|
25
அக்டோபர் 2018 |
|
பொதுக்காலம்
29ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும்
அடித்தளமுமாய் அமைவதாக!
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
3: 14-21
சகோதரர் சகோதரிகளே, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு
குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய்
இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய
அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும்
தம் தூயஆவி வழியாகத் தந்தருள்வாராக!
நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில்
குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய்
அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின்
அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத
இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன்மூலம்
கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக! நம்முள்
வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில்
கிறிஸ்து இயேசு வழியாகத் தலைமுறை தலைமுறையாக என்றென்றும்
மாட்சி உரித்தாகுக! ஆமென்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 33: 1-2. 4-5. 11-12. 18-19 (பல்லவி:
5b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப்
புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி
செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
பல்லவி
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு
உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது
உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது
உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி
18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்
போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச்
சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும்
வாழ்விக்கின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
( பிலி 3: 8-9 )
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும்
குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான்
நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அமைதியை
ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே
வந்தேன்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில்
தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க
வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு
திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன
நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்?
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு
எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும்,
தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும்,
மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன். அது
இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என்
விருப்பம்!
அன்னை தெரசா ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் நகருக்குச்
சென்றிருந்த நேரம், பெரியவர் ஒருவர் அவரை வந்து சந்தித்தார்.
அவர் அன்னை தெரசாவிடம், "தாயே! அருள்கூர்ந்து நீங்கள் என்னுடைய
வீட்டிற்கு வந்து போகவேண்டும்" என்றார். அன்னையும் அதற்கு எந்தவொரு
மறுப்பும் சொல்லாமல் அவருடைய வீட்டிற்கு கிளம்பிப் போனார்.
அந்த பெரியவருடைய வீடோ மெல்பேர்ன் நகருக்கு சற்று வெளியே இருந்தது.
வீடு பெரிய வீடாக இருந்தாலும், அது சுத்தம் செய்யபபடாமலும் ஆங்காங்கே
நூலாம்படை தொங்கிக்கொண்டும் விளக்கு ஏற்றப்படாமலும் பார்ப்பதே
மிகவும் அவலட்சணமாக இருந்தது. இதையெல்லாம் பார்த்துவிட்டு அன்னை
அந்த பெரியவரிடம், "இந்த வீட்டில் உங்களைத் தவிர வேறு யாருமே
இல்லையா? ஏன் இந்த வீட்டில் ஒரு விளக்குகூட ஏற்றாமல்
வைத்திருக்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர்
"என்னுடைய மனைவி இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய
பிள்ளைகளும் இப்போது என்னோடு இல்லை. நான் மட்டும் தனியாக இருக்கும்
இந்த வீட்டில் விளக்கு ஏற்றினால் என்ன? ஏற்றாவிட்டால் என்ன? என்று
மிகவும் வருத்தத்தோடு கேட்டார்.
சிறிது நேரம் யோசித்துப் பார்த்த அன்னை, பெரியவரிடம், "ஒருவேளை
நான் என்னுடைய சபை அருட்சகோதரிகளை உங்களுடைய வீட்டிற்கு தினந்தோறும்
அனுப்பி வைத்து, அவர்களை உங்களோடு நேரத்தை செலவழிக்கச்
செய்தால், நீங்கள் உங்களுடைய வீட்டில் விளக்கேற்றி வைப்பீர்களா?"
என்று கேட்டார். "கட்டாயம் செய்வேன்" என்று வாக்குறுதி அளித்தார்
அந்தப் பெரியவர். பின்பு அன்னை அந்தப் பெரியவரோடு சிறிதுநேரம்
பேசிவிட்டு, அவரிடமிருந்து விடைபெறும்போது அவரை ஆசிர்வதித்துவிட்டுப்
போனார்.
அன்னை அந்தப் பெரியவரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற மறுநாளிலிருந்து,
தான் சொன்னதுபோன்றே தன் சபை அருட்சகோதரிகளை அவருடைய வீட்டிற்கு
அனுப்பி வைத்தார். இதனால் அந்தப் பெரியவர் தன்னுடைய வீட்டைச்
சுத்தம் செய்து, விளக்கேற்றி வைக்கத் தொடங்கினார். அது மட்டுமல்லாமல்,
தன்னோடு பேசுவதற்கும் நேரம் செலவழிப்பதற்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்,
தான் தனியாள் இல்லை என்பதை உணர்ந்தவராய் புதிய மனிதராய் வாழத்
தொடங்கினார்.
இதற்குப் பின்பு சில மாதங்கள் கழித்து, பெரியவர் அன்னை தெரசாவிற்கு
ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர், "அன்னையே! உங்களுடைய
தயவால் என்னுடைய வீட்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு. அணையாமல்
எரிந்துகொண்டிருக்கின்றது. என் வாழ்நாள் எல்லாம் நீங்கள் செய்த
இந்த உதவியை மறக்கவே மாட்டேன்" என்று எழுதினார்.
ஆம், அன்னை தெரசா தனிமைச் சிறையில் வாடிய அந்தப் பெரியவரின் உள்ளத்தில்,
இல்லத்தில் விளக்கை/ தீயை ஏற்றிவைத்தார். அது அந்த மனிதர்
சாகின்ற வரைக்கும் அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. தீ சாதாரணமானது
கிடையாது. அது வாழ்வின் அடையாளம், ஆற்றலின் ஊற்று. அறியாமை என்னும்
இருளை அகற்றும் அகல்விளக்கு,.
இத்தகைய சிந்தனையோடு இந்த நற்செய்தியில் ஆண்டவர் இயேசு
சொல்கின்ற வார்த்தைகளை சிந்தித்துப் பார்த்தால் மிகத் தெளிவாக
விளங்கும். நற்செய்தியில் இயேசு, "மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்.
அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்கவேண்டும் என்பதே என்
விருப்பம்" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளைப்
புரிந்துகொள்வதற்கு சற்றுக் கடினமாக இருந்தாலும், இயேசு
சொல்கின்ற தீயை இறைவனோடு, அதுவும் தூய ஆவியோடு ஒப்பிட்டுப்
பார்த்தால், இன்னும் தெளிவாக விளங்கும். பழைய ஏற்பாட்டிலும் சரி,
புதிய ஏற்பாட்டிலும் சரி, நெருப்பு அல்லது தீ இறைவனோடு ஒப்பிட்டுப்
பேசப்படுகின்றது. பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியார் சீடர்கள்மீது
நெருப்பு வடிவில் இறங்கிவந்ததும் அதுவரைக்கும் கோழைகளாக இருந்த
சீடர்கள் துணிச்சலோடு ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு
எடுத்துரப்பதைக் குறித்து விவிலியத்தில் வாசிக்கின்றோம். இங்கே
தீயானது ஆற்றலின் ஊற்றாகவும் வாழ்வின் அடையாளமாகவும் இருக்கின்றது.
இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட தீயைதான் மண்ணுலகில் மூட்டுவதாகச்
சொல்கின்றார். ஆகவே, ஆண்டவர் இயேசு மூட்டிய இந்தத் தீயை நாமும்
உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ப் வாழ்ந்தோம் என்றால், நாமும் சீடர்களைப்
போன்று, ஆண்டவரின் கையில் வல்லமையுள்ள கருவியாகச் செயல்பட
முடியும்.
எனவே, இயேசு மூட்டிய தீயாகிய தூய ஆவியைப் பெற்றவர்களாய், வல்லமையோடு
ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼
அருளாளரான ரிச்சர்ட் கவின் (அக்டோபர் 25)
"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்.
எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போல
கபடு அற்றவர்களாகவும் இருங்கள்" (மத் 10: 16)
வாழ்க்கை வரலாறு
ரிச்சர்ட் கவின் இங்கிலாந்து நாட்டில் 1537 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவருடைய குடும்பமோ சீர்திருத்த திருச்சபையை (Protestant)
சார்ந்த குடும்பம், இவரும் கூட தொடக்கத்தில் சீர்திருத்த
திருச்சபையைச் சார்ந்தவராகவே இருந்தார். ஆனால் ஒருசில அருட்தந்தையர்களின்
எடுத்துக்கட்டான வாழ்க்கையை பார்த்துவிட்டு இவர் கத்தோலிக்கத்
திருச்சபையில் சேர்ந்து, முன்மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ்ந்து
வந்தார்.
இந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டை ஆண்டுவந்த அரசியான முதலாம்
எலிசபெத் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைப் பிடித்து
கொடுமைப்படுத்தத் தொடங்கினார். அவருடைய கண்ணில் படமால்
ரிச்சர்ட் கவின் தலைமறைவாகவே இருந்தார். அப்படியிருந்தபோதும்
அவர் 1579 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.
சிறையில் ஒருசில நாட்களுக்கு அமைதியாக இருந்த ரிச்சர்ட் கவின்,
சிறையில் ஒரு பாதாளச் சுரங்கம் அமைத்து, அங்கிருந்து தப்பித்து
வெளியே வந்தார். பின்னர் கத்தோலிக்க விசுவாசத்தை எல்லா
மக்களுக்கும் எடுத்துரைத்து, அவர்களை கத்தோலிக்கத்
திருச்சபையில் சேர்த்தார். இச்செய்தி முதலாம் எலிசபெத்தின்
காதுகளை எட்ட, அவர் படைவீரர்களை மறைமுகமாக அனுப்பி, ரிச்சர்ட்
கவினைக் பிடித்து சிறையில் அடைத்துவைத்து நான்கு ஆண்டுகள்
கடுமையாகச் சித்ரவதை செய்தார். அப்போதுகூட அவர் கத்தோலிக்க
விசுவாசத்திலிருந்து சிறிதுகூட பிறழவில்லை. இதனால் 1584 ஆம்
ஆண்டு, அக்டோபர் 24 ஆம் நாள் மிருக சந்தையில் வைத்து அவர்
கடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு
முன்பாக, "இயேசுவ! என்மீது இரக்கமாயிரும்" என்ற வார்த்தைகளை
உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
ரிச்சர்ட் கவின் கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவருடைய மனைவி
கொலையாளிகளிடம் வந்து, "உங்களுக்கு இரத்தம் தானே வேண்டும்,
வேண்டுமானால் என்னைக் கொன்றுபோட்டு எடுத்துக்கொள்ளுங்கள்"
என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அங்கிருந்த
கொலையாளிகள் மிரண்டு போய் நின்றார்கள். பின்னர் அவர்கள் அவரை
அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு ரிச்சர்ட் கவினின்
மனைவியும் அவருடைய மகனும் தங்களுடைய வாழ்நாள் முழுவதும்
கத்தோலிக்க விசுவாசத்திலே உறுதியாக இருந்தார்கள்.
ரிச்சர்ட் கவினின் சாட்சிய வாழ்வைப் பார்த்துவிட்டு அவருக்கு
திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் 1970 ஆம் ஆண்டு அருளாளர் பட்டம்
கொடுத்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
அருளாளரான ரிச்சர்ட் கவினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம்,
அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கத்தோலிக்க விசுவாசத்தை பெருமையோடு அறிக்கையிடவேண்டும்
அருளாளரான ரிச்சர்ட் கவினின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப்
பார்க்கின்றபோது, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கத்தோலிக்க
விசுவாசத்தை பெருமையோடு அறிவிக்கவேண்டும் என்ற செய்தியானது
சொல்லப்படுகின்றது. ரிச்சர்ட் கவின் தன்னுடைய கத்தோலிக்க
விசுவாசத்தை மறைக்கவில்லை, அதை வெளிப்படையாகவே சொன்னார்.
அதனால் அவர் கொல்லப்பட்டார். நாமும்கூட நம்முடைய விசுவாசத்தை
எத்தகைய இடர்வரினும் துணிச்சலோடு அறிக்கையிட்டு, அதன்படி
வாழ்பவர்களாக இருக்கவேண்டும். அதைவிடுத்து, நமது விசுவாசத்தை
மறைத்துக்கொண்டு வாழ்வது மிகப்பெரிய கோழைத்தனம் ஆகும்
நவீன ஆங்கில இலக்கியத்தில் மிகப்பெரிய சாம்பவனாக
அறியப்படக்கூடியவர் ஹிளைர் பெல்லாக் (Hilaire Belloc) என்பவர்.
கத்தோலிக்கக் கிறிஸ்தவரான அவர், ஒருசமயம் பாராளுமன்றத்
தேர்தலில் போட்டியிட்டார். அவர் போட்டியிட்ட பாராளுமன்றத்
தொகுதியில் ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்தோர் அதிகமாக
இருந்தார்கள். அப்போது அவருடைய நண்பர்கள் அவரிடம், "நண்பா! நீ
உன்னுடைய கத்தோலிக்க அடையாளத்தை மறைத்துக் கொண்டு தேர்தலில்
போட்டியிட்டால், நீ அதிகமான வெற்றியைப் பெறுவாய்" என்று
அறிவுரை சொன்னார்கள். அதற்கு அவர் அவரிடம், "கத்தோலிக்கத்
திருச்சபைதான் எனக்கு அடையாளம். அதை மறைத்துக்கொண்டு நான்
போட்டியிடவும் மாட்டேன். மேலும் கத்தோலிக்க திருச்சபையைச்
சார்ந்தவன் நான் என்று பார்த்து ஓட்டுப் போடுகிறவர்களின் ஓட்டு
எனக்குத் தேவையே இல்லை" என்று துணிச்சலாக சொன்னார்.
தான் சார்ந்த கத்தோலிக்கத் திருச்சபையை வெளிப்படையாக
அறிக்கையிட்ட ஹிளைர் நமக்கு ஒரு முன்மாதிரி. நாம் கத்தோலிக்கத்
திருச்சபையைச் சார்ந்தவர்கள் என்று சொல்வது நமக்கு அவமானம்
அல்ல, அதுதான் நமக்கு அடையாளம்.
ஆகவே, அருளாளரான ரிச்சர்ட் கவினின் நினைவு நாளைக் கொண்டாடும்
நாம், நமது கத்தோலிக்கத் திருச்சபையை நினைத்து பெருமிதம்
கொள்வோம், திருச்சபை நமக்கு போதிக்கின்ற போதனைகளின் படி
வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
இயேசு பெற்ற இரண்டாம் திருமுழுக்கு
சில ஆண்டுகளுக்கு முன்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்வு.
டேவிட் என்ற மாணவன் கல்லூரி செல்வதற்காக தன்னுடைய இருசக்கர
வாகனத்தில் போய்க்கொண்டிருந்தான். அவனுடைய பயணத்தின் இடையே ஒரு
இரயில்வே கிராசிங் வந்தது. அவன் அந்த இரயில்வே கிராசிங்கை
நெருங்கும் தருணத்தில் சற்று தொலைவில் இரயில் வந்ததால், அவன்
தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் வேடிக்கை
பார்க்கத் தொடங்கினான்.
அந்நேரத்தில் ஒரு வயதான, பார்வையற்ற பெண்மணி இரயில் அருகாமல்
வருவதுகூடத் தெரியாமல் சாலையை கடந்துகொண்டிருந்தாள்.
பக்கத்திலிருந்தவர்கள் இரயில் மிகவும் அருகே வந்துவிட்டது
என்று எவ்வளவோ கத்தியும் அவள் காதில் விழவில்லை. ஏனென்றால்
அவள் ஒரு காதுகேளாத பெண்மணியும் கூட. அடுத்து என்ன
நடக்கப்போகிறதோ என்று சுற்றும் முற்றும் இருந்தவர்கள் மிகவும்
மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த இரயில்வே கிராசிங் அருகே செருப்புத்
தைத்துக்கொண்டிருந்த மனிதர் ஒருவர், தன்னுடைய உயிரைப்
பற்றிக்கூட கவலைகொள்ளாமல், ஓடிவந்து அந்த பெண்மணியைக்
காப்பாற்றினார். அவர் அப்பெண்மணியை காப்பாற்றுவதற்கும், இரயில்
வருவதற்கும் ஒரு நொடி இடைவேளைதான் இருந்தது. கொஞ்சம்
தாமதித்திருந்தாலும் அந்தப் பெண்ணின் நிலை அவ்வளவுதான்.
நிகழ்ந்தவற்றைக் கண்டு எல்லாரும் அதிர்ச்சி மேலிட நின்றார்கள்.
பின்னர் எல்லாரும் தங்களுடைய வண்டியைக் கிளப்பிக்கொண்டு
அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றார்கள்.
டேவிட் என்ற அந்த கல்லூரி மாணவன் மட்டும் அனைவரும் போனபிறகு
வயதான பெண்மணியின் உயிரைக் காப்பாற்றிய அந்த செருப்பு தைக்கும்
தொழிலாளியைப் பார்த்து, "உங்களால் மட்டும் எப்படி இந்த செயலைச்
செய்ய முடிந்தது. எல்லாரும் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது நீங்கள் மட்டும் உங்கள்
உயிரைப் பணயம் வைத்து அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினீர்களே,
அது எப்படி? என்று கேட்டான். அதற்கு அவர், "நான் இப்படி உயிரை
பணயம் வைத்து அடுத்தவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவது இது
முதல்முறையல்ல, எத்தனையோ மனிதர்களை எத்தனையோ முறை
காப்பாற்றியிருக்கிறேன். எல்லாவற்றையும் ஒரு சேவையாகச்
செய்கிறேன்" என்றார்.
அம்மனிதரிடம் வார்த்தைகளைக் கேட்டு டேவிட் ஒரு நிமிடம் வியப்பு
மேலிட நின்றான். பின்னர் அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று
நினைத்த டேவிட் தன்னுடைய பையிலிருந்த ஐந்தாயிரம் ரூபாயைக்
அவருக்கு கொடுத்துவிட்டு, தன்னுடைய் பயணத்தைத் தொடர்ந்தான்.
எல்லாரும் வேடிக்கை பார்க்கும் மனிதர்களாகவே இருக்கும்போது
தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து இன்னொரு உயிரைக் காப்பாற்றிய
அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் செயல் உண்மையிலே
பாராட்டுக்குரியது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நான் பெறவேண்டிய ஒரு
திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும்
மனநெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்" என்கிறார். இயேசு பெற
நினைத்த அந்த இரண்டாம் திருமுழுக்கு என்ன?. அது வேறொன்றுமில்லை
அவருடைய சிலுவைச்சாவே. இயேசுவின் முதலாவது திருமுழுக்கு
யோர்தான் ஆற்றங்கரையில் தண்ணீரால் நிகழ்ந்தது. அவருடைய
இரண்டாவது திருமுழுக்கு இரத்ததினால் நிகழக்கூடியது. இது
கல்வாரி மலையில் சிலுவையில் நிகழ்ந்தது.
இயேசு தான் பெற இருந்த இரண்டாவது திருமுழுக்கை
- சிலுவைச் சாவை
- நினைத்து மிகுந்த மனநெருக்கடிக்கு உள்ளானார். அதனால்தான்
அவர், "உமக்கு விருப்பமானால் தந்தையே, இத்துன்பக் கிண்ணத்தை
என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம்
விருப்பப்படியே நிகழட்டும்" என்கிறார் (லூக் 22: 42). ஆகையால்
இயேசு தான் பெற இருந்த இரண்டாம் திருமுழுக்கைக் குறித்து மன
நெருக்கடிக்கு உள்ளானாலும், அவர் அதை தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்ற ஏற்றுக்கொண்டார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசுவின் இத்தகைய ஒரு தியாகச் செயல் அவர் நம்மீது எவ்வளவு
அளவு கடந்த அன்புகொண்டிருக்கிறார் என்பதை நமக்குக்
காட்டுகிறது. தூய பவுல் குறிப்பிடுவது போல "நேர்மையாளருக்காக
ஒருவர தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர்
ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால்
நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக்
கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை
எடுத்துக்காட்டியுள்ளார்".
ஆகவே நாம் இயேசுவின் இத்தகைய தியாக செயலை நாம் உணர்ந்துகொண்டு,
நாமும் பிறருக்காக, பிறருடைய வாழ்வு நலம் பெற தம்மையே கையளிக்க
முன் வருவோம். தற்கையளிப்பு செய்வோம். அதன் வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
"தம்மைத் தந்த தலைவன் இயேசுவுக்காக நம்மையே தருவோம்".
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
"இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா
நினைக்கிறீர்கள்?
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்'
என்றார்" (லூக்கா 12:51)
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
-- இயேசுவை அமைதியின் அரசர் என்றும் சமாதானத் தூதுவர் என்றும்
நாம் போற்றுகிறோம். அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்கள்
ஒருங்கிணைந்து, "உலகில் கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதி
உண்டாகுக!" எனப் பாடி வாழ்த்தினார்கள் (காண்க: லூக் 2:14).
இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னால் தம் சீடரை
நோக்கி, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என்
அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என வாக்களித்தார் (காண்க:
யோவா 14:27). மேலும், தாம் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த
பிறகு இயேசு தம் சீடர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி
உண்டாகுக!" என வாழ்த்தினார் (காண்க: லூக் 24:36). இவ்வாறு
அமைதியைப் போற்றிய இயேசுவா "பிளவு உண்டாக்க வந்தேன்" எனக்
கூறுவார் என நாம் கேள்வி எழுப்பினால் அது தவறு எனக் கூற
முடியாது. ஆக, இயேசு கொணர்ந்த அமைதி யாது, அவர் கொணர்ந்த பிளவு
யாது என்னும் கேள்வி எழுகிறது. இயேசு தம் சீடர்களுக்கு அமைதியை
வாக்களித்தார் என்பதில் ஐயமில்லை. அந்த அமைதி கடவுளுக்கும்
நமக்கும் இடையே உருவாகின்ற நல்லுறவையும் பிறரோடு நாம்
கொள்கின்ற நல்லுறவையும் குறிப்பதாகும். பாவத்தை முறியடித்து
நம்மைக் கடவுளோடும் எல்லா மனிதரோடும் ஒப்புரவாக்குகின்ற பணியை
இயேசு தம் சிலுவைச் சாவு வழியாக நிறைவேற்றினார். எனவே அவர்
உலகுக்கு அமைதி கொணர்ந்தார் எனலாம்.
-- ஆனால் அதே இயேசு நாம் வாழும் உலகில் "பிளவையும்
உண்டாக்குகிறார்" (லூக் 12:51). இயேசு கொணர்கின்ற பிளவு பற்றி
இயேசுவின் குழந்தைப் பருவத்தின்போதே அறிவிக்கப்பட்டது. குழந்தை
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிப்பதற்காக மரியாவும் யோசேப்பும்
செல்கிறார்கள். அங்கே சிமியோன் என்னும் இறைவாக்கினர் இயேசு
மக்களிடையே பிளவு கொணர்வார் என முன்னறிவிக்கிறார்: "இதோ,
இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும்
எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்..." (லூக் 2:34). ஒருசிலர்
இயேசுவை ஏற்பர், வேறு சிலர் அவரை எதிர்ப்பர். இவ்வாறு
மனிதரிடையே பிளவு உண்டாகும். இயேசு வாழ்ந்த சமுதாயத்தில்
குடும்ப உணர்வு மிக ஆழமாக வேரூன்றியிருந்தது. துன்ப
துயரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் மக்கள் ஒருவரையொருவர் விட்டுப்
பிரியாமல் நெருங்கிய குடும்ப உணர்வோடு வாழ்ந்தார்கள். அவ்வாறு
ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பங்களிலும் இயேசுவின் பொருட்டு பிளவு
எற்பட்டது. ஏனென்றால் அக்குடும்பங்களில் சிலர் இயேசுவை
ஏற்றார்கள், பிறர் அவரை எதிர்த்தார்கள். இவ்வாறு இயேசுவின்
வருகையால் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது தொடக்க காலத்
திருச்சபையில் தெளிவாகத் தெரிந்தது. அதையே லூக்கா
பதிவுசெய்துள்ளார். இன்றைய உலகிலும் இயேசுவை ஏற்போரும் அவரை
எதிர்ப்போரும் உள்ளனர். இயேசுவின் மதிப்பீடுகளின்படி
நடப்போரும் அவருடைய போதனைகளைப் புறக்கணிப்போரும் உள்ளனர். ஏன்,
இயேசுவின் சீடர்களாகத் தம்மை அடையாளம் காட்டுவோர் கூட
சிலவேளைகளில் அவருடைய போதனையை மறந்து விடுகிறார்கள். ஆக, இயேசு
"முரண்பாட்டு அறிகுறியாக" இன்றும் உள்ளார் என்பதில்
ஐயமில்லை. இயேசு கொணர்கின்ற அமைதி ஒருவிதமான மயான அமைதி அல்ல.
கடவுளையும் மனிதரையும் ஒருங்கிணைக்கின்ற இயேசுவை நாம்
ஏற்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதைப் பொறுத்தே நம்
வாழ்விலும் நாம் வாழ்கின்ற உலக சமுதாயத்திலும் உண்மையான அமைதி
நிலவும் என்பதே உண்மை.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4 29ம் வாரம், வியாழன்,
பொதுக்காலம்
(அக்டோபர் 25, 2018)
=================================================================================
இறைவனின் அன்பு பற்றியெரிகிறது,
பிரித்துக்காட்டுகிறது!
எபேசியர் 3: 14-21
லூக்கா 12: 49-53
நாம் இறைவனின் பிள்ளைகள், அவரது மக்கள்! அன்பே உருவாய்,
அன்பிற்கெல்லாம் ஊற்றாய் இருக்கும் இறைவனின் உருவை தாங்கிட
அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் நாம், அவரது அடையாளத்தை
நம்மில் கொண்டு வாழ்பவர்கள்! தன் அன்பை கடவுள் நம் உள்ளத்திலே
நிரம்ப செய்திருக்கிறார், நிறைவாய் பொழிந்திருக்கிறார். இந்த
அன்பு நம் உள்ளத்திலே அவரது கொடையாகவும் அதே நேரத்தில் அவரது
அடையாளமாகவும் பொழியப்பட்டுள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.
இறைவனின் ஆவி எனக்குள் வாழுகிறார் என்பதன் முதன்மையான அடையாளமே
இந்த அன்புதான். என்னை இறைவனின் பிள்ளையாக, கிறிஸ்துவின்
சீடனாக சீடத்தியாக, தூய ஆவியின் ஆலயமாக பிரித்து காட்டுவதும்
இந்த அன்பே! இரவையும் பகலையும் ஒளி பிரித்துக்காட்டுவது போல
இறைவனுக்குரியவர்களையும் மற்றவர்களையும் பிரித்துக்காட்டுவது
அன்பே. ஆகையால்தான் கிறிஸ்து இன்று பிரிவினையை குறித்து
பேசுகிறார். போட்டியாலும் பொறாமையாலும் நாம் நம்மையே
பிரித்துக்கொள்ளும் பிரிவினை அல்ல, மாறாக, அன்பினால், அன்பின்
அடையாளத்தால் பிரித்து காட்டப்படும் உண்மையை குறித்து நம்மிடம்
பேசுகிறார்.
இறைவனின் அன்பு உடையவர்கள், அந்த அன்பின்றி வாழ்பவர்கள் என்று
நாம் பிரித்து காட்டப்படுகிறோம்! உண்மையிலேயே இறைவனின் மக்கள்
இந்த அன்பை உடையவர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள். இறைவனின்
அன்பு எதையும் எதிர்பாராத அன்பு! திரும்ப கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்போ, இன்பம் அளிக்கும் என்ற ஆவலோ, எனக்கு நன்மையாய்
அமையும் என்ற எண்ணமோ எதுவுமின்றி செய்யப்படுவதே உண்மை அன்பு!
இந்த அன்பு, இறைவனின் இந்த அன்பு, நம்மில் இருந்துவிட்டால்
நாம் மகிழ்ச்சியாய் இருப்போம் என்று தவறாக எண்ணிவிட கூடாது.
ஏனெனில் இந்த அன்பு இருப்பவர்களாய் நாம் இருக்கும்போது நாம்
ஏமாற்றப்படுவோம், ஏளனப்படுத்தப்படுவோம், ஏறி
மிதிக்கப்படுவோம்... இருப்பினும் நிலையாய் நிற்பவரே இறுதி
வாகையை சூடுவர் (காண்க - யாகப்பர் 1:12).
(Rev. Father: Antony Christy SDB) |
|