துகின்றபோது இயேசுவைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த மக்கள்கூட்டமோ அவரைக் கத்தவேண்டும் என்று அதட்டுகின்றனர். ஆனால் அவரோ விடாமல், இன்னும் சத்தமாகக் கத்துகின்றார். இதனால் அவருடைய குரல் இயேசுவின் காதுகளை அடைகின்றது, அதனால் அவருக்கு நலம் கிடைக்கின்றது. பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை இருந்தது என்று மேலே பார்த்தோம். நம்பிக்கையோடு விடாமுயற்சியும் இருந்தது. அதனால்தான் அவர் நினைத்த காரியம் நிறைவேறியது.

இயேசுவைப் பின்பற்றி நடக்கும் நமக்கு நம்பிக்கை அதோடு கூடிய விடாமுயற்சி இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது ஒருமுறை ஜெபித்துவிட்டு, இறைவன் என்னுடைய வேண்டுதலுக்கு செவிசாய்க்கவில்லை என்று அவரிடம் குறைபட்டுக்கொள்கின்றோம். ஆனால், உண்மை என்னவேனில் விடாமுயற்சியோடு ஜெபிப்போருக்கும் கேட்போருக்கும்தான் இறைவன் தன்னுடைய ஆசிரை அதிகமாக வழங்குகின்றார். லூக்கா நற்செய்தி 18:7 ல் இயேசு கூறுவார், " தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பழகும் தம்மை நோக்கி கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று. ஆகையால், நாம் நம்பிக்கையோடு ஜெபிக்கவேண்டும் அதோடுகூட விடாமுயற்சியோடும் ஜெபிக்கவேண்டும்.

நிறைவாக நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகின்ற செய்தி இயேசுவிடமிருந்து நன்மைகளை, நலன்களைப் பெற்றுக்கொள்கின்ற நாம், அவரை இறுதிவரை பின்பற்றிச் செல்லக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதாகும். பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவிடமிருந்து குணம்பெற்றதும் நினைத்தது நடந்துவிட்டது பிறகு எதற்கு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்லவேண்டும் என்று இருக்கவில்லை, மாறாக அவர் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார். அவர் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றதால், அதனால் வந்த இழப்புகளையும் அவர் சந்தித்திருக்கவேண்டும். இவ்வாறு அவர் ஓர் உண்மையான சீடனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார். இயேசுவிடமிருந்து அருளையும் ஆசிரையும் அதிகமாய் பெற்றுக்கொள்கின்ற நாம் அவருக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக, அவரை இறுதி வரைக்கும் பின்பற்றி நடப்பவர்களாக இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இதுவரை பார்வையற்ற பர்த்திமேயு எப்படி ஆழமான நம்பிக்கையும் விடாமுயற்சியையும் கூடவே சீடத்துவ பண்பினையும் கொண்டிருந்தார் என்று சிந்தித்த நாம், இயேசு எவ்வாறு பார்வையற்றோருக்கு இரங்குகின்ற பரிவு என்னும் குணத்தினைக் கொண்டிருந்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு எரிக்கோவிலிருந்து எருசலேம் நோக்கிப் போக்கும்போது, வழியில் தன்னுடைய சீடர்களுக்கும் தன்னைப் பின்பற்றி வந்தவர்களுக்கும் பலவற்றைக் குறித்து போதித்துக் கொண்டே சென்றிருக்கவேண்டும். ஏனென்றால், வழக்கமாக யூத இரபிக்கள் தன்னுடைய சீடர்களுக்கு பயணத்தில்போதுதான் பலவற்றைக் குறித்து கற்பிப்பார்கள். அப்படியானால் இயேசுவும் தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு பயணத்தின்போது நிறைய போதித்துக்கொண்டேதான் சென்றிருக்கவேண்டும். இத்தகைய சூழலில்தான் பார்வையற்ற பர்த்திமேயு தன்னை குணப்படுத்துமாறு கத்துகின்றார். இயேசு அவர் கத்தியைக் கண்டு, தன் போதித்துக்கொண்டிருப்பதற்கு இடையூறாக இருக்கின்றது என்று நினைக்கவில்லை, மாறாக அவர் அவரை அழைத்து அவருடைய தேவையை நிவர்த்தி செய்கின்றார், அதாவது அவருக்குப் பார்வையளிக்கின்றார். இவ்வாறு அவர் பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு நலமளித்து தான் மக்கள்மீது பரிவுகொள்ளும் இறைமைந்தன் என்பதை நிரூபித்துக்காட்டுகின்றார்.

இயேசு செய்த இந்த புதுமை எரேமியாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற, " அழுகையோடு வருகின்ற பார்வையற்றோர், காலூனமுற்றோர், கருவுற்றோர், பேறுகாலப் பெண்டீர் போன்றோரை நான் ஆறுதலளித்துக் கூட்டி வருவேன்" என்ற வார்த்தைகளையும், " அவர் பரிவு காட்டுகின்றவராக இருக்கின்றார்" என்று இரண்டாம் வாசகத்தில் வருகின்ற வார்த்தைகளையும் நிறைவு செய்வதாய் இருக்கின்றது.

இயேசுவின் வழியில் நமக்கு இயேசுவிடம் இருந்த பரிவும், எளியவருக்கு இரங்குகின்ற குணமும், துன்புருவோரோடு உடன் துன்புறும் பண்பும் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் உடல் குறைபாடோடு இருக்கின்றவர்களை ஏளனமாக, இழிவாகப் பார்க்கின்றக் கூடிய நிலைதான் இருக்கின்றது. இத்தகைய சூழலில் நாம் இயேசு எப்படி உடல் ஊனமுற்றவர்கள் மீது மனமிரங்கி, அவர்களுடைய துன்பத்தைப் போக்கினாரோ, அதுபோன்று நாமும் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவர், ஊனமுற்றோர் இவர்கள்மீது மனமிரங்கி அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக இருக்கமுடியும்.

ஆகவே, நாம் பார்வையற்ற பர்த்திமேயுவைப் போன்று இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டுவாழ்வோம். அதே நேரத்தில் இயேசுவிடமிருந்த பரிவு, இரக்கத்தை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நீங்கள் ஒளியாய் இருக்கிறீர்கள்

எபேசியர் 4:32-5:8
லூக்கா 13:10-17

'நீங்கள் ஒளியாய் இருக்கிறீர்கள்', என்று இன்றைய முதல் வாசகத்திலே நம்மை பார்த்து அறிவுறுத்துகிறார் பவுலடிகளார். ஒளியாய் இருப்பதென்றால் என்ன என்பதையும் தெளிவாய் உணர்த்துகிறார்... கிறிஸ்துவோ அதை நடைமுறையாய் வாழ்ந்து காட்டுகிறார்.

தனிப்பட்ட வாழ்வில் தூய்மை ஒருவரை இருளின் மத்தியிலே ஒளிரச்செய்கிறது. இன்று உலகம் தவறு செய்வதை குறித்து அஞ்சுவதை விட தவறு செய்து சிக்கிக்கொள்வதை குறித்தே அஞ்சுகிறது. வெறும் மற்றவர் பார்வைக்கும் உலகத்தின் புகழுக்கும் வாழப்படுவது தூய்மையானது!

மனித உறவுகளில் உண்மை ஒருவரை இறைச்சாயல் பெறச்செய்கிறது. தான் என்ற அகங்காரமோ, தனக்கு என்ற சுயநலமோ, தனது என்ற பயன்படுத்தும் மனநிலையோ இல்லாமல் வளரும் உறவுகளில் இறைவனே வாழ்கிறார். ஒருவரை கண்டவுடனேயே அவர்களது தேவை நமது கண்களுக்கு படவேண்டும் தவிர அவர்களது பலகீனம் அல்ல.

ஆன்மீகத்தில் ஊன்றிய அடையாளம் ஒருவரை இறைவனுக்குரியவர் ஆக்குகிறது. இறைவனின் உருவையும் சாயலையும் தாங்கியவர் என்ற உணர்வு மிகுந்தவராக இறைவனுக்கு உரியவற்றையே செய்யும் வாழ்க்கை முறை அடுத்தவரோடு ஒப்பிட்டு அல்ல இறைவனின் சித்தம் என்னை எதற்கு அழைக்கிறது என்ற தெளிவோடு நடக்கவே என்னை அழைக்கிறது.

சுருங்க கூறின், தனிப்பட்ட தூய்மை, உறவில் உண்மை, இறையுணர்வு என்னும் இவை என்னை இறைவனின் சாயலாகவே மாற்றுகிறது! நாம் அவரைப்போலவே மாற அழைக்கப்படுகிறோம், ஏனெனில் நாம் அவரது பிள்ளைகளாவோம். கடவுளை போல் மாற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கிறிஸ்துவே வாழ்ந்து காட்டியுள்ளார். ஒளியான அவரது வழியில் நடப்போம், ஒளியாய் வாழ்வோம்!

(Rev. Father: Antony Christy SDB)



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மேலுடையை எறிந்துவிட்டு


 எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1-6
 மாற்கு 10:46-52

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் வாசிக்கும் பதிலுரைப்பாடல் (திபா 126) மிக அழகான வரிகளைக் கொண்டுள்ளது. அவற்றிலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்' என்பது நம் பல்லவியாக இருக்கிறது.

'சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்' என்றும், 'கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்பவர்கள் அறுவடை செய்வார்கள்' என துள்ளிக்குதிக்கின்றார் பாடல்ஆசிரியர்.

ஆண்டவராகிய கடவுள் அடிமை நிலையை ஒரே இரவில், ஒரு கனவுபோல மாற்றிவிடுகின்றார்.

ஆனால், இந்த மாற்றத்தை நாம் உணர, நாம் அவரை (அ) கண்டுகொள்வதும், (ஆ) 'அவர் யாரென' அறிக்கையிடுவதும், மற்றும் (இ) அவரிடம் இடைவிடாது இறைஞ்சுவதும் அவசியமாகிறது.

இன்றைய முதல்வாசகம் (காண். எரே 31:7-9), எரேமியா நூலின், 'ஆறுதலின் புத்தகம்' (எரே 30-31) என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ரயேல் மக்களுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய சோகம் அவர்கள் பாபிலோனியாவுக்கு அடிமைப்பட்டிருந்ததுதான். பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் இஸ்ரயேல் மக்களை இறைவன் எப்படி வழிநடத்திச் செல்வார் என்று எரேமியா இறைவாக்குரைக்கிறார். இன்றைய முதல்வாசகத்தில் நிறைய உருவகங்கள் கையாளப்படுகின்றன: வடக்கு நாடு - பாபிலோன், எஞ்சியோர் - தப்பிப் பிழைத்தோர், பார்வையற்றோர் - நம்பிக்கை இழந்தோர், ஊனமுற்றோர் - வாழ்வில் முன்னேற்றம் காணாதோர், கருவுற்றோர் - நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கு கொண்டோர், பேறுகாலப் பெண்டிர் - மற்றவர்களின் கவனம் தேவைப்படுவோர், நீரோடை - வளமை. அழுகையோடு அவர்கள் வந்தாலும், ஆறுதலோடு அணைத்துக்கொள்வார் இறைவன் என இறைவனின் புதிய வாக்குறுதியை முன்வைக்கின்றார் எரேமியா.

'அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்' என்பது இந்த வாசகப் பகுதியின் பொருள்கோள் சாவியாக இருக்கிறது. இங்கே 'அழுகை' என்பது அவர்களின் மனமாற்றத்தின் அடையாளமாக இருக்கிறது. மேலும், மனம் பேசும் மௌனமொழியே அழுகை.

இவ்வாறாக, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் அருளும் விடுதலையைக் கண்டுகொள்ள, தங்களின் பாவம் என்னும் மேலாடையைத் தூக்கி எறிய முன்வர வேண்டும்.

இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படி தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. தலைமைக்குரு - பணியும், தேர்வும்
ஆ. இயேசுவின் - பணியும், தேர்வும்

தலைமைக்குருவின் முக்கியப் பணி பாவம் போக்கும் பணி. 'யோம் கிப்பூர்' என்று சொல்லப்படும் நாளில் தலைமைக்குரு எருசலேம் ஆலயத்தின் திருத்தூயகத்திற்குள் நுழைவார். தன் கைகளில் இரண்டு ஆடுகளை எடுத்துச் செல்வார். அவரின் இடுப்பில் ஒரு நீண்ட கயிறு கட்டப்பட்டிருக்கும். எதற்காக? அவர் திருத்தூயகத்திற்குள் இருக்கும்போது ஒருவேளை இறந்து போனால் அவரை வெளியே இழுப்பதற்காகத்தான் இந்தக் கயிறு. திருத்தூயகத்திற்குள் தலைமைக்குரு தவிர வேறு யாரும் நுழைய முடியாது. நுழையக் கூடாது. அவர் எடுத்துச் செல்லும் இரண்டு ஆடுகளில் முதலாவதை தன் பாவங்களுக்காக அவர் பலியிடுவார். இரண்டாவது ஆட்டை எல்லா மக்களின் பாவங்களுக்காகவும் பலியிடுவார். பலியிடப்பட்ட ஆட்டின் ரத்தத்தை ஒரு வாளியில் எடுத்துக்கொண்டு அதில் ஈசோப் தண்டைத் தோய்த்து பீடத்தின் மேலும், பின் வெளியே வந்து மக்களின் மேலும் தெளிப்பார். இதுதான் பாவம் போக்கும் பலி நடக்கும் முறை. ஆக, தலைமைக்குரு வலுவில்லாதவர், அதாவது மனிதர் என்பதால் பாவ இயல்பு கொண்டவர். மேலும், தானே ஒரு பாவி என்பதால் பாவிகளாகிய மற்றவர்கள்மேல் பரிவிரக்கம் கொள்ள அவரால் முடிகிறது. இதுதான் 'எம்ப்பதி' ('சிம்ப்பதியை'விட ஒருபடி மேல்). வலுவில்லாத அவரைக் கடவுள் தேர்ந்து கொள்கிறார்.

இயேசுவுக்கு இந்த அழைப்பு கடவுளிடமிருந்துதான் வருகிறது. 'நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று கடவுள் அவரைத் தேர்ந்து கொள்கிறார். தான் தெரிந்துகொள்ளப்பட்ட பணியை இயேசுவும் இனிதே செய்துமுடிக்கின்றார்.

இயேசு மற்ற தலைமைக்குருக்களைப் போல லேவியர் குலத்தில் பிறந்தவரோ, அல்லது ஆரோனின் குடும்பத்தின் வழி வந்தவரோ அல்லர். மாறாக, அவர் நேரடியாக கடவுளின் குருத்துவத்தில் பங்கேற்பதாலும், மெல்கிசேதேக்கின் முறைமைப்படி இருப்பதாலும் அவர் என்றென்றும் குருவாக இருக்கின்றார்.

இந்த நிலையில் இருக்கும் இயேசு, தன் மேலாடையை அகற்றி தனக்குக் கீழ் இருக்கும் வலுவற்றவர்களுக்கும் கனிவிரக்கம் காட்டுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு 10:46-50) ஒரு அறிகுறி அல்லது அற்புதம் வகையாக இல்லாமல், ஒரு உவமை அல்லது உருவகம் வகையாக இருக்கிறது. எப்படி?

முதலில் நற்செய்திப் பகுதியின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வோம்:

சொல்லின்பம்:
1. 'பர்த்திமேயு' என்றால் 'திமேயுவின் மகன்' என்றுதான் பொருள் - 'பர்' என்றால் அரமேயத்தில் 'மகன்' என்று பொருள். ஆனால் இன்றைய நற்செய்தியில் 'திமேயுவின் மகன்' 'பர்த்திமேயு' என்று அடுக்குத்தொடர் உள்ளது முதல் விநோதம்.

2. மாற்கு 8:22-26ல் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று, எச்சில் உமிழ்ந்து பார்வையற்றவருக்கு பார்வை தந்த இயேசு பொதுவிடத்தில் பர்த்திமேயுக்கு பார்வை தருவது இரண்டாவது விநோதம்.

3. 'தாவீதின் மகன்' - இதுவரை இயேசுவுக்கு பயன்படுத்தாத ஒரு டைட்டிலை இங்கு பயன்படுத்துகிறார் மாற்கு. இரண்டு காரணங்கள்: இயேசு எருசலேமை அல்லது சீயோனை நெருங்கிவிட்டார். எருசலேம் என்றால் அது தாவீதுடன் தொடர்புடையது (திபா 118:26, செக் 9:6). ஆக இயேசுவின் நெருக்கத்தை இந்த 'தாவீதின் மகன்' டைட்டில் உணர்த்துகிறது. இரண்டு, இன்னும் சில நாட்களில் இயேசுவை மக்கள் வெற்றி ஆரவாரத்தோடு நகருக்குள் வரவேற்பார்கள். 'ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!' (மாற் 11:10) என்ற மக்களின் களிப்போசையின் முன்னோடியாக இருக்கிறது பர்த்திமேயுவின் கூக்குரல். 'தாவீதின் மகன்' என்பதன் விளக்கத்தை 12:35-37ல் பதிவு செய்கின்றார் மாற்கு.

4. 'என்மேல் இரங்கும்' - நாம் திருப்பலியில் பயன்படுத்தும் 'ஆண்டவரே இரக்கமாயிரும்' ஃபார்முலா உருவானது இன்றைய நற்செய்திப்பகுதியிலிருந்துதான்.
5. இந்த நற்செய்திப் பகுதியின் முன்பகுதியில் சீடர்களின் புரிந்துகொள்ள இயலாத நிலை. இந்த நற்செய்தியின் தொடர்ச்சியாக இயேசுவின் எருசலேம் நுழைதல் என்று அமைத்திருக்கின்றார் மாற்கு. பர்த்திமேயுவின் கண்கள் மட்டும் பார்வையின்றி இல்லை. மாறாக, இயேசுவைப் புரிந்து கொள்ளாத சீடர்களின் கண்களும், பர்த்திமேயுவை அதட்டுகின்ற மக்கள் கூட்டமும், இயேசுவைக் கொல்லக் காத்திருக்கும் எருசலேமும்தான் பார்வையின்றி இருக்கின்றது. ஆகையால் இந்த அறிகுறி ஒரு உருவகமாகவே அமைந்திருக்கின்றது.

பொருளின்பம்:
1. 'அவரைக் கூப்பிடுங்கள்!' - இயேசுவின் இந்தக் கட்டளைதான் இன்றைய நற்செய்திப்பகுதியின் மையம். பர்த்திமேயு இயேசுவைக் கூப்பிட்டார். இயேசுவும் பர்த்திமேயுவைக் கூப்பிடுகின்றார். ஆக, கடவுளை நோக்கி நாம் எழுப்பும் கூக்குரல் ஒருபோதும் வீணாய்ப்போவதில்லை. கடவுள் கண்டிப்பாய் ஒருநாள் நின்று நம்மையும் கூப்பிடுவார்.

2. யார் தடைக்கல்லாக இருந்தாரோ, அவரைப் படிக்கல்லாக மாற்றுகிறார் இயேசு. 'அடேய்! சும்மாயிரு!' என்று அதட்டிய மக்கள் கூட்டம், 'தம்பி! துணிவோடிரு!' என்று நம்பிக்கை கொடுக்கிறது. இது நமக்கு இரண்டு வாழ்வியல் பாடங்களைத் தருகிறது:

அ. நமக்கு எதிராக இருப்பவர்களை கடவுள் நம் சார்பாக மாற்றுவார். நம் குடும்பம், நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர் எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார். இதைத்தான் இன்றைய பதிலுரைப் பாடலும் 'விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள். அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள்' (திபா 126:6) என்று சொல்கின்றது. நம்மை அழவைத்தவர்களே நம்மைச் சிரிக்கவும் வைப்பார்கள்.

ஆ. இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை. ஆம், நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் வேகமாக மாறக் கூடியவர்கள். அவர்கள் பேசும் வார்த்தைகள் சோப்பு நுரை போன்றவை. 'அடேய்!' என்று அதட்டியவர்கள் 'தைரியமாய் இரு!' என்று ஆறுதல் சொல்கிறார்கள். அதட்டினார்கள் என்பதற்காக நாம் சோர்ந்துவிடவும் கூடாது. ஆறுதல் தருகிறார்கள் என்பதற்காக துள்ளிக்குதிக்கவும் கூடாது.

3. 'இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' - இந்த வார்த்தைகளை மக்கள் பர்த்திமேயுவிடம் சொல்கின்றனர். நான் இன்று எத்தனை பேரை இந்த வார்த்தைகளால் இயேசுவிடம் அழைத்துவந்திருக்கிறேன். முதலில் நான் இயேசுவை அனுபவித்தால்தான் மற்றவர்களை அவரிடம் அழைத்துக் செல்ல முடியும். நான் அவரின் வார்த்தைகளைக் கண்டுகொண்டால்தான் அதை மற்றவர்களுக்கும் சொல்ல முடியும்.

4. பர்த்திமேயுவின் ரியாக்ஷன் - 'மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளிக் குதிக்கின்றார்' - பார்வை பெறுவதற்குமுன்னே தன் பிச்சையெடுக்கும் தொழிலுக்கு ஆதாரமான மேலுடையைத் தூக்கி எறிகின்றார். ஆக, மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும். எனக்குப் பார்வையும் வேண்டும், மேலுடையும் வேண்டும் என்று சொல்ல முடியுமா? இன்று நான் ஒவ்வொரு பொழுதும் மேலானதை நோக்கிப் பயணம் செய்தாலும், கீழானது என்னைப் பின்னே இழுத்துக்கொண்டே இருக்கிறது. ஏன் என்னால் என் மேலுடையை எறிய முடியவில்லை. 'துள்ளிக் குதிக்கின்றார்' - மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பே இந்த பர்த்திமேயுக்கு இல்லை. உண்மையான மனச்சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு இவர்.

5. 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்' 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' - இன்று கடவுள் என்னிடம் 'உனக்கு நான் என்ன செய்யணும்?' என்று கேட்டால், பர்த்திமேயு போல என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியுமா? பர்த்திமேயுக்கு இருந்த இலக்கு தெளிவு என்னிடம் இருக்கிறதா?

6. 'நீர் போகலாம்' - இயேசு 'போ' என்று அனுப்பினாலும், இயேசுவைப் பின்தொடர்கின்றார். இயேசுவின் சீடர்கள் இயேசுவுக்கும், தங்களுக்கும் என்ன நேருமோ என்ற பயத்தில் அவரைப் பின்தொடர்கின்றனர். ஆனால் இவர் துணிச்சலோடு, துள்ளிக் குதித்துக்கொண்டு பின்தொடர்கின்றார். இயேசுவைப் பின்தொடர்தலில் என் மனப்பாங்கு எப்படி இருக்கிறது?

இன்றைய நற்செய்தியின் மையமாக இருப்பது அந்த நபர் மேலாடையைத் தூக்கி எறிந்தது. அவர் தன் வாழ்வின் பாதுகாப்ப என நினைத்ததை உதறித் தள்ளுகின்றார். 'உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்' என்று நற்செய்தி நிறைவு பெறுகிறது. பார்வையற்று இருந்தவர் சீடராக மாறுகின்றார். வாழ்க்கை எப்படி காலை தொடங்கி மாலைக்குள் ஒரு மாற்றத்தை நம்மில் விதைத்துவிடுகிறது?

பார்த்திமேயு மேற்கொண்ட நம்பிக்கைப் பயணம் ஐந்து படிநிலைகளைக் கொண்டிருக்கிறது:

அ. கண்டுகொள்ளுதல். பார்வையற்ற பர்த்திமேயு இயேசுதாம் போகிறார் என்று கேள்விப்படுகிறார் என்றால் அவரிடமிருந்து திறந்த மனப்பான்மையும், மெசியாவை எதிர்நோக்கிய காத்திருத்தலும் புலப்படுகிறது. இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை அடிப்படையாக இருக்கு வேண்டியது அவரை இனங்கண்டுகொள்ளும் திறந்த மனநிலை. பல நேரங்களில் இயேசுவின் வருகை நமக்குத் தெரியாமலிருக்கலாம். அல்லது நம் வேலைப்பளு அவரிடமிருந்து நம்மை ஒதுக்கியிருக்கலாம். அல்லது நம்மைச் சுற்றி எழும் பல்வேறு சப்தங்கள் இயேசுவின் மெல்லிய வருகையை அமுக்கியிருக்கலாம். எந்தச் சூழலிலும் திறந்த மனத்தோடு கூடிய எதிர்நோக்கு மட்டுமே இறைவனை நமக்கு அடையாளம் காட்டும் என்பது பர்த்திமேயு கற்பிக்கின்ற முதல் பாடம்.

ஆ.அறிக்கையிடுதல். கூட்டத்தினர் அதட்டினாலும், தன் கூக்குரலைக் குறைக்கவில்லை பர்த்திமேயு. இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை அறிக்கையிடவும், எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவும் தடையாக இருக்கின்ற நம்மிடம் உள்ள ஒரு குறை என்னவென்றால் 'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?' 'அடுத்தவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?' 'அடுத்தவர்கள் என்னை அதட்டுவார்களே?' இப்படியாக அடுத்தவர்களைக் குறித்த பயம் நம் நம்பிக்கை வாழ்வில் தயக்கத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்துகின்றது. எரிக்கோவின் மக்கள் கூட்டத்தின மனநிலையும் வித்தியாசமாக இருக்கின்றது. பேசாதிருக்குமாறு அவரை அதட்டியவர்களே, 'துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உன்னைக் கூப்பிடுகிறார்' என்ற அழைக்கின்றனர். இதுதான் 'கூட்டத்தின்' மனநிலை. இப்படியும் பேசுவார்கள், அப்படியும் பேசுவார்கள். தாங்கள் பேசுவதை அப்படியே மாற்றிப் பேசும் இரட்டை நாக்குதான் கூட்டம். பிறரின் அபிப்ராயத்தை மட்டும் மையப்படுத்தினால் நம் வாழ்விலும் பின்னடைவுதான் வரும்.

இ. மன்றாடுதல். நான் மீண்டும் பார்வை பெற வேண்டும். 'மீண்டும்' பார்வை பெற வேண்டுமென்றால், பர்த்திமேயு பிறவியேலேயே கண்பார்வையற்றவர் கிடையாது என்பது புலப்படுகிறது. ஏற்கனவே கண் தெரிபவராக இருந்து காலப்போக்கில் ஏதாவது ஒரு விபத்தினாலோ, நோயினாலோ, காயத்தினாலோ கண்பார்வையை இழந்திருக்கலாம். இதையே நம்பிக்கையின் உருவகமாகப் பார்த்தோமென்றால் பிறப்பின் போது நாம் அனைவரும் இறைச்சாயலும், இறைநம்பிக்கையும் ஒளிரக்கூடியவர்களாகத்தான் பிறக்கின்றோம். ஆனால் காலப்போக்கில் வாழ்க்கை அனுபவங்களில், காயங்களில், சோர்வுகளில், பலவீனங்களில் அதை இருளடையச் செய்து விடுகின்றோம். 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்பது பார்த்திமேயுவின் ஏக்கமாக மட்டுமல்ல, நம் ஏக்கமாகவும் கூட இருக்கின்றது.

ஈ. விட்டுவிடுதல். 'மேலுடையை எறிந்துவிட்டு இயேசுவிடம் வந்தார்'. மேலுடை என்பது பர்த்திமேயுவின் பழைய வாழ்க்கையைக் குறிக்கின்றது. இயேசுவின் பிரசன்னம் நிறைவு தரும் என்று நம்பிக்கை அவரின் இறந்தகாலத்தைத் தூக்கியெறிந்து விட்டு புதிதாய்ப் பிறக்க அவரை அழைத்தது. நம் வாழ்வில் இயேசுவை நம்பிக்கையோடு அணுகிச் சென்றாலும் ஏதோ ஒன்றை நாம் பற்றிக்கொண்டு, நம் மேலுடையை விட்டுவிடத் துணியாதவர்களாகத்தான் இருக்கின்றோம்.

உ. பின்பற்றுதல். பார்வை பெற்றவுடன் இயேசுவைப் பின்பற்றி அவருடன் வழிநடக்கின்றார். நம்பிக்கையின் இறுதிப் படி இயேசுவோடு வழி நடப்பது. அந்த வழி பாடுகள் என்னும் எருசலேமிற்கு அழைத்துச் சென்றாலும் துணிந்து நடக்கின்றார் பர்த்திமேயு. நம் வாழ்வின் நம்பிக்கையும் இயேசுவோடு வழிநடக்கத் தூண்டுகிறதா அல்லது துன்பங்களைக் கண்டு துவண்டுவிடச் செய்கின்றதா?

இறுதியாக,
'எல்லாம் முடிந்தாலும், இறைவன் அங்கே விடியச் செய்வார்' என்பது என் நம்பிக்கையாக இருந்தாலும், சில நேரங்களில் அது வெறும் நம்பிக்கையாக இருந்துவிடுகிறது. செயலாக உருவெடுக்க மறுக்கிறது.

இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை அவர்களின் கண்ணீரில் வெளிப்படுகிறது.

இயேசுவின் நம்பிக்கை அவரின் இரக்கக் குணத்தில் வெளிப்படுகிறது.

பார்த்திமெயுவின் நம்பிக்கை அவர் மேலாடையைத் தூக்கி எறிந்ததில் வெளிப்படுகிறது.

'யூ கேன்னாட் ஹேவ் தெ புட்டிங் அன்ட் ஈட் இட்' என்பார்கள் - அதாவது, ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற முடியும். இரண்டும் வேண்டும் என்று நினைப்பது இரண்டு இருசக்கர வாகனங்கள் மேல் அமர்ந்து பயணம் செய்வதுபோலாகும். அவற்றில் எது எந்த வழி செல்லும் என்பது நமக்குத் தெரியாது.

நம்பிக்கை செயலாக மாறும்போது நானும் அவரின் சீடராவேன்.

அவருக்கு அருகில் நடந்தவர்கள் அவரைப் பின்பற்றவில்லை. ஆனால், அவருக்காக தன் பாதுகாப்பையும் இழந்தவர் அவரைக் கண்டுகொண்டு அவரைப் பின்தொடர்கிறார்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001

                                         
Aucun texte alternatif disponible.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!