Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   18  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 28ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
புனித லூக்கா - நற்செய்தியாளர் விழா

என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-17

அன்பிற்குரியவரே, விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய். தேமா இன்றைய உலகப் போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்றுவிட்டனர். என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர். திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன்.

நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டுவந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா. கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார். அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன். நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராது இருப்பதாக.

நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 145: 10-11. 12-13ab. 17-18 (பல்லவி: 11a)
=================================================================================
பல்லவி: உம் அன்பர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13யb உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.

புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 நிகழ்வு


லூக்கா நற்செய்தியாளர் நற்செய்தி நூலை எழுத நினைத்தபோது அவருக்கு இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்த போதிய தகவல்கள் தெரியவில்லை. எனவே அவர் எருசலேமில் வாழ்ந்துவந்த இயேசுவின் தாயிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் எனத் தீர்மானித்தார். அதன்படியே அவர் அன்னை மரியாவைச் சந்தித்து வானதூதர் கபிரியேல் மங்கள வார்த்தை சொன்னது, அதன்பிறகு மரியா கடவுளைப் போற்றிப் புகழ்ந்தது, இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது, சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற தரவுகளை கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை தான் எழுதிய நற்செய்தி நூலில் எழுதி வைத்தார். அது எக்காலத்திற்கு அழியாமல் இருக்கின்றது.

வாழ்க்கை வரலாறு

லூக்கா அந்தியோக்கு நகரில் பிறந்தவர். இவர் யூதரல்லாத ஒரு புறவினத்தார்; கிரேக்க மொழியை நன்றாகக் கற்றுத் தெரிந்தவர். ஒருசிலர் இவரை ஆண்டவர் இயேசுவை தன்னுடைய வாழ்நாளில் சந்திக்காதவர் என்று கூறுவார். இன்னும் ஒருசிலர் இயேசுவின் எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவர் எனவும் கூறுவார். இவர் ஒரு மருத்துவர் (கொலோ 4:14), கைதேர்ந்த ஓவியர்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு இவர் பவுலோடு உடன் சென்று நற்செய்திப் பணி ஆற்றி வந்தார். பவுல் செசரியா மற்றும் உரோமை நகரில் சிறையில் அடைக்கப்பட்ட போது லூக்காதான் அவரோடு இருந்து, பவுலுக்கு பேருதவியாக இருந்து வந்தார். பவுலும் லூக்காவைக் குறித்து பெருமிதம் கொள்வதை அவருடைய திருமுகங்களிலிருந்து படித்தறிகின்றோம். லூக்கா மட்டுமே தன்னோடு இருந்து தனக்குப் பக்கபலமாக இருக்கின்றார் என்பதை பவுல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றார் ( 2 திமோ 4:11). பவுலின் மறைவிற்குப் பிறகு லூக்கா போயேதியா (Boetia) என்னும் இடத்திற்குச் சென்று, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்து, அங்கே கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரைத் துறந்தார் என்று இவருடைய வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம். ஆண்டவர் இயேசு தனக்குக் கொடுத்த தாலந்தை - திறமையை - ஆண்டவரின் மகிமையும் பெருமையும் விளங்க செய்த லூக்கா நற்செய்தியாளர் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி.


மூன்றாம் நற்செய்தி நூல் எனப்படும் லூக்கா நற்செய்தி

லூக்கா தன்னுடைய நற்செய்தி நூலை கி. பி 65 ஆம் ஆண்டிலிருந்து 85 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதியிருக்கலாம் எனச் சொல்வார்கள். இரக்கத்தின் நற்செய்தி என அழைக்கப்படும் இந்நற்செய்தி நூலில் இன்னும் ஒருசில உண்மைகள் மேலோங்கி இருப்பதை நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும்.

முதலாவதாக லூக்கா நற்செய்தி எல்லாருக்கும் பொதுவான நற்செய்தி என அழைக்கப்படுகின்றது. எப்படியென்றால் லூக்கா நற்செய்தி நூலை நாம் படித்துப் பார்க்கும்போது ஆண்டவராகிய மெசியா யூதர்களுக்கு மட்டுமல்ல, அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளலாம். ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தன்னுடைய சீடர்களுக்குக் காட்சி கொடுக்கின்றபோது, "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், "பாவ மன்னிப்புப் பெற மனம்மாறுங்கள்" என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்று கூறுகின்றார். இவ்வார்த்தையை நாம் கூர்ந்து நோக்கும்போது லூக்கா நற்செய்தி எல்லா மக்களுக்கும் எழுதப்பட்டிருகின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக லூக்கா நற்செய்தி பெண்களுக்கு அதிக முன்னுரிமை தரும் நற்செய்தி எனவும் அழைக்கப்படுகின்றது. வானதூதர் சக்கரியாவிற்கு தோன்றினார் என்றால், அதற்கு அடுத்து, அவர் மரியாவிற்கு தோன்றுவதாக லூக்கா நற்செய்தியாளர் எழுதுகின்றார். அதைப் போன்று குழந்தையை சிமியோன் கண்டுகொண்டார் என்று படிக்கின்ற நாம், அதற்கு அடுத்து அன்னா என்ற பெண்மணி குழந்தை இயேசுவைக் கண்டுகொண்டார் என்று படிக்கின்றோம். உதாரி மகனின் உவமையை வாசிக்கின்ற அதே வேளையில் பெண் ஒருவர் தான் தொலைத்த நாணயத்தைத் தேடிக் கண்டுகொள்வதையும் படிக்கின்றோம். இவ்வாறு லூக்கா நற்செய்தி பெண்களுக்கு அதிக முன்னுரிமை தருகின்ற ஒரு நற்செய்தியாகவும் நாம் பார்க்கலாம்.

மூன்றாவதாக லூக்கா நற்செய்தி ஜெபத்திற்கு அதிக முக்கியத்தும் தருகின்ற ஒரு நற்செய்தி நூலாகவும் விளங்குகின்றது. அதே போன்று தூய ஆவியைக் குறித்து அதிகம் பேசுகின்ற ஒரு நற்செய்தி நூலாகவும் மகிழ்ச்சியின் நற்செய்தியாகவும் லூக்கா நற்செய்தி விளங்குகின்றது. திருத்தூதர் பணிகள் நூலும் லூக்காவால்தான் எழுதப்பட்டது என்பதையும் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூக்காவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தியின் தூதுவர்களாவோம்

நற்செய்தியாளர் லூக்கா கடவுள் தனக்குக் கொடுத்த திறமையைப் பயன்படுத்தி, ஆண்டவர் இயேசுவைப் பற்றி எல்லா மக்களுக்கும் அறிவித்தார்; நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நற்செய்தி அறிவிப்பதில் தாகம் கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பழங்குடி மக்களுக்கு மத்தியில் நற்செய்திப் பணியாற்றிய ஒரு மறைபோதகர், அங்கிருந்த ஆதிக்க வர்க்கத்திடமிருந்து நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தார். இதனால் அவர் மனம் உடைந்துபோய், தான் செய்துவரும் நற்செய்திப் பணியை அத்தோடு விட்டுவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பலாம் என யோசித்து வந்தார். அப்போதுதான் இந்த நிகழ்வு நடந்தது. ஒருநாள் காலை வேளையில் அவர் வயல்வழியாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது ஓரிடத்தில் தொழுநோயாளர்கள் சிலர் வேலைபார்த்து வந்தார்கள். அதில் இரண்டு தொழுநோயாளர்கள் செய்துவந்த செயல்தான் அவரை இன்னும் வியப்புக்குள்ளாக்கியது. அந்த இருவரில் ஒருவருக்கு கால் இல்லை, இன்னொருவருக்கோ கையில்லை. காலில்லாத தொழுநோயாளியோ கையில்லாத தொழுநோயாளியின் தோள்மேல் ஏறியமர்ந்து விதை விதைத்துக்கொண்டிருந்தார்.

இக்காட்சியைக் கண்டதும் அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான மாற்றம் பிறந்தது. உடல் ஊனமுற்ற, பலவீனமான மனிதர்களே, தங்களுக்கு ஏற்பட்ட குறைகளை ஒரு பொருட்டாகக் கருதாது வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, உடல் நலத்தோடு இருக்கும் நாம் ஏன் எனக்கு ஏற்படும் இந்த எதிர்ப்புகளுக்காக நான் செய்துவரும் பணியிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று யோசித்தார். அதன்பிறகு எத்தனை இழப்புகள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து நற்செய்திப் பணியாற்றவேண்டும் என்று முடிவுசெய்து, தொடர்ந்து நற்செய்திப் பணி செய்துவந்தார்.

நம்முடைய நற்செய்திப் அறிவிப்புப் பணியில் எத்தனை இடர்கள் வந்தாலும் தொடர்ந்து நற்செய்திப் பணி செய்யவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது.

ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஆண்டவர் இயேசு வந்ததாக லூக்கா நற்செய்தியாளர் கூறுவார் (லூக் 4:18). நாம் ஆண்டவர் இயேசுவைப் போன்று லூக்காவைப் போன்று ஏழைகளுக்கும் எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து வாழ்வோம், எதிர்வரும் இன்னங்களை துணிவோடு எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இறையரசின் நற்செய்தியாளர்களாவோம்

நற்செய்தியாளர் புனித லூக்கா - விழா


2 தீமோத்தேயு 4:10-17m
லூக்கா 10:1-9

இன்று புனித லூக்காவின் திருவிழாவை கொண்டாடுகின்றோம்... நற்செய்தியாளர்களிலே லூக்கா இல்லாமலிருந்தால் பல இனிமையான பகுதிகளை நாம் இழந்திருப்போம்... இறைவனின் வல்ல செய்லகளை மரியன்னை புகழ்ந்துரைக்கும் வாழ்த்துப்பா, இறைவனின் வாக்குபிறழாமையை போற்றும் சக்கரியாவின் பாடல், கோவிலில் இறைவாக்கினர் சிமியோன் அன்னா ஆகியோரின் பாடல், திருமுழுக்கு யோவானின் பிறப்பு, கிறிஸ்துவின் விண்ணேற்பு... என எத்தனை நிகழ்வுகளை லூக்கா வழியாக இறைவார்த்தை நமக்கு தருகின்றது! இந்த நற்செய்தியாளருக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறியே ஆகவேண்டும்.

லூக்கா இல்லாமலிருந்தால் எரிக்கோவின் சக்கேயுவை சந்தித்திருக்கமாட்டோம், நடுவழியில் வந்த பத்து தொழுநோயாளிகளை சந்தித்திருக்கமாட்டோம், கிறிஸ்துவின் பெண் சீடர்களை அறிந்திருக்கமாட்டோம், கிறிஸ்துவிடம் வான்வீட்டை பரிசாய் பெற்ற நல்ல கள்வனையோ, உயிர்தப்பின் சீடர்களோடு வழியெல்லாம் பேசிக்கொண்டே நடந்த உயிர்த்த கிறிஸ்துவை எம்மாவூஸ் போகும் வழியில் சந்தித்திருக்க மாட்டோம். சாகாவரம் பெட்ரா உவமைகளில் சிலவான ஊதாரி மைந்தன் உவமை, நல்ல சமாரியன், செல்வந்தனும் இலாசரும் போன்றவற்றை நாம் கேட்டிருக்க மாட்டோம்!

இவற்றையெல்லாம் காட்டிலும் லூக்காவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு... இறையரசை பற்றி அவரது புரிதலே அது. மற்ற மூன்று நற்செய்திகளும் கூட இறையரசை குறித்து தெளிவாய் பேசினாலும், லூக்காவின் பார்வையில் இறையரசு சிந்தனைகள் கிறிஸ்துவின் மனதை வேறு யாரையும் விட வெகு ஆழமாய் படம் பிடித்து காட்டுகிறது என்றால் அது மிகையாகாது. இறையரசு உங்கள் மத்தியில் உள்ளது (17:21), இறையரசு வெகு அருகில் உள்ளது (10:9), என்று இறையரசின் அருகிருப்பை லூக்காவே அதிகமாய் வலியுறுத்திகிறார். நாம் இருக்கும் இடத்திலே, நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில், துன்புறும் மனிதர்களில், போராடும் மனங்களில், உண்மையை உரைக்கும் உள்ளங்களில், பிறருக்காக சிந்திக்கும் சீராளர்களில் இறையரசின் அருகிருப்பையும் அதற்காக நமது பொறுப்பையும் உணர நம்மை அழைக்கிறார்.

இறைவார்த்தையால் தொடப்பட்டு, இறையரசின் கனவோடு, இறையரசின் முன்னெடுப்பகளோடு இறையரசின் நற்செய்தியாளர்களாக வாழ புனித லூக்கா நமக்கு உதவுவாராக!

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!