|
22
அக்டோபர் 2018 |
|
பொதுக்காலம்
29ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும்
விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
2: 1-10
சகோதரர் சகோதரிகளே, உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும்
முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். அப்பொழுது
நீங்கள் இவ்வுலகப் போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம்
செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக்
கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப்
பணிந்து நடந்தீர்கள். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும்
இருந்தோம்.
நம்முடைய ஊனியல்பின் தீய நாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும்
விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக்
கடவுளின் சினத்துக்கு ஆளானோம்.
ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த
அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாய் இருந்த
நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள்
மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.
இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும்
விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக்
கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள்
வளத்தையும் இனி வரும் காலங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகவே
இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக
மீட்கப்பட்டிருக்கிறீர்கள்.
இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச்
செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில்
நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே
கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள்
புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு
செய்திருக்கிறார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 3b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்.
1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை
மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர்
திருமுன் வாருங்கள்! பல்லவி
3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி
4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு
அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி,
அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி
5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21
அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், "போதகரே,
சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச்
சொல்லும்" என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு
நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?" என்று
கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப்
பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்.
மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது"
என்றார்.
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: "செல்வனாயிருந்த ஒருவனுடைய
நிலம் நன்றாய் விளைந்தது. அவன்,
'நான் என்ன செய்வேன்? என்
விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான்.
'ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக்
கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து
வைப்பேன்'. பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு
வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு
குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்" என்று தனக்குள்
கூறிக்கொண்டான்.
ஆனால் கடவுள் அவனிடம்,
"அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப்
பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'
என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த்
தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
சேர்ப்பதுவே கடமையென நினைத்து உழைப்போர், உழைப்பு வீணானதே.
இன்றைக்கு சேர்த்து வைத்து தங்களது பிள்ளைகளுக்கு ஆகுமே என
நினைத்தவர்கள் தங்களது பிள்ளைகளை கொலைகாரர்களாகவும், சோம்பேறிகளாகவும்,
ஆக்கி அனாதையாகவே அந்த பணங்கள் போனதை பார்த்தும் இன்று
தேவைக்கு மேலே சேர்த்து வைக்க விரும்பும் பெற்றோர்களை என்ன என்று
சொல்லுவது.
உழைத்து உண்டு, இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டு, தங்களுக்கும்
தங்களது குடும்பத்தாருக்கும் புண்ணியத்தை சம்பாத்தியம் செய்து
கொடுத்தாலே ஏழு தலைமுறை இறைவனால் ஆசீர்வதிக்கப்படும். இதை
புரிந்து கொள்வர் வாழ்வர்.
நல்லது செய்து வாழ்வதற்கென்றே நாம் அனைவருமே கிறிஸ்து இயேசு வழியாக
படைக்கப்பட்டு இருக்கின்றோம். இது முன் கூறிக்கப்பட்ட ஓன்று என்று
பவுல் அடிகளார் எபேசு மக்களுக்கு கூறுகின்றார்.
இன்றைக்கு இந்த நல்லது நம்மால் நடக்கின்றதா என்பதுவே கேட்டுப்
பார்க்க வேண்டியதொன்றாகும். நல்லது நடக்காது போவதாலேயே இந்த சமூகம்
பல பிரச்சனைகளுக்கு ஆளாகி வருவதைப் பார்க்கின்றோம்.
எனக்கென்ன என்ற அலட்சியப் போக்காலும், நான் ஏன் செய்ய வேண்டும்
என்ற நிலையாலும், எனக்கு என்ன லாபம் உண்டு என்று கணக்கு பார்ப்பதாலும்,
நல்லது விளையாது போவதைப் பார்க்கின்றோம்.
வாழ்வின் நோக்கத்தை அறிந்து செயல்பட முன்வருவோம். நல்ல சமூகத்தை
நம்முடைய நல்ல செயல்களால் கட்டியெழுப்ப முன்வருவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
பேராசை என்னும் பெரும்பாவம்!
முன்பொரு காலத்தில் பேராசை பிடித்த அரசன் ஒருவன் இருந்தான். ஒருசமயம்
அவனுடைய நாட்டிற்கு சக்திவாய்ந்த குரு ஒருவர் வந்தார். அவர்
வரம் கொடுத்தால் எதுவும் நடக்கும். அப்படிப்பட்ட குருவிடம்
அரசன், "குருவே, எனக்கு இந்த உலகையே ஆளும் அதிகாரத்தைக் கிடைக்கச்
செய்யுங்கள்" என்றான்.
குரு யோசித்தார். பின்பு அவர் அந்த அரசனிடம், "அப்படியே
செய்கிறேன். ஆனால், அதற்கு நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். என்னுடைய
இந்த பாத்திரத்தை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பு" என்றார்.
அரசனுக்கு அது சாதாரண விசயமாகப்பட்டது. உடனே அவன் தன் பணியாளர்களிடம்
பொற்காசுகளை அதில் போடும்படி ஆணையிட்டான். பணியாளர்களும் அவற்றைக்
கொண்டு வந்து அந்த பாத்திரத்தில் போட்டனர்.
அது சின்ன பாத்திரம்தான். ஆனாலும் நிறையவில்லை. எத்தனை காசு
போட்டாலும் மாயமாகிக் கொண்டே இருந்தது. அப்போது குரு அரசனைப்
பார்த்து, "என்ன அரசே, உம்மால் பாத்திரத்தை நிரப்ப முடியவில்லை?"
என்று கிண்டலாய் கேட்டார். குரு இவ்வாறு கேட்டது அரசனுக்கு அவமானமாய்
போய்விட்டது. உடனே அவன் தன்னுடைய கஜானாவில் உள்ளதை எல்லாம் போடச்
சொன்னான். அப்பாவும் அது நிறையவில்லை. அவன் கஜானா காலியானது.
இதனால் அரசன் ஓய்ந்துபோனான். "குருவே, என்னை மன்னித்துக்
கொள்ளுங்கள். இது என்ன பாத்திரம்? எத்தனை போட்டாலும் நிறையவில்லையே?"
என்று பரிதாபமாய் கேட்டான்.
அதற்கு குரு அவனிடம், "இது பேராசை பிடித்து செத்துப்போன ஒருவனின்
மண்டை ஓடு. இதனை எதைக் கொண்டும் நிரப்ப முடியாது" என்றார். ஆமாம்,
பேராசை பிடித்தவனை எதைக் கொண்டும் திருப்திப்படுத்த முடியாது.
இன்றைய நற்செய்தி வாசகம் பேராசையினால் விளையும் தீமைகளைக்
குறித்து எடுத்துச் சொல்கின்றது. ஆண்டவர் இயேசு மக்கள் கூட்டத்திற்கு
போதித்துக் கொண்டிருக்கின்றார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர்,
"போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச்
சொல்லும்" என்கின்றார். இயேசு கிறிஸ்து தன்னிடம் கேள்வி கேட்டவருக்கு
என்ன பதிலளித்தார் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கு
முன்னர், இயேசுவிடம் கேள்வி கேட்ட அந்த மனிதர் யார்? ஏன் இப்படி
ஒரு கேள்வியைக் கேட்டார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி, ஆண்டவரிடம் கேள்வி கேட்ட அந்த
மனிதர், அவருடைய குடும்பத்தில் இளையவர் ஆவார். யூத வழக்கப்படி,
ஒரு குடும்பத்தில் இருக்கின்ற தலைப்பிள்ளைக்கு அல்லது மூத்த
மகனுக்குத்தான் சொத்தில் இரண்டு பங்கு சேரும் (இச 21:16-17)
(75 ரூபாய் என்றால், மூத்தவருக்கு 50 ரூபாயும் இளையவருக்கு 25
ரூபாயும் சேரும்) ஆனால் இவரோ சொத்தில் பாதியைத் (37.50
ரூபாயைத்) தரவேண்டும் என்று கேட்கின்றார்.
எனவேதான் இயேசு அந்த மனிதரிடம், "என்னை உங்களுக்கு நடுவராகவோ
பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?" என்று கேட்டுவிட்டு,
"எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்.
மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது"
என்கின்றார். இயேசு அந்த மனிதருக்குக் கூறும் இந்த வார்த்தைகளில்
மூன்று உண்மைகள் அடங்கியிருக்கின்றன.
ஒன்று, இயேசு இந்த மண்ணுலகு சார்ந்த காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்
கொள்ளவில்லை என்பதாகும். சொத்தை பாகம் பிரிப்பதற்கு வேறு
ஆட்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களிடம் போய் பிரச்சனையைத்
தீர்த்துக்கொள்ளுங்கள். விண்ணுலகு சார்ந்த காரியங்களைப் பற்றி
என்னிடம் கேளுங்கள் என்பதாகவே இருக்கின்றது இயேசு அந்த
மனிதருக்குச் சொல்லும் பதில். இரண்டு. பெறாமை மிகக் கொடிய
பாவம். ஆதலால் எதன்மீதும் பேராசை கொள்ளாமல் வாழுங்கள்
என்கின்றார் இயேசு. இன்றைக்குப் பலர் பணம், பொருள் இன்னும்
பலவற்றில் பேராசை கொண்டு வாழ்கின்றார்கள். இத்தகையவர்கள்
எதனாலும் திரும்பி அடையமாட்டார்கள் என்பதுதான் இயேசுவின்
அழுத்தம் திருத்தமான பதிலாக இருக்கின்றது.
மூன்று மண்ணுலக செல்வங்கள் எதனாலும் ஒருவருக்கு வாழ்வு
கிடைத்துவிடாது என்பதாகும். ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய
உவமையில் வருகின்ற செல்வந்தன் களஞ்சியத்தை இடித்து அதனைப்
பெரிதாகக் கட்டி, தானியங்களைச் சேர்த்து வைப்பதுதான் இன்பம்
எனக் கண்டான். ஆனால், அவனுடைய உயிரோ அன்றிரவே அவனை விட்டுப்
போய்விட்டது. ஆகவே, அழிந்து போகின்ற மண்ணுலகு சார்ந்த
காரியங்களை நாடாமல், விண்ணுலகு சார்ந்த காரியங்களை நாடுவது
தேவையான ஒன்றாக இருக்கின்றது.
எனவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், எவ்வகைப் பேராசைக்கும்
இடம்கொடாதவாறு வாழ்வோம்; இவ்வுலகு சார்ந்த வாழ்க்கை வாழாமல்,
மறு உலகு சார்ந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
"மிகுதியான உடைமைகளால் மட்டும் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது"
அந்த ஊரில் "கேட்ட வரங்களைத் தரும் சக்தி வாய்ந்த இறைவனின்
கோவில்" ஒன்று இருந்தது. அந்தக் கோவிலில் புத்தாண்டு நாளன்று
என்ன வரம் வேண்டி நாம் மன்றாடுகிறோமோ அந்த வரம் விரைவில்
கைகூடும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவே அந்த
சக்தி வாய்ந்த இறைவனின் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அந்த ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார். அவரோடு கடவுள் கனவின்
வழியாக அடிக்கடி பேசுவார். அவரும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை
வாழ்ந்து வந்தார். ஒரு புத்தாண்டு தினத்தன்று அவர் இறைவனிடம்
ஜெபிப்பதற்காக அந்தக் கோவிலுக்குச் சென்றார். அப்போது அவர் ஒரு
காரியத்தைக் கவனித்தார். அது என்னவென்றால் அந்த ஆலயத்திற்கு
வந்திருந்த பெரும்பாலானவர்களின் முகத்தில் மகிழ்ச்சியில்லை.
ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தவர்கள் போன்று இருந்தார்கள்.
உடனே அவர் கடவுளைப் பார்த்து, "கடவுளே, இந்த ஆலயத்திற்கு
வந்திருக்கிற பெரும்பாலானவர்களின் முகத்தைப் பார்த்தும்போது,
அவர்கள் மகிழ்ச்சியில்லாதவர்கள் போன்று காட்சியளிக்கிறார்கள்.
மக்கள் உம்முடைய கோவிலுக்கு வருகிறார்கள் என்றால், அது
உம்மிடம் கேட்ட வரங்களை நீர் தருவீர் என்ற நம்பிக்கையில்தான்.
அவர்கள் இப்படி மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள் என்பதைப்
பார்க்கும்போது, ஒருவேளை நீர் அவர்கள் கேட்கின்ற வரங்களை
தருவதில்லையோ? என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது. நம்பி
வந்தவர்களை ஏமாற்றுவது நம்பிக்கைத் துரோகம் அல்லவா? என்றார்.
அதற்குக் கடவுள், "அப்படியில்லை பக்தா, நான் மக்கள் என்னிடம்
கேட்கும் வரங்களைத் தவறாமல் தந்துகொண்டிருக்கிறேன். ஆனால்
அவர்கள் கேட்கும் பொருளில்தான் பிரச்சனை இருக்கிறது?" என்றார்.
"என்ன பிரச்சனை?, தயவு செய்து சொல்லும்?" என்று இடைமறித்துக்
கேட்டார். உடனே கடவுள் அவரிடம், "இம்மக்கள் என்னிடம் கார்,
பங்களா, தோட்டம், அது இது என்று கேட்கிறார்கள். இவைகள்தான் ஒரு
மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று நினைகிறார்கள். யாருமே
என்னிடத்தில் மகிழ்ச்சியைத் தா, நிம்மதியைத் தா என்று
கேட்பதில்லை. அதுதான் பிரச்சனை என்றார்.
ஆம், நமது பெரும்பாலான ஜெபங்கள் கடவுள் நமக்கு பொருள்
தரவேண்டும், பணம் தரவேண்டும் என்றுதான் இருக்கின்றது. யாருமே
நிம்மதியை, அமைதி தரவேண்டும் என்று கேட்பதில்லை. அதனால்தான்
நாம் நிம்மதியற்று இருக்கிறோம். அன்றாட வாழ்க்கையிலும்கூட நாம்
நிம்மதியைத் தேடாமல், பணத்தை தேடியலைந்து அதனால் நிம்மதியை
இழந்து தவிக்கிறோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு அழகுபட
எடுத்துரைக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு
போதித்துக்கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து ஒருவர்,
"போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என்
சகோதரருக்குச் சொல்லும்" என்கிறார். அதற்கு இயேசு அவரிடம்,
"என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர்
யார்?" என்று கேட்கிறார். பின்பு அவர் மக்கள் கூட்டத்தைப்
பார்த்து, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு
எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக்
கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்கிறார்.
அதற்கு விளக்கமாக அறிவற்ற செல்வந்தன் உவமையை அவர்களுக்கு
எடுத்துக்கூறுகிறார்.
நாம் பொருளையும், பணத்தையையும் தேடியலைந்து நிம்மதி இழக்காமல்,
உண்மையான அமைதியை, நிம்மைதியைத் தரும் ஆண்டவரைத் தேடிச்
செல்வோம் என்பதுதான் இயேசுவின் பதிலாக இருக்கின்றது.
இன்றைக்கு நம்முடைய தேடல் எதற்குப் பின்னால் இருக்கிறது என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெரும்பாலான நேரங்களில் நாம்
பணத்தைத் தேடுவதிலும், பொருளைத் தேடுவதிலும் நம்முடைய
நிம்மதியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். பணம் தேவைதான்.
ஆனால் அதுவே தீர்வாகிவிடாது என்பதுதான் நாம்
புரிந்துகொள்ளவேண்டிய கருத்தாக இருக்கின்றது.
"பணத்திற்காகவே வாழ்க்கையைத் தொலைப்பவர்கள்
துர்பாக்கியவான்கள். நல்லவர்கள் பணம் வாழ்க்கையல்ல என்பதை
அறிந்தவர்கள்" என்பார் வெ. இறையன்பு என்று எழுத்தாளர். அவர்
தொடர்ந்து கூறுவார், "பணத்தை ஈட்டவேண்டும் என்று பணத்தாலேயே
தங்கள் உலகத்தை நிர்மாணித்துக் கொள்பவர்கள், யாரைப்
பார்த்தாலும் அவர்களால் தங்களுக்கு என்ன ஆதாயம் என்று
சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் புருஷர்களையும்
பொருட்களாகப் பயன்படுத்துவார்கள்" என்று. ஆம், பணம் பணம் என்று
அலைபவருக்கு பணம் கிடைக்கலாம். ஆனால் நிம்மதி கிடைப்பதில்லை.
மாறாக ஆண்டவர் இயேசு சொல்வதுபோன்று, "அனைத்திற்கும் மேலாக
இறைவனது ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகிறபோது,
எல்லா வரத்தையும் நாம் பெற்றுக்கொள்வோம்" (மத் 6:33).
எனவே பணம்/பொருள் குறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருப்போம்.
இறைவனைத் தேடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|